கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, October 19, 2014

Be Positive!

Be Positive

முன்பெல்லாம்,அதாவது ஏழெட்டு  வருடங்களுக்கு முன்பு வரை யாராவது, "அந்த கோவிலில் என்ன ஒரு வைப்ரேஷன்!" என்றால் எனக்கு அது புரியவே புரியாது. பாலகுமாரன் வேறு நல்ல அதிர்வுகள் என்று எழுதுவார். நல்ல அதிர்வா? அது எப்படி இருக்கும்? உடல் ஆடுமா? என்றெல்லாம் யோசிப்பேன். 

அந்த கட்டத்தில்தான் சுதர்சன் க்ரியா கற்றுக் கொண்டேன். அடடா என்ன அதிர்வு!! கற்றுக் கொண்டதோடு நிற்காமல் தினசரி செய்வதை பழக்கமாக்கிக் கொண்டேன்! நல்ல அதிர்வுகளை உணர ஆரம்பித்தேன். இந்த நல்ல அதிர்வுகளை கோவில்களில் மட்டுமல்லாமல் நல்ல மனிதர்களிடமும், நல்ல வீடுகளிலும், ஏன்? பூக்கள், பழங்கள், காய்கறிகளிலும் உணர முடிந்தது. 

இவை எல்லாம் உணரத் தொடங்கிய பொழுதுதான் .எதற்காக கோவில்களில் சுவாமிக்கு(சுவாமி சிலைகளுக்கு) பால்,தயிர்,தேன், பஞ்சாமிர்தம்(பழங்கள்)  இவைகளால் அபிஷேகம் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. பசும் பால், தயிர் இவைகளில் அபரிமிதமான நல்ல அதிர்வு உண்டு. அதைப் போலவே இயற்கை பொருள்களான தேன், சந்தனம் இவைகளிலும் நல்ல அதிர்வுகள் உண்டு. இவைகளைக் கொண்டு சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது அந்த நல்ல அதிர்வுகளை அந்த விக்ரகங்களும் பெற்று அதிக சக்தி உடையதாக ஆகின்றன. 

இதைப் போலவே ஆன்மீகத்தில் முன்னேற விரும்புகிறவர்கள் வெங்காயம், பூண்டு போன்றவைகளையும், முதல் நாள் சமைத்த பண்டங்களையும் தவிர்ப்பது நல்லது என்று கூறுவதற்கும் அர்த்தம் இருக்கிறது. மேற் சொன்ன காய்கறிகளில் நல்ல அதிர்வுகள் இருக்காது. அதே சமயம், திவசத்தன்று சமைக்க வேண்டிய காய்கறி களான அவரை, புடலை,பாகல் போன்றவற்றில் மிக நல்ல அதிர்வுகள் உண்டு. நாம் உண்ணும் உணவு வெறும் உடல் பலத்தை மட்டும் பெருக்காமல் ஆன்மீக பலத்தையும் பெருக்க வேண்டும் என்பதனால்தான் உணவில்  இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள் நம் முன்னோர்.

நாதஸ்வரம், வீணை போன்ற கருவிகளின் ஓசையும் நல்ல அதிர்வுகளை உண்டாக்குவதால்தான் நாதஸ்வரத்தை மங்கள வாத்தியம் என்பதோடு சுப நிகழ்ச்சிகளின் பொழுது அதை இசைக்கிறோம். வீணைக்கும் தெய்வீகத்திற்கும் உள்ள சம்பந்தத்தை பற்றி தனி கட்டுரை எழுத வேண்டும். மணி ஓசைக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு என்பதால்தான் பூஜை சமயத்தில் மணி ஓசை ஒலிக்கச் செய்கிறோம். தினசரி மணி அடித்தபடி வீட்டை சுற்றி வருவது வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும். 

முடிந்த வரை பாசிடிவ் எனெர்ஜியை பெருக்கிக் கொள்வோமே!