கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, May 2, 2011

கோவிந்த வாடி குரு பரிகார தலம்!

கோவிந்த வாடி குரு பரிகார தலம்!

நவக்ரகங்களில் மிகவும் முக்கியமான கிரகம் குரு. முழு சுபரான இவர் ஒருவரின் 
வாழ்கையில் கல்வி, தனம், குடும்பம், வாக்கு, மக்கள் செல்வம் என்னும் ஐந்து 
செல்வங்களை நிர்ணயிக்கச் செய்பவர். பெண்களுக்கு கூடுதலாக மாங்கல்ய 
பலத்தையும் அளிக்க கூடியவர்.  குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்வை சிறப்பானது. குரு பார்க்க கோடி பாவங்கள் விலகும் என்பது வழக்கு  மொழி!

இத்தனை சிறப்புகள் கொண்ட குரு பகவான் சிறப்பாக வழிபட படும் சில தலங்களுள்  
ஆலங்குடி, திட்டை, திருவலிதாயம் எனப்படும் பாடி மற்றும் கோவிந்தவாடி 
முதலியவை ஆகும். இப்பொழுது கோவிந்தவாடியின் சிறப்புகளை பார்க்கலாம்:

காஞ்சிபுரத்திலிருந்து 15  Km  தூரத்தில்  உள்ளது கோவிந்தவாடி தலம்.  சிறிய கோவில்.  கோவிந்தராஜ  பெருமாள்  தன்  குடும்பத்தோடு   வந்து  இங்குள்ள சிவனை வழிபட்டதால் கோவிந்தவாடி என்ற காரணப் பெயர் கொண்டுள்ளது.   சாதாரணமாக சிவன் கோவில்களில் தக்ஷினாமூர்த்தி கோஷ்டத்தில் இருப்பார்.  இங்கு மூலவரும் தக்ஷிணா மூர்த்தியும் ஒரே விமானத்தின் கீழ் இரு 
தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர். எங்கும் காண முடியாத விதத்தில் 
கோஷ்டத்தில் மஹா விஷ்ணுவும், பிரும்மாவும் இருபது ஒரு அபூர்வ காட்சி! பிரகாரத்தில் பைரவருக்கும்,கோவில் பெயர்  காரணராகிய, தன் தேவியர் இருவரோடும் 
எழுந்தருளி இருக்கும்  கோவிந்தராஜ  பெருமாளுக்கும்  தனி  சந்நிதிகள்  உள்ளன. 

கோஷ்டத்தில் மகாவிஷ்ணு

 
கோஷ்டத்தில் பிரம்மா

   
குருவின் தலம் என்பதாலோ என்னவோ பெரும்பாலான பக்தர்கள் ராஜா கோபுரம் 
வழியாக உள்ளே வராமல் தக்ஷினாமூர்த்தி சந்நிதி உள்ள வாயில் வழியாகவே 
வருகின்றனர்.   இங்குள்ள தட்சிணா மூர்த்திக்கு தேங்காயில் நெய் விளக்கு ஏற்றுவது 
விசேஷமாக கருதப்படுகிறது. கோவில் வாசலிலேயே தேங்காய், நெய்,  திரி  போன்றவை விற்கப்படுகின்றன. தேங்காயை உடைதுக்கொடுக்க கோவிலுள்  ஒரு ஆள் இருக்கிறார், உடைத்த தேங்காயின் கண் உள்ள பகுதியில் நெய்யை 
ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். இதன் தாத்பர்யம் 
என்னவென்று தெரியவில்லை.

ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்படும் குரு தேவ குருவாகிய ப்ரஹஸ்பதி  ஆவார் என்றாலும் சனி பரிகார தலமாகிய  திருநள்ளாரில்  சனி  பகவானுக்கென்று  தனி சந்நிதி  இருப்பது  போலவோ,  வைதீஸ்வரன் கோவிலில் செவ்வாய்கென்று தனி  சந்நிதி  இருப்பது  போலவோ திருநாகேஸ்வரத்தில் ராகுவுகென்று தனி சந்நிதி இருப்பது போலவோ குரு பரிகார தலங்களில் குரு  அதாவது  ப்ரஹஸ்பதிகென்று  தனி சந்நிதி இல்லாமல் தட்சிணாமூர்த்தியே குருவாக வழிபட படுவது ஏன் 
என்றும் புரியவில்லை...? காரணம் எதுவாக இருந்தாலும் ஆதி குருவான
தட்சிணா மூர்த்தியை வழி படுவது நல்லதுதானே!

மே மாதம் 8 ம் தேதி குரு மீனத்திலிருந்து மேஷத்திற்கு வருகிறார். அன்று 
முடிந்தால் கோவிந்த வாடி சென்று குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி 
வணங்கி விட்டு வாருங்கள். குருவருளால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.