முன் குறிப்பு: இது ஆலயம் சம்பந்தப்பட்ட பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவுசெய்து நகர்ந்து சென்று விடுங்கள்
குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி
சமீபத்தில்
வாட்சாப், ஃபேஸ்புக், எல்லாவற்றிலும் திருச்சிக்கு அருகில் கரூர் மார்க்கத்தில் இருக்கும்
முத்தரசனல்லூர் என்னும் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் குருவாயூரப்பன் கோவிலைப்
பற்றி செய்திகள் வந்தது. அவைகளை படித்ததிலிருந்து அடுத்த முறை திருச்சிக்கு செல்லும்
பொழுது அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என் மன்னிக்கும் அந்த விருப்பம்
இருந்ததால், நாங்கள் இருவரும் என் பேத்தியோடு அண்ணா வீட்டிற்கு தெரிந்த ஆட்டோவில் கிளம்பினோம்.
கரூர் டர்னிங்கில் வலதுபுறம் திரும்பி கரூர் சாலையில் பயணித்தால், முதலில் வருவது கம்பரசம்பேட்டை.
அதைக் கடந்ததுமே ஆங்காங்கே குருவாயூரப்பன் கோவில் 3கி.மீ., 2.கி.மீ என்ற அறிவிப்பு
பலகைகள் நாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற தைரியம் தருகின்றது.
முத்தரசநல்லூர் ஊருக்குள் நுழைந்ததுமே குருவாயூரப்பன் கோவில் வந்து விடுகிறது. கேரள பாணியில் கட்டப்பட்ட விஸ்தாரமானகோவில். உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தின் கீழே வேண்டிக்கொண்டு காணிக்கையாக செலுத்தப்பட வேண்டிய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதைத்தாண்டி உள்ளே சென்றால் குழந்தை கண்ணனை தரிசிக்கலாம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகு! தரிசித்துக் கொண்டு வெளியே வந்தால் வெளிச்சுற்றில் ஐயப்பன், வேட்டைகொருமகன் சன்னதிகளும், துலாபாரம் பிரார்த்தனை செலுத்துவதற்காக பெரிய தராசும் இருக்கின்றன. உள் சுற்று சுவர்களில் குருவாயூர் கோவிலில் இருப்பது போலவே மியூரல் ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள். மாலையில் விளக்கேற்றுவதற்காக வெளிப்பிரகார சுவற்றை ஒட்டி பித்தளை சட்டங்களில் விளக்குகள். அங்கு போலவே இங்கும் ஆண்கள் மேல் சட்டை அணிந்து கொள்ள அனுமதி இல்லை.
![]() |
குளத்தின் முகப்பு |
கோவிலுக்கு
எதிரே அழகான பெரிய குளம். நிறைய மின்சார விளக்கு அலங்காரங்கள் இருந்தன. பக்கத்தில்
நாராயணீய மண்டபம் என்று பெரிய ஹால். விசேஷ நாட்களில் நாராயணீய பாராயணம், பஜனை போன்றவைகள்
நடத்தவும், பூணூல், ஆயுஷ ஹோoமம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கும் விடப்படும் என்ற அறிவிப்பை
காண முடிகிறது.
![]() |
நாராயணீய ஹாலின் மேடையில் இருக்கும் சிற்பம் |
குளத்தைச்
சுற்றி மஹாபெரியவருக்கும், ஷிர்டி சாய்பாபாவுக்கும் சன்னிதிகள் வரப்போகின்றன. மஹா பெரியவரின்
அனுக்ரஹத்தால்தான் இந்தக் கோவில் கட்டப்பட்டதாம். நாங்கள் பார்க்கவில்லை. அன்று கோவிலில்
இரண்டு குழந்தைகளுக்கு அன்னப்பிராஸனம் நடந்தது. ‘குருவாயூருக்கு வாருங்கள், ஒரு குழந்தை
சிரிப்பதை பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை பாருங்கள்’
என்னும் கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. இனி அதற்கு குருவாயூருக்கு போக வேண்டாம்,
திருச்சியிலேயே பார்க்க முடியும். பார்த்து அனுபவியுங்கள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!