கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, April 30, 2019

மசாலா சாட் - 8

மசாலா சாட் - 8 

Image result for Ki.Va.Ja.



தமிழறிஞர் கி.வா.ஜகன்னாதன் அவர்கள், சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்பது தெரிந்த விஷயம்தான். நான் அதிகம் கேள்விப் படாத அவருடைய ஸ்லேடைகள் சில:

 மாதுளம் பழமான விளாம்பழம்:


ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்த பொழுது நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா? நான் தந்தது விளாம்பழம் அல்லவோ?” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
“மாது, உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்” என்றாராம் கி.வா.ஜ.

கடை சிப்பந்தியும், கடைசிப் பந்தியும்:

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. அதில் கி.வா.ஜ.வும் கலந்து கொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்து கொள்வான்” என்றார் முதலாளி. உடனே, கி.வா.ஜ.”ஓஹோ! கடை சிப்பந்திக்கு கடைசிப் பந்தியா?” என்றாராம்.

பிரகாசிக்கும் கம்மல்: 

இப்படி சிலேடையில் கலக்கும் அவரையே ஒரு பெண்மணி அசத்தினாராம். ஒரு விழாவில் கலந்து கொண்ட அவரை உரையாற்ற அழைத்த பொழுது, "இப்பொழுது வேண்டாம் குரல் கம்மியியிருக்கிறது" என்று அவர் கூறியதும், அந்தப் பெண், “பரவாயில்லை, கம்மல் ப்ரகாசிக்கும்” என்று கூறி அசத்தினாராம்.

வாட்சாப்பில் வந்ததில் ரசித்தது:

மெட்ராஸ்காரனை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்படி இருக்கும்? என்று ஒரு கற்பனை: 

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
பொருள்: கஸ்மாலம், ஒயுங்கா படி, பட்சது பட்சாமாறி நட்ந்துக்கடா, பேமானி!

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
பொருள்: டேய், வூட்டுக்கு வந்த விருந்தாளி கைல நல்லா மூஞ்சி குட்து பேசுடா, இல்லைன்னா பய அனிச்சம் பூவ மோந்தா மாரி வாடிவுடுவாண்டா சவாரி, அட, எங் கேப்மாரி.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று
பொருள்: சோமாறி, கொய்யாப் பயத்த கைல வச்சிக்கினு எவனாவது கொய்யாக்காவ துண்ணுவானாடா? நல்ல வார்த்தையா நாலு பேசுவியா, அத வுட்டுப்புட்டு கெட்டகெட்ட வார்ததையா பேசிக்கினு கீற? காது கொயிய்ன்னுதுடா, கொய்யால!

புறம்கூறி பொய்த்த்யிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
பொருள்: பன்னாட, ஒர்த்தனப் பத்திப் பின்னால போட்டுக் குட்து பொயகறதெல்லாம் ஒரு பொயப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவலாம்டா, சனியம் புட்ச்சவனே!

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
பொருள்: எவன் வேணா சும்மா உதார் உடலாம் மச்சி,..த்தா சொன்னா மாரி செஞ்சி பாரு அப்ப தெரியும் மேட்டரு, நெஞ்சில கீற ம்ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க.

எப்படியோ பொருளை சரியாக உணர்ந்து கொண்டால் சரி.