கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 31, 2014

அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே...!

அரபிக் கடலோரம்  ஓர் அழகை கண்டேனே...!

ஒரு குடும்ப விசேஷத்திற்காக கேரளா செல்ல வேண்டி இருந்தது. அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்றோம். முப்பது வருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்ற பொழுது, "என்ன இது ஒரு மாநில தலை நகர் போல இல்லாமல் வெகு சாதாரணமாக ஒரு சிறு நகரம் போல இருக்கிறதே..?" என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுது மேம்பாலங்கள், வாசல் எது? ஜன்னல் எது? என்று தெரியாத நவீன கட்டிடங்கள் வந்து ஓரளவிற்கு பெரு நகரங்களுக்கு நெருங்கி வந்து விட்டது.

விஸ்தாரமான கொட்டார(அரண்மனை)வளாகம், அந்தக் கால கேரள பாணி ஒட்டு வீடுகள், வளைந்து வளைந்து செல்லும் குறுகலான தெருக்கள், இவற்றோடு நவீன கட்டிடங்கள், என்று  ஜீன்ஸ்,டீ ஷர்ட், கொலுசு, உச்சி பொட்டு இவற்றோடு காட்சி அளிக்கும் பெண் போல பழமையும் புதுமையும் கலந்து காட்சி அளிக்கிறது திருவனந்தபுரம்!

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் வாசலிலேயே எங்களை மடக்கிய ஒரு ஆட்டோ ஓட்டுனர் நாங்கள் பார்க்க வேண்டிய இடங்களை தீர்மானித்தார். அதன்படி முதலில் மியூசியம், ராஜா ரவிவர்மா ஆர்ட் காலரிக்கு சென்றோம். 

விஸ்தாரமான மைதானத்தில் கம்பீரமான கேரள பாணி கட்டிடங்களில் அமைந்துள்ளன அருங்காட்சியகமும், ஓவியக் கூடமும். அருங்காட்சியகத்தில் நான்காம் நூற்றாண்டு சிற்பங்களிலிருந்து வைக்கப் பெற்றுருக்கின்றன. இதில் சேரநாட்டு சிற்பங்கள் மட்டுமல்லாமல் சோழ நாட்டு சிற்பங்களும் இருக்கின்றன. 


மியுசியத்தின் முன் நானும் என் கணவரும் 






















ரவி வர்மா ஓவிய கூடத்தை பார்க்க நான் மிகவும் விரும்பினேன். சில ஓவியங்கள் பிரமாதமாகவும், பல மிக சாதரணமாகவும் இருந்தன.  

அங்கிருந்து புது ஆறு என்னும் இடத்தில் போட்டிங் போவது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறினார். சமீப காலத்தில் கேரள அரசு சுற்றுலாவை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதில் ஒன்றுதான்  back water படகு சவாரிகள் . புதாற்றில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் மாங்க்ரூவ் காடுகளிடையே(இங்குதான் அனகோண்டா பார்ட் 3 படமாக்கினார்களாம்,)  போட்  ஹௌஸில் பயணித்து புதாறு கடலோடு கலக்கும் இடத்தில் ஒரு சிறு திட்டு உள்ளது. அங்கு இறக்கி விடுகிறார்கள். அதில் சிறிது நேரம் கழித்து விட்டு திரும்பி வரலாம். போகும் வழியில் உள்ள மிதக்கும் உணவு விடுதியில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் கொடுத்து விட்டு போனால் வரும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம். ராமேஸ்வரம் தவிர மற்ற இடங்களில் சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும் என்றால் அது ஒரு நதி கடலோடு கலக்கும் இடமாக இருக்க வேண்டும் என்பது சாஸ்திரம் கூறும் விதி. ஆனால் எங்களின் இந்த பயணம் திட்டமிடப் படாததால் அங்கு குளிக்க முடியவில்லை. திரும்பி வரும் வழியில் மிதக்கும் விடுதியில் சுவையான ப்ரைட் ரைஸை பைனாப்பில் ராய்தாவோடு சாப்பிட்டு விட்டு திரும்பினோம். கொஞ்சம் காஸ்ட்லியான நல்ல அனுபவம்.

Add captionபுதாற்றில் படகு சவாரி 
புதாறு கடலோடு சங்கமிக்கும் இடத்தில் நீரை தலையில் ப்ரோஷித்து கொள்கிறார் என் கணவர் 


நாங்கள் பயணித்த படகிலிருந்து, மிதக்கும் உணவு விடுதிக்கு மாறும் பொழுது, கால் தடுக்கி படகிற்கும்,விடுதிக்கும் இடையே விழ இருந்தேன். எப்படியோ சமாளித்து மற்றவர்கள் உதவியோடு விடுதிக்கு சென்று விட்டேன். நல்ல வேலை தப்பித்தோம் என்று நினைத்தேன். "இரு இரு உன்னை வைத்துக் கொள்கிறேன்" என்று காலம் கருவியது என் காதில் விழவில்லை.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் வழியில் உணவு விடுதியில்(இங்கும் உணவு விடுதி) உணவு அருந்தி விட்டு படியில் இறங்கும் பொழுது கால் இடறி கீழே விழுந்து ஹேர் லைன் கிராக் ஆகா வைத்து தன வஞ்சத்தை தீர்த்துக் கொண்டது காலம்.:( 

அங்கிருந்து திரும்பி வரும் வழியில் கோவளத்திற்குச் சென்று கடலில் கால் நனைத்து விட்டு வந்தோம். அன்று சனிக்கிழமை என்றதால் நல்ல கூட்டம். குறிப்பாக இளைஞர்,யுவதியர் கூட்டம். 

அங்கிருந்து திருவனந்தபுரம் திரும்பி வரும் வழியில் ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றோம். ஆற்றுக்கால் பகவதி என்பது மருவி ஆட்டுக்கால் பகவதி என்றாகி விட்டது. 

தன கணவன் கோவலனை அநியாயமாக கொன்ற பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு, மதுரையை எரித்து விட்டு சேர நாட்டிற்கு வந்த கண்ணகி கொடுங்கல்லூர் செல்லும் முன்  இங்கிருக்கும்'கிள்ளி' ஆற்றங் கரையில் தங்கி தன் கோபத்தை தணித்து கொண்டதாகவும் (அதனால்தான் ஆற்றுக் கால்) அவளுக்கு சாப்பிட பொங்கல் கொடுத்த குடும்பத்தை வாழ்த்தி மறைந்ததால் ஒவ்வொரு  வருடமும்  அந்த நாளில் அவளுக்கு பொங்கல் படைப்பது மிகப் பெரிய உற்சவமாக இங்கு கொண்டாடப் படுகிறது. 

மாசி அல்லது பங்குனி மாத கார்த்திகையில் துவங்கி பத்து நாட்கள் நடக்கும் 'பொங்கல' உற்சவத்தில் ஒன்பதாம் நாள் அம்மனுக்கு பொங்கல் படைக்கப் படுகிறது. இதில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கு பெறுவது ஒரு சிறப்பு. இதனால் இந்தக் கோவில் பெண்களின் சபரி மலை எனப்படுகிறது. லட்ச கணக்கில் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழா மிக அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது.

தமிழக கேரள பாணியில் அமைந்திருக்கும் விஸ்தாரமான கோவில். பிரகாரத்தில் விநாயகருக்கும் வீர பத்திரருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. அதற்கு அருகில் ஒரு மேடையில் அரச மரத்தின் கீழ் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. மூல ஸ்தான அம்மன் விக்ரஹத்தின் முன் ஒரு பாலகனின் சிலை உள்ளது. கண்ணகி இங்கு வரும் பொழுது ஐந்து வயது சிறுவன் ஒருவன் உடன் வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் சிலப்பதிகாரப்படி கண்ணகிக்கு குழந்தைகள் இருந்ததாக செய்தி இல்லை.

வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! அடுத்த பதிப்பில் தொடரலாம்...

Monday, December 29, 2014

எல்லே இளம் கிளியே!

எல்லே இளம் கிளியே!





திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம், "எல்லே இளங்கிளியே... " என்று துவங்கும் இந்த பாடல். பாவை நோன்பு நோற்க ஒவ்வொரு பெண்ணாக எழுப்பி அழைத்து வரும் ஆண்டாள் மற்றும் அவள் தோழிகளுக்கும்  இன்னும் எழுந்து வராமல் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் நடக்கும் உரையாடலை அப்படியே பாடலாக்கி இருக்கிறாள்
  
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

வாசலில் நிற்கும் பெண்கள்,"இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்"?  என்று கேட்க, "சில்லென்று பேச வேண்டாம், வந்து விட்டேன்" என்கிறாள் உள்ளே இருக்கும் பெண். வார்த்தையை கவனியுங்கள், "சில்"லென்று அழைக்க வேண்டாம்" என்கிறாள்.. சாதாரணமாக கோபமாக பேசுவதை "சுள்" என்று பேசுவது என்றுதான் சொல்வோம். ஆனால் குளிரான மார்கழி மாதத்தில் அதிகாலையில் "சுள்" என்று பேசுவதை விட, "சில்" என்று பேசுவதுதானே பொறுக்க முடியாமல் இருக்கும்?

வா.நி.பெ.: உன்னுடைய வாய் சவடால் எங்களுக்குத் தெரியும் (தெரியாதா ? என்பது உட் கிடை)அடுத்து வரும்   'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'  என்னும் இந்த இரண்டு வரிகளும் மிக முக்கியமானவை.

"என்னை வாய் சவடால் என்று கூறும் நீங்கள் மட்டும் என்ன?, சரி அப்படியே இருக்கட்டும்" இதுதான் சண்டையை வளர்த்தாமல், சமாதானமாக போகும் வைணவ கோட்பாட்டை விளக்குகிறது.

வா.நி.பெ.: சரி, வேறு எதையும் பற்றி எண்ணாமல் சீக்கிரம் கிளம்பேன்..

உ.இரு.பெ.: என்னை விரட்டுகிறீர்களே, மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?  - இதுதானே, நம்முடைய வழக்கம். நம்மை யாராவது ஒரு நல்ல செயலுக்கு தூண்டும் பொழுது, நான் மட்டும்தான் கிடைத்தேனா? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்பதுதானே நம் பழக்கம்? 

வா.நி.பெ.: எல்லாரும் வந்தாச்சு, சந்தேகம் இருந்தால் வந்து எண்ணிக்கொள்..

குவலய பீடம் என்னும் யானையை கொன்றவனும், தீயவர்களை அழிக்கக் கூடியவனுமாகிய, மாயவனை பாட வாராய் என்று முடியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் வைணவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகளை வலியுறுத்துவதால் இது மிக முக்கியமான பாசுரம்(அத்தனை விரிவாக நாம் பார்க்கவில்லை). பாடல் வடிவில் ஒரு ஓரங்க நாடகத்தையே நம் கண் முன் நிறுத்தும் ஆண்டாளின் திறமை மனதை கொள்ளை கொள்கிறது!