கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 4, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 6


பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 6

நவ கைலாச ஷேத்திரங்கள்:


அகத்திய முனிவரின் முதல் சீடரும், பிரம்மாவின் பேரனுமான ரோமச மகரிஷி, தான் முக்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்று தன் குருவை வினவுகிறார்.அதற்கு அகத்தியர், "ஒன்பது தாமரை புஷ்பங்களை தாமிரபரணியில் விடு, ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டு, சங்குமுக தீர்த்தத்தில் நீராடினால் நீ விரும்பியதை அடைவாய்" என்று கூறுகிறார். ரோமச மகரிஷியும் அவ்விதமே ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி நதியில் விடுகிறார். அவை ஒதுங்கிய இடங்களில் சிவாலயங்கள் அமைத்து சிவ பெருமானை வழிபட்டு, சிவ தரிசனமும், மோட்சமும் அடைகிறார். அந்த ஆலயங்களே நவ கைலாச ஆலயங்கள் என்று வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவகிரகங்களுக்கு உரிய ஷேத்திரங்களாகவும் கருதப்படுகின்றன.

பாபநாசம்      -  சூரியன் (1)
சேரன்மகாதேவி   -  சந்திரன் (2)
கோடகநல்லூர்   -  செவ்வாய் (3)
தென்திருப்பேரை  -  புதன் (7)
முறப்ப நாடு   -  குரு (5)
சேர்ந்த பூ மங்கலம்  - சுக்கிரன்(9)
ஸ்ரீ வைகுண்டம்  -  சனி (6) 
குன்னத்தூர்  -  ராகு (4)
ராஜ பதி  -  கேது (8)

அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்கள் நவ கைலாச கோவில்கள் அமைக்கப்பட்ட வரிசை. முதல் பூ கரை சேர்ந்த இடம் பாபநாசம். கடைசி பூ கரை சேர்ந்த இடம் சேர்ந்த பூ மங்கலம். 


ஒரு  முறை தாம்ப்ராஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னிடம் ஒரு  பாக்கு மட்டை தட்டை கொடுத்து பிரசாதம் வாங்கி கொள்ளச் சொன்னார்கள். பிரசாதம் வாங்குவதற்காக நின்றிருந்த வரிசையின் நீளத்தைப் பார்த்து மலைத்த நான்,"கியூ எங்க ஆரம்பிக்கிறதுனே தெரியவில்லையே..?!" என்றதும் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர், "எங்கு முடிகிறதோ, அங்குதான் ஆரம்பிக்கிறது" என்றார். 
அது போல எங்கள் நவ கைலாச யாத்திரையும் கடைசி கோவிலான சேர்ந்த பூ மங்கலத்தில்தான் துவங்கியது. 

நாங்கள் அங்கு போன பொழுது கோவிலில் யாரும் இல்லை. எங்கள் டிரைவர் அர்ச்சகருக்கு போன் செய்தார். அந்த கோவிலின் அர்ச்சகர் காலை ஒரு நேரம் வந்து பூஜை செய்து விட்டு சென்று விடுவாராம். யாராவது வந்திருப்பது தெரிந்தால் வருவாராம். ஆனால் அன்று அவர் வரவில்லை. அங்கிருந்த காவலாளி சந்நிதி கதவுகளை திறந்து வைத்து வெளியிலிருந்தே சூடம் ஏற்றி வைத்தார். தரிசனம் செய்து கொண்டோம். கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதியும், தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. ஸ்வாமியின் திருநாமம் கைலாசநாதர், அம்மன் சிவகாமி.

சுவாமி சந்நிதி இருக்கும் நிலை மனதை வருந்த வைக்கிறது. பிரகாரத்தில் நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் எல்லோருக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. அன்று அஷ்டமி என்பதால் காலையில் பைரவருக்கு அஷ்டமி பூஜை நடந்ததாம். இப்போது இருக்கும் வருந்தத்தக்க விஷயங்களில் இதுவும் ஒன்று. பலர் பரிகாரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மூல ஸ்வாமிக்கு கொடுப்பதில்லை.

நவகிரக லிங்கங்கள் - சேர்ந்தபூ மங்கலம் 



நவகிரக லிங்கங்கள் - ராஜபதி 
அங்கிருந்து கேது ஸ்தலமான ராஜபதிக்குச் சென்றோம். சிதிலமடைந்திருந்த கோவிலை இப்பொழுது எடுத்து பெரிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பார்க்க சந்தோஷமாக இருந்தது. இங்கும் ஸ்வாமி கைலாசநாதர்,அம்பாள் சவுந்தரநாயகி. பூஜைகளும் சிறப்பாக நடைபெறுவதாக அறிந்தோம். 

அங்கிருந்து தென் திருப்பேரை கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றோம். புதனுக்குரிய ஷேத்திரமாகிய இங்கு சிவ பெருமானை வழிபடுபவர்களுக்கு வாக்கு சாதுர்யம் கிடைக்கும் என்று நம்பப் படுகிறது. 

மூலவர் கைலாசநாதர் அம்பிகை அழகிய பொன்னம்மை. 

ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பகுதியை ஆய்வு செய்ய வந்த கேப்டன் துரை என்பவர் மதியம் இக்கோவிலுக்கு அருகில் இருந்த சாவடியில் ஓய்வெடுக்க தங்கியிருக்கிறார். தாகமாக உணர்ந்த அவர் கண்களில் பக்கத்தில் இருந்த தென்னம் தோப்பு பட அங்கிருக்கும் மரம் ஒன்றிலிருந்து இளநீர் காய் ஒன்றை பறித்துப் போடச் சொல்லியிருக்கிறார். இந்த தோப்பில் இருக்கும் காய்கள் கைலாசநாதர் கோவிலைச் சேர்ந்தவை என்று பணியாட்கள் கூற, அந்த தேங்காயில் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? பறித்துப் போடுங்கள்" என்று ஆணையிட, மீற முடியாமல் பறித்து போடுகிறார்கள்... பார்த்தால், அந்த தேங்காயில் நிஜமாகவே மூன்று கொம்புகள் இருந்ததாம். அரண்டு போன துரை தன் தவறை உணர்ந்து, தினமும் 26 சல்லி பைசா வழங்க உத்தரவிட்டாராம். அந்த கொம்புத் தேங்காயை இப்போதும் கூட அம்மன் சந்நிதியில் பார்க்க முடியும் என்கிறார்கள். நான்தான் அவசரத்தில் பார்க்காமல் வந்து விட்டேன்.   

அதன் பிறகு ஸ்ரீ வைகுண்டம் கைலாசநாதர் ஆலயத்திற்கு வந்தோம். இது வரை பார்த்த கோயில்களிலேயே பெரிய கோவில் இதுதான். அழகான சிற்பங்களோடு கோவில் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது. மூலவர் கைலாசநாதர், அம்மன் சிவகாமி.  நவகிரகங்களில் சனி பகவானுக்குரிய ஷேத்திரமாக கருதப்படுகிறது. குமரகுருபரர் பிறந்த ஊர். இந்த கோவிலிலும் அழகான சிற்பங்கள் காண கிடைக்கின்றன.








Tuesday, October 2, 2018

செக்கச் சிவந்த வானம்(விமர்சனம்)

செக்கச் சிவந்த வானம்(விமர்சனம்) 


நிழலுலக சக்கரவர்த்தியான சேனாபதி(ப்ரகாஷ ராஜ்) யின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடிக்க அவருடைய மூன்று மகன்கள் வரதராஜன்(அரவிந்த சாமி), தியாகராஜன்(அருண் விஜய்), எத்திராஜன்(சிம்பு) போட்டி போடுவதுதான் கதை. பிரகாஷ் ராஜை கொலை செய்ய முயற்சித்தவர்கள் யார் என்னும் முடிச்சோடு இடைவேளை வருகிறது. 

நிழலுலகத்தின் மீது மணி ரத்தினத்திற்கு அப்படி என்ன ஈடுபாடு என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு காங்ஸ்டர் கதை. படத்தில் மருந்துக்கு கூட ஒரு நல்லவன் கிடையாது.  கணவனாக ஒரு கதாநாயகனை இவர் காண்பிக்கவே மாட்டாரா? 

தாதா அப்பா,அவருக்குப் பிறகு அந்த அதிகாரத்திற்கும், பணத்திற்கும் ஆசைப்படும் மகன்கள், அதில் இருவர் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கேயும் நிழல் வேலைகளில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதால் படத்தில் மானாவாரியாக துப்பாக்கி வெடிக்கிறது, படம் முடியும் பொழுது நம் மீதும் ரத்தக் கறை படிந்திருக்கிறதோ, வீட்டில் போய் குளிக்க வேண்டும்  என்று தோன்றும் அளவிற்கு ரத்தம் தெளிக்கிறது. ஆழமாகவோ, அழுத்தமாகவோ ஒரு காட்சி கூட இல்லை. 

வெளிநாட்டில் படமாக்கப்பட்ட மணிரத்தினத்தின் முதல் படம் என்னும் பெருமையைப் பெறுகிறது. இசை ஏ.ஆர். ரஹ்மானாம், ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. முதல் பாதியில் விஜய் சேதுபதி வரும் சில இடங்கள் சின்ன சிரிப்பை உண்டாக்குகின்றன என்பதை தவிர நகைச்சுவை பஞ்சம். சந்தோஷ் சிவனின் காமிரா அற்புதம். 

எப்படி பந்தை போட்டாலும் அடிக்கும் பிரகாஷ் ராஜ் இந்தப் படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். வித்தியாசமாக அரவிந்த் சாமி, அழகாக அருண் விஜய், அலட்டலில்லாமல் சிம்பு, வழக்கம் போல விஜய் சேதுபதி. க்ளைமாக்சில் எதிர்பார்த்த ஒரு திருப்பமும் எதிர்பாராத திருப்பமும் இருக்கின்றன.
  
மருமகள்களாக கம்பீரம் காட்டும் ஜோதிகா, இலங்கைத் தமிழ் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், தாராள கவர்ச்சி காட்டும் டயானா எரப்பா. பிரகாஷ் ராஜின் மனைவியாக ஜெய சுதா. வரதனின் பள்ளித்தோழனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் விஜய் சேதுபதி, எதற்கு என்றே தெரியாமல் அதிதி ராவ் ஹயாத்ரி. மீடியாவில் பணியாற்றும் பெண்ணாக வரும் இவர் வெளியில் அரவிந்த் சாமியிடம் கேள்வி கேட்டு விட்டு தனிமையில் அவரோடு படுக்கையை பகிர்ந்து கொள்கிறாராம். அடடா! என்ன புரட்சி! படத்தின் ஓட்டத்திற்கு எந்த விதத்திலும் உதவாத இவர் கதாபாத்திரம் எதற்கு? ஒரு நட்சத்திர பட்டாளம். ஆனால் பிரகாசம் குறைவு.