கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 23, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 
சில விமர்சனங்கள்


அருணா சாய்ராம் கச்சேரி:



Front Enders Foundation என்னும் சேவை நிறுவனம் அதோடு சம்பந்தப்பட்ட'மைத்ரி' என்னும் நிறுவனத்திற்காக அதுல்யா மற்றும் ஹெல்த் ஃபார் 60+ இவற்றோடு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த அருணா சாய்ராமின்  இசைக்கச்சேரிக்கு பாஸ் கிடைத்தது. 

18.10.19  வெள்ளியன்று மாலை 6:30க்கு கச்சேரி துவங்கும் என்று போட்டிருந்தாலும், வரவேற்புரை, ப்ரண்ட் எண்டெர்ஸ், மைத்ரி, அதுல்யா, ஹெல்த் ஃபார் 60+ போன்றவைகளை பற்றிய சுருக்கமான அறிமுகம், ஸ்பான்சர்களுக்கு பாராட்டு, கச்சேரி செய்யப் போகும் கலைஞர்களை கௌரவித்தல் போன்றவைகல் முடிந்து கச்சேரி தொடங்கவே 7:15 ஆகி விட்டது. 

'வாழ்க்கைப் பயணம்' என்னும் பொருளுக்கு ஏற்ப ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுத்திருந்தார். 'ஒருத்தி மகனாய் பிறந்து..' என்னும் திருப்பாவை பாசுரத்தோடு கச்சேரியை தொடங்கியவர் அடுத்தடுத்து தியாகய்யர், ஊத்துக்காடு வேங்கட சுப்புரமணியர், முத்துசாமி தீக்ஷதர், அஷ்டபதி, பாபநாசம் சிவன், அபங் என்று அழகாக பாடல்களை தொகுத்திருந்தார். கச்சேரியை எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து விடக்கூடாதே என்பதற்காக கல்யாண ராமா பாடலில் ஸ்வரம் பாடினார். கபாலி நின் கருணை நிலவு பொழில் பாடலில் தனி ஆவர்த்தனம் என்று முழு நீள கச்சேரியாக வடிவமைத்திருந்தார். பக்கம் வாத்தியம் வாசித்த எல்லோருமே திறமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றாலும் மிருதங்கம் வாசித்தவரும், புல்லாங்குழல் வாசித்தவரும் அபாரம். மிருதங்கம் சுநாதமாக ஒலித்தது. எங்கே வலுவாக இருக்க வேண்டும், எங்கே மென்மையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து வாசித்தார். புல்லாங்குழல் வாசித்தவருக்கு ஆடியன்ஸ் அப்லாஸ் கொடுத்த பொழுது,"ஹி டிசெர்வர்ஸ் திஸ்" என்று அருணா கூறியதில் அவருடைய பெருந்தன்மை தெரிந்தது. ஆனாலும், தனியாக வீடு திரும்ப வேண்டுமே என்று கச்சேரி முடியும் முன்பே கிளம்பி விட்டேன். ஒரு அற்புதமான மாலை!
(அட! நான் கூட ஒரு இசை விமர்சனம் எழுதி விட்டேன்.😃😄😄)

அசுரன்(திரைப்படம்):



நான் சென்னை வரும்பொழுதெல்லாம் என் தோழி ஏதாவது ஒரு சினிமாவிற்கு டிக்கெட் புக் பண்ணிவிடுவார். இந்த முறை அவர் அழைத்துச் சென்ற படம் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'அசுரன்' திரைப்படம். 

பூமணி எழுதிய 'வெக்கை' என்னும் நாவல்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். நாவலை படிக்காததால் படமாக்கப்பட்டதில் எதை பெற்றிருக்கிறது, எதை இழந்திருக்கிறது என்று கூற முடியவில்லை. 

ஊரின் பெரிய நிலச் சுவாந்தரான ஆடுகளம் நரேன் அவர் நிலத்திற்கருகில் ஒரு சிறு பூமியை வைத்திருக்கும் தனுஷின் நிலத்தையும் சிமெண்ட் ஃபாக்டரி கட்டுவதற்காக பறித்துக் கொள்ள பார்க்கிறார். இதற்கான முயற்சியில் நடக்கும் ஜாதி மோதல்கள், பழி வாங்கும் நடவடிக்கைகள் இவையே கதையாக விரிகிறது. தன்  நிலத்தை காப்பற்றிக் கொள்ள தனுஷ் குடும்பம் படும் பாட்டை விட ஜாதி சண்டையும், ஆண்டான், அடிமை மனப்பாங்குமே முன்னிலை வகிக்கின்றன.

தனுஷும், அவருடைய மனைவியாக தமிழுக்கு வருகை தந்திருக்கும் மஞ்சு வாரியரும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் பசுபதிக்கும் தனுஷின் இள வயது காதலியாக வரும் அம்மு அபிராமிக்கும் பொருந்துவது போல் இவர்கள் இருவருக்கும் பொருந்தவில்லை. பாத்திரத்திற்குள் புகுந்து கொள்ளாமல் கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்பதாகவே தோன்றுகிறது. சிவாஜி கூட இளம் வயதிலேயே வயதான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு அதற்கேற்ற உடலமைப்பு இருக்கும். தனுஷின் உடல் அமைப்பை விட்டு விடலாம், ஒல்லியாக இருக்கும் கிராமத்து மனிதர்கள் இல்லையா? அவர் முகத்திலேயே மெசூரிட்டி இல்லையோ என்று தோன்றுகிறது. அதைப் போலவே மஞ்சு வாரியரின் உடல் மொழிகளும் நகரம், நகரம் என்கின்றன. 

பசுபதி, அம்மு அபிராமி, தனுஷின் மகன்களாக வரும் தீஜே அருணாச்சலம், கெவின் கருணாஸ்(கருணாஸின் மகனா?) எல்லோருமே பாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் பசுபதி, தனுஷிற்கு இடையே நிலவும் அன்னியோன்னியம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜுக்கும், இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி சக்தி வேலுக்கும் அதிக வேலை இல்லை. 

முன் பாதியில் பாசம், நேசம், உணர்ச்சிபெருக்கு போன்றவை பின் பாதியில் காணாமல் போய் வெறும் வஞ்சம், ஜாதி மோதல் இவைகளே பிரதான இடம் பிடிக்கின்றன. இரண்டாம் பாதியில் பீறிடும் ரத்தம் நம் மீது தெளித்து விடுமோ என்று தோன்றுகிறது. 
மகனை போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்க தனுஷ் ஊர் மக்கள் ஒவ்வொருவர் காலிலும் விழும் பொழுது அந்த வலியை நாம் உணர வேண்டாமா? 

கனமான விஷயம், வியாபார நிர்பந்தங்களினால் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  

சாரம் உதைத்த சர மழை:

இந்த வருடம் இந்தியா முழுவதுமே நல்ல மழை. இப்போது தமிழகத்திலும் பருவ மழை தொடங்கி வெளுத்து வாங்குகிறது. மே, ஜுனில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக வருண ஜெபமெல்லாம் செய்தார்கள். இந்த சுலோகம் சொல்லுங்கள், இந்த மந்திரத்தை ஜபியுங்கள் என்று வாட்ஸாப்பில் தினம் ஒரு மந்திரம் வந்து கொண்டிருந்தது.  இப்போது மழை பொழிகிறதே அந்த நீரை சேமித்து வைத்துக் கொள்ள என்ன செய்கிறோம்? எல்லாமே அரசாங்கம்தான் செய்ய வேண்டுமா? பெரிய பெரிய குடியிருப்புகளும், தனி வீடுகளும் மழை நீர் சேகரிப்பை செய்கின்றனவா? 

கோடையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிய பொழுது நான் சிலரிடம் தண்ணீர் கஷ்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்ட பொழுது பெரும்பாலானோர், "சொசைட்டியில் லாரி தண்ணீர் வாங்கி ஊற்றுகிறார்கள். எங்கள் வீட்டில் தண்ணீர் வருகிறது". என்றார்கள். இப்படிப்பட்டவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? இந்த விஷயத்தில் கிராமத்து இளைஞர்களுக்கு இருக்கும் உத்வேகம் நகரத்துவாசிகளுக்கு இல்லை. சனியன்று எங்கள் பிளாகில் வெளியாகும் பாசிட்டிவ் செய்திகளை கவனித்தாலே இது புரியும். கிராமத்து இளைஞர்கள்தான் ஆறுகளையும், ஏரிகளையும் தூர் வாருகிறார்கள், மழை நீரை சேமிக்கிறார்கள். நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இருக்கின்றதே.