கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 24, 2016

ஊருக்கு இளைத்தவன்...!

ஊருக்கு இளைத்தவன்...!

கோவிலுக்கு செல்லும் பெண்கள் ஜீன்ஸ் அணிந்து செல்லக் கூடாது என்னும் உயர் நீதி மன்ற உத்தரவிற்கு இடைக் கால தடை வாங்கி   இருக்கிறார் ஒரு பெண்மணி. அவர் கூறி இருக்கும் காரணம் இந்த உத்தரவு பெண்கள் தங்கள் இஷ்டப் படி உடை உடுத்தும் சுதந்திரத்தை மறுக்கிறதாம்.

அம்மணி உங்கள் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரைதான் என்பதை அறியாதவரா நீங்கள்? வழிபாட்டு தலத்தில் ஜீன்சும், இறுக்கமான மேல் சட்டையும் அணிந்து வரும் பெண்ணால் மற்றவர்களின் கவனம் கலையாதா? இப்படி கூறினால் உடனே "கோளாறு உங்கள் பார்வையில் இருக்கிறது, அதற்கு பெண் என்ன செய்வாள்"? என்று கேட்காதீர்கள். பெண்ணைப் பார்த்து சலனப் படுபவன்தான் ஆண், அப்படித்தான் இயற்கை படைத்திருக்கிறது. வழிபாட்டு தலத்தில் அவனை சலனப் படுத்த வேண்டாமே.

அப்படியாவது பொது இடங்களுக்குச் செல்லும் போது இப்படி உடை அணியுங்கள், ஷாப்பிங் செல்லும் போது அப்படி உடை அணியுங்கள், விசேஷங்களுக்குச் செல்லும் போது இந்த மாதிரிதான் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. நீச்சல் குளத்திற்குச் செல்லும் பொழுது ஒன்பது முழம் புடவையை கட்டிக் கொண்டுதான் நீந்த வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை. கோவிலுக்குச் செல்லும் பொழுது நாகரீகமாக( I mean dignified not fashionable) மற்றவர்களுக்கு உறுத்தாமல் உடை அணிந்து செல்லுங்கள் என்று சொல்லுவது தவறா?

அவரிடம் ஒரு கேள்வி, நட்சத்திர விடுதிகளிலும், கார்பொரேட் விருந்துகளிலும் டிரஸ் கோட்  என்பது கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய விஷயம். அவை எல்லாம்  இவரைப் போன்றவர்களின் சுதந்திரத்தை  பறிக்கவில்லையா? அல்லது அங்கெல்லாம் செல்லும் பொழுதும் தன் இஷ்டப்படிதான் உடை அணிந்து செல்வார?  

 மற்ற மதங்களில் வழிபாடு செய்யும் பொழுது பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் உண்டு. அவர்கள் தங்கள் சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்று கூப்பாடு போடுவதில்லை. எந்த கட்டுப்பாடும் விதிக்காத இந்து மதத்தில்தான் எல்லாவற்றிர்க்கும் எதிர்ப்பு! என்ன செய்வது? இந்தியாவில்   ஊருக்கு  இளைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி இந்து மதம்தானே?