கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 29, 2016

அரிசி,தேங்காய் வெல்லப்பாயசம்

    அரிசி,தேங்காய் வெல்லப் பாயசம்
              ( ஆடி வெள்ளி ஸ்பெஷல்)

தேவையான பொருள்கள்:


அரிசி    ---- 1/2 கப்
தேங்காய் துருவல் ----- 1/2 கப்
வெல்லம் ------- 200கிராம்
ஏலக்காய் ----- 4
முந்திரி பருப்பு  ----- 6

அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.  ஊறியதும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும். மாவு போல நைசாக இருக்க வேண்டாம், அதிகம் கொரகொரப்பாகவும் இருக்கக் கூடாது. அரைத்த மாவோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து,அடுப்பில் மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லத்தூளை சேர்த்து மீண்டும் அடி பிடிக்காமல் கிளறவும். வெல்லம் நன்கு கறைந்து பச்சை வாசனை போனவுடன்(ஏறத்தாழ 10 நிமிடங்கள் அடுப்பில் இருக்க வேண்டும்), கீழே இறக்கி வைத்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு, முந்திரி பருப்பை சிறியதாக ஒடித்து நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். சுவையான, பாயசம் ரெடி. அடிப் பிடித்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தவிர இது செய்வதற்கு மிகவும் சுலபமானது.
 

Sunday, July 24, 2016

மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 3


மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 3
நம்முடைய வழிபட்டு முறையில் குல தெய்வம்,இஷ்ட தெய்வம், தவிர கிராம தேவதை, அல்லது காவல் தெய்வம் என்றும் உண்டு. இந்த காவல் தெய்வங்கள் பெரும்பாலும் ஊர் எல்லையில் இருக்கும் பெண் தெய்வங்களாகத்தான் இருக்கும். அய்யனார் விதி விலக்கு. பாலக்காட்டு காரர்கள் இந்த காவல்தெய்வங்கள் இருக்கும் கோவில்களை 'காவு' என்கிறார்கள். அது போல எங்கள் குடும்பத்திற்கான தெய்வம் எமூர் என்னும் இடத்தில் இருக்கும் கல்லெகுளக்கற பகவதி என்று அறியப்படும் ஹேமாம்பிகை ஆகும். பாலக்காட்டிலிருந்து மலம்புழா செல்லும் வழியில் இருக்கிறது எமூர்.
















இந்த கோவிலில் கர்பகிரஹத்தில் அம்மன் விக்கிரஹம் எதுவும் இருக்காது. அபயஹஸ்தமாக இரண்டு கைகள் மட்டுமே காணப்படும்.

குரூர்,மற்றும் கைமுக்கு என்னும் இரு நம்பூதிரிகள் தினசரி அடர்ந்த காட்டினுள் அமைந்திருக்கும் துர்கை அம்மன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் மிகவும் அசதியோடு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது, ஒரு வயதான மூதாட்டி அவர்கள் இருவருக்கும் சில பழங்களை உண்ணத்தருகிறாள், அதை சாப்பிட்டவுடன் அவர்களுடைய அசதி மறைந்து விடுகிறது. இது குறித்து அவரை வியப்படையும் பொழுது அவர்களுக்கு எதிரே தங்கம் போல ஜொலித்துக் கொண்டு ஒரு யானைக்கு அருகில் நின்ற கோலத்தில் அம்பிகை அவர்களுக்கு கட்சி தருகிறாள். வயது ஏற,ஏற, தினசரி காட்டிற்குள் சென்று அம்பாளை தரிசனம் செய்வது கடினமாக ஆவதை எண்ணி கவலை கொள்கிறார்கள். அப்போது அம்மன் அவர் கனவில் தோன்றி, தான் இதே இடத்தில் அவர்களுக்காக எழுந்தருளப் போவதாக கூறுகிறாள். மறு நாள் அங்கிருக்கும் குளத்திலிருந்து முதலில் தங்க மயமான இரு கரங்கள் மட்டும் வெளி வருகின்றன. அதைக்  கண்டதும் உணர்ச்சி வசப்பட்ட குரூர் நம்பூதிரி குளத்தில் குதித்து அந்தக் கரங்களை பற்றிக் கொள்கிறார். உடனே, அந்த இரு கரங்களும் கல்லாக சமைந்து விடுகின்றன. அந்த கரங்களையே வழிபட உத்தரவாகின்றது. சுற்றி இருக்கும் குளத்தை தூர்த்து கோவிலாக கட்டி வழிபட தொடங்கினர். இங்கு தேவி காலையில் சரஸ்வதி அம்சமாகவும், மதியம் லட்சுமி அம்சமாகவும், மாலை துர்கையின் அம்சத்தோடும் இருப்பதாக ஐதீகம்.

சிறிய கோவில். உள் சுற்றில் ஒரு சிறிய கதவு வழியாக குளத்திற்கு சென்று விடலாம். கொஞ்சம் அதிகமாக மழை பெய்தால் தண்ணீர் கோவிலுக்குள் வந்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அம்மன் சன்னதிக்கு வெளியே மர விதானத்தில் நவகிரஹங்களை காண முடிகிறது. நாங்கள் சென்ற பொழுது பெண்கள் லலிதா சஹஸ்ரநாமம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். கோவிலை வலம் வந்து நமஸ்கரித்தோம்.

அப்போது உன்னி என்பவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு எங்களை பற்றி விசாரித்தார். பிறகு எங்களை அங்கிருக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய மற்ற சகாக்களை அறிமுகம் செய்தார். முன்பெல்லாம் இந்த குளத்தில் யாரும் குளிக்க மாட்டார்கள். இப்போது குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களால் குளம் அசுத்தமாகி விட்டது. மேலும் மிகவும் புராதனமான இந்த கோவிலை செப்பனிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது குளத்தை சீர் செய்து, கோவிலை புதுப்பிக்க ஒரு கமிட்டி அமைத்திருக்கிறோம். எப்பொழுது புனருத்தாரணம் என்று முடிவு செய்து பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறோம், உங்கள் விலாசம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று விலாசம் கேட்டு வாங்கிக் கொண்டார்.  

அங்கிருந்த மற்றொரு நபர், இந்திரா காந்தி இந்தக் கோவிலுக்கு வந்து தொழுத பிறகுதான் 'கை' சின்னத்தை காங்கிரஸ் கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றார் என்னும் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலையும் சொன்னார். அதோடு மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோவிலில் இன்றுதான் பிரதிஷ்டை தினம், அங்கும் சென்று விட்டு செல்லுங்கள் அப்போதுதான் உச்சிகால பூஜை நேரமாக இருக்கும். என்றார். நாங்களும் அவ்விதமே அந்த சிவன் கோவிலுக்கும் சென்று வணங்கினோம். அந்த சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கென்று தனி சந்நிதி இருக்கிறது. கேரளாவில் சாதாரணமாக எந்தக் கோவிலிலும் தக்ஷிணாமுர்த்திக்கென்று தனி சந்நிதி கிடையாது. அங்கு எங்களுக்கு தனியாக பிரசாதமும் திரு.உன்னி வாங்கித் தந்தார். மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.

எங்க வீட்டு ஐயாவுக்கு ஏனோ மலம்புழா நீர் தேக்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை. அங்கு தண்ணீர் எல்லாம் இருக்காது என்று நாங்கள் சொல்வதை கேட்காமல் மலம்புழாவிற்கு வண்டியை விடச் சொன்னார். வந்து விட்டோமே என்று சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு கோவை நோக்கி பயணித்தோம். 

எங்கேயாவது பகல் உணவு சாப்பிட வேண்டுமே.. நல்ல ஹொட்டேல் எங்கே இருக்கும் என்று தேடிக் கொண்டே வந்தோம். என்னுடைய சாய்ஸ் அன்னபூர்ணா கௌரிசங்கர். ஆனால் சரவணபவன் 6 கி.மீ. சரவண பவன் 5கி.மீ. என்ற போர்ட் எங்கள் பசியை அதிகப் படுத்தியது. கேரள எல்லை முடிந்து, தமிழ் நாடு தொடங்கும் இடத்திலேயே இருக்கிறது. சரவண பவன் இருக்கிறதே, இங்கேயே சாப்பிட்டு விடலாம் என்று உள்ளே சென்றதும்தான் தெரிகிறது, அது சரவண பவன் இல்லை, ஸ்ரீ சரவண பவன். அதே போன்ற போர்ட், அதே போன்ற எழுத்துக்கள், ஆனால் கண்ணுக்கு தெரியாமல் ஸ்ரீ என்னும் எழுத்து. இப்படியும் ஒரு ஏமாற்று!

@Marudhamalai, taken in Panorama mode

என் மகன் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா சென்டருக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியதால், நேரே அங்கு சென்று விட்டோம். மிகப் பெரிய, அழகிய வளாகம். காற்று நம்மைத் தள்ளுகிறது. என்கணவரும்  மகனும் ஆண்களுக்கான சூரிய குண்டத்தில் குளித்தார்கள், நானும் என் மருமகளும் பெண்களுக்கான சந்திர குண்டத்தில் குளிக்காமல் அவர்கள் சொல்லிய முறைப்படி நீரை ப்ரோக்ஷித்துக் கொண்டோம். பின்னர் லிங்க பைரவியை தரிசித்து,  

தியான லிங்கத்தின் முன் அமர்ந்து தியானம் செய்ய முயற்சித்தோம். 
பின்னர் அங்கிருக்கும் காண்டீனில் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு, காபி அருந்தி அங்கிருந்து கிளம்பி கோவை ரயில் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கினோம்.

Esha Centre


இங்கே உள்ளே செல்லும் முன் நம்முடைய செல்ல போனை செருப்பு வைக்கும் இடத்திலேயே தனியாக ஒரு பையில் பூட்டு கொடுத்து விட்ஸ் வேண்டும். ஆனால் சிலர் செல் போனை உள்ளே கொண்டு வந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். எப்படி என்று புரியவில்லை.

"இரவு உணவுக்கு அன்னபூரணா செல்லலாமே" என்றேன், "அதற்க்கு மூன்று கி.மீ. போகணும், இப்போது இங்கேயே ஏதாவது சாப்பிடலாம்".என்றார்கள். சரி என்று பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். ஆஹா! இதுவல்லாயோ இட்லி! இதுவல்லவோ சாம்பார்! என்றாள் அனு. "அட சாப்பாட்டு ராமி! ரெண்டு நாளில் உனக்கு நாக்கு செத்துப் போய் விட்டதா?"
"என்ன செய்வது? எண் சாண் உடம்புக்கு வயிறுதானே பிரதானம்?"
"திருத்த முடியாது..."

மறு நாள் மதியம் 3:30க்கு எங்களுக்கு சென்னை செல்லும் சதாப்தியில் டிக்கெட். நிறைய நேரம் இருக்கிறதே மருத மலை சென்று வரலாம் என்று முடிவு கட்டினோம். மறு நாள் காலையில் என் அண்ணா அனுப்பியிருந்த வாட்ஸ் ஆப் மெஸேஜ் பார்த்த பிறகுதான் எனக்கு அன்று நக்ஷத்திர பிறந்த நாள் என்று தெரிய வந்தது. ஆஹா! பிறந்த நாள் அன்று மருத மலை முருகன் கோவிலுக்குச் செல்லப் போகிறோமா? என்ன பாக்கியம்! என்று புளகாங்கிதமடைந்தேன்! ஆகவே, கோவிலுக்கு செல்லும் முன் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று அண்ணா பூர்ணாவுக்குச் சென்றாலும் எதுவும் சாப்பிடாமல் ஜூஸ் மட்டும் குடித்தேன். 

மருத மலைக்கு சென்று இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. எக்கச்சக்க வித்தியாசம்!. சமீபத்தில் குடமுழுக்கு ஆகியிருக்கிறதோ என்னவோ, கோபுரம் பளிச்சிட்டது. எங்கள் ஊரில் தரிசிக்க முடியாத வரதராஜ பெருமாளை இங்கு ஒரு தனி சந்நிதியில் தரிசித்தோம். 
முருகனை வணங்கி கீழே இறங்கினோம்.

தாகமாக இருந்ததால் இளநீர் அருந்தினோம். முதலில் குடித்த இளநீர் அத்தனை சுவையாக இல்லை, அதை கடைக்காரரிடம் சொன்னதும் வேறு ஒரு இளநீர் சீவிக் கொடுத்தார். இது சுவையாக இருந்தது. முதலில் குடித்தது மூன்று வாரங்களில் காய்க்கும்  மரத்தின் இளநீராம், இரெண்டாவதாக குடித்தது மூன்று மாதங்களில் முறையாக காய்க்கும் மரத்தின் இளநீராம். 
"அட! காலக் கொடுமையே" என்றாள் அனு

மதிய உணவை என் அத்தை பெண் வீட்டில் முடித்துக் கொண்டு, ரயிலைப் பிடித்தோம். அதில் எங்களுக்கு வாய்த்தது நடு வரிசையாகப் போய் விட்டது. எதிர் எதிரே இருக்கைகள் அமைந்து விட்டதால் காலை நீட்ட முடியாமல் ஒரே பொசிஷனில் உட்கார்ந்த படியே பயணிக்கும்படியாகி விட்டது. மூன்று நாட்களுக்கு மேல் கஷ்டப் பட்டேன். கடுகு எண்ணெய் வேப்ப  எண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் இரும்பு கரண்டியில் சூடு செய்து, எங்கெல்லாம் வலிக்கிறதோ அங்கெல்லாம் தடவி, ஊற வைத்து,வெந்நீர் ஊற்றி குளித்து கொஞ்சம் சரி செய்து கொண்டிருக்கிறேன், அடுத்த டூர் காத்துக்கொண்டிருக்கிறதே...! ராதே கிருஷ்ணா!