கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 24, 2017

பூனைகள் திரிகின்றன.

பூனைகள் திரிகின்றன.

கடந்த சில வருடங்களாக படிப்பில் முன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியும் இருக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்க்காக பொருளுதவி கிடைக்க உதவி செய்கிறேன். தகுதியான மாணவர்கள் என்று தெரிந்தால் பள்ளிக்கட்டணம் கட்ட உதவும் தொண்டு நிறுவனங்களில் சிபாரிசு செய்வேன், என் அக்காவின் மருமகளிடம் சொன்னால் அவள் அலுவலகம் மற்றும் நட்பு வட்டாரத்தில் பணம் வசூலித்துக் கொடுப்பாள். அதை  தேவைப் படும் பெற்றோர்களுக்கு அனுப்பி வைப்பேன். என்னால் முடிந்த தொகையை கொடுப்பதும் உண்டு.

இந்த வருடமும், சிலர் என்னை உதவிக்கு அணுகினர். ஆனால் எதிர்பார்த்த இடங்களில் கிடைத்த தொகை போதுமான அளவு இல்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வசூலிக்கும் தொகையைப் பார்த்தால் மயக்கம் வருகிறது. ஏழாம் வகுப்பிற்கும், எட்டாம் வகுப்பிற்கும் இருபத்தி இரண்டாயிரம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதில் பள்ளிக் கட்டணம் ரூ.ஏழாயிரம், புத்தகங்கள்  மற்றும் இதர சேவை(??) என்று குறிப்பிட்டு ரூ.பதினைந்தாயிரம். என்னிடம் பள்ளிக் கட்டணம் பெற்றுச் சென்ற ஒருவர், "மேடம், முழு கட்டணமும் செலுத்தினால்தான் புத்தகம் தருவார்களாம், கொஞ்சம் உதவி செய்யுங்கள் மேடம்" என்று கெஞ்சும் பொழுது மனம் சங்கடப் படுகிறது.  

இன்னொரு பள்ளியிலும் பள்ளிக் கட்டணம் ரூ.ஒன்பதாயிரம், இதர சேவைகள்,ரூ.ஐந்தாயிரம் என்று வசூல் செய்கிறார்கள். இதர சேவைகள் என்பதில் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப் பை(school bag) என்பவை அடங்குகின்றன.

ஏழாம் வகுப்பிற்கும், எட்டாம் வகுப்பிற்கும் பதினைந்தாயிரத்திற்கு புத்தகங்களா? ஷூவும், புத்தகப் பையும், சீருடையும் பள்ளியில்தான் வாங்க வேண்டும் என்பது என்ன சட்டம்? 

ஒவ்வொரு வருடமும் அதிகம் பணம் வசூலிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை.பிளஸ் டூ தேர்வில் ரேங்க் சிஸ்டத்தை ஒழித்தது போல பள்ளிகள் புத்தகங்கள், சீருடை, இன்ன பிற விஷயங்கள் வழங்கக் கூடாது என்று சட்டம் வந்தால் பள்ளிக் கட்டண சுமை பெரிதும் குறையும்.  

பூனைகள் திரிகின்றன, வீட்டில் உள்ள பாலையும், தயிரையும், குடிக்கின்றன. அவற்றை பிடிக்க, குறைந்த பட்சம்  மணி கட்டத்தான் ஆட்கள் இல்லை.