கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 11, 2019

மன்னிப்பு

மன்னிப்பு 

அன்று அயோத்தி நகரமே சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி திளைத்தது. பின்னே தசரத குமாரன் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள் என்றால் சும்மாவா? அதுவும் ராமனுக்கு திருமணமானபின் வரும் முதல் பிறந்த நாள், கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? அயோத்தியில் கால் வைத்த அத்தனை பேரும் ஏதோ ஒரு பரிசோடுதான் திரும்பினார்கள். 

வழக்கம் போல அந்தணர்களுக்கு விதை நெல்லும், கறவை மாடுகளும் தானமாக தரப்பட்டன என்றால், மற்றவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. 

கொடுத்து கொடுத்து கைகளும், புன்னகைத்து, புன்னகைத்து கன்ன கதுப்புகளும் லேசாக வலிக்கத் துவங்கி இருந்தன தசரத குமாரனுக்கு. பெரியவர்களிடமும், குல குரு வஸிஷ்டரிடமும் பெற்ற ஆசிகள், மாமனார் ஜனகர் மாப்பிளைக்காக அனுப்பியிருந்த தாராள  ஸ்ரீதன பொருள்கள், அருமையான ராஜ விருந்து இவைகளால் ராமனுக்கு தலை சற்றே கிறுகிறுக்க சீதையை சீண்டிப் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது. 

மிகவும் அசதியாக இருப்பது போல சோம்பல் முறித்தபடி படுக்கையில் சரிந்தான். 

"கொடுத்து கொடுத்தே இன்றைக்கு மிகவும் களைத்து விட்டீர்கள்  போலிருக்கிறது" என்றபடி ராமனின் கரங்களை எடுத்து மெல்ல நீவி விட்டபடியே சீதை கூற, 

அதெல்லாம் ஒன்றுமில்லை, கொடுப்பதற்கு அலுப்பு கொள்பவர்கள் நாங்கள் இல்லை.." என்றவன் தொடர்ந்து,

" உனக்கு பிறந்த தின கொண்டாட்டங்கள் உண்டா?" என்றான் 

"ஏன் இல்லாமல்? எனக்கு மட்டுமல்ல, என் சகோதரிகளுக்கும் உண்டு..'', 

''நான் சித்திரை மாதம் புனர்வசு நட்சத்திரத்தன்று பிறந்தவன் என்பது தெரிந்திருப்பதால் என் ஜென்ம தினத்தை கொண்டாடுகிறோம். நீ பிறந்த தினம், நட்சத்திரம் எதுவுமே தெரியாதே எதை 
கொண்டாடுவீ ர்கள்?''

"ஏன்? என் தந்தை என்னை கண்டெடுத்த நாளைத்தான் என் பிறந்த நாளாக கொண்டாடுவார்.."

"உன்னை பெற்றவர்கள் யார் என்பதும் தெரியாது, எங்கே, எப்பொழுது பிறந்தாய் என்றும் தெரியாது, ஜனக மஹாராஜா யாகத்திற்க்காக நிலத்தை உழும் பொழுது அவரால் கண்டெடுக்கப் பட்டதால் ஜானகி ஆகி விட்டாய். ஆனால் நானோ, ரிஷ்ய ஸ்ரிங்கர்  தலைமையில் என் தந்தை புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவ புருஷன் கொணர்ந்த பாயசத்தை என் தாய் அருந்தியதால் பிறந்தவன். அழகிலும், குணத்திலும் நீ எனக்கு இணையாக இருக்கலாம், ஆனால் பிறப்பால் நான்தான் உன்னைவிட மேம்பட்டவன். ஒருவருடைய பிறப்புதானே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யும்... அந்த வகையில் உன்னை விட உசத்தியான நான் அதை பொறுப்படுத்தாமல் உன்னை மணந்து கொண்டிருக்கிறேன்" குறும்பாக கூறினான் ராமன்.

சுருக்கென்று தைத்தது சீதைக்கு. விளையாட்டாக கூறப்பட்டதா? அல்லது அந்த போர்வையில் மனதில் இருப்பது வெளியில் வந்து விட்டதா? நான் இழி குலத்தை சேர்ந்தவளா? பாதிக்கப்பட்ட மனது பதில் சொல்ல தீர்மானித்தது. 

"இருக்கலாம்.. என்னை விட நீங்கள்தான் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால், உலக வழக்கில் உயர்ந்த ஒரு விஷயம் தன்னை விட தாழ்ந்த விஷயத்தை தேடிச் செல்லுமா? தன்னை விட உயர்ந்த விஷயத்தைதானே அடைய விரும்பும்? அதன்படி பார்த்தால் நான் அல்லவோ உங்களை நாடி வந்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன? நீங்கள் அல்லவா மிதிலைக்கு வந்து, என் தந்தை வைத்த சுயம்வர போட்டிக்கு கட்டுப்பட்டு, சிவ தனுசை உடைத்து என்னை மணந்து கொண்டீர்கள்.. இதிலிருந்தே நம் இருவரில் யார் உசத்தி என்று தெரியவில்லையா?" 

காலையிலிருந்து புகழ்ச்சி, பாராட்டு இவற்றில் திளைத்துக் கொண்டிருந்த ராமனுக்கு சீதையின் இந்த பதில் யாரோ முகத்தில் குத்தி கீழே தள்ளியது போல இருந்தது. விருட்டென்று சீதையின் கையை உதறினான். திரும்பி படுத்துக்க கொண்டான். அவன் விழித்துக் கொண்ட பொழுது சீதை அங்கு இல்லை. 

மற்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாக இருப்பது போல 
காட்டிக் கொண்ட சீதை, தனிமையில் ராமனை புறக்கணித்தாள். அவளின் இந்த பாரா முகம் ராமனுக்கு புதிது. அப்படியே இரண்டு நாட்கள் சென்றன. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராமனுக்கு தோன்றியது. தவறு தன்னுடையது என்பதால், தானேதான் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான். 

அன்று பகல் உணவு முடித்து ஓய்வு எடுத்துக் கொள்ள அவர்களின் பிரத்யேக அரண்மனைக்கு வந்தவன், சீதை வருவதற்கு முன், தன் கை விரல் மோதிரத்தை கழட்டி, அறையின் ஒரு மூலையில் போட்டான். அவள் வந்து உறங்கி விழித்து விட்டாள் என்று தெரிந்ததும் அவனும் அப்போதுதான் விழிப்பவன் போல எழுந்து கொண்டு,'' உனக்கு என் மேல் என்ன கோபம் இருந்தாலும் நான் தூங்கி கொண்டிருக்கும் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரத்தை கழட்டி வைத்துக் கொள்வது சரி கிடையாது.." 

"இது என்ன புது கதை? நான் எதையும் கழட்டவில்லை. எந்த மோதிரத்தை சொல்கிறீர்கள்?" 

"நம் திருமணத்தின் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரம்.."

"அதையா காணவில்லை? ஐயோ! அது சப்த ரிஷிகளில் ஒருவராகிய காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது. அதை அவர் மிகுந்த மரியாதையோடும், கவனத்தோடும் பாதுகாத்து வந்தார், நம் திருமணத்தின் பொழுது உங்களுக்கு அணிவித்தார், அதையா  காணவில்லை..? காலையிலிருந்து எங்கெல்லாம் சென்றீர்கள்? கடைசியாக எப்போது அதை பார்த்தீர்கள்? 

"இங்கு வரும்வரை அது என் கையில்தான் இருந்தது. இப்போதுதான் காணவில்லை"

"திருமணத்தில் போடப்பட்ட மோதிரம் தொலைந்து போவது துர் சகுனம் அல்லவா?" பதட்டமும் துக்கமும் சீதையை பற்றிக் கொண்டன. 

"இரு இரு, அவசரப்பட வேண்டாம்,அந்த மோதிரம் கொஞ்சம் தளர்வாகத்தான் இருக்கும், அதுவும் கொஞ்ச நாட்களாக நழுவி விழுந்து விடுமோ என்று தோன்றியது, ஒரு வேளை படுக்கையில் விழுந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.." பேசிக் கொண்டே படுக்கையை உதறி தேடுவது போன்ற தன் நடிப்பை துவங்கினான்.

சீதை நிஜமாகவே தேட, அவள் கையில் சிக்கியது தொலைக்கப்பட்ட மோதிரம். "இதோ இங்கே இருக்கிறது! அப்பாடா!  காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது.."கண்கள் பனிக்க அந்த மோதிரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு கணவனிடம் நீட்டினாள்.

"அட! நானும் இத்தனை நேரமாக ததேடிக் கொண்டிருக்கிறேன், என் கண்களில் படவேயில்லை, நீ கண்டு பிடித்து விட்டாயே..! நிஜமாகவே நம் இருவரில் நீதான் உசத்தி. நீயே எனக்கு அணிவித்து விடு" என்று தன் கரத்தை அவள் முன் நீட்ட

இன்னும் இரு வேறு தருணங்களில் அவனை மன்னிக்க வேண்டும் என்று அறியாமல், கணவன் விரலில் மோதிரத்தை அணிவித்த சீதை ராமனை மன்னித்தாள்.

பின் குறிப்பு:

இந்த சம்பவம் அனந்தராம தீக்ஷதர் எழுதியிருக்கும் சுந்தரகாண்ட பாராயண புத்தகத்தில் குறிப்பிட பட்டிருக்கும். 

இந்த கதை 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று முடியும்படி சிறுகதை எழுத வேண்டும் 
என்று 'எங்கள் பிளாகில்' கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நான் எழுதிய சிறுகதை. எங்கள் பிளாகில் படிக்காதவர்கள் இதில் படிக்கலாம்.   

31 comments:

  1. சுருக்கமாகச் சொல்லும் கலை உங்களுக்கு கைவந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்போதும் இப்போதும் பாராட்டியதற்கு நன்றி ஶ்ரீராம்.

      Delete
    2. ஆமாம் ஸ்ரீராம் அக்காவுக்கு அது மிக மிக அழகாக வந்திருக்கிறது.

      நானும்தான் எழுதுகிறேன்...ஹிஹிஹி நீட்டி முழக்கி என்று.

      எனக்கு அப்படி வரவே மாட்டேன் என்கிறது...ம்ம்ம்ம் எப்படி முயற்சித்தாலும்..

      அக்காவுக்கு குடோஸ்...

      கீதா

      Delete
  2. கதை என்று பார்த்தால் நன்றாக இருக்கிறது. ஆனால் நாம் தெய்வங்களாக வணங்கும் ஸ்ரீராமனும் சீதா பிராட்டியும் இப்படி பேசியிருப்பார்களா? தன்னைப் போலவே தெய்வங்களையும் குறையுள்ளவர்களாகப் பார்ப்பது மனித இனத்தின் தனிச்சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. //தன்னைப் போலவே தெய்வங்களையும் குறையுள்ளவர்களாகப் பார்ப்பது மனித இனத்தின் தனிச்சிறப்பு// அப்படி பார்ப்பதற்கு என் மதம் எனக்கு சுதந்திரம் வழங்கியிருப்பது அதன் சிறப்பு. கருத்துக்கு நன்றி.

      Delete
  3. சீதை ராமனை மன்னித்தாள்...

    அவளே இந்தப் பூவுலகையும் மன்னிக்க வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு கதை எழுதியிருக்கும் பானுமதியையும் மன்னிக்கட்டும் என்கிறீர்களா துரை சார்? ஹாஹாஹா! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. சேங்காலிபுரம் சொல்லிக் கேட்டிருக்கேன் என்றாலும் சீதையும், ராமனும் இப்படிச் சின்னக் குழந்தைகளைப் போலச் சண்டை இட்டார்கள் என்பதை மனம் அன்றும் ஏற்கவில்லை; இன்றும் ஏற்கவில்லை. எ.பி.யில் இதைப்படித்த நினைவும் இல்லை. ஆனாலும் சுருக்கமாகக் கதைக்கருவை மட்டும் வைத்து அழகாய்ச் சொல்லி இருக்கீங்க! நீங்க படிக்கும் காலத்தில் precis writing test எழுதும்போது 100/100 வாங்கி இருப்பீங்க என நினைக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. சீதையைப் பிரிந்து சாதாரண மானுடனைப் போல அழுது புலம்புகிறான், யுத்தம் முடிந்து, சாதாரண மானுடனைப் போலவே சீதையிடம் இரக்கமே இல்லாமல் பேசி, அவளை தீக்குளிக்கச் சொல்கிறான் இதெயெல்லாம் செய்யும் ராமன் சாதாரண மானுடன் போல மனைவியை சீண்டியிருக்க மாட்டானா? அவள் ஊடலை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டானா? இவையெல்லாம் காப்பிய சுவைக்குத்தானே?

      மேலும், கணவன், மனைவியாக சித்தரிக்கப்படும் கடவுளர்கள் ஊடல் கொண்டதாக எத்தனை புராணக் கதைகளை கேட்டிருக்கிறோம்? ஏன் இப்போது அல்லோல கல்லோலப்படும் அத்தி வரதர் தல புராணத்திலே கூட பிரும்மா தன்னை மதிக்காமல் செய்த யாகத்தை கலைக்க சரஸ்வதி நதியாக பிரவாகித்து வந்தாள் என்று வருகிறதே?

      Delete
    2. //ஆனாலும் சுருக்கமாகக் கதைக்கருவை மட்டும் வைத்து அழகாய்ச் சொல்லி இருக்கீங்க! நீங்க படிக்கும் காலத்தில் precis writing test எழுதும்போது 100/100 வாங்கி இருப்பீங்க என நினைக்கிறேன். :)//
      ஹி ஹி... !

      Delete
    3. //சீதையைப் பிரிந்து சாதாரண மானுடனைப் போல அழுது புலம்புகிறான்,//
      ஆமாம், மனைவி இல்லாமல் தவிப்பான் ராமன். கம்பர், வால்மீகி இருவருமே சொல்லி இருக்கின்றனர்.

      // யுத்தம் முடிந்து, சாதாரண மானுடனைப் போலவே சீதையிடம் இரக்கமே இல்லாமல் பேசி, அவளை தீக்குளிக்கச் சொல்கிறான்.// இல்லை, ராமன் சீதையை ஒரு நாளும் தீக்குளிக்கவெல்லாம் சொல்லவில்லை. சீதை ராமனின் கோபத்தையும், உதாசீனத்தையும் கண்டு தானாக எடுத்த முடிவு. ஆனால் ராமன் அதை ஆதரித்தும் பேசவில்லை. ஆக்ஷேபித்தும் எதுவும் சொல்லவில்லை.

      Delete
    4. //ஆனாலும் சுருக்கமாகக் கதைக்கருவை மட்டும் வைத்து அழகாய்ச் சொல்லி இருக்கீங்க! நீங்க படிக்கும் காலத்தில் precis writing test எழுதும்போது 100/100 வாங்கி இருப்பீங்க என நினைக்கிறேன். :)//

      ஹா ஹா ஹா ஆமாம் கீதாக்கா ஹைஃபைவ் சொல்லிக் கொள்கிறேன்...!!!

      இதுல என்னன்னா நானும் கூட ஸ்கூல் படிக்கும் போது ப்ரிசிஸ் ரைட்டிங்க்ல ஃபுல் மார்க் வாங்கியதுண்டு...ஆங்கிலத்திலும், தமிழிலும் கூட....

      ஆனா பதிவு கதை எல்லாம் தான் ஹிஹிஹிஹி...

      கீதா

      Delete
  5. ஆக குத்தல் பேச்சும், குடைச்சல் வார்த்தைகளும் உலகம் தோன்றிய காலத்திலிருந்து கணவர்-மனைவிகளுக்கு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இருந்தால்தானே கணவன், மனைவி. வருகைக்கு நன்றி ஜி.

      Delete
  6. ராமனிடம் கண்ணனின் குறும்பை இன்று அறிந்தேன்...!

    ReplyDelete
  7. ரசிப்புக்கு நன்றி டி.டி.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    நல்ல கதை.தாங்கள் எழுதிய இந்த கதையை இதற்கு முன் படித்ததில்லை. இப்போதுதான் படிக்கிறேன். தெய்வ பிறவி தம்பதிகளாக இருப்பினும்,அவர்கள் இருவருகளுக்குமிடையே ஊடலும், அதை விட்டு கொடுப்பதின் மூவம் ராமர் சமரசமாக்கி கொள்வதும் சிறப்பு. நமக்கும் அத்தகைய இயல்புகளை, ஏராளமான நற்பண்புகளை சுட்டிக்காட்டுவித்த தெய்வமல்லவா ஸ்ரீ ராமபிரான். கதை எழுதிய தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல நினைத்ததை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் கமலா. நன்றி.

      Delete
  9. http://sivamgss.blogspot.com/2008/07/72.html

    http://sivamgss.blogspot.com/2008/07/72_12.html

    http://sivamgss.blogspot.com/2008/07/blog-post_13.html

    http://sivamgss.blogspot.com/2008/07/blog-post_16.html

    இதை விட அதிகமாகவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். என்றாலும் என்னுடைய புரிதலையும் முடிந்தபோது படித்துப் பாருங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாசிப்பு, அனுபவம் எல்லாம் வேறு லெவல் அக்கா. உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன். இப்போது பயணத்தில் இருக்கிறேன்.

      Delete
    2. கம்ப ராமாயணத்தில் ராமன் சீதையிடம் கொடுமையான வார்த்தைகளை பேசுவதால் தான் வருகிறது.

      Delete
    3. வால்மீகியும் சொல்லி இருக்கார்.

      Delete
    4. //உங்கள் வாசிப்பு, அனுபவம் எல்லாம் வேறு லெவல் அக்கா. உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன். இப்போது பயணத்தில் இருக்கிறேன்.// !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  10. Arumai nadai Banu. Vazthukkal.

    ReplyDelete
  11. நல்ல கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  12. எங்கள் ப்ளாக்கில் படித்த நினைவு. நல்ல நடை. பாராட்டுகள்.

    ReplyDelete
  13. பானுக்கா இந்தத் தலைப்பைப் பார்த்து புது பதிவு என்று நினைத்து வாசிக்கத் தொடங்கியதும் புரிந்தது எபில சீதை ராமனை மன்னித்தாள்..கதை என்று அப்பவும் சேங்காலிபுரம் பற்றி சொல்லிருந்தீங்க.

    அழகா எழுதியிருக்கீங்க அக்கா....

    இதிலிருந்து ஒரு மாரல். இதில் சீதையின் பிறப்பு பற்றிச் சொல்லி உயர்ந்த தாழ்ந்த என்று வருகிறது..

    மனிதனிலும் இது இருக்கிறதே! அது கூடாது என்ற மாரல்...

    பிறப்பு, நல்ல குடும்பம் என்று தெரிந்தாலுமே பல மனைவிகளை கணவன்மார்கள் இப்படி இழிவுபடுத்துவதுண்டு. அப்படி இருக்க?! நதிமூலம் ரிஷி மூலம் ஆராயக் கூடாது!!!

    கீதா

    ReplyDelete