நீடித்த சந்தோஷம் எது?
முகநூல்(face book) தோழி திருமதி காயத்ரி சுந்தரேசன் சமீபத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.
Pleasure- what is it that gives one pleasure? Physical?mental?emotional? which is lasting pleasure?
நான் தமிழில் சிந்திப்பதால் இதை தமிழ் படுத்துகிறேன். ஒருவருக்கு எது சந்தோஷத்தை கொடுக்கிறது? புலனின்பமா? அறிவு சார்ந்த இன்பமா? இல்லை உணர்வு சார்ந்த இன்பமா? எந்த இன்பம் நீடித்திருக்கும்?
நல்லது! முதலில் புலனின்பத்தை எடுத்துக் கொள்வோம். கண்டு,கேட்டு, உற்று,உணர்ந்து.முகரும் இந்த ஐவகை இன்பங்களும் பெண்ணிடம் உண்டு. சாப்பாட்டிலும் உண்டு. இந்த இரண்டு வகை இன்பங்களை தேடித் தேடி ஓடாதவர்கள் உண்டா? இதனால் கிடைக்கும் இன்பம் நிச்சயமாக நிலையானது கிடையாது.
மேலும் இந்த புலனின்பத்தை அனுபவித்து தீர்த்து விட முடியாது. மகாபாரதத்தில் வரும் யயாதி கதையில் யயாதி கூறியதைப் போல, உலக இன்பங்களை அனுபவித்து தீர்த்து விடலாம் என்று நினைப்பது எரிகின்ற கொள்ளிக்கு நெய் வார்த்து அதை அணைத்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பானது. எனவே நீடித்த இன்பத்தை ஒரு போதும் தராது. அதனால்தான் நம் முன்னோர்கள் இது ஒரு வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதர்காகத்தான் அவ்வப்பொழுது விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அடுத்து அறிவார்ந்த சந்தோஷம்: அறிவார்ந்த சந்தோஷம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை. ஏனென்றால் அறிவு செயல் பட ஆரம்பிக்கும் பொழுது சந்தோஷம் விடை பெற்று விடும். சிறு வயதில் மயலின் இறகை நோட்டு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடும் என்று நம்பும் சந்தோஷம் வளர்ந்த பிறகு இருக்குமா?
மணிக்கொடி எழத்தாளர்களில் ஒருவரான கு.ப.ராஜகோபால் ஒரு அருமையான சிறு கதை எழுதி உள்ளார். அதில் சித்தார்த்தன் என்னும் இளவரசன் ஏன் புத்தனானான் என்பதற்கு ஒரு காரணம் கூறியிருப்பார்.
இரவில் மனைவி யசோதராவோடு சுகிக்கிறான் சித்தார்த்தன். அதற்குப் பிறகு அவள் உறங்கி விட, இவ்வளவுதானா? இதற்குத்தானா? என்னும் கேள்விகள் அவனை வாட்ட, அன்றிரவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறான். என்று முடித்திருப்பார்.
அடுத்தது உணர்வு பூர்வமான சந்தோஷம்: இது சற்று உயர்ந்த ரகம்: மேலே சொன்ன இரண்டு ரகங்களும் அனுபவிக்கும் ஒருவருக்கு மட்டும் சந்தோஷத்தை தரும் என்றால், இதில் நாம் மற்றவரையும் சந்தோஷப்படுத்தலாம். எப்படி என்றால் ஒருவர் பாடுகிறார். அது அவருக்கு சந்தோஷம், அது நன்றாக இருக்கும் பட்சத்தில் கேட்பவருக்கும் சந்தோஷம். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இன்று இல்லை. ஆனால் அவருடைய சங்கீதம் இன்றும் நம்மை சந்தோஷப் படுத்துகிறது.
ஸ்வாமி ஏ.பார்த்தசாரதியின் உரையில் ஒரு முறை குறிப்பிட்டார். இந்த உலகில் மூன்று விதமான உதவிகள் உண்டு. ஒன்று பணத்தால் ஒருவருக்கு உதவுவது. இது அதமம் (கடைசி). இரண்டாவது உடலால் ஒருவருக்கு உதவுவது இது மத்யமம்(இடை நிலை). மூன்றாவது உணர்வு பூர்வமாக ஒருவருக்கு உதவுவது, இதுதான் உத்தமம் (உயர்ந்த நிலை).
முன்பெல்லாம், எல்லா மகான்களும் பாடகர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற செலிப்ரிடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நான், "எல்லா இடங்களிலும் பெரிய மனிதர்கள் என்றால் ஒரு தனி கவனிப்புதான்" என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் அவர்கள் தங்கள் திறமையால் எத்தனை பேர்களை உணர்வு பூர்வமாக சந்தோஷப் படுத்துகிறார்கள்? அதற்கான அங்கீகாரம்தான் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம். மேலும் இந்த உணர்வு பூர்வமான சந்தோஷத்தை தெய்வீகமாக மாற்றுவது எளிது.
இதில் எதுவுமே நிலைத்த சந்தோஷத்தை தராது என்பதுதான் உண்மை. எதுவுமே நீடித்த சந்தோஷத்தை தராது என்பதை கண்டு கொள்வதுதான் சந்தோஷத்தை தரும்.
யாதனின் யாதனின் நீங்கியாங்கு நோதல்
அதனின் அதனின் இல
எதில் எதில் இருந்தெல்லாம் விலகி இருக்கிறோமோ அவைகளால் துன்பம் கிடையாது என்று இதைத்தான் வள்ளுவர் சொன்னார். நீங்குதல் என்பது புறக்கணித்தல் அல்ல எட்டி இருத்தல், டிடாச்மென்ட். இதை பழக்கிக் கொண்டோமானால் வாழ்கை இனிக்கும்!
பி.கு.: இது ஒரு மீள் பதிவு. பழைய கடிதங்களை படிப்பதை போல, பழைய பதிவுகளை படிப்பதும் ஒரு சுகம்தான்.