கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, April 30, 2014

கும்பகோணத்தை சுற்றி ஒரு குறும் சுற்றுலா!

கும்பகோணத்தை சுற்றி ஒரு குறும் சுற்றுலா!

சுவாமி மலைக்குச் செல வேண்டும் என்று கொஞ்ச நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது, "ஏன் சுவாமி மலை மட்டும் செல்ல வேண்டும்? பக்கத்தில் இருக்கும் வேறு சில கோவில்களுக்கும் சென்று வரலாமே" என்று என் மகன் கேட்க, இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று அப்படியே செய்ய முடிவெடுத்தோம்.

உழவன் விரைவு வண்டியில் பயணித்து காலை 5:45க்கு கும்பகோணத்தை அடைந்தோம். ஏப்ரல் மாத மத்தியல் விடியல் காலையில் மூடு பனி!!! ஆச்சர்யம்! கும்பகோணம் இப்போது சுற்றுலா மையம் ஆகி விட்டது.  நவீன வசதிகளோடு நிறைய ஹோட்டல்கள். குக்கிராமமான  சுவாமி மலையில் கூட நவீன வசதிகளோடு விடுதிகள்..!ஆன் லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சுவாமி மலை என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் கோவிலுக்கு திருவேரகம் என்றும் ஒரு பெயர் உண்டு என்பதும் இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். சுவாமி மலை என்று அறியப்பட்டாலும் உண்மையில் இது ஒரு மலை கிடையாது,சிறிய குன்றுதான் அதுவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்று என்பதால் கட்டுமலை என்று அழைக்கப்படுகிறது என்பது சிலருக்கே தெரிந்திருக்கும். இந்த கோவில் இரண்டு நிலைகளாக உள்ளது. முதல் நிலையில் மீனாட்சி அம்மன்,சுந்தரேஸ்வர சுவாமி, சண்டிகேஸ்வரர், மற்றும் நவக்ரகங்களுக்கு தனித் தனி சந்நிதிகள் உள்ளன. அங்கிருந்து வருடங்களின் பெயர்களை கொண்ட அறுபது படிகளை ஏறிச் சென்றால் முருகன் சந்நிதி. அதற்கு முன் தென் திசை நோக்கி இருக்கும்விநாயகரை வணங்கி கொள்கிறோம் (வேறு ஏதாவது கோவில்களில் இப்படி தென் திசை பார்த்திருக்கும் பிள்ளையார் உண்டா என்று தெரியவில்லை). நெடிதுயெரெந்திருக்கும் முருகன். கண் குளிர தரிசனம் செய்கிறோம்!


அங்கிருந்து திருவலஞ்சுழி சென்றடைந்தோம். திருவலஞ்சுழி என்றதும் பெரும்பாலானோர்  வெள்ளை விநாயகர் கோவில்தான் பிரதானம் என்று நினைத்துக் கொள்வோம்.  ஆனால் அடிப்படையில் இது பெரிய நாயகி உடனுறை ஜடாமுடிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் ஆலயமாகும்! பிருமாண்டமான கோவில்! கோவிலில் நுழைந்து கொடிமரத்தை தாண்டியதுமே வெள்ளை விநாயகர் என்னும் ஸ்வேத விநாயகர் சந்நிதி.
இந்திரன் பூஜித்த சிறிய வெண்ணிற விநாயகர்!அவருக்கு முன் பிரசித்தி பெற்ற ஒற்றைக் கல்லினால் ஆன  பலகணி(சாளரம்). அந்த பலகணி மட்டுமல்ல கோவில் முழுவதிலுமே அழகான சிற்ப வேலைப்பாடுகள்! சுவாமியை தரிசனம் செய்து விட்டு தனி கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெரிய நாயகியையும் வணங்குகிறோம். அம்மன் சந்நிதிக்கருகில் அஷ்ட புஜ துர்கைக்கென்று தனி சந்நிதி.   ராஜ ராஜ சோழன் வணங்கிய 'நிசும்ப சூதனி' இதுதான் என்றும் ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் முன்னும்  இவளை வணங்கிச் சென்றதால்தான் போர்களில் வெற்றி பெற்றான் என்றும் அருகில் வைக்கப் பட்டிருக்கும் அறிவிப்பு பலகை சொல்கிறது. ஆனால் நிசும்ப சூதனி கோவில் தஞ்சாவூரில்தான் இருக்கிறது என்றும் இங்கிருக்கும் அஷ்டபுஜ துர்கையை ராஜ ராஜ சோழன் வணங்கினான் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றும் எழுத்தாளர்  பாலகுமாரன் கூறுகிறார். எப்படி இருந்தாலும் கண்களில் கருணை வழியும் துர்கையை வணங்கிக் கொள்கிறோம்.

--தொடரும்

பின் குறிப்பு:

திருவலஞ்சுழி தல புராணம்:


குடகு மலையிலிருந்து புறப்பட்ட காவிரி, திருவலஞ்சுழிக்கு முன்னால் ஒரு
த்வாரத்தில்(குழிக்குள்) சென்று மறைந்து  விட்டது. காவேரி தஞ்சையின் இறுதி வரை வரும், தாம் பயன் பெறலாம்,என்று நினைத்த சோழ தேச மக்களும், மன்னனும் ஏமாற்றமடைந்தனர். காவிரியை மீண்டும் வெளியே கொணர்வது எப்படி என்று ஆலோசித்தப்பொழுது, ஒரு அரசன் அல்லது முற்றும் துறந்த முனிவர் ஒருவரை பலியிட்டால், காவேரி மீண்டும் வெளிவந்து ஓடத் துவங்கும் என்று கூறப்பட்டது. உலக மக்களின் நன்மைக்காக ஏரகண்ட முனிவர் தன்னை பலியிட்டுக் கொள்ள காவிரி தான் மறைந்திருந்த பிலத்திலிருந்து வெளிப்பட்டு இவ்விடத்தில் வலப்புறமாக சுழித்துக்கொண்டு ஓடத் துவங்கியது. அதனாலேயே இவ்விடம் திருவலஞ்சுழி என்று வழங்கப்படலாய்ற்று. அப்பொழுதே காவேரியை தஞ்சை டெல்டா பகுதிக்கு வரவழைப்பது பிரச்சனைதான் போலிருக்கிறது!!