மேகங்கள் விலகும் - 2
வேலைகளை முடித்துக்
கொண்டு படுக்க வந்த பொழுது, கணக்கு நோட்டை பிரித்து வைத்துக் கொண்டு அவள் கணவன் படுக்கையில்
உட்கார்ந்திருந்தான். அவனுக்கு தினமும் கணக்கு எழுத வேண்டும்.
“கார்தால ஐநூறு
ரூபாய் கொடுத்துட்டு போனேன், என்ன செலவு? எவ்வளவு மீதி?”
கொஞ்சம் யோசித்த
ஸ்வர்னா, “இருபது ரூபாய்க்கு பூ வாங்கினேன்..” என்றதும் மணிகண்டனுக்கு எரிச்சல் வந்தது.
“நான் ஐநூறு ரூபாய்க்கு
கணக்கு கேட்டால், நீ இருபது ரூபாய்க்கு கணக்கு சொல்ற..”
“ரோஹித்துக்கு
ஒரு நூறு ரூபாய் கொடுத்தேன்”
“நூறு ரூபாயா?
டேய் ரோஹித், எதுக்குடா நூறு ரூபாய்?”
“நூறு ரூபாய் இல்லப்பா,
ஐம்பதுதான் கேட்டேன், அம்மாதான், நூறு ரூபாய் கொடுத்தா, ஸ்கூல் கார்டன் போட கேட்டாங்க..”
அவன் மீதி ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான்.
“ம்.. அவன் ஐம்பது
ரூபா கேட்டா, நீ நூறு ரூபா கொடு, பாக்கியும் வாங்காத, உருபட்டுடுவான்.."
அவள் ஒவ்வொன்றாக
நினைவுபடுத்தி சொல்லி விட்டாலும், ஒரு அருபதைந்து ரூபாய்க்கு கணக்கு வரவே இல்லை.
கணக்கு தவறாக
போட்டுவிட்டு ஆசிரியரின் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவனை காப்பாற்றும்
வகுப்பு முடிந்து விட்டதை அறிவிக்கும் மணியைப் போல அவனுடைய செல் அழைத்து அவளை காப்பாற்றியது.
அவன் பேசி முடித்து
விட்டு வரும் பொழுது அவள் உறங்கியிருந்தாள்.
எரிச்சலோடு கணக்கு நோட்டை மூடி வைத்தவன்,
விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டான்.
மறு நாள் காலை
சிற்றுண்டி அருந்தும் பொழுது மீண்டும் அதே பேச்சை தொடங்கினான்.
“நீ இன்னும், அந்த
அறுபதைந்து ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லை”
“கேவலம் ஒரு அறுபத்தஞ்சு
ரூபா.. நான் செலவழிக்கக் கூடாதா?”
“அறுபத்தஞ்ஜாயிரம்
கூட செலவழிக்கலாம். ஆனா, எதுக்கு செலவழிக்கிறோம்னு தெரியணும். கேவலம் அறுபதஞ்சு ரூபாயா..?
சம்பாதிச்சால்தான் அதன் அருமை தெரியும்.. வீட்டில் உக்கார்ந்து சாப்பிடுகிரவங்களுக்கு
என்ன தெரியும்?” என்று தொடங்கியவன், “நீ ஒரு தண்ட சோறு” என்னும் ரேஞ்சுக்கு பேசி முடித்து,
அலுவலகதிற்கு கிளம்பிச் சென்றுவிட, இவளுக்கு மனது விண்டு போனது.
“சே.. என்ன வாழ்க்கை
இது? நானும் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்., ஒரு அறுபத்தஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு
பேச்சா? எனக்கு மரியாதை இவ்வளவுதானா?”
கோபத்தில் சாப்பிடும்
நேரம் வந்த பொழுது, மாமியருக்கு மாத்திரம் தட்டு வைத்தாள்.
“அவன் ஏதோ கோவத்தில்
கத்தி விட்டு போனால், நீ ஏன் சாப்பாட்டில் கோபித்து கொள்கிறாய்? ஆண் பிள்ளைகள் அப்படித்தான்,
சாப்பிட வா..”
“கோவம் வந்தால்
என்ன வேண்டுமானாலும் பேசலாமா?”
“விடேன், இதையெல்லாம்,
காதுல போட்டுக்கொள்ள கூடாது, உன் ஸ்னேகிதாள பார்க்கப் போணும்னு சொன்னியே, சாபிட்டு
விட்டு கிளம்பினா சரியா இருக்கும்.”
சாப்பிட்டு விட்டு,
முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ரேவதி வீட்டிற்கு கிளம்பினாள்.
அங்கு அவள்தான்
முதல் வரவு.
“என்னப்பா..? எப்போதும்
நீதான் கடைசியா வருவ.. இப்போ, முதலில் வந்துட்ட..? ஞாபகம் இருக்கா..? ஒரு தடவ ஏதோ ஒரு
அஜித் படத்திற்கு அட்வான்ஸ் புக் பண்ணிய கூப்பனை நீ வைத்துக் கொண்டு, லேட்டாக வந்தாய்..
நாங்களெல்லாம் உனக்காக தியேட்டர் வாசலில் காத்துக் கொண்டிருந்தோம்.. ப்ரபா பயங்கர டென்ஷனாயிட்டா..”
ரேவதி பழைய கதையை அவிழ்த்து விட ஸ்வர்னா சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஏன் இப்பொ சொல்லி
டாமேஜ் பண்ற?” என்றாள். பிறகு, “என் ஹஸ்பெண்ட் ரொம்ப பன்சுவல், ஆறு மணிக்கு ஒரு நிகழ்சின்னா
ஐந்தே முக்காலுக்கு அங்க இருப்பார். ஸோ, நானும் மாறிட்டேன்.”
“வேற என்னவெல்லாம்
மாறியிருக்கு? நல்லா வெய்ட் போட்டுட்ட..”
“நீ மட்டும் என்னவாம்?”
அவர்கள் இருவரும்
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பெரும்பான்மையோர் குண்டாகி,
லேசாக நரைக்கத் துவங்கி, கண்களின் கீழ் கருவளையம் விழுந்து, சிலர் பளிச்சென்றாகி..
அந்த இடமே மாறிப்போனது.
எல்லோரும் தங்கள்
வயதை மறந்து பேசி சிரித்து, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, உற்சாகம் கொப்பளித்தது.
கூட்டத்தின் நம்ப
முடியாத அதிசயம் காயத்ரி. படிக்கும் பொழுது மீடியாக்கர் ஸ்டூடண்ட். முதல் வருடம் அரியர்ஸ்
கூட இருந்தது. ஆனால் இரண்டாம் வருடத்திலிருந்து ஒரு வேகம் எடுத்து, முதல் வகுப்பில்
தேறி, வங்கித் தேர்வு எழுதி, அதிலும் தேர்ச்சி பெற்று வங்கியில் சேர்ந்ததுதான் இவர்களுக்குத்
தெரியும். அவள் அதற்குப் பிறகு எம்.பி.ஏ. முடித்து, தனியார் நிறுவனத்திற்கு மாறி, இன்று
அதில் முதன்மை அதிகாரியாம். விடாமல் கைபேசி அழைத்துக்கொண்டே இருந்தது. நம்பத்தான் முடியவில்லை.
கல்லூரி காலத்தில்
பல ரோமியோக்களை தன் பின்னால் சுற்ற விட்ட மாலா இப்போது அடையாளமே தெரியாமல் பருமனாகி,
முடியெல்லாம் கொட்டி, நிறமிழந்து.. ஏதொ மெடிசன் அலர்ஜியால் இப்படி ஆகி விட்டதாம்.
ஆனால் கட்டுப்பெட்டியாக,
இறுக பின்னிய தலை, பாவாடை, தாவணி என்று இருந்த பிரேமா பாண்ட், குர்தா, குட்டையாக வெட்டப்
பட்ட தலை முடி, பொட்டில்லாத நெற்றி என்று ஆச்சர்யப்படுத்தினாள். பார்க்கும் எல்லோரையும்
அணைத்துக் கொண்டாள்.
அடையாளமே தெரியவில்லை.
நீயே இவ்ளோ மாடர்ன்னா? உன் குழந்தை..? என்று நான் ஆரம்பிக்க, ரேவதி கண் ஜாடை காட்டினாள்.
உடனே பேச்சை மாற்றினேன்.
எல்லோருக்கும்
ஜூஸ் கொடுக்க உள்ளே சென்றவள் என்னை அழைத்து,”ப்ரேமவுக்கு குழந்தைகள் இல்லை. அடாப்ட்
பண்ணிக்கத்தான் இங்கு வந்திருக்கிறாள்" என்றாள்.
"அது சரி ஏன் லக்ஷ்மி
வரவில்லை?"
"அது ஒரு பெரிய
ட்ராஜிடி.."
"என்னாச்சு?" என்றாள்
காயத்ரி செல் போனை துண்டித்தபடி.
"ரெண்டு வருஷம்
முன்னால ஒரு ரோடு ஆக்ஸிடெண்டில் அவள் கணவருக்கு அடி பட்டு, படுத்த படுக்கையா இருக்கார்,
அதனால லக்ஷ்மியால எங்கேயும் நகர முடியல.."
ஹாலில் சட்டென்று
ஒரு அமைதி கவிந்தது.
அதை மாற்ற “ஏய்!
சுதா நீ நன்னா பாடுவியே.. ஒரு பாட்டு பாடு”
இப்பொல்லாம் பாட்டு
கேட்பதோட சரி, என்று கொஞ்சம் அலட்டி விட்டு பாடத்தொடங்கிய சுதா வார்தைகள் மறந்து போய்
பாதியில் நிறுத்த, அதைத் தொடர்ந்து வேறு பாடலைப் பாடிய வித்யா அதையே அந்தாக்ஷரியாக
மாற்றினாள். எல்லோரும் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, “நீங்க கண்டினியூ பண்ணுங்க, நான்
கிளம்பரேன்..” என்றபடி உமா எழுந்து கொண்டாள்.
“இன்னும் ஹாஃப்
அன் அவர்தானே..? எல்லோரும் கிளம்ப வேண்டியதுதான்.”
“இல்ல, என் பையன்
ஸ்கூலிலிருந்து வந்துடுவான்”
அரை மணி நேரம்
தனியா இருக்க மாட்டானா?
யாரோ கேட்க, அரை
நொடி தாமதித்த வித்யா, “அவன் ஸ்பெஷல் சைல்ட், அதனால் தனியா விட முடியாது” என்று கூறி
விட்டு எல்லாரையும் மீட் பண்ணியதில் ரொம்ப சந்தோஷம், அடிக்கடி பார்க்கலாம்” என்று கிளம்பியதும்,
ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர்.
கூட்டத்தில் அதிகம்
பேசாமல் உட்கார்ந்திருந்த நித்யா, “ரொம்ப தாங்க்ஸ் ரேவதி, இந்த ரெண்டு மணி நேரம் நான்
ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அடுத்த கெட் டு கெதெர் நம்ம வீட்ல வெச்சுக்கலாம்”.
“ஷுயர்”
“ஆறு மாசம் முன்னாடி
இருந்ததற்கு இப்போ, பெட்டரா இருக்கா இல்லையா?”
“ம்..ம்.., புத்ர
சோகத்திலிருந்து மீள்வது அவ்வளவு ஈசியா?”
வீடு திரும்பும்
பொழுது ஸ்வர்னாவின் மனசுக்குள் இந்த சந்திப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. என்ன
என்ன துன்பங்களை ஒவ்வொருவரும் சந்திக்கிறார்கள்? குழந்தை பிறக்காத சோகம், பிறந்த குழந்தை
நார்மலாக இல்லாத சோகம், அழகான குழந்தை இறக்கும் சோகம், வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப் போடும் சோகம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது
நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்?
வீட்டிர்க்குள்
நுழையும் பொழுது, “நாலு மணிக்கு வரேன்னு சொல்லிட்டு போன, இப்போ மணி என்ன? பால் கூட
குடிக்காமல் ரோஹித் டென்னிஸுக்கு போய் விட்டான், நான் இன்னும் காபி குடிக்கல..”மாமியார்
கடுகடுத்தார்.
“பால், டிகாஷன்
எல்லாம் இருக்கே..?”
காபி கலந்து குடிங்கோனு
சொல்லிட்டு போனாயா? நீ வந்து கலந்து தருவாய்னு இருக்கேன்..உனக்கு அங்க கிடைச்சிருக்கும்.” நிஷ்டூரமாக பேசிய மாமியார் காபி குடித்தவுடன், "ராத்திரி நீங்கள் வெளியே போய்
விடுவீர்கள், எனக்கு என்ன?" என்றார்.
“தோசை மாவு இருக்கு”
“வேண்டாம், நேத்திக்கும்,
தோசை, இன்னிக்கும் தோசையா? சாதம் வைத்து விடு, மோருஞ்சாதம் சாப்பிட்டுக் கொள்கிறேன்”
கொஞ்சம் தேங்காய்
தொகையலும் அரைத்து வைத்து விடலாம் என்று ஸ்வர்னா நினைத்துக் கொண்டாள். இந்த தெளிவு
சிறிது நாட்கள் இருக்கும்.