கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, May 11, 2019

எங்கெங்கு காணினும் ஆப்படா..!!

எங்கெங்கு காணினும் ஆப்படா..!

எங்கள் வீட்டில் முன்பு நந்தினி பால் ஒருவர் வினியோகித்து வந்தார். சென்ற வாரத்தில் அவருடன் ஒரு இளைஞர் வந்து, இனிமேல் தான்தான் பால் வினியோகம் செய்யப் போவதாகவும், அதையும் டெய்லி நிஞ்சா என்னும் ஆப் மூலம் செய்வதாகவும் கூறி, அந்த ஆப்பை(செயலி) என் கணவரின் செல் ஃபோனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டினார். அதன் வழியே எப்படி ஆர்டர் கொடுப்பது என்றும் சொல்லிக் கொடுத்தார்.

இனிமேல் பால் டோக்கன் போட
வேண்டிய வேலை இல்லை. நம் தேவைக்கேற்ப ஆர்டரின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம். வேண்டாத நாட்களுக்கு பாஸ் போட்டு விடலாம். ஆனால் முதல் நாளே செய்து விட வேண்டும்.

பால் மட்டும் அல்ல, பழங்கள், காய்கறிகளையும் இதன் வழியே ஆர்டர் பண்ணலாமாம். என்ன..? "உனக்கு பிடிக்குமேனு மிதி பாவக்கா எடுத்து வெச்சிருக்கேன், வாழத்தண்டு இளசா இருக்கு, எடுத்துக்கோ.." என்றெல்லாம் நம்மை பிரத்யேகமாக கவனிக்கும் பெண்ணின் கரிசனம் கிடைக்காது.
இன்னும் சில காலத்தில் நம் விருப்பங்களை நாம் ரிஜிஸ்டர் பண்ணி வைத்து விட்டால், அந்த செயலி தெரிவிக்குமோ என்னமோ?
*********************************************************************************

ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் மகள், மாப்பிள்ளை, பேத்தியோடு திருப்பதி சென்றிருந்தோம். பேத்திக்கு அங்கு மொட்டை போடும் பிரார்த்தனை.  மே மாதம், கும்பல் அதிகம் இருக்குமே எனறு ஒரு கவலை. போதும் போதாததற்கு மருந்து சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதே என்று எச்சரிக்கப்பட்டவன் கதையாக, திருப்பதி சென்றும் பெருமாளை தரிசிக்காமல் வந்த ஶ்ரீராமின் அனுபவம் வேறு அவ்வப்போது நினைவுக்கு வந்து மிரட்டியது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, அத்தனை கும்பல் இல்லை. நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது.  அவரிடம் எப்போதும் எதிர்பாராததைத்தான் எதிர்பார்க்க வேண்டும். பெருமாளை தரிசித்து விட்டு வரும் பொழுது புளியோதரை பிரசாதம் கிடைக்கும் என்று நினைத்தேன். லட்டுதான் கிடைத்தது.

திருமலையில் நிறைய மாறுதல்கள். மாறிக்கொண்டேதான் இருக்கிறது. யாத்ரீகர்களுக்கு நிறைய வசதிகள். 300ம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே நுழையும் ஹாலில் இலவசமாக காபி,டீ,பால் முதலியவைகள் வழங்குகிறார்கள். எங்களுக்குத்தான் பருக நேரம் இல்லை. எல்லாம் சரி தரிசனம் முடித்து வெளியில் வந்து கார் பார்க்கிங்கிற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நல்ல வேளையாக சென்ற மாதம் திருப்பதி சென்று வந்த என் அக்கா, "காலுக்கு போட்டுக்கொள்ள சாக்ஸ் எடுத்துச் செல்லுங்கள், இல்லாவிட்டால் வெயிலில் நடப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும்" என்று கூறியிருந்ததை கடைபிடித்தோம், தப்பித்தோம். பாட்டரி கார்  வசதிகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கலாம்.

மலை மீது ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் ஏ.சி. போட முடியாததால் வீசிய அனல் காற்றால் தலைவலி. பீமாஸ் உணவகத்தில் கா...ர...மா..ன.. உணவு.  திருவள்ளூரில் மழை, சென்னையில் எப்போதும் போல் புழுக்கம். அதிலிருந்து விடுதலை தருவது மேற்கத்திய உச்சரிப்பில் பேத்தி பாடும் சாயி பஜன், "ரௌடி பேபி..", மற்றும் "மரணம் மாஸு மரணம்.." பாடல்களை கேட்பது. அவளை தமிழில் பேசு, தமிழில் பேசு என்று கூறி அது நடக்காமல் நாங்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டோம். என்.ஆர்.ஐ. குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கவே தனி ஆப் இருக்கிறதாமே..??!!


கத்தரியில்  வெய்யில்
கொளுத்துமாம்
கதைக்கிறார்கள் எல்லோரும்
தென்றலல்லவோ என்னைத்
தழுவிக் கொண்டிருக்கிறது!


Thursday, May 9, 2019

வாசிப்பு அனுபவம் (வேத வித்து)

வாசிப்புஅனுபவம் 
(வேத வித்து)

எதற்காகவோ புத்தக அலமாரியை குடைந்த பொழுது சாவி அவர்களின் படைப்பான 'வேத வித்து' கண்ணில் பட்டது. முன்னர் படித்த ஞாபகம் இல்லை. எனவே படிக்கலாம் என்று எடுத்தேன்.



எப்போது எழுதிய கதை என்று தெரியவில்லை. 1990ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. கவிஞர் வைரமுத்து முன்னுரை எழுதியிருக்கிறார்.

விதவா விவாகம், வேதம் படிக்கும் பிராமண பையனுக்கும், கழை கூத்தாடி பெண்ணுக்கும் இடையே துளிர்க்கும் நட்பு இரண்டையும் டீல் செய்திருக்கும் கதை.

ஆரவாரமில்லாத சரளமான நடை.
'நாதஸ்வரக்காரர் நாயனத்தை வீசி வாசிக்க முடியாதபடி குறுகலான சந்து', "பிரம்மச்சாரிகள் வெற்றிலை போட்டுக்கலாமா மாமா?" " ஏன் கூடாது?பிரம்மச்சாரிகள் கல்யாணமே பண்ணிக் கொள்கிறார்கள்"
என்று ஆங்காங்கே வெளிப்படும் சாவிக்கே உரிய நகைச்சுவை. சுவையான வாசிப்பு அனுபவம்.

அவருடைய விசிறி வாழை படிக்க வேண்டும்.