கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 15, 2024

உள்ளுணர்வு தரும் எச்சரிக்கை

உள்ளுணர்வு தரும் எச்சரிக்கை

சில சமயங்களில் நாம் சில விஷயங்களைத் தொடங்கும் பொழுது நம் உள்ளுணர்வு ‘ஜாக்கிரதை’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ எச்சரிக்கை கொடுக்கும். அதை மதிக்க வேண்டும். வெளியே செல்லும் பொழுது குடை எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளுணர்வு சொல்லும், மதிக்காமல் சென்றால் மழையில் மாட்டிக் கொள்வோம்.

என் மகளின் வளைகாப்பிற்கு பொன் காப்பு, வெள்ளி காப்பு வாங்க ஜி.ஆர்.டி. சென்றிருந்தோம். அந்த காப்புகளை கையில் வாங்கும் பொழுது, “இதை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று மனதில் தோன்றியது. “எத்தனையோ முறை நகைகள் வாங்கியிருக்கிறோம், இப்படி தோன்றியதில்லையே?” என்று நினைத்துக் கொண்டேன். பொன் காப்பு,வெள்ளி காப்பு இருந்த சிறிய நகைப்பெட்டியை என் தோள் பைக்குள் வைத்துக் கொண்டு, பையை மாட்டிக் கொண்டேன். பையின் ஜிப்பை திறக்கும் ஹூக், பின் பக்கம் இருந்தது.

அங்கிருந்து வளையல்கள் ஆர்டர் கொடுப்பத்ற்காக ரங்கநாதன் தெரு சென்றோம். அங்கு வளையல்களை செலக்ட் செய்துவிட்டு, மறு நாள் மண்டபத்திற்கு வரச்சொல்லி, அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். அந்த கடையில் கார்டில் பே பண்ணும் வசதி இல்லாததால், என் கணவர் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுக்க சென்றார்.

என் சகோதரியிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டியிருந்ததால், சகோதரியை செல்ஃபோனில் அழைத்தேன். கடைக்குள் சிக்னல் சரியாக கிடைக்காததால் வெளியே வந்து அவளோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நலைந்து பெண்கள் வந்து, கடையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஹேர் கிளிப்புகளை கிளறி, “இது எடுக்கலாம், இது வேண்டாம்..” என்றெல்லாம் சளசளவென்று பேசியபடியே தேடினார்கள். நான் என் சகோதரியோடு ஃபோனில் உரையாடிக்கொண்டே அவர்களை கவனித்தேன். அப்போது என் தோள் பைக்குள் யாரோ கை விட்டு அசைப்பது போல உணர்ந்தேன். “ஏய் யாரது..?” என்று கேட்டபடியே திரும்பியதும், என் பின்னால் நின்று கொண்டு என் தோள் பைக்குள் கையை விட்டு துழாவிக் கொண்டிருந்த ஒரு பெண் கையை எடுத்து விட்டு சட்டென்று நகர்ந்தாள். அவளோடு கிளிப்புகளை பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் நகர்ந்து விட்டார்கள், அவர்கள் எல்லோரும் ஒரு குழுவாக வந்து, சிலர் ஏதோ வாங்குவது போல பேச்சு கொடுத்து என் கவனத்தை கலைத்திருக்கிறார்கள். நான் செல் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தது, என் பையின் ஜிப்பின் ஹூக் திறக்க சௌகரியமாக பின் புறம் இருந்தது எல்லாம் அவர்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஆனால் அதை முழுமையாக திறக்க முடியவில்லை, மேலும் தோள் பை பெரியதாகவும், நீளமாகவும் இருந்ததால் அவள் கைக்கு எதுவும் சிக்கவில்லை. பொன்காப்பு, வெள்ளிகாப்பு பத்திரமாக இருந்ததை உறுதி செய்து கொண்டதும்தான் நிம்மதியானது. வீட்டிற்கு போய் ஸ்வாமிக்கு முன்னால் வைத்து, நன்றி சொல்லி, நமஸ்கரித்தேன்.

சமீபத்தில்(டிசம்பர் 23) பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் ஓர்ப்படியை பார்க்க நானும், என் நாத்தனார் பெண்ணும் ஈரோடு சென்றோம். என் நாத்தனார் மகள் அங்கிருந்து அப்படியே பெங்களூர் திரும்பி விட்டாள். நான் சென்னை சென்று விட்டு திரும்பலாம் என்று அதற்கேற்றார்போல் டிக்கெட் வாங்கியிருந்தேன். ஆனால் மனசுக்குள் சென்னை செல்ல வேண்டாம், பெங்களூரே திரும்பி விடலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதை மதிக்காமல் சென்னைக்குச் சென்று, அந்த மழை, வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு, போக நினைத்த இடங்களுக்கு  போக முடியாமல், பார்க்க விரும்பியவர்களை பார்க்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பும் பொழுது, இறங்கும் அவசரத்தில் என் செல்ஃபோனை தவற விட்டு… இப்படி ஏகப்பட்ட கந்தரகோளங்கள்! இப்போது சொல்லுங்கள் உள்ளுணர்வு தரும் எச்சரிக்கையை மதிக்க வேண்டுமா? வேண்டாமா?