என்ன என்ன வார்த்தைகளோ...?
என்னுடைய சென்ற பதிவில் காத்திருப்பதைப் பற்றி எழுதும் பொழுது சதாசிவ ப்ருமேந்திரரைப்பற்றி எழுதியிருந்தேன். "பசிக்கிறது சாப்பாடு போடு" என்று கேட்ட அவரிடம் அவருடைய தாய், "பத்துநிமிடம் பொறுத்துக் கொள்" என்று கூறிய வார்த்தை ஏற்படுத்திய தாக்கத்தையும் அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும் சிந்தித்த பொழுது, வேறு சில மகான்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு வார்த்தை, அல்லது ஒரு வாக்கியம் ஏற்படுத்திய மாற்றங்கள் நினைவுக்கு வந்தன.சதாசிவ ப்ருமேந்திரரிடமே தொடங்கலாம். மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான புலவராக சதாசிவம் இருந்த பொழுது, தமிழ் நாட்டிலிருந்து வரும் புலவர்களுக்கு ஒரு தலைவலியாக விளங்குகிறார். மைசூர் மகாராஜாவை சந்தித்து, அவரிடம் தங்கள் புலமையை காட்டி, பரிசுகள் பெறலாம் என்று நோக்கத்தோடு வரும் புலவர்களை மெச்சி அரசன் பரிசு கொடுக்க முன் வந்தாலும், அங்கிருக்கும் சதாசிவம் அவர்கள் இயற்றிய செய்யுளில் குற்றம் கண்டு பிடித்து, கேள்விகள் கேட்டு, பரிசுகள் பெறவொட்டாமல் செய்து விடுகிறார். இதனால் எரிச்சலடைந்த புலவர்கள், அப்போதைய காமகோடி பீடாதிபதியிடம் சென்று, "இந்த சதாசிவத்தால் எங்கள் பிழைப்பில் மண் விழுகிறது. அரசன் பரிசு கொடுக்க தயாராக இருந்தாலும், இவன் குறுக்கே பேசி எங்களுக்கு அது கிடைக்காமல் செய்து விடுகிறான்" என்று குற்றம் சொல்கிறார்கள். பீடாதிபதி சதாசிவம் அவர்களை அழைத்து," உன்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாதா?" என்று கேட்கிறார். குருவின் அந்த கேள்வியை அவருடைய கட்டளையாக பாவித்து அன்றிலிருந்து மௌன விரதத்தை மேற்கொள்கிறார். வாயால் மட்டுமல்லாமல் மனதாலும் பேசாமல், மந்திரத்தை மட்டும் ஜபித்தபடி இருக்க, அது அவருக்கு சித்தியாகிறது.
திருச்சுழியில் பிறந்து, மதுரையில் வாழ்ந்த வெங்கடரமணன் என்னும் அந்த சிறுவனுக்கு பதிமூன்று வயதாகும் பொழுது அவனுடைய பக்கத்து வீட்டுக்காரர் இறந்து விடுகிறார். மரணம் என்றால் என்ன? என்னும் கேள்வி அவனுக்குள் பிறக்கிறது. அப்பொழுது அவன் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர், "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்று கூறியதை கேட்ட அந்த நொடியில், தான் திருவண்ணாமலை செல்ல தீர்மானித்து விடுகிறான். திருவண்ணாமலை எங்கு இருக்கிறது? அதற்கு எப்படி செல்ல வேண்டும்? என்பது எதுவும் தெரியாத அந்த குழந்தை விழுப்புரம் வரை ரயிலில் வந்து, அங்கிருந்து கால்நடையாகவே திருவண்ணாமலையை அடைந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து, ஓடிப்போய், அந்த லிங்கத்தை,"அப்பா,வந்துட்டேன்ப்பா" என்று கட்டிக் கொண்டதாம். அந்த சிறுவனைத்தான் பகவான் என்றும், ரமண மகரிஷி என்றும் உலகம் கொண்டாடுகிறது. அவரை செலுத்தியது உறவினர் கூறிய "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்னும் வாசகம்.
அதே திருவண்ணாமலையில் இசை வேளாளர் மரபில் பிறந்த அவன் ஆணழகன், இசையிலும், தாளத்திலும் விற்பன்னன். பெண்கள் மீது அவனுக்கும், அவன் மீது பெண்களுக்கும் மோகம் அதிகம். இளமை, செல்வம் இரண்டும் இருக்கும் வரை உல்லாசத்திற்கு குறைவில்லை. இரண்டும் குறைந்து, நோயும் வந்தவுடன் அவனை விரும்பிய அதே பெண்கள் அவனை புறக்கணிக்கிறார்கள். இதனால் மனம் வெதும்பும் அவனிடம் அவன் சகோதரி,"பெண் சுகத்திற்குத்தானே ஏங்குகிறாய்? நானும் ஒரு பெண்தான், என்னிடம் தணித்துக் கொள் உன் வேட்கையை" என்று கூற, அதிர்ந்து போகும் அவன், தன்னை வெறுத்து, உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்து அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் வெள்ளாள கோபுரத்தின் மேலேறி, அதிலிருந்து குதித்து உயிரை விட துணிந்த பொழுது, முருகப் பெருமானால் காப்பாற்றப் பட்டு அருணகிரிநாதராக மலர்ந்தது நாம் அறிந்ததுதானே.
கஞ்சக்கருமியாக இருந்த பட்டினத்தாரை மாற்றியது அவருடைய மகனாக வந்த சிவ பெருமான் ஓலை நறுக்கில் எழுதி அனுப்பிய, "காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்னும் வாசகம்.
குயவரான அவர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டிலே அழகான மனைவி இருந்தாலும் மற்ற பெண்களை நாடுவதிலும் அதிக விருப்பம் கொண்டவர். ஒரு நாள் வேறொரு பெண்ணோடு இருந்து விட்டு வீட்டிற்க்கு வரும் அவரிடம் அவர் மனைவி கோபமாக,"எம்மைத் தீண்டாதே திருநீலகண்டம்" என்று சிவன் மீது ஆணையிட்டு கூறுகிறாள். அவள் என்னைத் தீண்டாதே என்று கூறியிருந்தால் தன்னை மட்டும் இனிமேல் தீண்டக்கூடாது என்று எடுத்துக் கொள்ளலாம், ஆனால், எம்மை என்று பன்மையில் கூறியதால் பெண்கள் யாரையுமே தீண்டக் கூடாது என்று அவள் கூறியிருப்பதாக கொண்டு அன்று முதல் பிரும்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு திருநீலகண்ட நாயனாராக உருவெடுக்கிறார்.
இதே போல வேறொருவரையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது அவர் மனைவி கூறிய வார்த்தைதான். மனைவி மீது அதீத காதல் அவருக்கு. ஒரு நாள் கூட, அல்லது ஒரு இரவு கூட மனைவியை பிரிந்து இருக்க முடியாது. ஒரு முறை மனைவி அவருடைய பெற்றோர்களில் ஒருவருடைய திதிக்காக பிறந்த வீடு சென்றிருக்கிறார். அன்று இரவு இவர் மனைவியைத் தேடிக்கொண்டு செல்கிறார். வழியில் ஒரு ஆற்றினைத் தாண்ட வேண்டும், நதியில் ஏதோ மிதக்கிறது,அதை மரக்கட்டை என்று நினைத்து நதியில் மிதக்கும் பிணத்தை பற்றிக்கொண்டு கடக்கிறார். அர்த்த ராத்திரியில் கதவைத்தட்டி மற்றவர்களை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து, ஓட்டிலிருந்து தொங்கும் பாம்பினை மரத்தின் விழுது என்று கருதி, அதை பற்றிக் கொண்டு மேல் ஏறி, ஓட்டினை பிரித்து உள்ளே குதிக்கிறார். அவரைக் கண்ட அவர் மனைவிக்கு மிகுந்த கோபம் வந்து விடுகிறது. "சீ! ஒரு நாள் கூடவா உங்களால் நான் இல்லாமல் இருக்க முடியாது? அழியக்கூடிய இந்த உடலின் மேல் அப்படி என்ன விருப்பம்? இந்த பற்றினை பரம்பொருளான ராமன் மீது வைக்கக்கூடாதா?" என்ற அவளின் கேள்விதான் அவருடைய அகக்கண்களை திறக்கிறது. ராம நாமத்தை விடாமல் ஜபித்து, ராமாயணத்தை ஹிந்தியில் ராம சரித மானஸ் என்னும் காப்பியமாக நமக்கு கொடுத்த துளசிதாஸரின் வாழ்க்கையை மாற்றியது மனைவியின் வசனங்கள்தான்.
மகான்களின் வாழ்க்கையில்தான் இம்மாதிரி நடக்குமா? இல்லை சாதாரண மனிதர்கள் வாழ்க்கையிலும் இம்மாதிரி சம்பவங்கள் நடந்து அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடலாம். அந்த இளம் வக்கீலுக்கு அதுதான் நிகழ்ந்தது. நாடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக தலைகாட்டிக் கொண்டிருந்தார். ஒரு முறை நண்பர்களோடு காரில் வந்து கொண்டிருந்த பொழுது அவர் அப்போதைய பத்திரிகைகளை கேலி செய்து ஏதோ கூறியிருக்கிறார். உடனே அவர் நண்பர் ஒருவர்,"எல்லோரையும் கிண்டல் செய்கிறாய். கேலி செய்வது எளிது. இந்த அம்சங்கள் இல்லாமல் ஒரு பத்திரிகை ஆரம்பித்து, உன்னால் வெற்றிகரமாக நடத்த முடியுமா?" என்று கேட்டிட்டிருக்கிறார்.
"அப்படி நடத்தி காண்பித்தால் என்ன தருவாய்? "
"ஐம்பது ரூபாய் தருகிறேன்"
"நான் நடத்தி காண்பிக்கிறேன்" என்று நண்பரிடம் சவால் விட்டு ஐம்பது ரூபாய்க்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை ஐம்பதாவது ஆண்டான பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்திரிகை எது என்று யூகித்திருப்பீர்களே.. ஆமாம், துக்ளக் தான் அந்த பத்திரிகை.