கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, May 1, 2016

திக் திக் நிமிடங்கள்!

திக் திக் நிமிடங்கள்!

வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது. சிறியதும், பெரியதும், நல்லதும் கெட்டதுமான அனுபவங்களே வாழ்க்கை. நல்ல அனுபவங்கள் மகிழ்ச்சியையும், மோசமான அனுபவங்கள் படிப்பினையையும் தருகின்றன. *நேற்று நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். 

நேற்று காலை மணி ஒன்பதரை இருக்கும். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப் பட்டது. ஒரு வேளை பராமரிப்புக்காக காலை ஒன்பது மணி  முதல் மாலை ஐந்து மணி வரை நிறுத்தப் பட்டிருக்கிறதோ? என்று முதல் நாள் செய்தி தாளை எடுத்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் இருப்பது தெரிய வந்தது. ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை என்று குழம்பிய பொழுது, மூன்றாம் மாடியில் வசிக்கும் சிறுமி, காசு கட்டிடீங்களா ஆண்டி? எங்க வீட்டுல கூட காசு கட்டல என்று கரெண்டை கட் பண்ணிட்டாங்க." என்றாள். 
"கட்டியாச்சே.." என்றதும், ஆன் லைனில் கட்டுகிறீர்களா? அப்படீன்னா ரெபரென்ஸ்  நம்பர் கேக்கறாங்க. வாசலில் செகூரிடி அருகில் ஒரு ஈ.பீ. ஆபீஸ் ஆள் உட்கார்ந்திருக்கார் சீக்கிரம் போய் காட்டுங்க" என்றாள்.(தெளிவுதான்)

மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் எல்லாவற்றையும் என் மகன்தான் கட்டுவது வழக்கம். அவன் இப்போது வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்தில் அல்லவா இருப்பான். என்ன செய்வது? என்று குழம்பினேன். என் மகள் அவனை கை பேசியில் அழைத்துப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, ஏதோ ஒரு நல்ல காலம் அவன் பதில் அளித்தான். என் மகள் அவனுக்கு விவரங்களிச் சொல்லி, TNEB receipt ஐ அவள் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்ல அவனும் அப்படியே செய்ய, அதை ஈ.பீ. அலுவலகத்தில் சென்று காண்பிக்க உடனே மின்சாரம் வந்து விட்டது. இதுதான் என் அனுபவம் என்று அவசரப் பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். முக்கியமான விஷயம் இனிமேல்தான் வருகிறது. 

என் மகளின் ஆதார் அட்டையில் அவளுடைய கை பேசி எண் தவறாக குறிக்கப் பட்டிருக்கிறது. அதை திருத்த வேண்டுமென்றால் குறிப்பிட்ட வார்டின் கார்பரேஷன் கிளை அலுவலகத்திற்கு நேரே சென்றுதான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறப் பட்டதால் அலுவலகத்திற்கு விடுப்பான நேற்று அந்த வேலையை முடித்து விடலாம் என்று அதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். இடையில் ஏற்பட்ட மின்சார தடையால் தன்னுடைய கைப் பையை எங்கள் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டாள். அதையும், அவளின் டூ வீலர் சாவியையும் கீழே கொண்டு வந்து தருமாறு என்னிடம் கூறினாள். 

அப்போதுதான் அடுப்பில் குக்கரை வைத்திருந்த நான் அவள் கேட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு,  என் காலை கட்டிக் கொண்டு அழுத என் பேத்தியையும்  தூக்கிக் கொண்டு( நல்ல வேளையாக) கீழே சென்ற பொழுது எப்போதும்  செய்வது போல் ஸ்டாப்பரை போடாமல் வாசல் கதவை முக்கால் வாசி திறந்து வைத்து விட்டு சென்றேன். என் பெண்ணிடம் அவள் கேட்டவற்றை கொடுத்து விட்டு மேலே வந்து பார்த்தால்... ஆட்டோ லாக் கதவு பூட்டிக் கொண்டு விட்டது. என்னிடம் சாவி கிடையாது.  

உள்ளே எண்பத்தாறு வயது நிறைந்த எங்கள் அத்திம்பேர் (நாத்தனாரின் கணவர்) இருந்தார். ஆனால் அவருக்கு 90% காது கேட்காது. ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தாலாவது பெல் சத்தம் கேட்கலாம், உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார், நான் வாசலில் நின்றபடி காலிங் பெல்லை அடித்துக் கொண்டே இருக்கிறேன்.. ம் ஹூம்..! அவருக்கு காது கேட்டால்தானே கதவை திறப்பார்? சமையல் அறையில் இருந்து குக்கர் ஒரு விசில், இரு விசில் என்று ஒலி  எழுப்ப, எனக்கு பிரஷர் எகிற ஆரம்பித்தது,
இன்னொரு பக்கமோ வியர்வை தங்க முடியாமல் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. 

என் கையில் செல் போனும் இல்லை. பக்கத்து வீட்டிற்க்குச் சென்று 
என் மகளுக்கும், கணவருக்கும் போன் செய்தால், அவர்கள் எடுத்தால்தானே..? என்னோடு என் பக்கத்துக்கு வீட்டுகாரர்களும் சேர்ந்து கொண்டு கதவை இடித்தார்கள், பெல் அடித்தார்கள். இந்த கலாட்டா சத்தம் கேட்டு எதிர்வீட்டுகாரர்களும் வந்து விட்டார்கள். அவர்களும் அவர்கள் பங்கிற்கு கதவை தட்டினார்கள். எதற்கும் பலன் இல்லை. இப்போது குக்கர் எங்கேயாவது வெடித்து விடப் போகிறது என்னும் பயத்தோடு, அத்திம்பேருக்கு காது கேட்காததால்தான் திறக்கவில்லையா? அல்லது முதியவரான அவர் மயங்கி விழுந்து விட்டாரா? என்னும் கவலையும் சேர்ந்து கொண்டது. 

எங்கள் வீட்டின் வாசல் கதவிற்கு மூன்று சாவிகள் உண்டு. ஒன்று என் கணவரிடமும், ஒன்று என்னிடமும், மற்றொன்று என் மகளிடமும் இருக்கும். இப்போது என் சாவி வீட்டினுள் மாட்டிக்கொண்டு விட்டது. என் கணவரோ, மகளோ வந்தால் கதவைத் திறந்து விடலாம். "ஆண்டி, அங்கிள் அங்கே வரார்.. வண்டு ஒன்று கூவ, மேலே இருந்த படியே," வீட்டு சாவியை சீக்கிரம் கொடுங்கள் என்று கூவினேன். "சாவியா? நீங்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறீர்களே என்று நான் சாவியை எடுத்துக் கொண்டு செல்லவில்லை" என்றாரே பார்க்கலாம்.. போச்சுடா! ஒரே கதி என் மகள்தான்.

"சுபா எங்கே போய் இருக்கிறாள் என்று சொல்லுங்கள். நான் கண்ணனை விட்டு சாவியை வாங்கி வரச் சொல்லுகிறேன்". பக்கத்துக்கு வீடு ரதி உதவ முன் வந்தார். 
"ராமாவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு அருகேதான் இருக்கு என்று கூகுளில் பார்த்து விட்டு சென்றுருக்கிறாள், சரியாகத் தெரியாது.."
"பால்கனி கிரில் திறந்துதானே இருக்கும்? ஒரு ஏணி வைத்து யாரையாவது பால்கனி வழியாக உள்ளே நுழையச் சொல்லலாமே..?"
எதிர் வீடு நவநீதாவின் ஆலோசனை. 
"இல்லையே.. பால்கனி கிரில் பூட்டிதான்  இருக்கும்".
போச்சு.. ஒரு ஒரு கதவாக மூடிக்கொண்டே வருகின்றதே..!
இல்லை இல்லை எல்லா கதவுகளும் மூடவில்லை, அத்திம்பேர் படுத்திருக்கும் பெட் ரூம் ஜன்னல் திறந்து இருக்கிறது. அங்கிருக்கும் நெட்லானை அலம்ப வேண்டும் என்பதற்காக கழட்டிய பொழுது ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம்.
ஓ!வெரி குட்! நந்து நீயும், கண்ணனும் கீழே போய் பின்னல் ஏணி இருக்கும் அதில் ஏறி அந்த தாத்தாவை கூப்பிட்டு கதவை திறக்கச் சொல்லுங்கள்". என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்து விட்டு, நீங்கள் ஏன் வெளியில் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள் என்று எங்களையும் அவர் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றார் நவநீதா. நாங்கள் அவர் வீட்டிற்க்குள் சென்று தண்ணீர் குடிக்க கேட்டோம். தண்ணீர் வருவதற்குள் 'க்ளிக்' என்ற ஓசையோடு எங்கள் வீட்டு கதவு திறந்தது. 

அப்பாடா!... என் கணவர் ஓடிப்போய் அடுப்பை நிறுத்தினார். 
"யாரோ ஒரு பையன் தாத்தா, தாத்தா என்று கூப்பிட்டு கதவை திறக்கச் சொன்னான். ரொம்ப நேரமா தட்டுகிறீர்களா?"
"சீ! சீ! அதெல்லாம் இல்லை". ஒரு வயதான விருந்தினரிடம் வேறு என்ன சொல்ல முடியும்? 

சரி இதிலிருந்து என்ன கற்று கொண்டாய்? என்கிறீர்களா? 
வீட்டின் ஒரு சாவியை அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கொடுத்து வைக்க வேண்டும். பால்கனி கிரில்லை தினசரி பூட்ட வேண்டியதில்லை. ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ சாவியை மறக்க கூடாது என்பது கோல்டன் ரூல். பதிமூன்று வருடங்கள் மறக்காமல் இருந்தது பெரிய விஷயமில்லை, ஒரு முறை மறந்ததுதான் பெரிய விஷயம்.

last but not the least இக்கட்டான நேரத்தில் பதட்டப் படாமல் உதவிய ரதி தேவதாசுக்கும், நவநீதா ராமசாமிக்கும் என் நன்றிகளை தெரிவித்தே ஆக வேண்டும்!

*இது ஒரு மீள் பதிவு, எனவே நேற்று என்பது நான்கு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு.