கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, November 29, 2017

சாபுதானா கிச்சடி

சாபுதானா கிச்சடி 

தேவையான பொருள்கள்: 

சாபுதானா(ஜவ்வரிசி பெரியது)  - 200gm
உருளை கிழங்கு (மீடியம் சைஸ்) - 3
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 3 அல்லது 4
தக்காளி(பெரியது) - 2 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது இல்லையென்றால் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி போடலாம்.
நிலக்கடலை - ஒரு சிறிய கப் 
கறிவேப்பிலை - ஒரு ஆர்க் 
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க:
எண்ணெய்  - சிறிதளவு 
சீரகம் - 1 டீ ஸ்பூன் 
உ.பருப்பு - 2 டீ ஸ்பூன் 
க.பருப்பு -  2 டீ ஸ்பூன் 







செய்முறை:

ஜவ்வரிசியை கழுவி விட்டு, ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வடிய வைக்கவும். தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் நன்றாக வடிய வேண்டியது முக்கியம். இல்லையென்றால் கிச்சடி உதிர் உதிராக வராமல் கொழ கொழவென்று ஆகி விடும். 

ஊற வைத்து வடிய வைத்திருக்கும் ஜவ்வரிசி 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நாலு அல்லது எட்டு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.ஜவ்வரிசி தயாரானதும் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அது சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளித்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்(கீறி போடலாம்) கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது  இவைகளை சேர்த்து வதக்கவும்.






அவை நன்கு வதங்கியதும் ஜவ்வரிசியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள். ஜவ்வரிசி வெந்ததும்(அதன் வெண்மை நிறம் மாறி கண்ணாடி போல மாறும்) துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள உருளைக் கிழங்கு, மற்றும் ஒன்றிரெண்டாக பொடி செய்யப்பட்ட நிலக்கடலை இவைகளையும் சேர்த்து கிளறி சற்று நேரம் சின்னத் தீயில் அடுப்பில் வைத்து இறக்கிவிடவும். 






பி.கு. : கடலையை மிக்சியில் பொடி செய்யும் பொழுது அதிகமாக நொறுங்கி விட்டது. உ.கி.? மறந்து விட்டேன்.ஹி,ஹி! நீங்கள் மறக்காமல் போட்டு விடுங்கள்.