கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, August 30, 2018

பிரசாத விசேஷங்கள்


பிரசாத விசேஷங்கள்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் 
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஆகி, நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்த நேரம், அந்த கோவில் கமிட்டி மெம்பர்களில் ஒருவர் காஞ்சி மடம் மஹா பெரியவரை தரிசிக்க காஞ்சீபுரம் சென்றிருக்கிறார். 



அங்கு பெரியவரிடம் கோவில் நடைமுறைகளைப் பற்றி கூறி விட்டு, தினமும் இரண்டு வேளையும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வருகின்றவர்களுக்கு வயிறு நிறையும் வண்ணம் நிறைய விநியோகம் செய்வதாக பெருமையாக கூறிக் கொண்டாராம். அதைக் கேட்ட மஹா பெரியவர்," பிரசாதம் அவ்வளவு அதிகமாக கொடுக்கக்கூடாது, கொஞ்சமாகத்தான் தர வேண்டும், இதை நீயே புரிந்து கொள்வாய்" என்றாராம்.

இவருக்கு கொஞ்சம் வருத்தம். "என்னது இது? பிரசாதம் விநியோகிப்பதை குறை கூறுகிறாரே?" என்று நினைத்தாராம். எனவே வழக்கம் போல் பிரசாதத்தை ஒரு தட்டில் நிறைய வைத்து  விநியோகம் செய்வது தொடர்ந்தது. 

ஒரு நாள் மதியம் சாம்பார் சாதத்தை பெற்றுக் கொண்ட ஒருவர், " இனிமேல் சாம்பார் சாதத்தோடு ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் வைத்துக் கொடுங்கள், தனியாக சாப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது" என்றாராம். அப்போதுதான் இவருக்கு மகா பெரியவர் சொன்னது புரிந்ததாம். பிரசாத அளவை குறைத்தார்களாம். 

பிரசாதம் என்பதை மிகவும் குறைவாக தொண்டைக்கு கீழ் இறங்காத அளவிற்குத்தான் சாப்பிட வேண்டும், அது விஸர்ஜனமாகக் கூடாது. அதாவது கழிவாக மாறாக கூடாது என்பார்கள். 


கோகுலாஷ்டமி பிரசாதங்கள்  
விநாயக சதுர்த்தி மோதகம் 

அக்காரவடிசல் 
நம்முடைய இந்து மதத்தில் பூஜையும்,பண்டிகைகளும்,  கோவில்களும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிரசாதங்களும்.  இதோ நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே கோகுலாஷ்டமியும், விநாயக சதுர்த்தியும். கோகுலாஷ்டமிக்கு பதினெட்டு வகை பட்சணங்கள் செய்வார்கள். விநாயக சதுர்த்திக்கு அப்பம், வடை, மோதகம், பாயசம், அவல், மற்றும் பழங்கள். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல். சரஸ்வதி பூஜைக்கு சுகியன் அல்லது அப்பம், வடை, பாயசம். தீபாவளிக்கு கேட்கவே வேண்டாம். கார்த்திகை பொரி சாப்பிட்டே ஆக வேண்டும். திருவாதிரை களி, ஏழு தான் கூட்டு. கூடாரவல்லிக்கு அக்காரவடிசல். போகி அன்றும் போளி வடை உண்டு. தைப்  பொங்கல் என்றால் பால் பொங்கல், ஏழு தான் கூட்டு. பங்குனி உத்திரம், ராம நவமி போன்றவைகளுக்கு பானகம், நீர் மோர், வடை பருப்பு என்று சீதோஷணத்தை ஓட்டி பிரசாதம் மாறும். சித்திரை வருடப் பிறப்பிற்கு போளி வடை கண்டிப்பாக வேண்டும். அன்று மாலை பஞ்சாங்கம் படிக்கும் பொழுது பானகம், நீர் மோர், வடை பருப்பு உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு கூழ், மாவிளக்கு, ஆவணியில் ஆவணி அவிட்டத்திற்கு போளி, வடை, காயத்திரி ஜபத்தன்று கலந்த சாதம் அவியல். வரலக்ஷ்மி நோன்பிற்கு எல்லோரும் இப்போதுதான் பாயசம், வடை, கொழுக்கட்டை, சுண்டல் என்று சாப்பிட்டிருப்பார்கள். ஓணம் என்றாலே எல்லோருக்கும் 'ஓணம் சத்யா'தான் நினைவுக்கு வரும். பச்சடி,காளன்,ஓலன், கறி, கூட்டு, அவியல், எரிசேரி, புளிசேரி, சாம்பார், புளியிஞ்சி, பப்படம், இரண்டு வகை பாயசம், உண்ணியப்பம், என்று ஒரு கட்டு கட்டியிருப்பார்கள். இப்போதெல்லாம் சென்னை, பெங்களூர் இங்கெல்லாம் கூட உணவகங்களில் 'ஓணம் சத்யா' என்று விளம்பரப் படுத்துகிறார்கள்.



இது ஒரு பக்கம் என்றால் ஒவ்வொரு கோவிலையும் ஒரு பிரசாதத்தோடு இணைத்து வைத்திருக்கிறோம். திருப்பதியென்றால் லட்டு, பழனி பஞ்சாமிர்தம். திருவல்லிக்கேணி புளியோதரை, ஸ்ரீரங்கம் அரவணைப் பாயசம். குருவாயூரில் ஸ்வாமியை தரிசிக்க நிற்கும் நேரத்தை விட அதிகமான நேரம் பால் பாயசம் வாங்க காத்திருக்க வேண்டும். 

மஸ்கட்டில் சிவன் கோவிலில்தான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கும் தனி சந்நிதி இருக்கும். அங்கு வியாழக் கிழமை, அல்லது சனிக்கிழமை மாலையில் சென்றால் இரவு உணவை அங்கே முடித்து விட்டு வந்து விடலாம். அவ்வளவு பேர்கள் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவார்கள். அதோடு கேசரி, பொங்கல்,தயிர் சாதம் என்று வகையறாக்களும் இருக்கும். தவிர இரண்டு, மூன்று பேர் வடை மாலை சாற்றுவதால் விதம் விதமான பிரசாதங்களை ருசித்து வீட்டில் வந்து தூங்கி விடலாம். பேச்சிலர்களுக்கு ரொம்ப சௌகரியம். அங்கு ஹோட்டல்களிலேயே 'ஆஞ்சநேயருக்கு வடை மாலை செய்து தரப்படும்' என்னும் அறிவிப்பை காணலாம்.     



ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர்,"எனக்கு ஞானம், வைராக்கியம் வர வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாராம். பரமஹம்சர் ,"தினமும் பகவத் கீதையின் சில ஸ்லோகங்களை படித்து விட்டு, கடவுளுக்கு திராட்சைப் பழங்களை நைவேத்தியம் செய்" என்றாராம். அந்த ஆசாமி உடனே," தினமும் எத்தனை திராட்சைப் பழங்கள் நைவேத்தியம் செய்ய வேண்டும்?" என்று கேட்டதும் ராமகிருஷ்ண பரமஹம்சர்," தினமும் எத்தனை ஸ்லோகங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் உனக்கு ஞானம் அடைவதில் நிஜமாகவே விழைவு இருக்கிறது என்று கொள்ளலாம், நீ எத்தனை திராட்சை நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று கேட்கிறாய், உனக்கும், ஞான,வைராக்யத்திற்கும் வெகு தூரம்" என்றராம். 

அவர் சொன்னது ஞான வேட்கை உள்ளவர்களுக்கு, நமக்கல்ல. இன்று சங்கடஹர சதுர்த்தி, குக்கரில் கொத்து கடலை சுண்டல் வேகப் போட்டிருக்கிறேன். நம் வேலையை நாம் பார்ப்போம்.  ஞானம் லபிக்கும் பொழுது லபிக்கட்டும். 

Tuesday, August 28, 2018

சின்ன சின்ன செய்திகள்



சின்ன சின்ன செய்திகள் 







சிந்தூரா என்றால் என்னவென்று கேட்ட அதிரவுக்காக இந்த பாடல். எனக்கு ஒரு சந்தேகம். எ.பி.யின் கண்களில்  அனுஷ்கா, தமன்னா தவிர வேறு கதாநாயகிகள் பட மாட்டார்களா? இந்தப் பொண்ணு ஹன்சிகாவுக்கு என்ன குறை?   
xxxxxxxx

வரலட்சுமி விரதம் பற்றி பதிவிடுகையில் தோன்றிய விஷயம். நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, வரலக்ஷ்மி விரதம் எல்லாவற்றிலும் பூஜை முடிந்ததும் அது சம்பந்தப்பட்ட கதை ஒன்றை வாசிப்பார்கள். வாழக்கையில் ஏதோ ஒரு கஷ்டத்தில் இருந்த ஒருவர் பெரும்பாலும் பெண், இந்த விரதத்தை அனுஷ்டித்து எப்படி நற்கதி அடைந்தார் என்று விளக்கும் கதையாக அது இருக்கும். வரலட்சுமி விரதம் சம்பந்தப்பட்ட கதை எனக்கு தெரியவில்லை. ஆனால், வரலக்ஷ்மி நோன்பின் முக்கிய பாடல் 'வரலக்ஷ்மி வருவாய் அம்மா..(பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..)' என்னும் பாடல்தானே? லட்சுமி நம் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கூறும் கதை. சிறு வயதில் கேட்டது.

ஒரு முறை லட்சுமி தேவி பூமியில் வாழும் மனிதர்களுக்கு கருணை புரியலாம் என்று அதிகாலை நேரத்தில்  வைகுண்டத்திலிருந்து கீழே இறங்கி வருகிறாள். எந்த வீட்டிற்கு செல்லலாம் என்று யோசித்தபடியே வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு வீட்டில் புழுத்த சாணத்தைக் நீரில் கரைத்து அதைக் கொண்டு வாசலில் தெளித்து கோலம் போடுகிறாள் அந்த வீட்டு அம்மாள். லட்சுமி தேவி அருவருத்து அந்த வீட்டத் தாண்டிச் சென்று விடுகிறாள். அதற்கு அடுத்த வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து பேன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காண சகிக்காமல் நகர்ந்து விடுகிறாள். வேறொரு வீட்டிலோ காலை வேளையில் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு பிக் பாஸின் மஹத் போல கெட்ட வார்த்தைகளை இறைத்துக் கொள்கிறார்கள்."சீ! சீ! இந்த வீட்டில் நான் எப்படி இருக்க முடியும்?" என்று அங்கிருந்தும் அகன்று விடுகிறாள். வேறொரு வீட்டிலோ இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை, ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். மனமொடிந்து போன லட்சுமி தேவி சே! ஒரு வீடு கூடவா நான் வசிக்கத்தகுதி உடையதாக இருக்காது? என்று வருந்தும் பொழுது, அந்த சிறு குடிசை கண்ணில் படுகிறது. பளிச்சென்று வாசலில் சாணி தெளித்து கோலமிடப்பட்டு, உள்ளே விளக்கேற்றி வைக்கப் பட்டிருக்கிறது. அந்த வீட்டில் உள்ளவர்கள் காலையில் குளித்து விட்டு, அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆஹா! நான் வசிக்க தோதான இடம் இதுதான்" என்று அந்த வீட்டிற்குள் நுழைகிறாள் மஹாலக்ஷ்மி. அதன் பிறகு அந்த வீட்டின் வளம் பெருகத் தொடங்குகிறது. இந்த கதை மூலம் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் நிறைய வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக் கூடாது, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் காலத்தை ஒட்டி சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும் . உதாரணமாக வீட்டு வாசலில் யார் இப்போதெல்லாம் சாணம் தெளிக்கிறார்கள்? அதே போல இப்போதைய இளைய தலைமுறையினர் எட்டு மணிக்கு முன்னாள் துயிலெழுகிறார்களா?

xxxxx 



எழுத்தாளரும், வீணை வித்தகியும் ஆன கீதா பென்னட் காலமாகி விட்டாராம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டார். ஆனால் அந்த அரக்கன் மீண்டும் அவரைத்தாக்கி அவர் உயிரைக் குடித்து விட்டான்.  சென்னை அசோக் நகரில் என் சகோதரியின்
வீட்டிற்கு பக்கத்து வீடு அவருடைய சகோதரியின் வீடு. தனி பங்களாவாக இருந்த அதை இடித்து அபார்ட்மெண்ட் ஆக்கிய பொழுது அவரும் அதில் ஒரு வீடு வாங்கி கொண்டார்.  ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் சென்னைக்கு வருவார். அப்போது அவரை சந்தித்து உரையாடியிருக்கிறேன். ராமபுரத்தில் எங்கள் விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பிற்கு ஒரு முறை சிறப்பு விருந்தினராக வந்தார்.  மூன்று வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு அவர் கணவரோடு வந்திருந்த பொழுது, அவர் கணவருக்கு நம் ஊரின் இரைச்சலைத்தான் தாங்க முடியவில்லை என்றார். 

ஒரு முறை குமுதத்தில் பட்டுக்கோட்டை பிரபாகரின் மனைவி, வாஸந்தியின் கணவர் போன்றே  பிரபல எழுத்தாளர்களின் வாழ்க்கைத் துணைகளை கதைகள் எழுத வைத்து வெளியிட்டார்கள். அதில் கீதா பென்னட்டின் கணவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கவிதையை அவர் கதையாக்கியிருந்தார்.  அவைகளை என்னால் ரசிக்க முடியவில்லை காரணம் எல்லோரும் தங்கள், தங்கள் வாழ்க்கைத் துணை எழுதுவது போலவே (அவர்கள்தான் எழுதி கொடுத்தார்களோ என்னவோ?) எழுதியிருந்தார்கள். "ப.பிரபாகரின் கதையை படிக்க வேண்டும் என்றால் அவர் எழுதியிருப்பதையே படித்து விடலாமே? எதற்கு டூப்பிளிகேஸி?" என்று நான் கேட்டதை திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டார். "உண்மைதான், இவையெல்லாம் பிசினெஸ் கிம்மிக்ஸ்" என்றார். "ஒரு நாவல் எழுத வேண்டும்" என்று ஆவல் என்றார். அது நிறைவேறாமலேயே ஆயுள் முடிந்து விட்ட்து.  



Sunday, August 26, 2018

வரலக்ஷ்மி வருவாய் அம்மா..!

வரலக்ஷ்மி வருவாய் அம்மா..!



ஆடி மாதம் வந்துவிட்டாலே பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கும். முதலில் வருவது வரலக்ஷ்மி நோன்பு அல்லது வரலக்ஷ்மி விரதம். இந்த நோன்பு அனுசரிக்கும் சிலர், அதென்ன சிலர் என்கிறீர்களா? வரலக்ஷ்மி நோன்பு செய்யும் பழக்கம் குடும்பத்தில் இருந்தால்தான் கொண்டாடுவார்கள். மாமியார் அந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் மருமகளும்  தொடர வேண்டும். திருமணம் ஆனவுடன் இதை எடுத்து வைப்பார்கள்.

இந்த வரலக்ஷ்மி விரதம் சில வருடங்கள் ஆடி மாதமும், சில வருடங்கள் ஆவணி மாதமும் வரும். திருமணம் ஆன வருடமே நோன்பு எடுத்துக் கொள்வதென்றால் எந்த மாதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மருமகளும் செய்ய ஆரம்பித்து விடலாம். முதல் வருடத்தை விட்டு விட்டால் எந்த வருடத்தில் ஆவணி மாதத்தில் வருகிறதோ அப்போதுதான் நோன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்(அதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டும்). மாமியார் வீட்டில் இல்லாவிட்டாலும் அம்மா செய்து கொண்டிருந்தால், அம்மாவிடம் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு முறை செய்ய ஆரம்பித்து விட்டால் எல்லா வருடமும் நிறுத்தாமல் செய்ய வேண்டும். ஏதாவது அசம்பாவிதத்தால் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த பூஜையை அனுஷ்டிக்கும் வேறு யாரிடமாவது அம்மன் முகத்தை பூஜிக்க கொடுத்து, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்த விரதம் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். 

வாட்சாப் வந்த படம் 
இப்பொழுதெல்லாம் எல்லோரும் வரலட்சுமியின் முகத்தை வைத்துதான் பூஜிக்கிறார்கள். முன்பெல்லாம் சிலர் வீடுகளில் சுவற்றில் வரலட்சுமியின் முகம் வரைந்து அதை பூஜிப்பார்கள். என் அக்கா, அவர் கூட சில வீடுகளில் வரலக்ஷ்மி படம் வரைந்து தந்திருப்பதாக கூறினார். நிறைய வேலை வாங்கும் பூஜை இது. முன்பெல்லாம் இதை மூன்று நாட்கள் செய்வார்கள். முதல் நாள் வியாழக் கிழமை மாலை வீட்டை அலம்பி, இழை கோலம் போட்டு, செம்மணிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, அம்மன் மண்டபத்தை அலங்காரம் செய்து, அம்மனையும் அலங்கரித்து, முதலில் வீட்டு வாசலில் ஒரு பகுதியில் ஒரு பலகையில் கோலமிட்டு அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, அம்மனுக்கு ஆரத்தி எடுத்து, இரண்டு பெண்களாக அம்மனை வீட்டுக்குள் அழைத்து வந்து மண்டபத்தில் எழுதருளச் செய்வார்கள். அம்மன் அலங்காரத்தில் தாழம்பூ வைத்து பின்னுவது முக்கியம். அதே போல அம்மனுக்கு பின்புறம் அந்த பின்னழகை காணும் வண்ணம் ஒரு கண்ணாடியும் வைப்பார்கள். 

வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி பூஜை, சனிக்கிழமை  புனர்பூஜை செய்துவிட்டு மாலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை கூப்பிட்டு வெற்றிலை பாக்கு கொடுப்பார்கள். அப்போது சுண்டல் உண்டு.

இப்போதைய அவசர காலத்திற்கேற்ப அம்மனை அழைப்பது, பூஜை, மாலையில் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுப்பது என்று எல்லாமே ஒரே நாளில் முடித்து விடுகிறார்கள். அதே போல, ஐயருக்காக காத்திருக்க தேவையில்லாமல் பென் டிரைவ் உதவியோடு பூஜை நடந்து விடுகிறது. அம்மனை அலங்கரிக்க தேவையான எல்லாம் ரெடிமேடாக கிடைப்பதால் அதுவும் ஈசியாக முடிந்து விடுகிறது.   

எங்கள் வீட்டில் வரலக்ஷ்மி பூஜை கிடையாது. எங்கள் கடைசி அத்தைக்கு உண்டு. அத்தையும் திருச்சியிலேயே இருந்ததால் நாங்கள் வரலட்சுமி நோன்பென்றால் அத்தை வீட்டிற்கு சென்று விடுவோம். எங்கள் அம்மா கோலம் போடுவது, அம்மன் அலங்காரம் போன்றவற்றில் திறமை மிகுந்தவர் என்பதால் அத்தைக்கு உதவி செய்ய முதல் நாளே சென்று விடுவார். நாங்கள் பெரும்பாலும் அடுத்த நாள் காலை செல்வோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பெரிய அக்கா ஹாஸ்டலில் இருக்கும் தன் ஸ்நேகிதிகளைக் கூட அத்தை வீட்டிற்கு அழைத்து வருவார். 

முதல் நாள் பூஜைக்கான முன்னேற்பாடுகள் தவிர நைவேத்யத்திற்கான இட்லி, கொழுக்கட்டை போன்றவைகளுக்காக மாவு அரைத்து வைத்துக் கொள்ளுதல், கொழுக்கட்டைக்கு பூரணம் தயார் செய்து வைத்துக் கொள்ளுதல் என்று வேலை நீளும். வெள்ளிக்கிழமை காலை 10:30 முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் எல்லோரும் ராகு காலத்திற்கு முன் பூஜையை முடித்து விட வேண்டும் என்று துடிப்பார்கள். பூஜை செய்து வைக்கும் ஐயருக்கு அன்றைக்கு பயங்கர டிமாண்ட். சில சமயம் ஆவணி அவிட்டமும் அன்றைக்கே வந்து விடும். அவ்வளவுதான் கதை கந்தல்!

சில சமயம் ஆகஸ்ட் 15 அன்று வரலக்ஷ்மி விரத நோன்பு வந்துவிடும். அன்றைக்கு பள்ளிக்கு வந்தே தீர வேண்டும், என்று பள்ளியில் விரட்டுவார்கள். அதுவும் ஓரு பெண் பாடக்கூடிய பெண்ணாகவோ, சுதந்திர தின நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய பெண்ணாகவோ இருந்து விட்டால் பள்ளிக்குச் செல்லாமல் இருக்க முடியாது. வீட்டிலோ, "அப்படி என்ன ஸ்கூல்? ஒரு நாள் கிழமைக்கு கூட வீட்டில் இருக்க முடியாமல்? உங்க டீச்சரெல்லாம் பொம்மனாட்டிதானே?" என்று என்னவோ ஆசிரியைகள் ஆசைப்பட்டு விசேஷ நாளில் பள்ளிக்கு வருவது போலகேட்பார்கள். நிஜமாகவே பாவம் அந்த ஆசிரியைகள் எப்படி மேனேஜ் செய்தார்கள்? 

படம் நன்றி கூகுள்