பரவசம் தந்த நவ திருப்பதியும்,
நவ கைலாசமும் - 6
நவ கைலாச ஷேத்திரங்கள்:
அகத்திய முனிவரின் முதல் சீடரும், பிரம்மாவின் பேரனுமான ரோமச மகரிஷி, தான் முக்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்று தன் குருவை வினவுகிறார்.அதற்கு அகத்தியர், "ஒன்பது தாமரை புஷ்பங்களை தாமிரபரணியில் விடு, ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டு, சங்குமுக தீர்த்தத்தில் நீராடினால் நீ விரும்பியதை அடைவாய்" என்று கூறுகிறார். ரோமச மகரிஷியும் அவ்விதமே ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி நதியில் விடுகிறார். அவை ஒதுங்கிய இடங்களில் சிவாலயங்கள் அமைத்து சிவ பெருமானை வழிபட்டு, சிவ தரிசனமும், மோட்சமும் அடைகிறார். அந்த ஆலயங்களே நவ கைலாச ஆலயங்கள் என்று வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவகிரகங்களுக்கு உரிய ஷேத்திரங்களாகவும் கருதப்படுகின்றன.
பாபநாசம் - சூரியன் (1)
சேரன்மகாதேவி - சந்திரன் (2)
கோடகநல்லூர் - செவ்வாய் (3)
தென்திருப்பேரை - புதன் (7)
முறப்ப நாடு - குரு (5)
சேர்ந்த பூ மங்கலம் - சுக்கிரன்(9)
ஸ்ரீ வைகுண்டம் - சனி (6)
குன்னத்தூர் - ராகு (4)
ராஜ பதி - கேது (8)
அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்கள் நவ கைலாச கோவில்கள் அமைக்கப்பட்ட வரிசை. முதல் பூ கரை சேர்ந்த இடம் பாபநாசம். கடைசி பூ கரை சேர்ந்த இடம் சேர்ந்த பூ மங்கலம்.
ஒரு முறை தாம்ப்ராஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னிடம் ஒரு பாக்கு மட்டை தட்டை கொடுத்து பிரசாதம் வாங்கி கொள்ளச் சொன்னார்கள். பிரசாதம் வாங்குவதற்காக நின்றிருந்த வரிசையின் நீளத்தைப் பார்த்து மலைத்த நான்,"கியூ எங்க ஆரம்பிக்கிறதுனே தெரியவில்லையே..?!" என்றதும் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர், "எங்கு முடிகிறதோ, அங்குதான் ஆரம்பிக்கிறது" என்றார்.
அது போல எங்கள் நவ கைலாச யாத்திரையும் கடைசி கோவிலான சேர்ந்த பூ மங்கலத்தில்தான் துவங்கியது.
நாங்கள் அங்கு போன பொழுது கோவிலில் யாரும் இல்லை. எங்கள் டிரைவர் அர்ச்சகருக்கு போன் செய்தார். அந்த கோவிலின் அர்ச்சகர் காலை ஒரு நேரம் வந்து பூஜை செய்து விட்டு சென்று விடுவாராம். யாராவது வந்திருப்பது தெரிந்தால் வருவாராம். ஆனால் அன்று அவர் வரவில்லை. அங்கிருந்த காவலாளி சந்நிதி கதவுகளை திறந்து வைத்து வெளியிலிருந்தே சூடம் ஏற்றி வைத்தார். தரிசனம் செய்து கொண்டோம். கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதியும், தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. ஸ்வாமியின் திருநாமம் கைலாசநாதர், அம்மன் சிவகாமி.
சுவாமி சந்நிதி இருக்கும் நிலை மனதை வருந்த வைக்கிறது. பிரகாரத்தில் நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் எல்லோருக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. அன்று அஷ்டமி என்பதால் காலையில் பைரவருக்கு அஷ்டமி பூஜை நடந்ததாம். இப்போது இருக்கும் வருந்தத்தக்க விஷயங்களில் இதுவும் ஒன்று. பலர் பரிகாரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மூல ஸ்வாமிக்கு கொடுப்பதில்லை.
![]() |
நவகிரக லிங்கங்கள் - சேர்ந்தபூ மங்கலம் |
![]() |
நவகிரக லிங்கங்கள் - ராஜபதி |
அங்கிருந்து தென் திருப்பேரை கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றோம். புதனுக்குரிய ஷேத்திரமாகிய இங்கு சிவ பெருமானை வழிபடுபவர்களுக்கு வாக்கு சாதுர்யம் கிடைக்கும் என்று நம்பப் படுகிறது.
மூலவர் கைலாசநாதர் அம்பிகை அழகிய பொன்னம்மை.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பகுதியை ஆய்வு செய்ய வந்த கேப்டன் துரை என்பவர் மதியம் இக்கோவிலுக்கு அருகில் இருந்த சாவடியில் ஓய்வெடுக்க தங்கியிருக்கிறார். தாகமாக உணர்ந்த அவர் கண்களில் பக்கத்தில் இருந்த தென்னம் தோப்பு பட அங்கிருக்கும் மரம் ஒன்றிலிருந்து இளநீர் காய் ஒன்றை பறித்துப் போடச் சொல்லியிருக்கிறார். இந்த தோப்பில் இருக்கும் காய்கள் கைலாசநாதர் கோவிலைச் சேர்ந்தவை என்று பணியாட்கள் கூற, அந்த தேங்காயில் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? பறித்துப் போடுங்கள்" என்று ஆணையிட, மீற முடியாமல் பறித்து போடுகிறார்கள்... பார்த்தால், அந்த தேங்காயில் நிஜமாகவே மூன்று கொம்புகள் இருந்ததாம். அரண்டு போன துரை தன் தவறை உணர்ந்து, தினமும் 26 சல்லி பைசா வழங்க உத்தரவிட்டாராம். அந்த கொம்புத் தேங்காயை இப்போதும் கூட அம்மன் சந்நிதியில் பார்க்க முடியும் என்கிறார்கள். நான்தான் அவசரத்தில் பார்க்காமல் வந்து விட்டேன்.
