கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 31, 2020

கடலைக் கடந்து - 6

கடலைக்  கடந்து - 8

நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் பணி ஒய்வு பெற்று சென்ற ஒருவருக்கு விடையளிக்கும் வைபவம் நடந்தது. எங்கள் அலுவலகத்தின் டைரக்டர், மற்றும் பல்வேறு டிபார்மென்டுகளின் தலைவர்கள் ஒரு அறையில்  குழுமியிருக்க, எல்லோருக்கும் கேக், சமோசா, மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன. முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த நான் குளிர் பான டின்னை சற்று வேகமாக திறந்து விட புஸ்ஸென்ற சீறலோடு வெளிப்பட்ட அது எதிரே அமர்ந்திருந்த ஒரு தலைமை அதிகாரியின் உடையில் தெறித்தது. ஒரு பக்கம் அவமானம், ஒரு பக்கம் பயத்தோடு நான் மன்னிப்பு கோர, அந்த ஓமானிய அதிகாரி,"நோ ப்ராப்லம், மூர்த்தி இஸ் மை பிரதர், யூ ஆர் ஹிஸ் ஒய்ஃப்" என்று மிகவும் பெருந்தன்மையோடு  கூறி விட்டார்.    நல்லவேளை நான் மிராண்டாவோ, பெப்ஸியோ எடுத்துக் கொள்ளாமல் ஸ்ப்ரைட் எடுத்துக் கொண்டிருந்தேன். அவருடைய வெள்ளைவெளேர் திக்தாஷா தப்பித்தது. 

எங்கள் அலுவலகத்தில் ஓத்மான் என்றொரு ஜான்சிபாரி மருத்துவர் இருந்தார். அவர் இடைவிடாமல் சிகரெட் புகைத்துக் கொண்டே இருப்பார். ஒருமுறை என்னிடம் டைப் செய்ய கொடுத்து விட்டு, அதைப் பற்றி புகையும் சிகரெட்டோடு அவர் விளக்க, அப்போது கர்ப்பிணியாக இருந்த எனக்கு குமட்டியது. அவரிடம், "டாக்டர், ஐ காண்ட் பேர் திஸ் ஸ்மெல், கேன் யூ புட்  ஆஃப் யுவர் சிகெரெட்?" என்றதும், "டெஃபனெட்லி" என்று சிகெரெட்டை அணைத்தார். என் அதிகப் பிரசங்கித்தனத்தை அவர் தவறாக நினைக்கவில்லை. அவருக்கு நம் ஹிந்தி படங்கள் மிகவும் பிடிக்குமாம். அதுவும் அதில் பறந்து  பறந்து கதாநாயகன் போடும் சண்டையை மிகவும் ரசிப்பதாக சொல்வார். 

எங்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு எகிப்திய பெண்மணி ஒரு நாள் என்னிடம், தனக்கு ஒரு ஹிந்தி நடிகையை மிகவும் பிடிக்கும் என்றும், அவள் பெயர் என்ன என்றும் கேட்டாள். இப்படி சொன்னால் எப்படி? அவள் எப்படி இருப்பாள்? என்று நான் கேட்டதும், " ஷி இஸ் டால், ஷி ஐஸ் பியூட்டிஃபுல், ஷி ஹாஸ் பிக் ஐஸ்." என்றெல்லாம் சொன்னதும்,   நான், ரேகா?, ஸ்ரீதேவி? என்றெல்லாம் பெயர்களை அடுக்கினேன். அவளோ, "நோ நோ ..ஷி அக்டேட் இந்த பிலிம் சிங்கம்" என்றதும் எனக்கு பொறி தட்டியது, "யூ மீன் சங்கம்..?" என்றதும்  "எஸ்! எஸ்!" என்று ஆமோதித்தாள். கடவுளே! இன்னும் எத்தனை காலம் வைஜயந்தி மாலாவையே கொண்டாடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டேன். 

பஸ்ஸுக்காக காத்திருக்கும் பொழுது இன்னொரு எகிப்திய பெண்மணி," எனக்கு இந்திய பெண்களை மிகவும் பிடிக்கும். இந்தியப் பெண்கள் கருமையான கூந்தலும், கருமை நிறக் கண்களும் கொண்டவர்கள். அது மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்திற்காகவும், கணவனுக்காகவும் எத்தனை தியாகங்கள் செய்கிறார்கள்? கணவன் அடித்தால் கூட பொறுத்துக்க கொள்கிறார்கள், நான் இந்தியப் படங்களில் பார்க்கிறேனே.." என்பார். வடிவேலுவை கோவை சரளா டின் கட்டும் படங்களை அவர் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.