கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 26, 2024

கூத்தாடிகள் இல்லை

 கூத்தாடிகள் 

அன்று வெளியில் சென்றுவிட்டு திரும்பிய பொழுது என் சகோதரியின் வீட்டிற்கு அருகில் ஒரு சினிமா ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கேரவன் ஒன்று, அவுட்டோர் யூனிட் வேன் ஒன்று, காமிராக்கள், ரிஃப்ளெக்டர்கள், ஜீன்ஸ் அணிந்த இளைஞர்கள், சந்தேகமேயில்லை, சினிமா ஷூடிங்தான். என் அக்கா வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம், “தமிழ்ப் படமா?” என்றேன். “ஆமாம்” என்றார். “யார் நடிக்கிறார்கள்?” “ஷ்ரத்தா ஸ்ரீ” என்றார்.

“அவங்க வருவாங்களா?”

“வந்துட்டு போய்ட்டாங்க”

எதிரே, ஒருவர் சில முகமூடிகளை தயாரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததால், “க்ரைம் த்ரில்லரா?” என்று கேட்டதற்கு, “ஆமாம்” என்றார்.

ஓரு காரின் முன்னால் காமிராவை இணைத்து சில காட்சிகளை படமாக்குவதைப் பார்த்தேன். உள்ளே போய் விட்டேன். மாலையில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார்களாம்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் என் அக்கா வீட்டு வாசலிலேயே படப்பிடிப்பு நடந்ததால் வேடிக்கைப் பார்த்தோம்.

கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஒரு சேரில் அமர்ந்திருக்க, அவரோடு ஒரு பெண்(துணை நடிகை?) பேசிக்கொண்டிருந்தார். காமிரா கோணங்களை அமைத்து விட்டு, அவரை அழைத்ததும், எழுந்து சென்றவர் அட! ஷ்ரத்தா ஸ்ரீ! மதியம் அவர் சரியாக சொல்லவில்லையா? நான் சரியாக காதில் வாங்கவில்லையா? படங்களில் தெரிவதை விட ஒல்லியாகத்தான் இருக்கிறார். அதிகம் மேக்கப் இல்லை.

உள்ளே சென்று என் அக்காவை அழைத்து வந்தேன்.

“ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறா”

“யார் அவள்?”

‘விக்ரம் வேதா’வில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவள், ‘இறுகப்பற்று’வில் விக்ரம் ப்ரபுவிற்கு ஜோடியாக நடித்தாளே..?”

“நான் சினிமாவே பார்ப்பது கிடையாது” என்றாலும் ஷூட்டிங் பார்ப்பதில் என் அக்காவிற்கு எந்த விரோதமும் இல்லை. வாசலுக்கு வந்தாள்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடந்து வரும் பொழுது, அவரைத் தொடர்ந்து வரும் முகமூடியணிந்த இருவர் அவரைப் பற்றி இழுத்துச் செல்வது போல காட்சி.

முதலில் அவர் நடந்து வர, என்ன இப்படி நடக்கிறார்? என்று தோன்றியது. குடித்து விட்டு நடந்து வருவது போல காட்சியோ?, அப்படித்தான் இருக்க வேண்டும், ஏனென்றால், டைரக்டர் அவரிடம் ஏதோ சொல்ல, நடையில் இன்னும் கொஞ்சம் தள்ளாட்டத்தை கூட்டி, ஒரிடத்தில் தடுக்கி விழுவது போல செய்தார். இந்த காட்சியையே ஆறேழு முறை எடுத்திருப்பார்கள்.

பிறகு, அவர் கையில் வைத்திருக்கும் ட்ராஃபியை முகமூடி அணிந்திருக்கும் வேறு ஒருவர், வாங்கிக் கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்கு அருகில் செல்ல, ஷ்ரத்தாவை இரு முகமூடிக்காரர்கள் காருக்குள் செலுத்துவது போல காட்சி.

என் சகோதரியின் வீட்டு போர்டிகோவில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை அணைக்கச் சொன்னார்கள். ட்ராஃபியை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டிய இளைஞரின் நடை டைரக்டருக்கு திருப்தி தரவில்லை, அவரே செய்து காட்டினார். அதை ஒரு ஆறேழு முறை எடுத்திருப்பார்கள். எங்களுக்கு போர் அடித்ததால் உள்ளே சென்று விட்டோம். இரண்டு காட்சிகளையே இப்படி திரும்பத் திரும்ப எடுக்கிறார்களே, முழு படத்தையும் எத்தனை முறை எடுக்க வேண்டும்? அதுவும் பாடல் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளை நினைத்தால் கண்ணைக் கட்டியது. இரவு வெகு நேரம், “காமிரா ரோல், ஆகஷன்..” என்று குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

சினிமாவை நாம் வெகு ஈசியாக விமர்சனம் செய்து விடுகிறோம், எத்தனை பேர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது? நாங்கள் பார்த்த காட்சி புகை மூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய சட்டியை பக்கெட் போல தூக்கிக் கொள்ளும் விதமாக அமைத்து,“ஸ்மோக்” என்று குரல் வந்ததும் அதில் நிறைய புகை வரும்படி சாம்பிராணி போட்டு, முன்னும் பின்னும் ஊஞ்சலாட்டியபடி அந்த தளம் முழுவதும் சுற்றி வருகிறார் ஒருவர். மூன்று காமிராக்கள்,அதன் ஆபரேட்டர்கள், ஒருவர் ஒரு பேடில் என்னவோ எழுதிக் கொண்டே இருந்தார். டச் அப் உமன், என்று நிறைய பேர்கள் இருந்தார்கள். நாங்கள் பார்த்த காட்சி படத்தில் இடம் பெறுமா? இடம் பெற்றாலும் எத்தனை நிமிடங்கள் இருக்கும்? அதற்கு இவ்வளவு உழைப்பு. கூத்தாடிகள் என்று துச்சமாக சொல்லக் கூடாது என்று தோன்றியது.

Monday, January 22, 2024

சங்கப் பலகையில் இடம் பிடித்தேன்

 சங்கப் பலகையில் இடம் பிடித்தேன்


சென்னையில் இருந்தவரை புத்தக கண்காட்சியை தவற விட்டதில்லை. பெங்களூர் சென்ற பிறகு புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத ஏக்கம் வாட்டும். இந்த வருடமும் அந்த வருத்தம் இருந்தது. 

சென்ற வியாழனன்று நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார். பத்தாம் நாள் காரியங்களுக்காக சனிக்கிழமை சென்னை வர வேண்டிய நிர்பந்தம். அந்த வேலைகள் முடிந்து மதியம் வீடு திரும்பினோம். மாலையில், "புக்ஃபேர் போகலாமா?" என்று மகன் கேட்டதும் கிளம்பி விட்டேன். "சனிக்கிழமை மாலை, கும்பல் அதிகமாக இருக்கும்" என்றார்கள். நிஜம்தான். தேர்க்கூட்டம், திருவிழா கூட்டத்தை புத்தகத் திருவிழாவில் பார்த்தது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

என் மகன் நிதானமாக ஒவ்வொரு ஸ்டாலிலும் அலச,  நான் சற்று மேம்போக்காகத்தான் பார்வையிட்டேன். அதிக நேரம் செலவிட்டால், அதிக புத்தகம் வாங்கி விடுவேன் என்று பயம். 

ஒரு  ஸ்டாலில் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுதுமணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணனை சந்தித்தேன். அறிமுகப்படுத்திக் அவரோடு உரையாடிய பொழுது என்னைப் பற்றி விசாரித்தார். நான் இதுவரை நான்கு மின்னூல்கள், குவிகம் மூலமாக ஒரு சிறுகதை திரட்டும் வெளியிட்டிருப்பது கூறியதும், "நீங்கள் ஏன் மணிமேகலை பிரசுரத்திற்காக உங்களுடைய புத்தகம் ஒன்றை தரக்கூடாது?"(பார்ரா) என்று கேட்டு தன்னுடைய பிஸினஸ் கார்டை கொடுத்தார்(பானு.. என்ன நடக்கிறது இங்க?)


அவரிடம் "எங்கள் அப்பாவின் வாழ்க்கையில் ஒரு கடுமையான காலத்தை கடக்க வேண்டியிருந்த பொழுது உங்கள் தந்தை திரு.தமிழ்வாணன் எழுதிய 'துணிவே துணை' என்னும் கட்டுரைகள்தான் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்ததாம்" என்றதும், "அதனால்தான் நான் என் அப்பாவை எங்கே வைத்திருக்கிறேன் பாருங்கள்" என்று அவருடைய மார்பின் இடது பக்கத்தில் தன் தந்தையின் உருவத்தை(கல்கண்டு லோகோ) பச்சை குத்திக்கொண்டிருந்ததை காண்பித்தார். "என் அப்பாவின் வாசகரின் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று விடை பெற்றார்.

நான் வாங்க நினைத்திருந்த நாராயணீயம் புத்தகத்தை கிரி டிரேடிங்கில் வாங்கிய பிறகு வேறு ஒரு ஸ்டாலில் நம் தோழர் ராய செல்லப்பா அவர்களின் நாராயணீயம் புத்தகம் கண்ணில் பட்டது. "அடடா! இதை வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது.

அதன் பிறகு சில பல ஸ்டால்களை பார்வையிட்டுவிட்டு  'விருட்சம்'(குவிகம்) ஸ்டாலை அடைந்தேன். அங்கு லா.ச.ரா.வின் புத்தகம் ஒன்றும், சுஜாதாவின் புத்தகம் ஒன்றும் வாங்கினேன். நம்முடைய 'கல்யாண கதைகள்' இருக்காதா? என்று ஒரு நப்பாசை. "வணக்கம்" என்று பின்னால் ஒரு குரல். திரும்பினால், குவிகம் பதிப்பகத்தை சேர்ந்த திரு.கிருபானந்தன்.(அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறி விட்டேன்) "உங்களுடைய புத்தகம் இருக்கிறதே? பார்த்தீர்களா?" என்றார்.  அட! ஆமாம், டிஸ்ப்ளேயில் என் புத்தகத்தையும் கண்டேன்! கண்டேன்! கண்டேன்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பானு.. என்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்."அம்மா பரவாயில்லையே, புக் ஃபேரில் புத்தகங்கள் வாங்குவாய். இந்த வருடம் உன் புத்தகம் இடம் பெற்றிருக்கிறது. Congratulations!" என்று கை குலுக்கினான் மகன். ஆம்,  சங்கப் பலகையில் இடம் பிடித்து விட்டேன்,இல்லையா?