கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, September 27, 2020

இயல்பு நிலை திரும்புகிறதா?

இயல்பு நிலை திரும்புகிறதா? 

கடந்த ஒரு மாதத்தில் மூன்று  சனிக்கிழமைகளில் வெளியே செல்ல நேர்ந்தது. முதல் முறை சென்ற பொழுது சாலையில் அத்தனை வாகனங்கள் இல்லை. சென்ற வாரம் ஓரளவு நார்மல் போக்குவரத்து காணப்பட்டது. நேற்று கொஞ்சம் பர்சேஸ் செய்ய  வேண்டியிருந்ததால் ஜெயநகர் சென்றோம். வழக்கமான நெரிசல் தொடங்கி விட்டது என்றே தோன்றியது. உணவகங்கள் திறந்து விட்டாலும் கும்பல் குறைவாகவே இருக்கிறது.

ஆகஸ்ட் 15 அன்று மாலை எம்.ஜி.ரோட்


மேலே இருக்கும் படத்தில் இருப்பது செலஃபோன் கடை ஒன்றில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக வரையப்பட்டிருந்த கட்டங்கள். ஆனால் அதை மதிக்காமல் கும்பலாக நின்றபடி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.  

கொஞ்சம் ஜவுளி எடுக்க வேண்டியிருந்தது எனவே ஜெயநகரில் இருந்த வரமஹாலக்ஷ்மி கடைக்குச் சென்றோம். உள்ளே நுழையும் முன் நம் காலணிகளை ஒரு பையில் சேகரித்து டோக்கன் தந்தார்கள். எல்லா கடைகளையும் போல் ஹாண்ட் சானிடைசரை கையில் பூசிக்கொண்டு உள்ளே நுழைந்தால் நடுவில் பிரதானமாக பெரிய மஹாலக்ஷ்மி சிலை. தரையில் பாய்கள் விரிக்கப்பட்டு அதன் மீது வெள்ளைத் துணியை விரித்து புடவைகளை காட்டுகிறார்கள். நாம் தரையில் உட்கார்ந்து பார்க்கலாம், கீழே அமர முடியாதவர்கள் நாற்காலியிலோ அல்லது குட்டை ஸ்டூலிலோ அமர்ந்து கொள்ளலாம். விற்பனை சிப்பந்திகள் பொறுமையாக, சலிக்காமல் புடவைகளை காண்பித்தார்கள். ஆனாலும் சென்னையில் ஜவுளிக் கடலில் ஷாப்பிங் செய்து விட்டு இங்கெல்லாம் ஷாப்பிங் செய்வது குற்றாலீஸ்வரனை நம்முடைய வளாகத்தில் இருக்கும் சிறு நீச்சல் குளத்தில் நீந்தச் சொன்னது போல் இருக்கிறது. பில்லை கட்டியதும் துணிகளை பையில் போட்டு அங்கிருக்கும் ஐயர் ஒருவர் அவைகளை மஹாலக்ஷ்மி உருவச்சிலை முன் வைத்து, தீபாராதனை காட்டி நம்மிடம் தந்தது வித்தியாசமாக இருந்தது. 

கும்பலில்லாத சென்ட்ரல் மாலில் அனாவசிய எக்ஸ்பிரஸ் பில்லிங் கவுண்டர் 

வீட்டிற்கு வந்ததும் முறையாக ஆவி பிடித்தோம். அதென்ன முறையாக என்கிறீர்களா? ஆவி பிடிக்கும் பொழுது முதல் ஐந்து முறைகள் மூக்கினால் ஆவியை இழுத்து, வாயினால் வெளி விட வேண்டும். பிறகு ஐந்து முறைகள் வாயினால் இழுத்து மூக்கினால் சுவாசத்தை விட வேண்டும். பின்னர் உப்பு நீரில் வாயைக் கொப்பளித்தோம். 


செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 03 வரை ஸ்டீமிங் வாரமாம். எல்லோரும் தினசரி   ஆவி பிடித்து அந்த பெயர் சொல்லாத கிருமி பரவாமல் தடுக்க வேண்டுமாம். செய்யலாம்.