மாற்றங்கள்
சென்ற ஞாயிரன்று சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம். பெங்களூர் வந்திருந்த என் தோழி, "நான் தனியாக இன்னோவாவில் வந்திருக்கிறேன், நீங்கள் என்னோடு வந்து விடுங்களேன்" என்று அழைத்தார். எனவே அவரோடு சென்றோம். வழியில் A2B உணவகத்தில் சாப்பிடலாம் என்று அங்கு சென்றால், அது மூடியிருந்தது, ஒருவர் பைக்கில் வந்து, அந்த உணவகம் இடம் மாற்றியிருப்பதாக கூறினார். முன்பிருந்த இடத்திற்கு அருகிலேயே பெரிதாக, நிறைய கார்களை பார்க் பண்ணும்படியாக புதிய வளாகம் இருந்தது. உணவின் தரம் எப்போதும் போலத்தான். அங்கிருந்து வியூ நன்றாக இருந்ததால் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டேன்.
சென்னையில் கூடுவாஞ்சேரி பக்கம் ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பிறகு செல்கிறேன். முன்பெல்லாம். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் இடது புறம், அருண் எக்செல்லோவின் எஸ்டான்ஷியா வளாகத்தில் ஒருபெரிய நீல நிற பக்கெட்(சிலர் டம்பளர் என்பார்கள்) போன்ற ஒரு கட்டிடத்தை பார்க்க முடியும். இப்போது அந்த டம்பளரை காணவில்லை, காக்கா தூக்கிக் கொண்டு போய் விட்டதா என்று தேடினால், அதற்கு முன்னால் ஒரு கட்டிடம் வந்து மறைத்து விட்டது. அங்கிருக்கும் zoho நிறுவனத்தின் மல்டி லெவல் கார் பார்க்கிங்காம்!!!
zoho tower அன்றும் இன்றும்
ஞாயிறன்றும், திங்களன்றும் திங்களில் அதாவது நிலாவில் சாய்பாபா உருவம் தெரிகிறது என்று ஒரே அமளி. நாம் சாய்பாபா என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் தெரிந்தார். சில சமயம் நிலாவில் எனக்கு வடை சுடும் பாட்டியும், சில சமயம் ரங்கநாதரும்,சில சமயம் மகாலட்சுமியும் தெரிவதுண்டு.
![]() |
ஞாயிறன்று நான் பிடித்த நிலா |
புரட்டாசி பௌர்ணமி அன்று மயிலை கற்பகாம்பாள் கோயிலில் அம்பாள் சந்நிதியில் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள் என்பது மறந்து விட்டதால் கோவிலுக்குச் செல்வதை தவற விட்டு விட்டேன்.

மறுநாள் மயிலாப்பூர் சென்ற பொழுது, கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்த நவராத்திரி கடைகளை பார்க்க முடிந்தது. சுக்ரா ஜூவல்லரி வாசலில் பொம்மைகளை வைத்திருந்தார்கள். நான் புகைப்படம் எடுக்கச்சென்ற பொழுது, அங்கே அமர்ந்திருந்த பெண் எழுந்து வந்தார். சில பொம்மைகளின் விலை விசாரித்தேன். ரெங்கநாதர் ரூ.700/-, மாப்பிள்ளை அழைப்பு செட் ரூ.1500/-, கோவர்தனகிரி கிருஷ்ணன் ரூ.2000/- என்று கூறியவர், "நான் சொல்ற விலைதான் முடிவான விலை கிடையாது, நீங்க கேளுங்க, கட்டி வந்தால் கொடுக்கப் போறேன், வண்டிக் கூலிதான் ரொம்ப அதிகமாகி விட்டது" என்றார். ஜி.எஸ்.டி.யையும், டீ மானிடைசேஷனையும் குறை சொல்லவில்லை. அதெல்லாம் பெரிய வியாபாரிகள் செய்வார்கள். விலை கேட்டு விட்டு வாங்காமல் வந்த குற்ற உணர்ச்சியால் சரியாக படம் எடுக்க முடியவில்லை. ஆரிய கௌடா ரோடில் நவராத்திரி எக்சிபிஷன் தொடங்கிவிட்டதாம். என் அக்கா அனுப்பியிருந்த படங்கள் கீழே.
பெங்களூர் எக்ஸ்பிரஸில் திரும்பி வரும் பொழுது, மஹாளய பட்சத்தைப் பற்றி கவலைப்படாமல் சமோசா சாப்பிட்டேன். சன் NXT இல் 'குலேபகாவலி படம் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது. ரேவதி கலக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் வரும் அத்தனை பேரும் திருடர்கள். இப்போது வரும் எல்லாப் படங்களைப் போலவும், ஏமாற்றுபவர்களையும், திருடர்களையும் நாயக, நாயகியர்களாக்கி, கடைசியில் கூட அவர்கள் திருந்துவதாகவோ, மாட்டிக் கொள்வதாகவோ காட்டாத படம். இந்த நிலை மாறாதா?