கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, August 1, 2017

விக்ரம் வேதா - (விமர்சனம்)

விக்ரம் வேதா 
(விமர்சனம்) 



போலீசுக்கு தண்ணி காட்டும் நிழலுலக தாதா வேதாவை(விஜய் சேதுபதி) பிடிக்க அமைக்கப்படும் தனிப்படையில் ஒருவரான விக்ரம்(மாதவன்), அவரின் கூட்டாளியும், நண்பனுமான பிரேம் ஒரு ஆபரேஷனில் இறந்து விட, பிரேமை கொன்றது யார்? என்று அறிய முற்படும் பொழுது பல முடிச்சுகள் அவிழ்கின்றன. இறுதியில் தன் நண்பனை கொன்றவனை கண்டு பிடித்து பழி தீர்த்தாரா? என்பதே விக்ரம் வேதா. புஷ்கரின் காயத்ரியின் மூன்றாவது படம். 

நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரி வேடத்தில் சிக்கென்று பொருந்துகிறார் மாதவன். அவருடைய மனைவியாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நல்ல தேர்வு. ரொமான்ஸிலும் சரி,கணவன் யாரை வேட்டையாட துடிக்கிறானோ அவனுக்கே வக்கீலாக பணியாற்ற வேண்டியதால் ஏற்படும் ஊடலிலும் சரி தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கிறார்.

இதுவரை திரைப் படங்களில் அங்கும் இங்கும் மட்டும் தலை காட்டிய பிரேமுக்கு மாதவனுக்கு இணையான ரோல். அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

வழக்கமான தேர்ந்த நடிப்பு விஜய் சேதுபதியினுடையது. தன்  தம்பியைப் பற்றி மாதவனிடம் துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீரை அடக்கியபடி பேசும் பொழுது, தன்னால் நெகிழ்ச்சியாகவும் நடிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்.

அவருடைய தம்பியாக வரும் தம்பியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் கலக்கல். அதுவும் அந்த ரெஸ்டாரெண்ட் காட்சியில்,"ஆங்.." என்னும் ஒரே வார்த்தையை விதம் விதமாக சொல்லும் பொழுது ரசிக்க வைக்கிறார். 

மாதவனின் குழுவில் வரும் சந்தானம் என்னும் கதாபாத்திரம் அதீத பயம், அதீத அடக்கமாக வரும்பொழுதே பின்னால் மாறுமோ என்று சந்தேகம் வருகிறது.

படத்திற்கு பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை. 'டசக்கு டசக்கு..' பாடல் ஜனரஞ்சகம் என்றால் யாஞ்சி..' பாடல் இனிமை. 

தாதாக்களை நியாயப்படுத்துதல், போலீஸ் ஒழுங்கில்லை என்று காட்டுவது, அண்ணன் தம்பி செண்டிமெண்ட், காதலா? கடமையா? என்ற போராட்டம், பாரில் குத்துப்பாட்டு, நிறைய வயலென்ஸ் என்ற தமிழ் சினிமாவின் அம்சங்கள் அத்தனையும் இருந்தாலும் தொய்யாத திரைக்கதை + வித்தியாசமான ட்ரீட்மெண்ட் படத்தை ரசிக்க வைக்கிறது.