கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 13, 2023

மழையும் கொலுவும்:

 மழையும் நானும் கொலுவும்:

பள்ளி நாட்களில் மழை வந்தால் ஜாலியாகத்தான் இருக்கும். மழையில் நனைந்து கொண்டு வீட்டிற்கு வந்தால் அப்பா குமுட்டியில் கணகணவென்று தணலை ரேழியின் கதவிற்கு பின்னால் வைத்திருப்பார். 

தலையை துவட்டிக் கொண்டு, அந்த குமுட்டியில் காய வைத்துக் கொள்வோம். கூடத்தின் ஓட்டின் வழியாக மழை நீர் சொட்டினால், குச்சியால் ஓடுகளை தள்ளி ஒழுகலை நிறுத்துவார். பெரிதாக ஒழுகியதில்லை, ஆனால் கூடத்தின் நடுவில் இருந்த முற்றத்தின் மூலம் சாரல் அடிக்கும். அதில் சாக்கை போட்டுக் கொள்வோம். 

எங்கள் வீட்டில் எப்போதும் நவராத்திரி கொலு பெரிதாக அம்மா வைப்பாள். பதினோரு படி+ பக்கத்தில் ஒரு மேஜையில் ராதா கிருஷ்ணன் ஊஞ்சல்+பார்க்க என்று பிரும்மாண்டமாக இருக்கும்.  

ஒரு வருடம் கூடத்தில் கொலு வைத்து விட்டு, எங்கள் மாமா முற்றத்து சாக்கடையை அடைத்து ஃபவுண்டன் 

அமைத்துக் கொடுத்தார். ஃபவுண்டனுக்கு கீழே பீங்கானில் குழலூதும் கிருஷ்ணன். அதைத்தவிர இன்னும் பல பீங்கான் பொம்மைகளை வைத்திருந்தோம்.மிகவும் அழகாக இருந்த அந்த அமைப்பை பலரும் பாராட்டினார்கள். திருஷ்டி பட்டதை போல ஒரு விஷயம் நடந்தது.

அந்த வருடம் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த பத்மாமணி தியேட்டரில் 'திருமால்பெருமை' படம் வந்திருக்கிறது. இரவு காட்சிக்கு பெரியவர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது நல்ல மழை கொட்டியிருக்கிறது. முற்றத்தின் நீர் செல்லும் வழியை அடைத்து விட்டதால், தண்ணீர் வெளியேற முடியாமல் முற்றம் நிரம்பி கூடத்திற்குள் வந்த மழை நீர் கிட்டத்தட்ட மூன்று படிகள் வரை மூழ்கடித்து விட்டது. 

சினிமா முடிந்து வீடு திரும்பிய பெரியவர்கள் சாக்கடை அடைப்பை நீக்கி தண்ணீரை வெளியேற்றி விட்டார்கள். நவராத்திரி முடிந்ததும் பொம்மைகளை மச்சில் அதற்குரிய மரப்பெட்டியில் வைத்தாகி விட்டது. 

அடுத்த வருடம் நவராத்திரிக்கு பொம்மைகளை எடுக்கலாம் என்று பெட்டியைத் திறந்த நாங்கள் அதிர்ந்து போனோம். முதல் வருடம் ஈரத்தோடு பொம்மைகளை மரப்பெட்டியில் அடுக்கியதால் கரையான் நிறைய பொம்மைகளை தின்றிருந்தது. மேல் படியில் இருந்த பொம்மைகள் தப்பித்திருந்தன. ஆனால் சிலவற்றில் வர்ணம் போகியிருந்தது. எங்கள் வீட்டு பொம்மைகளின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்து விட்டது. கரையான் தின்ற பொம்மைகளை களைந்த பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பிரும்மாண்ட கொலு வைக்கவே இல்லை. 😔