கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, June 14, 2016

புத்தகத் திருவிழா 2016!

புத்தகத் திருவிழா 2016!

எல்லா வருடங்களும் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சி இந்த வருடம் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப் பட்டு இப்போது ஜூனில்தான் நடை பெற்றது. சென்ற வருடம் டிசம்பரில் வந்த வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை விடுபடாததுதான் தாமதத்திற்கு காரணம். 
இது 39வது புத்தகக் கண்காட்சி. புத்தக கண்காட்சி என்று பொதுவாக அறியப்பட்டாலும், புத்தக ஆர்வலர்கள் இதை புத்தக திருவிழா என்றே குறிப்பிடுகிறார்கள்.

முதலில் காயிதே மில்லத் கல்லூரியிலும், பின்னர் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே இருக்கும் செயின்ட்.ஜான் பள்ளியிலும், சென்ற வருடம் ஒய்.எம்.சி.ஏ. க்ரௌண்டிலும் நடை பெற்ற புத்தக கண்காட்சி இந்த வருடம் ஏனோ தீவு திடலில் நடை பெற்றது. 

ஜூன் மாதம் என்பது புத்தக கண்காட்சி நடத்த ஏற்ற மாதம் கிடையாது. இப்போதுதான் பள்ளிகள் திறக்கும், அதற்காக நிறைய செலவு செய்திருக்கும் பெற்றோர் புத்தக கண்காட்சிக்கு வருவார்களா? அதனால் வருகையும் விற்பனையும் எதிர்பார்த்தது போல இல்லை. நடுவில் இரண்டு நாட்கள் மழை வேறு, என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் நான் சென்றது ஞாயிற்று கிழமையாக இருந்ததாலோ என்னவோ, புத்தக திருவிழா என்பதற்கு ஏற்ப தேர் கூட்டம், திருவிழா கூட்டமாக இருந்தது. கார் பார்கிங்கிலிருந்து நுழைவு வாசலுக்கு மினி பஸ் ஷட்டில் சர்வீஸ் விட்டிருந்தார்கள். அதற்கு ஒரு நீண்ட வரிசை காத்துக் கொண்டு நின்றது. நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக சென்று, நேபியர் பாலத்தை கடந்து கண்காட்சிக்குள் நுழைந்தோம். 

எழுநூறு ஸ்டால்கள்! இட வசதி தாரளமாக இருந்ததால் அத்தனை கும்பலிலும் சௌகரியமாக நடக்க முடிந்தது என்றாலும் என் தோழி கால் வாசி சுற்றுவதர்க்குள் களைப்படைந்து விட்டார். ஆகவே என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. வழாக்கம் போல பொன்னியின் செல்வன் நிறைய கண்ணில் பட்டது. நான் சந்தியா பதிப்பகத்திலிருந்து திரு.ஜீ.வி. அவர்களின் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' புத்தகமும்,லா.ச.ரா.வின்' புத்ர' புத்தகமும் மட்டும் வாங்கினேன். பக்கத்தில் இருந்த 3D ஓவிய அரங்கில் சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு நடையை கட்டினோம். அசோகமித்ரனின் 'புலிக் கடன்' பிலிப்கார்டில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.