ஒரு நடிகை நாடகம் பார்ப்பதை ஒரு ரசிகை நினைத்துப் பார்க்கிறாள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - திரைப்படமாக்கப்பட்ட ஜெயகாந்தனின் இன்னொரு கதை. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படம் தந்த வெற்றியில் இந்த கதையையும் படமாக்கினார்கள் போலிருக்கிறது, ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் பலம் , வசனம்(இந்தப் படத்தை பார்ப்பதற்கு பதிலாக, எல்.பி. ரெகார்டாக வந்தால் போட்டுக் கேட்கலாம் என்று விகடன் விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள்)நடிப்பு, மற்றும் பாத்திரப் படைப்பு. இந்த படத்தில் வரும் கல்யாணியைப் போன்ற பெண் பாத்திரப் படைப்பை அதற்கு முன்னும் தமிழ் சினிமாவில் கண்டதில்லை, அதற்கு பின்னும் இது வரை காணவில்லை.
கல்யாணியை காதலித்து மணந்து கொள்ளும் பத்திரிகையாளன் ரெங்கா, அவளோடு ஏற்படும் கருத்து வேற்றுமை காரணமாக," ஒரு நல்ல நட்பை நாம் அவசரப் பட்டு கெடுத்து விட்டோம், பிரிந்து விடலாம்" என்பான். அதற்கு அவள், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீங்கள்தான் சொன்னீர்கள், இப்போது பிரிந்து விடலாம் என்றும் நீங்கள்தான் சொல்கிறீர்கள், இதில் எனக்கு எதுவும் இல்லை" என்பாள்.
என்னைப் பிரிந்தால் நீ வருத்தப் படுவாயா? என்று கணவன் கேட்க, "இல்லை வருத்தப்பட மாட்டேன், உங்களோடு இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பேன்" என்று அவள் கூறியதும், "உன்னுடைய இந்த பதில் எனக்கு ஏமாற்றமளிக்கிறது. அதுதான் ஆம்பள புத்தி" என்பான்.
விவகாரத்துக்காக அவர்கள் சந்திக்கும் ரங்காவின் நண்பரான வக்கீல்," நீங்கள் சொல்வதெல்லாம் விவாகரத்துக்கு போதுமான காரணம் கிடையாது. நீங்கள் இரண்டு பேரும் ஒரு வருடம் பிரிந்திருக்க வேண்டும்" என்று கூறி விடுகிறார். அந்த கால கட்டத்தில் கல்யாணிக்கு இடுப்புக்கு கீழே பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறார். அந்த செய்தியை கேள்விப் பட்டு அவளுக்கு உதவுவதர்க்காக வந்து அவளோடு சேரும் ரங்காவிடம் வழக்கறிஞர், "நீ கேட்ட விவாகரத்து கிடைப்பதற்கு இந்த ஒரு காரணம் போதும்" என்றதும், "வாழ இஷ்டமில்லாத இரண்டு பேரை இழுத்து பிடித்து வாழச் சொல்லி கட்டாயப் படுத்தும் உங்கள் சட்டம், எப்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கவேண்டுமோ அப்போது பிரிந்து போகலாம் என்கிறது" என்று சீறுவார்.
படம் கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும். இருந்தாலும் எல்லா பாத்திர படைப்புகளுமே சிறப்பு. சொற்ப நேரமே வரும் தேங்காய் சீனிவாசன்,காந்திமதி போன்ற எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள். ஸ்ரீகாந்த் நடித்திருந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. லட்சுமியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டுமா? கதையை படிக்கும் பொழுது கல்யாணி, ரங்கா பாத்திரங்களைப் பற்றி நம் மனதில் வரும் பிம்பங்களை முழுமையாக லட்சுமியும் ஓரளவுக்கு ஸ்ரீகாந்தும் திரையில் கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் படிக்கும் பொழுது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத வக்கீல் கதா பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு நாகேஷ் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருப்பார்.
என்னுடைய கல்லூரி காலத்தில் பார்த்த படம் இது. இப்போதும் ஜெயா டி.வி.யில்(அதில் மட்டும்தான் போடுகிறார்கள்) ஒளிபரப்பும் பொழுதெல்லாம் பார்ப்பேன்.
இந்த படத்தில் இரண்டு பாடல்களை ஜெயகாந்தன் எழுதி இருக்கிறார். அதில் கடைசியில் வரும் பாடல் இது.