கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 3
இதற்கு முன்னால் விவரித்த நிகழ்வுகள் ஆகஸ்ட் மத்தியில் முடிந்தன. செப்டம்பரில் கிளம்பலாமா? என்று நினைத்தேன். ஆனால் கனடாவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் செப்டம்பரில் தான் செல்வார்கள் என்பதால் டிக்கெட்டுகள் விலை வானத்தை தொட்டன. "அக்டோபரில் பார்" என்றாள் மகள். அவள் பார்க்கச் சொன்னது பயணம் செய்ய ஏற்ற நல்ல நாள்.
அஷ்டமி,நவமி, பரணி, கார்த்திகை, ஜென்ம நட்சத்திரம், சந்திராஷ்டமம், சூலம் இவை அத்தனையும் இல்லாத நாள் கிடைத்தால் அன்று யோகம் சரியாக இல்லை. நான் பஞ்சாங்கத்தை திருப்பி திருப்பி பார்க்க, என் மகன், “அம்மா ஃபிளைட்ஸ் கம்மி, என்னிக்கு டிக்கெட் கிடைக்கிறதோ அன்னிக்கு கிளம்ப வேண்டியதுதான், நீ நாளெல்லாம் பார்க்க முடியாது” என்றான். உண்மைதான்.
இதற்கிடையில் என் மகள் டெலிபோனில் இன்னொரு கண்ணாடி வாங்கி கொள், பல் டாக்டரை பார்க்கவேண்டுமென்றால் பார்த்து விடு என்று கூற, ஒரு டென்டிஸ்ட்டை சென்று பார்த்தேன். அவர் கடைசி பல்லை பிடுங்க வேண்டும் என்றார். அவ்வளவுதானே? பிடுங்கி விடலாம் என்று சரி என்று சொல்லி விட்டேன். அந்தப் பல்லானால் என்னை பிரிய முரண்டு பிடித்ததில் சிறிய அறுவை சிகிச்சை, ஊருக்குச் செல்வதற்கு நாள் நெருங்கி கொண்டிருக்கிறது, ஒரு பக்க கன்னம் வீக்கம் வடியவேயில்லை. டாக்டரானால், "கவலைப்படாதீர்கள்,தையல் பிரித்தால் சரியாகி விடும் வாயைத் திறங்கள்" என்று என் திறந்த வாயினுள் எட்டிப் பார்த்து விட்டு, "ஓ! டிசால்விங் ஸ்டிச்சஸா?" என்று என்னையே கேட்கிறார். எப்படியோ நல்லபடியாக வீக்கம் வடிந்தது. ஒரு தனி கதை.
விமானங்கள் குறைவு. சில விமானங்களில் பயணித்தால் இரண்டு மூன்று நாடுகள் வழியாக செல்ல வேண்டும். அதில் ஒரு நாட்டில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கனடாவை கண்ணால் காண நான்கு நாட்கள் ஆகி விடும். அபுதாபி வழியாக செல்லும் எதிஹாட்டில்(Etihad) பயணித்தால் அபுதாபியில் ஆறு மணி நேரங்கள் ட்ரான்சிட்டில் காத்திருக்க வேண்டும். அங்கு கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும், ரிசல்ட் இரண்டு மணி நேரத்தில் வந்து விடும். அங்கிருந்து டொரோண்டோவை அன்று மாலையே அடைந்து விடலாம். ஆனால் அந்த விமானம் பெங்களூரிலிருந்து வாரத்திற்கு இரண்டுதான். எப்படி நாள் பார்ப்பது? 29ம் தேதி அதிகாலை 2:30க்கு பெங்களூரிலிருந்து விமானம். நான் 28 இரவு எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் போதும் என்று நினைத்தேன். இதிஹாட் அலுவலகத்திலிருந்து காலையில் அழைத்து இரவு ஒன்பதரை மணிக்கு கவுண்டர் திறந்து விடுவோம், அப்போதே வந்து விடுங்கள் என்றதால் வீட்டிலிருந்து ஏழு மணிக்கு முன்பாகவே கிளம்பி விட்டேன்.
விமான நிலையத்தில் அபுதாபி செல்லும் பயணிகள் செக் இன் செய்த பிறகு டொரண்டோ பயணிகள் செக் இன் செய்யலாம் அமருங்கள் என்றார்கள். சற்று பொறுத்து டொரோண்டோ பணிகள் செக் இன் செய்யலாம் என்ற அறிவிப்பு வந்ததும் முதல் ஆளாக செக் இந்த கவுண்டரை நோக்கி, “ஆஹா! நாம்தான் முதல் ஆளா. என்று சந்தோஷமாக சென்றேன். நான் அப்படியெல்லாம் சந்தோஷப்பட்டு விட முடியுமா? அங்கும் ஒரு சிறிய பிரச்சனை.
அங்கிருந்த பணியாளர், “ரிடர்ன் டிக்கெட் இல்லையா?” என்றார்.
“இல்லை நான் சூப்பர் மாம் விசாவில் செல்வதால் ரிடர்ன் டிக்கெட் தேவையில்லை” என்றதை ஒப்புக் கொள்ளாமல், “கனடாவில் யார் இருக்கிறார்கள்? மகளா? அவரோடு பேச முடியுமா?” என்று கேட்க, மகளை தொடர்பு கொண்டு ஃபோனை அவரிடம் கொடுத்தேன், மகளோடு நீண்ட நேரம் விவாதம் செய்த பிறகு என்னை செக் இன் செய்ய அனுமதித்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் என்னுடன் பயணித்த இரு இளம் பெண்களும் கூட முதல் முறையாக கனடாவிற்கு பயணித்தார்கள். 2019 இல் திருமணமான இருவருக்கும் இப்போதுதான் விசா கிடைத்து பயணிக்கிறார்கள், அவர்களிடமும் ரிடர்ன் டிக்கெட் கிடையாது, ஆனால் அவர்களிடம் எந்த பிரச்னையும் பண்ணாமல் செக் இன் செய்ய அனுமதித்து விட்டார்கள்!!!
![]() |
அபுதாபி விமான நிலையத்தில் ஒட்டகத்தை கட்டிக்கொண்டு |
அபுதாபியில் விமான நிலையத்தில் உணவகங்கள் ஏதும் திறந்திருக்காது என்று கூறப்பட்டதற்கு மாறாக திறந்திருந்தன. படிப்பதற்காக கனடா வரும் என் பெரிய அக்காவின் பேத்தி அங்கு என்னோடு இணைந்து கொண்டாள். குழந்தையாக இருந்த பொழுது ‘ர’ சொல்ல வராமல் ‘லமணி பெலிப்பா", ‘கிலி’ மாமா" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த குழந்தை படிப்பிற்காக வெளிநாடு செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டாளா? என்று வியப்பாக இருந்தது.
பயணத்தில் ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம், ஆங்கில பிரண்ட்ஸ் சீரியலின் சில பகுதிகள் பார்த்தேன். கொஞ்சம் தூங்கினேன். குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே விமானம் தரை இறங்கியது. இமிக்ரேஷனை முடித்து வெளியே வர மூன்று மணி நேரங்களாகி விட்டது. கஸ்டம்ஸ் என்ற கஷ்டம் இல்லை. இரவு எட்டு மணிக்கு வீட்டை அடைந்தோம். வரும் வழி எனக்கு மஸ்கட்டை நினைவூட்டியது. மஸ்கட் ஏர்போர்ட்டிலிருந்து சிட்டிக்குள் நுழையும் வழியில் ஹாலிடே இன் ஹோட்டல் இருக்கும், இங்கும் அது போலவே இருக்கிறது. |
அடுத்த நாள் ஹாலோவீன் தினம், என் மகள் வசிக்கும் அப்பார்ட்மென்டில் குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் வழங்கினார்கள். வெளியே கூட்டம் கூட்டமாக கருப்பு ஆடை அணிந்து கொண்டு கையில் ஒரு பிளாஸ்டிக் பை அல்லது பக்கெட் எடுத்துக் கொண்டு விபரீத வேடம் புனைந்து வீடு வீடாக சென்று கொண்டிருந்த சிறுவர்கள்..எங்கள் சிறு வயதில் நவராத்திரியில் கொலுவிற்கு அழைக்கும் சாக்கில் சுண்டல் கலக்ஷனுக்குச் சென்றதை நினைவூட்டினார்கள். ஆக நானும் கனடா வந்து விட்டேன்.
†******†***********************************