கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 9, 2018

நவராத்திரி - ஒரு முன்னோட்டம்

நவராத்திரி -  ஒரு முன்னோட்டம்

கொலுப்படி கட்டும் கணவர்,மகன்,மருமகள்


கொலுவேற காத்திருக்கும் பொம்மைகள்

எங்களுக்கு எங்கு இடம் கிடைக்குமோ?

95% சதவிகிதம் ரெடி. இன்னும் சீரியல் செட் போட வேண்டும்
ஆக, ஒரு வழியாக கொலுவிற்கு ரெடியாகி விட்டோம். கொலுவிற்கு டச் அப் வேலைகள் பாக்கி. சுண்டலுக்கு தேவையான சாமான்கள் வாங்கியாச்சு.  புடவைகள், ப்லௌஸ்கள் ரெடி, கிஃப்ட் ரெடி. ஆகவே மக்களே ஒன்பது நாட்களும் பாடுவதற்கு தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்துவராளி, நீலாம்பரி, புன்னாகவராளி, வசந்தா ராகங்களில் பாடல்கள் தயார் செய்து கொண்டு எங்கள் வீட்டுக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ள வாங்கோ.

உங்கள் வரவை அன்போடும், ஆவலோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் எதிர்பார்க்கும்.

பானுமதி வேங்கடேஸ்வரன்

Sunday, October 7, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 8

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 8 

நவ கைலாச ஷேத்திரங்கள் -3ம் பகுதி 


சேரன்மாதேவியில் அம்மநாதரை தரிசனம் செய்த பிறகு குன்னத்தூர் நோக்கிச் சென்றோம். கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் வரை, ஒரு புறம் மலை, அதன் கீழ் பச்சை புல்வெளி என பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது

குன்னத்தூர் ராகு தலம்.மூலவர் கோத பரமேஸ்வரர், அம்மன் சிவகாமி அம்மன். குன்னத்தூர் என்னும் இந்த இடம் செங்காணி என்றும் அழைக்கப் படுகிறது. காணி என்றால் நிலம், இந்த ஊரின் நிலம் செம்மண்ணாக இருப்பதால் செங்காணி என்று பெயர்.செங்காணி என்பது பேச்சு வழக்கில் இப்போது சங்காணி என்று அழைக்கப் படுகிறது. 

இந்த ஊரில் ஒரு வருடத்திற்கு ஒரு பூ பூத்து, ஒரு காய் மட்டும் காய்க்கும் மரம் ஒன்று இருந்தது. அந்த காய் பழுத்த பிறகு அதை அந்த ஊர் அரசன் சாப்பிடுவான். ஒரு முறை அந்த பழம் மரத்திலிருந்து ஆற்றில் விழுந்து விட்டது. ஆற்றில் நீரெடுக்க வந்த ஒரு பெண்ணின் குடத்தினுள்  நீரோடு அந்தப் பழமும் சென்று விட்டது. பழத்தினை காணாத அரசன் அதைத்  தேட பணிக்கிறான். அரசனின் காவலர்கள் எல்லா வீடுகளிலும் புகுந்து அதை தேடி, இந்தப் பெண்ணின் வீட்டில் குடத்தினுள் அதைக் காண்கிறார்கள். அரசன் சரியாக விசாரிக்காமல் அவளை கழுவிலேற்ற உத்தரவிடுகிறான். சாகும் தருவாயில் அப்பெண், இந்த ஊரில் பசுக்களையும், பெண்களையும் தவிர மற்ற அனைத்தும் அழியட்டும் என்று சாபமிடுகிறாள். அதனால் இந்த ஊர் வளம் குன்றத்தொடங்கி விட்டது. ஊரில் நாகங்கள் பெருகின. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சிவபெருமானை வழிபட சிவபெருமான் அந்த நாகங்களை எடுத்து தன்  உடல் மேல் போட்டுக் கொண்டு இந்த ஊரின் பாதிப்பை நீக்குகிறார். இன்றும் சிவலிங்கத்தின் நடுவில் பாம்பு இருப்பது போல் அமைப்பு உள்ளது. 

அதன் பிறகு பலரும் அறிந்த பாபநாசம் சென்றோம். நவ கைலாச கோவில்களில் முதலாவதான இக்கோவில் சூரிய க்ஷேத்திரமாக கருதப்படுகிறது. 


பாபநாசம் கோவில் கதவுகள் 

அழகான இயற்கை சூழலில் அமைந்திருக்கும் கோவில். கோவிலுக்கு எதிரே தாமிரபரணி ஆரவாரமாக ஓடுகிறது. அங்கிருக்கும் ஸ்னான கட்டத்தில் குளித்து விட்டு பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். வெகு அழகான கோவில். நாங்கள் சென்றது உச்சிகால பூஜை நேரம். அப்போதுதான்அபிஷேகம், அலங்காரம் எல்லாம் முடிந்து திரை விலக்கினார்கள், மூலவருக்கும், நடராஜருக்கும் காண்பித்த ஆரத்தியை வெகு அருகில் நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. இங்கிருக்கும் நடராஜரின் சபை 'புனுகு சபை' என்றழைக்கப் படுகிறது.

இந்திரன் சுக்கிராச்சாரியாரின் மகனான த்வஷ்டாவை தன் குருவாக ஏற்கிறான். ஒரு முறை அசுரர்களின் நலனுக்காக ஒரு யாகத்தை செய்வதை கண்டு கோபம் கொண்டு, அவனைக்  கொன்று விடுகிறான். அதனால் அவனை ப்ரம்மஹத்தி தோஷம் பீடிக்கிறது. அதை போக்கிக் கொள்ள அவன் பல சிவ ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்கிறான். இருந்தாலும் அவனுடைய தோஷம் நீங்கவில்லை. இறுதியில் குரு பகவான் அறிவுரைப்படி இங்கு வந்து வழிபாடு செய்ய, அவனுடைய பாவம் நீங்குகிறது. அதனால்தான் இவ்விடம் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது. 

இங்கிருக்கும் நடராஜர் தைப்பூசத்தன்று பதஞ்சலி முனிவருக்கும், வ்யாக்ரபாதருக்கும் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் தரிசனம் தந்ததால் இப்போதும் தைப்பூச நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுமாம்.

சிவ பார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த பொழுது தேவர்கள் அனைவரும் கைலாயத்தில் குழுமி விட, பூமியின் வட பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்து விடுகிறது. அப்போது பூமியை சமன் செய்ய அகத்தியரை தென் பகுதிக்கு அனுப்புகிறார் சிவபெருமான். பொதிகை மலைக்கு வரும் அகத்தியருக்கு தன்னால் அந்த மகத்தான திருமண காட்சியை காண முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. சிவபெருமான் தாங்கள் தங்கள் திருமண கோலத்தில் அவருக்கு காட்சி கொடுப்பதாக  கூறி, சித்திரை மாதம் ஒன்றாம் தேதியன்று திருமண கோலத்தில் காட்சியளித்து  அவருடைய அந்த குறையை போக்குகிறார்.  அதனால் இப்போதும் சித்திரை மாதத்தில் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன.

கருவறையில் ருத்திராக்ஷ வடிவிலும், பிரகாரத்தில் ருக்,யஜுர்,சாம வேதங்கள் கிளா மரத்தின் மூன்று கிளைகளாக லிங்கத்திற்கு நிழல் தர, அதர்வண வேதம் பூஜித்ததால் முக்கிளா லிங்கம் என்று வழங்கப்படுகிறது. மூலவர் பாபநாசர், அம்பாள் லோகநாயகி என்னும் உலகம்மை. அம்மனுக்கு செய்யப்படும் மஞ்சள் பொடியை சிறிதளவு உட்கொள்ள, திருமணத்தடை அகலும், பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. 

கடைசியாக நாங்கள் தரிசித்தது முறப்பநாடு, குரு ஸ்தலம். நாங்கள் மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று விட்டு நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் தரிசித்து விட்டு வருவதற்கு கொஞ்சம் நேரமாகி விட்டது. முறப்பநாடு கோவிலில் அர்ச்சகர் இருக்க வேண்டுமே, பக்தர்கள் யாரும் இல்லையென்றால் அவர் சீக்கிரமே கிளம்பி விடுவார் என்று கொஞ்சம் அச்சத்தோடு டிரைவர் வண்டி ஓட்டினார். அவர் போல அங்கு பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணியைத் தவிர வேறு யாரும் இல்லை. அவரும் கடையை கட்டி விட்டார்.  

தாமிரபரணியின் கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில்.  தாமிரபரணி இங்கு உத்திரவாஹினியாக அதாவது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுவதால் காசிக்கு இணையான க்ஷேத்திரம். இங்கு நீராடி, நீத்தார் கடன் செய்வது சிறப்பு. 

இங்கிருக்கும் நந்தியின் முக அமைப்பு கொஞ்சம் குதிரையின் முகத்தைப் போல இருக்கிறதே? என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருக்கும் தல வரலாற்றைப் படித்த பிறகுதான் அதற்கான காரணம் புரிந்தது.

முறப்பநாடு கோவில் நந்தி - குதிரை முகத்தோடு 
சோழ அரசனின் மகள் ஒருவள்  முகத்தோடு பிறந்து விடுகிறாள். மனம் வருந்திய அரசன் தன் மகளின் குதிரை முகம் மாறி அழகிய முகம் கிடைக்க வேண்டும் என்று இங்கிருக்கும் படித்துறையில் நீராடி,சிவ பெருமானை வழிபடுகிறான். சிவபெருமான் வரம் கொடுப்பதற்கு  முன்பாக நந்தி பகவான் அந்தப் பெண்ணிற்கு அழகன் தோற்றத்தை கொடுத்து விடுகிறார். இதனால் அந்தப் பெண்ணின் குதிரை முகத்தை நந்தி பகவானை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார் சிவபெருமான். இதனால்தான் இங்கிருக்கும் நந்தி பகவானுக்கு குதிரை முகம்.  

மூலவர் கைலாசநாதர், அம்பிகை சிவகாமி அம்மன்.  

அவனருளால் அவன் தாள் வணங்கும் பேறு கிடைத்தது. இதை கூட்டிவைத்த குருவருளுக்கும், முன்னோர்களுக்கும் நவ கைலாசம் பற்றி தெரிவித்த கீதா அக்காவுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஓம் நம சிவாய!   

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 7

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 7

நவ கைலாச ஷேத்திரங்கள் -2ம் பகுதி 




திங்கள் கிழமை ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலோடு அன்றைய கோவில் விசிட்டுகளை முடித்த நாங்கள், மறுநாள் காலை குளித்து, உணவருந்தி விட்டு முதலில் சென்ற கோவில்  கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில். 


சிறிய கோவில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் சிவகாமி தெற்கு நோக்கியும் இருக்கிறார்கள். சுவாமியின் கருவறையில் நுழையும் முன், இடது பக்கம் விநாயகரும், வலது புறம் சுப்பிரமணிய ஸ்வாமியையும் வணங்கிக் கொள்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய க்ஷேத்திரமாக கருதப் படுகிறது. அன்று செவ்வாய் கிழமையாக இருந்ததால், அம்மன் சந்நிதியில் ஒரே கும்பல். ஏதோ சிறப்பு பூஜை. அம்பிகை மஞ்சள் நிற புடவை உடுத்திக்கொண்டு மிக அழகாக இருந்தாள். ஸ்வாமியையும் அழகாக அலங்கரித்திருந்தார்கள். புகைப்படம் எடுக்கலாமா என்று நினைத்தேன். மூல ஸ்தானத்தை எடுக்க வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். அப்போது  அம்மன் சந்நிதியில் இருந்த அர்ச்சகர் ஒரு படம் மற்றும் குங்குமம், விபூதி பிரசாதங்களை கொடுத்தனுப்பினார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. 








கோவிலை வலம் வந்து நமஸ்கரித்தோம். எல்லா சிவன் கோவில்களையும் போலவே சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், பைரவர் தனி சந்நிதிகளில். கோவில் வளர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. பிரகாரத்தில் நந்தவனம் அமைத்திருக்கிறார்கள்.  ஆனால் கொடி மரம், கோபுரம் போன்றவை இல்லை.  பச்சரிசி, வெல்லம் எண்ணெய் போன்றவை பிரசாதத்திற்காக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிப்பு காணப்பட்டது. செவ்வாய் கிழமைகளில் மட்டும் பரிகாரத்திற்காக நிறைய பேர்கள் வருவார்கள் போலிருக்கிறது. 

அங்கிருந்து சந்திரன் தலமான சேரன்மாதேவி நோக்கிச் சென்றோம்.  அந்த கோவில் சீக்கிரம் மூடி விடுவார்களாம். எங்கள் காரோட்டி கோவில் அர்ச்சகருக்கு ஃபோன் செய்து, எங்கள் வருகையை தெரிவித்தார். அவர், "ஏற்கனவே அம்மன் சந்நிதியை மூடி விட்டேன். சுவாமி சந்நிதியை மட்டும் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறேன் சீக்கிரம் வாருங்கள்" என்றார்.  கோபுரம், கொடி மரம், பலி பீடம், நந்தியம் பெருமான், நடராஜர் சந்நிதி  என்று எல்லாம் முறையாக அமைந்திருக்கும் கற்றளி கோவில். ராஜ ராஜ சோழன்,ராஜேந்திர சோழன் ஆகிய இருவருமே திருப்பணி செய்திருப்பதற்கு சான்றாக கல்வெட்டுகள் உள்ளதாம். இப்போது பக்தர்கள் வருகை குறைவாக இருப்பதால் அர்ச்சகர் வந்து காலை பூஜையை முடித்து விட்டு சென்று விடுகிறார்.

நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய கோவில். இங்கு வழிபடுவது திருவையாற்றுக்கருகில் இருக்கும் சந்திர க்ஷேத்ரமான திங்களூரில் சென்று வழிபடுவதற்கு சமம் என்று அர்ச்சகர் கூறினார். ரோமச முனிவர்  கைலாயம் அடைந்து நித்தியத்துவம் பெற வேண்டும் என்று இங்குதான் ஆல மரத்தின் அடியில் சிவ லிங்கம் அமைத்து வழிபட்டார் என்றும் அவருக்கு சிவ பெருமான் காட்சி அளித்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனாலோ என்னவோ இங்கு ஸ்தல விருட்சம் ஆல மரம்தான்.  இங்கிருக்கும் தூண்களில் ஒன்றில் ரோமச ரிஷிக்கு சிலை இருக்கிறது. 


சகோதரிகளும் அவர்கள் பயன் படுத்திய உரலும், உலக்கையும் 



மற்றொரு தூணில் இரண்டு பெண்கள் உரலில் நெல் குத்துவது போன்ற சிற்பம் ஒன்றும் இருக்கிறது. அதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது. இங்கு வசித்து வந்த சகோதரிகள் இருவர் தினமும் உரலில் நெல் குத்தி அரிசியாக்கி, அதைக் கொண்டு அன்னதானம் செய்து வந்தனராம். அவர்களுக்கு இந்தக் கோவிலின் மூலஸ்தானத்தை கட்டுவதற்கு ஆசை, ஆனால் அதற்கான பொருள் தங்களிடம் இல்லையே என்று வருத்தம். ஒரு நாள் சிவ பெருமானே ஒரு அந்தணராக வடிவெடுத்து வந்து இவர்களிடம் பிட்சை பெற்று, அவர்களை ஆசிர்வதித்துச் சென்றாராம். அதன் பிறகு அவர்களின் செல்வ செழிப்பு வளர, அவர்கள் இந்த கோவிலாய் கட்டினார்கள் என்பது வரலாறு. அதற்கு சாட்சியாக இருப்பதுதான் பெண்கள் இருவர் உரலில் நெல் குத்தும் சிலை. 

ஸ்வாமி அம்மநாதர், அம்பாள் ஆவுடையம்மை. சுயம்பு லிங்கம். ஸ்வாமி, அம்மன் இருவருமே கிழக்கு நோக்கிய திருக்கோலம். இப்போது சேரன்மாதேவி என்று அழைக்கப் பட்டாலும், இதன் புராண பெயர் சதுர்வேதி மங்கலம்.



தொடரும்..