கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, June 24, 2025

உடாய் ஷான் புட்தியிஸ்ட் கார்டன் (Wutai Shan Buddhist Garden) - Part 2

உடாய் ஷான் புட்தியிஸ்ட் கார்டன் 

(Wutai Shan Buddhist Garden) - Part 2


North Platform, South Platform, East Platform என்று வெவ்வேறு இடங்களில் பெரிய பெரிய மஞ்சுஸ்ரீ போதிஸ்ட்துவர்களின் சிலைகள். ஒண்று கையில் சுவடி ஏந்தி, இன்னொன்று சிம்ம வாகனத்தில் கையில் வாள் ஏந்தி, மற்றொன்று கையில் வில்லும் அம்பும் ஏந்தி, நமக்கு சரஸ்வதி, துர்கையை நினைவு படுத்தினாலும் இவர்கள் அந்த போதிசத்துவர்கள் எல்லாம் ஆண்கள் என்கிறார்கள்.

முதல் படத்தில் ஏறிச் செல்ல படிகள் இன்னும் கட்டப்படவில்லை


அந்த சிலைகளின் பிரும்மாண்டம், அழகு, முகத்தில் தவழும் கருணை.. அப்பப்பா..! பார்க்க பார்க்க மனசுக்குள் ஒரு விவரிக்க இயலாத அமைதி பிறக்கிறது. எல்லாமே கொஞ்சம் படிகள் ஏறித்தான் தரிசிக்க வேண்டும்.

எல்லா போதிசத்துவர்கள் முன்னாலும் வெண்ணிற சலவைக் கற்கள். அதில் முழங்கால் பட அமர்ந்து பீரார்திக்க வேண்டும். செருப்பு அணிந்திருக்கலாம். கீழே இருக்கூம் படத்தில் பிரார்த்தனை செய்யும் பெண்.

 


நடுவில் மத்திய பிரார்த்தனை கூடம் என்பதில் மூன்று பிரும்மாண்ட புத்தர் சிலைகள் பொன் மேனியராக, கருணை தவழும் முகத்தோடு அமரந்த கோலத்தில் பார்க்க முடிகிறது. மூன்று புத்தர்களும் கையில் வெவ்வேறு பொருள்களை ஏந்தியிருக்கின்றனர். 





அதைத்தவிர அந்த கூடத்தை சுற்றி வரும்பொழுது நிறைய புத்தர் சிலைகள், எல்லாம் வெவ்வேறு முத்திரைகள். பக்தர்கள் தட்டு தட்டாக பழங்கள், பூங்கொத்துகளை காணிக்கையாக படைத்திருக்கிறார்கள். அவற்றை அங்கேயே விற்பனை செய்கிறார்கள். இது அமைந்திருப்பது முதல் தளத்தில். 

இங்கே புத்தரை தரிசனம் செய்யும் பொழுது மணி ஒசை கேட்டுக் கொண்டே இருந்தது. கீழே இறங்கியதும் அந்த மணி ஓசை எங்கிருந்து வருகிறது என்பது தெரிந்தது.







கீழே அமர்ந்திருக்கும் புத்தருக்கு மேலே மரத்தடியில் அமர்ந்திருக்கும் வயதான புத்தருக்கு பழங்கள் கொண்டு தரும் விலங்குகளும், தேவதைகளும்

கீழ் தளத்தில் உணவு விடுதி இருக்கிறது. அங்கே நாங்கள் மல்லிகை டீ குடித்ததை ஏற்கனவே எழுதி விட்டேன். இங்கேயும் மத்தியில் ஒரு பெரிய ஹாலில் புத்தரின் வாழ்க்கையை விளக்கும் விக்கிரகங்கள். அந்த ஹாலின் சுவர் முழுவதும் வரிசையாக மரசட்டத்தில் புத்தர் படங்கள். அவை பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, அது நிறைவேறியதும் வாங்கி மாட்டுவதாம். 


இதற்கும் கீழே கார் பார்க்கிங். அங்கு ஒரு ஓரத்தில் பெரிய மணி ஒன்று இருக்கிறது. நாம் ஏதாவது நடக்க வேண்டுமென்று நினைத்தால், அந்த  விருப்பம் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த மணியை அடித்தால் நாம் ஆசைப்பட்டது நடக்குமாம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றவரின் கோவிலில் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று இடைவிடாமல் மணி ஒலிக்கிறது. :))



விஸ்டம் லேக் தாண்டி தொலைவில் தெரிவது விஷ் ஃபுல்ஃபில்லிங் செவன் பகோடாஸ்


ஒரு போதிசத்துவரின் சன்னதியைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபங்களில் ஒன்று. இவை ஞான பாதையில் புத்தருக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் அவருடைய போதனைகளை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, அங்கேயே கையோடு கொண்டு போயிருந்த உணவை சாப்பிட்டோம். பின்னர் கீழே இறங்கி, விஸ்டம் லேக், லைஃப் லிபரேஷன் பாண்ட், விஷ் ஃபுல்ஃபில்லிங் செவென் பகோடாஸ் முதலியவற்றை பார்த்துவிட்டு, வீடு திரும்பினோம். 

நாங்கள் சென்ற அன்று நல்ல குளிர், கோடையில் ஒரு நாள் செல்ல வேண்டும்.