கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, November 8, 2018

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (திருகோவிலூர் திவ்ய தரிசனம்)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் 
(திருகோவிலூர் திவ்ய தரிசனம்)


அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் 
இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் 
பட்டது. திறந்தால்,  மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். 

மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் 
நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று 
வந்தவர் கேட்க,  தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், 
நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் 
மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி  விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் 
ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி..."சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி 
நெருக்குகிரீர்கள்?"  "நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்?" என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அந்த மூவருக்கும் இடையே இன்னும் 
ஒருவரும் நிற்கிறார் என்பது எலோருக்கும் தெரிகிறது, ஆனால் அவருடைய உருவம் தென்படவில்லை. ஒரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் விளக்கிற்கு எங்கே போவது? 

முதலாமவர்க்கு சட்டென்று ஒரு எண்ணம் உதிக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றினார். ஆம் இந்த உலகத்தையே ஒரு விளக்காக்கி அதில் சமுத்திரத்தை எண்ணையாக ஊற்றி, கதிரவனையே 
விளக்காக ஏற்றிய விளக்கு.. அதில் அந்த மூவருக்கும் இடையே புகுந்தது யார் என்று ஓரளவுக்கு புலப்பட்டது என்றாலும் தெளிவாக தெரியவில்லை. இன்னொரு விளக்கு இருந்தால் நன்றாக 
இருக்குமே என்று நினைத்த இரண்டாமவர் மற்றொரு விளக்கை ஏற்றினார் அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் தம் சித்தத்தை திரியாகவும் கொண்ட விளக்கு.. அதை ஏற்றியவுடன் மூன்றாமவருக்கு பளிச்சென்று புலப்பட்டுவிட்டது. "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று தொடங்கி தங்களுக்கு இடையே புகுந்திருப்பது சங்கும் சக்கரமும் ஏந்திய தடக்கையினனாகிய நாராயணனே என்று அறிவித்தார். இப்படித்தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பிறந்தது. அந்த மூவரும் 
வேறு யாரும் இல்லை, பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் மூவரான பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார், மற்றும் பேய் ஆழ்வார், ஆகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருகோவிலூருக்கு  செல்லும் பாக்கியம் கிடைத்தது.


புராதனமான கோவில். 192 அடி  உயரமுள்ள கிழக்கு கோபுரம் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் உயரமான  கோபுரத்தை உடைய ஒன்று. கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு 
மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். எந்த வைணவ கோவிலிலும் இல்லாத வழக்கமாய் 
அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை காட்சி அளிக்கிறாள். உலகளந்த அண்ணனுக்கு காவலாம் 
தங்கை!! 

அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவிக்ரம கோலத்தை தரிசிக்க விரும்பிய ம்ருகண்டு முனிவருக்கு அவரின் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த தரிசனம்.  அடடா! என்ன திருக்கோலம்! பிரும்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை 
உயர்த்தி, வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி புன்னகை தவழும் 
திருமுகத்தோடு 20 அடி உயர சிலா மேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது! உயர்த்திய 
திருவடிக்கருகே மஹாலட்சுமி, ஊன்றிய  திருவடியின் கீழே மஹாபலி, ஆதிசேஷன், இடது 
திருவடியை பூஜிக்கும் பிரும்மா என்று அற்புத கோலம்!  கர்ப்பக்ரத்திலேயே முதல் மூன்று 
ஆழ்வார்களையும்,  ம்ருகண்டு மகரிஷியையும் தரிசிக்க முடிகிறது.  பிரகாரத்தில் தனி சந்நிதியில் புஷ்பவல்லி தாயார். 

இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்யா ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை 
ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை 
போல வலது  கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை. 

புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் 
என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர்,தோற்றுப்  போய்  "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"

பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே 
ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் 
சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ 
மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருகோவிலூருக்கு விழுபுரதிலிருந்து ஏராள பேருந்துகள் 
உள்ளன! 


பி.கு.: இது ஒரு மீள் பதிவு.










Monday, November 5, 2018

அலைச்சல் அனுபவங்கள்

அலைச்சல் அனுபவங்கள் 




திருவண்ணாமலை 
அண்ணாமலையார் கோவில் கோபுரம் 
மலை மீது தவழும் மேகம் 














கிட்டதட்ட பத்து நாட்களாக ஒரே அலைச்சல். பங்களூர், ஷீர்டி, மும்பை, பங்களூர், திருவண்ணாமலை, சென்னை மீண்டும் பங்களூர் என்று சூறாவளி சுற்றுப் பயணம்! திருமணம், பூணூல், பிரிந்தவர் கூடுதல், தினசரி எல்லோரோடும் கதைத்து விட்டு இரவு நேரம் கழித்து உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, விருந்து சாப்பாடு சாப்பிட்டு, விமானம், பேருந்து, ஆட்டோ, கார் என்று அனைத்திலும் பயணித்து, வரிசைகளில் நின்று…. ஊஃப்! உடம்பு களைத்து விட்டது. தலையிலிருந்து கால் வரை வலி. இன்னும் அசதி தீரவில்லை. இதற்கிடையில் வீட்டிற்கு விருந்தினர் வருகை. விரைந்து வந்து கொண்டிருக்கும் தீபாவளி.

சாயி சத்சரிதாவை படித்துவிட்டு ஷிர்டிக்கு முதல் முறையாக செல்பவர்கள் ஏமாந்து போவார்கள். எல்லா புனித தலங்களையும் போலவே ஷிர்டியும் வியாபார தலமாகி விட்டது. ஆன்லைனில் நாங்கள் புக் பண்ணியிருந்த ஹோட்டல் கோவிலிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால் அங்கு தங்காமல், கோவிலுக்கு அருகில் வேறு ஒரு ஹோட்டலில் தங்கினோம். அன்று வியாழக்கிழமையாக இருந்தாலும் நாங்கள் ஷிர்டியை அடைந்த பொழுது, நேரம் அதிகமாகி விட்டதால் அன்று இரவு தரிசனம் செய்ய முடியவில்லை.

ஷீர்டி பாபா கோவில் கோபுரம் 
மறு நாள் காலை முதல் தரிசனம் காணச்சென்றால் அவ்வளவாக கும்பல் இருக்காது என்றார்கள். எங்களிடம் யாரோ சொன்னது போல பல பேரிடம் பலர் சொல்லியிருப்பார்கள் போலிருகிறது. நல்ல கும்பல் இருந்தது. தரிசனம் முடித்து விட்டு வந்து, செல்ஃபோனை திரும்ப பெற்றுக்கொள்ள சென்ற பொழுது காற்று வாங்கியது. ஹூம்!

மும்பையில் நடந்த திருமணம் ஒரு ஃபுயூஷன் வெட்டிங். ஊஞ்சலுக்கு பதிலாக சேரில் மணமக்களை அமரச்செய்து, பாடச் சொன்னார்கள். பாடத்தெரிந்தவர்கள் இல்லாததால், நான், ‘கன்னூஞ்சல் ஆடி நின்றாள் காஞ்சனமாலை மனமகிழ்ந்தாள்..’ தொடங்கி, ‘மல்லிகை முல்லை பூப்பந்தல்..’வரை பாடி தீர்த்து விட்டேன். மேளம் கிடையாது. டி.ஜே.யில் மேளம், அதிலேயே கெட்டி மேளம் கூட இருக்கிறது.

மும்பையிலிருந்து வந்த அடுத்த நாளே திருவண்ணாமலையில் ஒரு பூனூல் கல்யாணதிற்காக செல்ல வேண்டியிருந்தது. திருவண்ணாமலை அதிகம் மாறவில்லை. குறிப்பாக ரமணாஸ்ரமம். ஷிர்டி சாயி பாபா, ரமண மஹரிஷி இருவருமே மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்கள்தான். ஷிர்டி ஒரு ப்ரார்த்தனை ஸ்தலமாக இருப்பதால் அங்கு லோகாயதமான விஷயங்களை வேண்டிச் செல்பவர்கள் அதிகமாக இருக்கிரார்கள். அதனால் அந்த இடமும் வணிக தலமாக இருக்கிறது. ரமணாஸ்ரமத்துக்கு வருபவர்கள் ஆழமான ஆன்மீக தேடலை உடையவர்களாக இருப்பதால் இன்னும் மாறவில்லை. இதுவும் அவர்களுடைய சங்கல்பமே.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை தரிசனம் செய்யச் சென்ற பொழுது என் மகனுக்கு வாயு பிடிப்பா, தசைப் பிடிப்பா என்று தெரியாமல் திடீரென்று வயிற்று வலியால் துடிக்க ஆரம்பித்ததும், அங்கு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ் ரே, எடுத்து, அதில் எதுவும் ப்ரச்சனை இல்லை என்று தெரிந்து, ஊசி போட்டு, மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்தது ஒரு தனி கிளை கதை.

ரமணாஸ்ரமத்தில் தியானம் செய்வது ஒரு அற்புத அனுபவம். அந்த அனுபவதிற்குப் பிறகு, “இன்னும் எத்தனை நாட்கள் இப்படி தேடி நிதம் சோறு தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, வாடி மிக உழன்று கொண்டிருக்கப் போகிறோமோ?” என்று தோன்றியது.

ரமணாஸ்ரமத்திலிருந்து மலையின் காட்சி 
வீட்டிற்கு வந்ததும் விருந்தினர்களுக்காக கல்கண்டுபாத், வடை என்று  
சம்பிரமமாக சமையல், தீபாவளி பட்சண பிரிபரேஷன், புடவைக்கு மேட்சாக தைக்க கொடுத்திருந்த ப்லௌஸ் சரியாக தைக்கப்பட்டிருப்பதில் சந்தோஷம், இன்னும் மேட்சிங் ஆக உள் பாவாடை வாங்க வேண்டும்.. அடுத்த ஜென்மத்தில் ஞானம் வரலாம்.