கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, September 29, 2016

கடைசி ஆசை!!

கடைசி ஆசை!!


"நான் வந்து பதினைந்து நாட்கள் ஆகி விட்டது... இன்னும் எவ்வளவு நாள் லீவு போட முடியும்"?

"எனக்கும் அதுதாண்டா. ஜானுவோட மாமியாருக்கு அடுத்த வாரம் ஒரு கல்யாணம் அட்டென்ட் பண்ண மதுரை போணுமாம். இல்லாட்டிலும் மாமிக்கு குழந்தையை பார்த்துக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். இவ கொஞ்சம் ஒர்க் பிரம் ஹோம் போட்டுண்டு சமாளிக்கறா.  விக்கி எம்.பி.ஏ. எண்ட்ரன்ஸ்க்கு ப்ரிபேர் பன்றான். தனியா வீட்டை மேனேஜ் கஷ்டமா இருக்குங்கறான். இவருக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. எவ்ளோ நாள் இப்படியே ஓடும்னு தெரியலையே..". 

அத்தையும் சித்தப்பாவும் பேசிக் கொண்டிருந்தது அசோக் காதில் விழுந்தது. மரணப் படுக்கையில் இருக்கும் தாத்தாவை பார்க்க வந்திருந்த அவருடைய பெண்ணும் பையனும் தங்கள் இயலாமையை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பேசுவதால் அவர்களுக்கு தங்கள் அப்பா மீது பாசம் குறைவு என்று சொல்லி விட முடியாது. அந்தக் கால தமிழ் சினிமா கதா நாயகன் போல கடமையா? பாசமா? என்ற ஊசலாட்டத்தின் விளைவு. 

எண்பத்தொன்பது வயதிலும் திடமாக தன் வேலைகளை தானே கவனித்துக் கொண்டிருந்த தாத்தா திடீரென்று படுத்த படுக்கையாகி விடுவார் என்று யார் எதிர் பார்த்திருக்க முடியும்? ஒரு வைரல் பீவர் அவரை வீழ்த்தி விட்டது. அவ்வப்பொழுது கண் திறந்து பார்க்கிறார், ஆனால் யாரையும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. " ஹி இஸ் சிங்கிங், யாருக்கெல்லாம் சொல்ல வேண்டுமோ சொல்லி விடுங்கள்" என்று டாக்டர் கூறியதன் பெயரில் அப்பா தன் தம்பிக்கும் தங்கைக்கும் செய்தி அனுப்பினார். அதைப் பார்த்து விட்டு அப்பா கிளம்பி விடுவார் என்று நினைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு அப்பா இன்னும் இழுத்துக் கொண்டே போவது அலுப்பைத் தர ஆரம்பித்து விட்டது.   

தாத்தாவை பார்க்க வந்த உறவினர்கள் சிலர் அவருக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொண்டு வந்தனர். "ஏதாவது நிறைவேறாத ஆசை இருந்தால் இப்படித்தான் இழுத்து பறித்துக் கொண்டு நிற்கும். அதனால் அவருக்கு இஷ்டமான பதார்த்தங்களை கொடுத்து விடுங்கள்" என்றார்கள். தாத்தா எங்கே அதை எல்லாம் சாப்பிட்டார்? "ஏதோ வாயில் கொஞ்சம் அந்த ருசி தெரிந்தால் போதும்" என்றார்கள். 

அசோக் உள்ளே சென்று படுத்துக் கொண்டிருக்கும் தாத்தாவைப்  பார்த்தான். வயது வேண்டுமானால் எண்பத்தொன்பது இருக்கலாம், மனதால் அவர் இருபத்தொன்பது வயது இளைஞர்தான். தாத்தா இருக்குமிடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். இந்த வயதிலும் புத்தகங்கள் படித்து, தொலைக்காட்சியில் நியூஸ் சேனல் பார்த்து எல்லா செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மானையும்,கௌதம் வாசுதேவ் மேனனையும் ரசிப்பார். ஸ்ரீதருக்குப் பிறகு கௌதம் மேனன் தான் காதல் ஸ்பெஷலிஸ்ட் என்பார். விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்த பிறகு த்ரிஷாவின் ரசிகனாகி விட்டார். கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி அடைந்தால் தாத்தாவின் சந்தோஷம் அளவிட முடியாது. தினமும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்.

அசோக் வேலைக்கு சேர்ந்த புதிதில் அவருக்கு ஒரு செல் போன் வாங்கி கொடுத்தான். தினமும் அவனோடு பேசி விடுவார். பேசாத நாட்களில் அசோக்கின் மனைவி திவ்யா கூட, "என்ன இன்னிக்கு உன் பிரெண்டோட பேசலையா"? என்று கிண்டலாக கேட்பாள். 

சென்ற முறை ஊருக்கு வந்திருந்த பொழுது, "உங்க அப்பா தன்னோட போனிலேயே உன் குழந்தையின் போட்டோக்களை நீ அனுப்பினதாக காட்டுகிறான், அது எப்படி? போனில் போட்டோ கூட அனுப்ப முடியுமா"? என்று கேட்டார்.

"அதுக்கு வாட்சாப் னு பேரு,அதில் போட்டோ அனுப்ப முடியும்" 

"அப்போ ஏன் என் போனில் வருவதில்லை"?

"நீ வைத்துக் கொண்டிருப்பது ஓல்ட் மாடல்," என்று கூறி விட்டு அவருக்கு புதிதாக ஒரு போன் வாங்கி கொடுத்து, அதில் எப்படி புகைப் படம் எடுப்பது, எடுத்த படத்தை எப்படி மற்றவர்களுக்கு அனுப்புவது என்று எல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு, அவரோடு ஒரு செல்ப்பி எடுத்து அதையே ப்ரொபைல் படமாக வைத்து அவரை வாட்சாப்பிலும் சேர்த்து விட்டான்.

அவனுடைய அப்பாவுக்கு கூட அதில் அவ்வளவு விருப்பம் இல்லை. "அவருக்கு போய் எதுக்கு டச் போன்? அதை எல்லாம் ஆபரேட் பண்ணாத தெரிய வேண்டாமா"? 

தாத்தா நன்றாகவே ஆபரேட் செய்தார். ஆட்டோ ஸ்பெல் அதிக பிரசங்கியையும் நன்றாகவே சமாளித்தார். தினமும் ஒரு செல்பி எடுத்து குடும்ப குழுமத்தில் போட்டு விடுவார். ஒரு முறை உடம்பு சரி இல்லாமல் ஆஸ்பத்திரிக்குச் சென்ற போது கூட அங்கும் ஒரு செல்பி  எடுத்து போட்டிருந்தார்.

வெளியே யாரோ ஒரு உறவினர் சொல்லிக் கொண்டிருந்தார். உங்க அப்பாக்கு இந்த வீட்டு மேலே ரொம்ப பாசம். அவர் சுய சம்பாத்தியத்துல வாங்கின முதல் வீடு, நல்ல மெயின்டைன் பண்ணுவார். நிறைய செலவு செய்திருக்கிறார். இந்த வீட்டை விட்டு அவர் வெளியில் போனது அபூர்வம். ஒரு வேளை வீட்டு பாசம்தான் அவரை போக விடாமல் செய்கிறதோ என்னவோ? இந்த வீட்டு மண் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து அவர் வாயில் விடுங்கள்..ஒரு வேளை அதன் பிறகு உயிர் பிரிந்தாலும் பிரியலாம்..."

இந்த பேச்சு காதில் விழுந்ததும் அசோக்கிற்கு சட்டென்று பொறி தட்டியது. தாத்தாவை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான். "தாத்தா, இங்க பாரு நம்ம ரெண்டு பேரும் ஒரு செல்பி எடுத்துக்கலாம்.." அவரோடு நெருங்கி உட்கார்ந்து ஒரு செல்பி எடுத்தான், அதை அவரிடம் காட்டினான். அதைப் பார்த்ததும் தாத்தாவின் முகம் மலர்ந்தது. தன் கடைசி ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் புன்னகைத்தப்படியே கண்களை மூடினார்.