கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, October 24, 2010

தமிழ் சினிமாவில் சில முழியர்கள்!

தமிழ் சினிமாவில் சில முழியர்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முழி என்றால் முதலில் நினைவுக்கு வருவது
சோவின் முட்டை கண்ணாகத்தான் இருக்கும். இவருடைய  ஆரம்ப  காலங்களில்  அப்பாவித்தனமாக விழித்தும் விழிகளை உருட்டியும் ரசிகர்களை கலகலக்க வைத்தது இவருடைய முழிதான். போக போக தன் அறிவு ஜீவி இமேஜை வெளிப்படுத்தி அரசியல் நையாண்டியை அவிழ்த்து விடத் தொடங்கியதும் முழி பின்னுக்கு போய் விட்டது.

அடுத்த படியாக நம் நினைவுக்கு வருபவர் நடிகரும் இயக்குனரும் ஆன பாக்யராஜ் அவர்கள். உண்மையில் பார்த்தால் இவருக்கு முட்டை கண்ணோ திரு திரு விழியோ கிடையாதுதான், ஆனால் கெட்டிக்காரரான இவர் தானே தன்னை திருட்டு முழி, திரு திரு விழி என்றெல்லாம் விமர்சித்துக்கொண்டு சில பாவங்களை வெளிப்டுத்த முடியாத தன் இயலாமையை  சாமர்த்தியமாக மறைத்துக்கொள்ள தன் முழியை பயன் படுத்தினார்.  
                      
அடுத்த  முட்டை கண்ணாளர் பாக்யராஜின்  சீடரான  பாண்டியராஜன்!  அசல் திரு திரு விழி கொண்ட இவரை முட்டை கண்ணர்களின்  அரசன்  எனலாம். இவரின் ஆரம்ப கட்ட படங்களில் இவரது விழி இவருக்கு  உதவியது  போக  போக எல்லா படங்களிலும் எல்லா இடங்களிலும்  ஒரே மாதிரி  விழித்தது இவரின் வீக்னெஸ்!



சாக்லேட் பாய் ஆகவும் ரொமாண்டிக் ஹீரோவாகவும்
இருந்த வரை மாதவனின் லுக் ஓகேதான், ஆனால்  அவருக்கு ஆக்க்ஷன் ஹீரோவாக  வேண்டும்  என்னும்  விபரீத  ஆசை  வந்தது  நம்முடைய  போதாதா  காலம்தான். முகத்தில் ரௌத்திரம் காட்ட வேண்டுமென்றால் கரு விழி தெறித்து விழுந்து விடுவதை போல இவர் விழிக்கும் விழி ...அப்பப்பா! 
  
இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்திருப்பது கார்த்தி !  பருத்தி  வீரனில்  அமீரின்  உதவியோடு நடித்து விட்டார், மற்ற படங்களிலோ காதல்,கோபம், அதிர்ச்சி, ஆசை, எல்லாவற்றிக்கும் ஒரே மாதிரி இவர் விழிப்பதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. அண்ணனுக்கு போட்டியாக செல் போன் விளம்பரத்தில்  நடித்தால் போதுமா? அண்ணனிடம்  கண்களை  எப்படி  பயன் படுத்த வேண்டும் என்றும் கற்று கொள்வது நல்லது.