பெற்றால்தான் பிள்ளையா?
கணம்தோறும் பிறக்கிறேன்
Wednesday, November 1, 2023
பெற்றால்தான் பிள்ளையா?
Tuesday, October 31, 2023
மாற்றம்
'இன்னும் முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்?' என்று மத்யமரில் வீக்லி டாபிக் கொடுத்திருந்தார்கள். அதற்கு என் பங்களிப்பு.
மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் தோன்றியதிலிருந்தே பலவித மாற்றங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது.
வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியது முதல் மாற்றம். கடலைக் கடந்தது, அடுத்த பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது.
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதும் தொழில் வளர்ச்சியும், மாற்றமும் ஒரு கங்காரு ஜம்ப் அடித்தது என்றால் கணினியின் வரவால் பூதாகாரமாக வளர்ந்தது. இப்போது ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எங்கே கொண்டு நிறுத்துமோ..?
நம் நாட்டை பொறுத்தவரை நூறு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மிக அதிகம். 1980களில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று நினைத்திருப்போமா? சாலையில் இத்தனை வெளிநாட்டு கார்கள் விரையும் என்று கற்பனை செய்தோமா? இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரலாம்..?
பணப் பரிமாற்றம் ஏன் அச்சிடப்பட்ட பணம் என்பது இல்லாமல் போகலாம்.
விவசாய நிலங்கள் குறைவதால் விவசாயம் செய்பவர்கள் செல்வந்தர்கள் ஆவார்கள்.
குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.
இயற்கை வளங்களான சோலார் எனர்ஜி, விண்ட் எனர்ஜி போன்றவை அதிக பயன்பாட்டிற்கு வரும். அதனால் மேற்கத்திய நாடுகளை விட கிழக்காசிய நாடுகள் தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும்.
கடல் நீரை குடி நீராக்கும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்படும்.
பயண நேரங்கள் கணிசமாககுறையும். விமானத்தில் பயணிப்பவர்கள் அதிகமாவார்கள்.
கான்சர் உட்பட பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். அதனால் மக்களின் சராசரி ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். இதனால் பூமி பாரத்தை குறைக்க பூகம்பம், புயல் போன்ற நிறைய இயற்கை உற்பாதங்கள் நிறைய நிகழும்.
கூட்டுக் குடும்பம் சிதைந்தது போல குடும்பம் என்னும் அமைப்பே குறையலாம், சிதையாது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, விவாகரத்து, மறுமணம் போன்றவை அதிகரிக்கும்.
கல்வி கற்பிப்பது டிஜிட்டல் மயமாகும், ஆகவே எழுத வேண்டிய தேவை இருக்காது எனவே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் குறைந்து போவார்கள். அதாவது படிக்கத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியும் என்று கூற முடியாது.
புத்தகங்கள் இல்லாமல் போகலாம். அதனால் நிறைய மரங்கள் பிழைக்கும்.
அரசு நிறுவனங்கள் தனியார் வசம் செல்லும்.
இப்பொழுது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் சங்கடங்களை உணர்ந்து யாராவது ஒருவர் வேலைக்குச் சென்றால் போதும் என்று நினைக்கலாம்.
இப்பொழுது பலர் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றார்கள், ஆனால் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மூன்று குழந்தைகளாவது வேண்டும் என்று அரசாங்கமே குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும்.
காவடி எடுப்பது, மொட்டை அடித்துக் கொள்வது போன்ற நம்முடைய மத நம்பிக்கைகள் அப்படியே தொடரும்.
வீட்டு பூஜைகளுக்கு ரோபோ புரோகிதர் வருவார்.
நம் நாட்டை பொறுத்தவரை என்ன மாற்றங்கள் வந்தாலும் சாலையில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் மாறாது.