உங்களிடம் சில வார்த்தைகள் ...
கேட்டால் கேளுங்கள் ...
வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் விசேஷமாக அறிவுரைகள் கிடைக்கும்."பத்து பேர் வந்திருக்கும் பொழுது குறுக்கும் நெடுக்கும் என்ன நடை?, கெக்கே பிக்கே என்று என்ன சிரிப்பு?" இவை எல்லாம் மற்றவர்கள் கவனத்தை கவரும் வகையில் பெண்கள் நடந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தத்தான், ஸ்வாதீனம் இருப்பதால் கொஞ்சம் கோபமாக சொல்கிறார்கள் என்பதை புரிய வைத்தவர் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஐயங்கார் மாமி. நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு முறை என்னை எதற்கோ என் மாமா திட்டிக் கொண்டே இருந்தார். எனக்கு பயங்கர எரிச்சல். ஐயங்கார் மாமியிடம் சென்று, "மாமா என்னை திட்டிண்டே இருக்கா, எனக்கு பிடிக்கவே இல்லை", என்றதும், என்னை உற்றுப் பார்த்த மாமி, மெல்லிய குரலில்(மாமி கோபமாக குரலை உயர்த்தி பேசி நான் கேட்டதே இல்லை),
"நேத்திக்கு மாமா பானுவை டவுனுக்கு அழைச்சுண்டு போய், சோன்பப்டி, ரோஸ் மில்க் எல்லாம் வாங்கி கொடுத்தப்போ பானுவுக்கு மாமாவை பிடித்தது, இன்னிக்கு கோபித்துக் கொள்ளும் பொழுது மாமாவை பிடிக்கவில்லை,அப்படித்தானே?" என்றார். இந்த நிகழ்ச்சி நடந்த பொழுது நான் மிகவும் சிறியவள், பத்து வயது கூட ஆகவில்லை, ஆனாலும் என் மனதில் ஆழப் பதிந்த விஷயம் நம்மை திட்டுகிறவர்கள் நம் எதிரிகள் அல்ல.
என் பாட்டி இதையே வேறு விதமாக சொல்வார். வீட்டில் யாராவது நம்மை கோபித்து,அதற்காக நாம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால், உடனே என் பாட்டி, "அழ அழ சொல்பவர்கள் நம் மனுஷா சிரிக்க சிரிக்க சொல்பவர்கள் அயலார்" என்பார்.
நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு முறை என் பி.டி. டீச்சர் நான் அணிந்திருந்த சட்டை நீளம் குறைவாக இருக்கிறது என்று என்னைத் திட்டினார். அவருக்கு பயந்து நான் சட்டையை இன் பண்ணிக் கொண்டு, பாவாடை, தாவணி அணிந்து செல்வேன்.(இந்த விஷயத்தை என் மகளால் நம்பவே முடியவில்லை. தாவணி அணிந்து கொண்டா ஸ்கூலுக்குச் செல்வீர்கள்?) . அன்றைக்கு பி.டி. பீரியட் இல்லாததால் சாதாரண சட்டை அணிந்து கொண்டு சென்று விட்டேன். அதுவும் குட்டை சட்டை கிடையாது. அப்படி குட்டையாக சட்டை போட்டுக் கொள்ள வீட்டில் அனுமதிப்பார்களா என்ன? இருந்தாலும் சட்டையை இன் பண்ணிக்க கொள்ளவில்லை என்று டீச்சர் ஒரே திட்டு. வீட்டில் வந்து என் பாட்டியிடம்,
"பாட்டிமா இன்னிக்கு என்னை ஸ்கூலில் பி.டி. டீச்சர் திட்டினா பாட்டிமா" என்றதும் என் பாட்டி "ஏன்?" என்று கேட்கவில்லை, "நீ என்ன பண்ணின?" என்றுதான் கேட்டார். விஷயத்தை சொன்னதும், "நல்லதுக்குத்தானே சொல்றா, டீச்சருக்கு என்ன உன் மேல் விரோதமா? உன்னை திட்டணும்னு ஆசையா? புருஷாளோட(ஆண்களோடு) படிக்கிறோம், நாமதானே ஒதுக்கமா இருக்கணும்?" என்று என் வாயை அடைத்து விட்டார்.
பாட்டி எத்தனை நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்பது என் மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு முறை பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு சென்ற பொழுதுதான் புரிந்தது. என் மகனோடு படித்த ஒரு பெண்ணின் தாய் முதலில் நன்றாக பேசிக் கொண்டிருந்தார், அந்த வகுப்பாசிரியர் அவருடைய பெண்ணைப் பற்றிய குறைகளை சொல்ல ஆரம்பித்தோரா இல்லையோ இவருக்கு முகம் மாறி விட்டது. "complaining, complaining" என்று பொருமித் தள்ளினார். தன் பெண்ணை மேம்படுத்தவே அந்த ஆசிரியர் அந்த குழந்தை செய்த தவறுகளை சுட்டிக் காட்டுகிறார் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத தாய், அந்தப் பெண்ணை எப்படி நெறி படுத்துவார் என்று நினைத்துக் கொண்டேன். என் பாட்டி போல ஒரு பாட்டி அவர்கள் வீட்டில் இல்லையோ என்னவோ?
என் அப்பாவோ, அம்மாவோ அதிகம் அட்வைஸ் கொடுத்ததில்லை. அம்மா மிகவும் வேகமானவர். நான் என் அம்மாவை வந்தியத் தேவி என்பேன். ஏனென்றால், கல்கி, பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனைப் பற்றி "அவன் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும், செய்து முடிப்பதற்கும் கால இடைவெளியே இருக்காது, ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுதே அதை செய்து முடித்திருப்பான்" என்று வர்ணித்திருப்பார். என் அம்மாவும் அப்படித்தான். அவ்வளவு வேகமாக இருப்பவரர்களுக்கு மற்றவர்களுக்கு சொல்லித் தரும் பொறுமை இருக்காது.
"மேயற மாட்டுக்கு கொம்பிலா புல் சுற்ற முடியம்?" என்பது என் அம்மாவின் கேள்வி. அம்மாவைப் பார்த்து கற்றுக் கொண்ட விஷயங்களுள் முக்கியமானது மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தக் கூடாது என்பதுதான். அதை அம்மா வலியுறுத்துவாள் சொல்லிலும்,செயலிலும்.
சிறு வயதில் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர் என் பெரிய மாமி. "சாப்பாட்டை மென்று சாப்பிட வேண்டும், ஆனால் சாப்பிடும் பொழுது சத்தம் வரக்கூடாது". "குளித்து விட்டு முகத்தை அழுத்தி துடைக்கக் கூடாது, மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்" என்று அவர் சொல்லி கொடுத்ததை இன்று வரை கடை பிடிக்கிறேன். இதைத் தவிர 'குட் டச்', 'பேட் டச்' போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
என் பெரிய அக்காவும் என்னைப் போலவே புத்தகப் பிரியை. புத்தகங்களை மடக்குவதோ, அடையாளத்திற்காக ஓரத்தை மடிப்பதோ அவருக்கு பிடிக்காது. அவருக்கு எந்த புத்தகம் படிக்க கொடுத்தாலும் உடனே அட்டை போட்டு விடுவார். புக் மார்க் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியவர் அவர்தான். புத்தகங்களில் கிறுக்குவது போன்ற விஷயங்கள் அவருக்கு கட்டோடு பிடிக்காது. பெயரைக் கூட முதல் பக்கத்தின் ஓரத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்பார். இன்றைக்கும் என் சேமிப்பில் இருக்கும் புத்தகங்கள் புதிது போலவே இருப்பதற்கு என் அக்காதான் காரணம்.
என் அண்ணா சிக்கலான சில நேரங்களில் முக்கியமான சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அவைகள் மிகவும் ப்ரத்யேகமானவை என்பதால் பகிந்து கொள்ள முடியாது. என் கோபத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லி என்னை விட ஒரே ஒரு வயது மூத்தவளான என் கடைசி அக்கா எத்தனையோ அறிவுரைகளை கூறியும் நான் அவைகளை எடுத்துக் கொண்டதே இல்லை. அவளால் இயலாததை என் மகள் சாதித்தாள்.
ஒரு முறை எனக்கும் ஒரு ஆட்டோக்காரருக்கும் எங்களை சுற்றி கூட்டம் கூடும் அளவிற்கு பெரிய வாக்குவாதமாகி விட்டது. இறுதியில் அவர் கேட்ட தொகையை கொடுத்து விட்டு வரும்பொழுது, என் மகன்,"அம்மா நீ ரொம்ப கத்திவிட்டாய்" என்றான்.
"என்னடா, அவன் செய்தது சரியா?" என்றேன்
உடனே என் மகள்,"அவன் செய்தது தப்புதான்மா , ஆனால் அதுக்காக நீ சண்டை போட்ட பொழுது உன்னை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்களே..! " என்றாள்.
என்னை யாரோ கன்னத்தில் ஓங்கி அடித்தது போல் இருந்தது. அப்போது என் மகளுக்கு எட்டு வயதுதான், அந்த வயதில் அவ்வளவு மெச்சூரிட்டியோடு அவள் கூறிய அந்த அறிவுரை நம்முடைய கோபம் எத்தனைதான் நியாயமாக இருந்தாலும் பொது இடத்தில் கோபப படுவது அநாகரீகம் என்பதை உணர்த்தியது.
படிப்பதில் ஆர்வம் உள்ள நான் எங்கே சென்றாலும் அங்கிருக்கும் புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு அதில் மூழ்கி விடுவேன். அங்கிருப்பவர்களோடு உரையாடுவதை விடுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல மாட்டேன். அந்த கேள்விகள் என் காதில் விழுந்தால்தானே? இதற்காக கொஞ்சம் திட்டு, கொஞ்சம் கேலி இவைகளை வாங்கி கொண்டாலும் என்னால் அந்த பழக்கத்தை அறவே விட முடியவில்லை. எங்கள் நண்பர்கள், நான் அவர்கள் வீட்டுக்கு வருகிறேன் என்றால் அவர்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்களை மறைத்து வைப்பார்கள்.
ஒரு முறை என் அக்காவின் வீட்டிற்குச் சென்ற பொழுது வழக்கம்போல் நான் புத்தகத்தில் மூழ்கி விட்டிருக்கிறேன், என் அக்காவின் மாமியார் என்னிடம் ஏதோ கேட்டிருக்கிறார், நான் வழக்கம் போல் மௌனம்.. வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது என் மகள், "அங்க வந்து நீ பாட்டுக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டாய், மாமி உன்னிடம் ஏதோ கேட்கிறார், நீ பதிலே சொல்லாமல் புத்தகம் படிக்கிறாய்... மற்றவர்கள் வீட்டுக்கு போய் புத்தகம் படிப்பதென்றால் எதற்கு மற்றவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்? வெரி ரூட்(rude) பிஹேவியர்! என்று அட்வைஸ் மழை பொழிந்து விட்டாள்.(காய்ச்சி எடுத்து விட்டாள் என்றா சொல்ல முடியும்?)அத்தோடு விட்டேன் போகும் இடத்திலெல்லாம் புத்தகம் படிக்கும் கெட்ட பழக்கத்தை.
நான் பெற்ற இன்னொரு முக்கியமான அறிவுரை ஸ்ரீரெங்கத்தில் நாங்கள் வசித்த பொழுது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பௌராணிகரான திருச்சி.கே.கல்யாணராமனின் தாயார் வழங்கியது. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும்.
"நட்புக்கு வயது கிடையாது, பானு என்னுடைய ஃ பிரென்ட்" என்பார். அப்போது நான் கல்லூரி மாணவி. பரிச்சைக்கு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கல்யாணராமனின் தாயார் என்னிடம்,
" நீ இப்போது எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.
நான், நாளை பரீட்சை. அதில் என்ன கேள்விகள் வரும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன்.
மாமி உடனே, " இப்போதுதான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகத்தில் படித்தேன். உன்னிடம் யாராவது நீ எதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால், நானா அந்தப் பூவை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்லும்படியாக உன் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்" என்று அதில் இருந்தது. அதை உன்னிடம் பரிசித்துப் பார்த்தேன் என்றார்.
என்ன அழகான மெசேஜ்! இதை பின்பற்றினால் மனதில் கள்ளத்தனம் தோன்றுமா?
என் தோழி ஒருத்திக்கு நாம் ஏதாவது பரிசளித்தால் அதை உடனே உபயோகித்து நம்மிடம் காட்டுவாள். உதாரணமாக நாம் அவளுக்கு புடவை வாங்கி கொடுத்தால், அதை உடனே உடுத்திக்கொண்டு நமக்கு காண்பிப்பாள். இதை அவளிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
இன்னொரு தோழியை தொலைபேசியில் அழைக்கும் பொழுது, எப்படி இருக்கிறாய் என்று கேட்டால், "நன்னா இருக்கோம் பானு" என்று நிறைவாக சொல்வாள். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
விருமாண்டி படத்தில்,"நாம சந்தோஷமா இருக்கும் பொழுது பெரும்பாலும் அது நமக்குத் தெரிவதில்லை" என்று ஒரு வசனம் வரும். நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது, அதை உணர்வதும், கர்வமில்லாமல் அதை வெளிப்படுத்துவதும் பெரிய விஷயம் இல்லையா?
(ஸ்ரீராம் நான் நண்பர்களை குறிப்பிட்டு விட்டேன்).
இதைத் தவிர வாழ்க்கை நிறைய அறிவுரைகளை வழங்குகிறது, கற்றுக் கொடுக்கிறது.
பிறப்பில் வருவது யாதென கேட்டேன்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதென கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதென கேட்டேன்
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் என்றேன்
படைத்தவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்
வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவன் வார்த்தைகள் இவை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஓவ்வொரு அனுபவமும் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
அவற்றுள் மிக முக்கியமான பாடம், பெரிதாக கொண்டாடவோ, தூற்றவோ எதுவும் இல்லை என்பதுதான்.
அசோகாமித்ரன் ஒரு கதையில்,"உண்மையில் புத்திசாலித்தனம், முட்டாள்தனம் என்று எதுவும் இல்லை. ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அது புத்திசாலித்தனம், தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம்,முட்டாள்தனமாகி விடுகிறது" என்று எழுதி இருப்பார், எவ்வளவு உண்மை! இது புரிந்த பிறகு யாரையும் வியக்கவும் முடியவில்லை, யாரையும் இகழவும் முடியவில்லை. காலம் சிலரை உயரத்தில் ஏற்றி உட்காரவைத்து விடுகிறது, சிலருக்கு அது வாய்ப்பதில்லை, அவ்வளவுதான். எனவே பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்னும் முதிர்ச்சி இறையருளால் வாய்த்து விட்டது.
இந்த Blogathan ஐ தொடங்கி வைத்த மதுரை தமிழனுக்கும், அதில் என்னையும் பங்கு கொள்ள அழைத்த ஸ்ரீராமுக்கும் என் மனமார்ந்த நன்றி! இந்த ஒலிம்பிக் ஜோதியை என் கையிலிருந்து வாங்கி தொடர,
திரு.ராய செல்லப்பாவையும்,
திரு.நடன சபாபதி அவர்களையும்,
திரு.ஜீ.வி. அவர்களையும்,
திருமதி மனோ ஸ்வாமிநாதன் அவர்களையும்,
திருமதி. மிடில்க்ளாஸ் மாதவி அவர்களையும்
அழைக்கிறேன்.