கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, April 25, 2023

ஓடிஷா யாத்திரை - 3 பூரி ஜகன்னாதர்

ஓடிஷா யாத்திரை - 3

பூரி ஜகன்னாதர்



இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான கோவில்களில் பூரி ஜெகன்னாதர் ஆலயமும் ஒன்று. மஹாவிஷ்ணு வடக்கே பத்ரியில் பத்ரிநாராயணராகவும், தெற்கே ராமேஸ்வரத்தில் ஈஸ்வரனை வழிபடும் ராமனாகவும், மேற்கே துவாரகையில் கண்ணனாகவும், கிழக்கே பூரியில் ஜெகன்னாதராகவும் எழுந்தருளியிருக்கிறார். இந்த நான்கு தலங்களும் சார்தாம்(புண்ணிய தலங்கள்) என்று அழைக்கப்படுவதோடு ஹிந்துக்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில்கள் என்றும் கருதப்படுகின்றன. இப்போது ஊடகங்களில் இதைப் பற்றியெல்லாம் நிரைய வருவதாலோ என்னவோ எப்போதும் கும்பல் அதிகம் இருக்கிறதாம்.

 

நாங்கள் சென்றபோதும் நல்ல கும்பல் இருந்தது. ஆனால் இது குறைச்சல் என்றார் கைட். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து கோவிலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றோம். ஒரு ஆட்டோவில் எட்டு பேர் பயணிக்கலாம். கோவில் வரை ஆட்டோவை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சற்று தொலைவிலேயே இறக்கி விட்டு விட்டார்கள். நடக்கத் தொடங்கினோம். கோவிலுக்குள் செல்ஃபோன், காமிரா, தோலால் செய்யப்பட்ட பெல்ட், பர்ஸ் போன்றவைகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் ஹோட்டல் அறையிலேயே வைத்துவிடச் சொன்னார்கள். என்னுடைய பர்ஸ் ரெக்சின்தான், இருந்தாலும் அறையில் வைத்து விட்டு தேவையான பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டேன். முன்பே தெரிந்திருந்தால் வீட்டிலிருந்து ஒரு துணி பர்ஸ் அல்லது சுருக்குப்பை கொண்டு சென்றிருக்கலாம்.  செல்ஃபோன் கண்டிப்பாக வேண்டும் என்றால் கோவிலில் லாக்கர்கள் இருக்கும், வைக்கலாம் என்றார்கள். ஆனால் நமக்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டும், எனவே அறையில் வைப்பதே உத்தமம் என்று எல்லோரும் அறையிலேயே வைத்துவிட்டோம்.

 

கோவிலை நெருங்கும் சமயம் கோவில் நடைமுறைகள் தெரிந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்து அவர் சொல்வதை கேட்டு நடக்கச் சொன்னார் அந்த ஊர் கைட். அவருக்கு ஹிந்திதான் மாலும். அவரிடம் “ஹிந்தி தெரியாது போடா” என்றா சொல்ல முடியும்? நல்ல வேளை எங்கள் குழுவில் ஹிந்தி தெரிந்த ஒருவர் அவர் சொன்னதை எங்களுக்கு தமிழில் மொழி பெயர்த்தார்.

 


அவர் சொன்ன விவரங்கள்: “கோவிலுக்குள் செல்வதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. யாராவது உங்களை சுவாமியிடம் அழைத்துச் செல்கிறேன், காசு கொடுங்கள், என்று கேட்டாலோ, அன்னதானம் செய்யுங்கள் என்று காசு கேட்டாலோ கொடுக்க வேண்டாம்.  ஏதாவது காணிக்கை தர வேண்டும் என்று நினைத்தால் உண்டியலில் போடுங்கள் அல்லது அன்னதானம் செய்வதற்கான கவுண்டரில் பணம் கட்டுங்கள். பூரியில் அன்னதானம் செய்வது சிறப்பு. எல்லோரும் சேர்ந்து வாருங்கள். என்று கூறி விட்டு எங்களில் உயரமாக இருந்த ஜெகன்நாதன் என்பவரை முன்னால் போகச்சொன்னார். அவர் ஒரு துண்டை தலைக்கு மேல் சுழற்றியபடி செல்ல, அந்த ஜெகன்நாதரை தரிசிக்க இந்த ஜெகன்நாதனை பின்தொடர்ந்தோம். நாங்கள் சென்றது பின்வாசல் வழியாக.

 


பூரி ஜெகன்நாதர் ஆலயத்திற்குள் மொத்தம் பன்னிரெண்டு சன்னதிகள் இருக்கிறதாம். அவைகளை எல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. நேராக ஜெகன்நாதர் சன்னதி மட்டுமே. நாங்கள் சென்ற நேரம் அந்த ஆலய பிரதான கோபுரத்தின் மேலே பறந்து கொண்டிருந்த சிவப்பு நிறக் கொடியை இறக்கி விட்டு, மஞ்சள் நிறக் கொடியை ஏற்றும் நேரம். பிரகாரம் முழுவதும் பக்தர்கள் சுற்றி நின்று கொண்டு, பக்தியோடு கோஷமிட்டபடி அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியின் வளையத்தில் கால் வைத்து ஏறுகிறார். அந்த கொடிகள் காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும் என்பது பூரியின் ஒரு அதிசயம். தஞ்சை பெரிய கோவிலைப் போல இந்தக் கோவிலின் நிழலும் தரையில் விழாது, இந்த கோபுரத்தின் மேலே கருடன் பறக்காது என்பதெல்லாம் மற்ற சிறப்புகள். இங்கே பிரசாதத்தை பானையில்தான் சமைப்பார்களாம். அதுவும் ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அதில் மேல் பானையில் இருக்கும் அரிசி முதலில் வெந்து விடுமாம், பிறகு அதற்கு அடுத்த பானை, என்று வரிசையாக இறங்கு முகத்தில் வந்து, கடைசியில் கீழே இருக்கும் பானையில் இருக்கும் அரிசி வேகுமாம்.

 

முதலில் நான்கு வரிசைகளாக அனுப்பப்படும் பக்தர்கள் பிரதான வாயிலுக்கருகே செல்லும் பொழுது ஒன்றாக சங்கமித்து விடுகிறார்கள். பிரும்மாண்டமான வாயில். இருபுறமும் ஒவியமாக வரையப்பட்டிருக்கும் ஜெய, விஜயீபவர்களின் மீது வெண்ணையை விட்டெரிந்து, அந்த ஓவியத்தின் அழகை சிதைத்திருக்கிரார்கள் மக்கள். இது என்னவிதமான பக்தி என்று புரியவில்லை. ஒரு விஷயத்தை நம்மால் படைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, சிதைக்காமல் இருக்கலாம் என்பதை நாம் எப்போதுதான் உணரப் போகிறோமோ?

 

பல வருடங்களுக்குப் பிறகு, கும்பலில் சிக்கி, நீந்தி, சன்னதியை அடைகிறோம். நடுவில் சுபத்ரா, அவளுக்கு வலது புறம் பலராமர், இடது புறம் கிருஷ்ணர். இப்படி சகோதரர்களோடு சகோதரி மட்டும் கோவில் கொண்டிருப்பது பூரியில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். மரத்தால் ஆன திருவுருவங்கள். முழுமை அடையாமல் இருக்கின்றன. அதற்கு காரணம் தெரிய வேண்டுமானால் பூரியின் தல வரலாறு தெரிய வேண்டும். இந்த பதிவு மிக நீளமாகி விட்டது, எனவே அடுத்த பதிவில் பார்க்கலாம்.   

படங்கள் - நன்றி கூகுள் 

Thursday, April 20, 2023

ஓடிஷா யாத்திரை – 2

ஓடிஷா யாத்திரை – 2

சாட்சி கோபால் கோவில்:



பிஜுபட்னாயக் விமான நிலையத்திலிருந்து ஏ.சி. பஸ்ஸில் ஏறி பூரி நோக்கி புறப்பட்டோம். வழியில் சாட்சி கோபால் கோவிலுக்குச் சென்றோம்.

புவனேஷ்வர், பூரி நெடுஞ்சாலையில் புவனேஷ்வரிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாட்சி கோபால் கோவில். வடமொழியில் சாஷி கோபால் என்கிறார்கள். பக்தன் ஒருவனுக்காக சாட்சி சொல்ல அந்த பரந்தாமனே வந்ததால் இந்தப்பெயர்.

பூரியிலிருந்து காசிக்கு இரண்டு அந்தணர்கள் செல்கிறார்கள். அதில் ஒருவன் இளைஞன், மற்றவர் முதியவர். யாத்திரையில் அந்த முதியவரை இளைஞன் நன்றாக கவனித்துக் கொள்கிறான். அவனுடைய பணிவிடையில் மகிழ்ந்த முதியவர், ஊர் திரும்பியதும் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து தருவதாக பத்ரி நாரயணரை சாட்சியாக வைத்து உறுதி அளிக்கிறார். ஆனால் ஊர் திரும்பியதும், அந்த இளைஞனுக்கு தனக்கு இணையான அந்தஸ்து இல்லை என்பதால் பெண் கொடுக்க மருத்து விடுகிறார். அவன் அவருடைய வாக்குறுதியை நினைவூட்ட, “அந்த கிருஷ்ணனே வந்து சாட்சி சொல்லட்டும், நான் என் பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எங்கிறார். உடனே அவன் மீண்டும் காசிக்குச் சென்று, எந்த கிருஷ்ணரை சாட்சி வைத்து அவர் பெண்ணைத் தருவதாக கூரினாரோ அந்த கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டு, தன்னோடு வரும்படி அழைக்கிறான். கிருஷ்ணரும், தான் அவனோடு வருவதாகவும், அவன் முன்னால் செல்ல, அவர் பின் தொடர்ந்து வருவதகவும் கூறுகிறார். ஆனால் முன்னால் செல்லும் அவன் எந்தக் காரணம் கொண்டும் திரும்பி பார்க்கக் கூடாது என்று ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதற்கு அவன் ஒப்புக் கொள்ள, இருவரும் நடக்க ஆர்ம்பிக்கின்றனர். தனக்கு பின்னால் ஒலிக்கும் சலங்ககை ஒலியைக் கொண்டு கிருஷ்ணர் தன்னை தொடர்வதை ஊர்ஜிதம் செய்து கொள்கிறான். இந்த ஊரின் மணல்மேட்டை கடக்கும் பொழுது மணலில் கால்கள் புதைவதால் சலங்கை சத்தம் நின்று விடுகிறது. கிருஷ்ணர் விதித்த நிபந்தனையை மறந்த அந்த இளைஞன் திரும்பி பார்க்க கிருஷ்ணர் அங்கேயே சிலையாகி விடுகிறார். அவனுடைய பக்தியை மெச்சிய அவ்வூர் மக்கள், அங்கே கிருஷ்ணருக்கு கோவில் எடுத்தார்கள் என்பது தல வரலாறு.



சிறிய கோவில்தான். கோவிலுக்கு வெளியே கருட ஸ்தம்பம். ஓடிசா பாணி கோபுரம். நுழை வாயிலில் இரண்டு சிங்கங்கள். உள்ளே சென்றால் நேராக கருவறை வரை செல்ல முடிகிறது. வட இந்திய கோவில்கள் போல் வெள்ளை நிற சலவைக் கல் இல்லாமல் மிக அழகான கருமை நிற குழலூதும் கண்ணன் நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறான். பக்கவாட்டில் ராதை. தரிசனம் சிது விட்டு வெளியே வருகிறோம். பிரகாரத்தை வலம் வரும்பொழுது பின் புறம் கோஷ்ட்டத்தில் நரசிம்மரையும், வலது புறம் பிரம்மாவும் இருக்கிறார்கள். இடது புறம் திண்ணையில் தென் நாட்டு பாணியில் அழகான, பெரிய விநாயகர். இவரும் சலவைக் கல்லால் ஆனவர் இல்லை. சுவற்றில் நடராஜரைப் போல் சூலம், நெருப்பு எல்லாம் ஏந்தி நடனமாடும் விநாயகரின் அழகிய ஓவியம்.




கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம்
ஸ்தல விருட்சம்-பலா மரம்


சாட்சி கோபால்கோவில் பூரி ஜெகன்னாதர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னாலேயே கட்டப்பட்டதாம். மூல விக்கிரகம் தெற்கேயிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் கூறுகிறார்கள். டூரிஸ்டுகள் அதிகம் வரும் எல்லா கோவில்களைப் போலவே இங்கும் காசு பறிப்பதில் குறியாக இருக்கிறார்கள். அங்கு கட்டணசேவை இல்லாத போதிலும், நாங்கள் வெளி மாநிலத்திலிருந்து வந்திருப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டு, பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வாங்க வேண்டும் என்றார் ஒருவர். எங்கள் கைட் அவரோடு சண்டை போட்டு, எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே, “தட்சணை போடுங்கள் தட்சணை போடுங்கள்” என்று கேட்டு ஒரு பெரிய தாம்பாளத்தில் தட்சணை வசூல் செய்கிறார்கள். அதில் பத்து ரூபாய், இருபது ரூபாய் இவைகளை உட்னே அப்புறப்படுத்தி, மினிமம் ஐம்பது ரூபாய் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். இட்ஸ் ஆல் இன் த கேம்!

வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு (சூப், பராத்தா, இரண்டு சைட் டிஷ், புலவ், சாதம், சாம்பார், ரசம், தயிர், ஊறுகாய், பப்படம், காய்கறி சாலட், குலாப் ஜாமூன், ஐஸ்க்ரீம்) அங்கிருந்து பூரியை சென்றடைந்தோம். நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த சக்தி ஹோட்டலில் எங்களை ஆம் பன்னா(மாங்காய்,புதினா ஜூஸ்) கொடுத்து வரவேற்றார்கள். எங்கள் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி ஜகன்னாதரை தரிசிக்க புறப்பட்டோம்.

-தொடரும்   







Monday, April 17, 2023

ஒடிஷா யாத்திரை

ஒடிஷா யாத்திரை

ஸ்மார்ட் வாட்ச்சை காணோம்..:



இந்தியாவிற்குள் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் விரும்பும் சில இடங்களுள் ஓடிசாவில் உள்ள கோனார்க் சன் டெம்பிளும் ஒன்று. என் உறவிலும், நட்பிலும் எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை. அந்த சமயத்தில்தான் பெங்களூர் மத்யமர் மீட் ஒன்றில் சந்தித்த சரோஜா அருணாசலம் அவர்கள் தான் டூர் ஆபரேட்டர் மூலம் தனியாக சுற்றுலாக்கள் செல்வதாகவும், அவை சிறப்பாக நடத்தப்படும் என்றும், அங்கு வருபவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்றும் கூறியது சற்று தைரியம் தந்தது. அந்த சமயத்தில் முகநூலில் வந்த யாத்ரிகா டூர்(ஆபரேட்டர்கள்) விளம்பரம் என்னைக் கவர அவர்களொடு தொடர்பு கொண்டு ஒடிஷா சுற்றுலாவிர்கு புக் பண்ணிக் கொண்டேன்.

சென்னை விமான நிலையத்தில்

நான் அவர்களை தொடர்பு கொண்டபோது ஒரே ஒரு சீட்தான் இருக்கிறது என்றார்கள். 50% டிக்கெட் கட்டணம் கட்டியதுமே டிக்கெட் அனுப்பி விட்டர்கள். ஏப்ரல்7,8.9 ஆகிய மூன்று நாட்கள் பயணம். நான் 6ஆம் தேதி காலையிலேயே கிளம்பி சென்னையை அடைந்தேன். 7ஆம் தேதி காலை 9:25க்கு விமானம். 7.25க்குள் விமான நிலையத்தை அடைந்து விட்டேன். அங்கு சிறு குழுவாக நின்று கொண்டிருந்த சிலரைப் பார்த்தால் ஒடிஷா யாத்ரீகர்களாக இருப்பார்களோ என்று தோன்றியது. விசாரித்ததில் என் யூகம் சரிதான் என்று புரிந்தது. எங்களுக்கான காலை உணவை பாக் பண்ணி கொடுத்து விட்டார்கள். அதைப் பெற்றுக் கொண்டு லக்கேஜை செக் இன் பண்ணி செக்யூரிடி செக் அப்பிற்காக சென்றோம். அங்கே ஸ்மார்ட் வாட்சையும் அவிழ்த்து ஸ்கேன் பண்ண வேண்டிய சாமான்களோடு போட வேண்டும் என்றார்கள். நான் அப்படியே செய்து எக்ஸ்-ரே மிஷினுக்குள் அனுப்பி விட்டு அந்தப் பக்கத்தில் ஸ்கேன் செய்து வந்த டிரேயில் பார்த்தால் என் ஹேண்ட் பேக், செல்ஃஃபோன் இரண்டும் இருந்தன. ஸ்மார்ட் வாட்ச்..? காணோம்… பானு.. பிரச்சனை இல்லாமல் உன்னால் பயணிக்க முடியாதா?

ங்கே போயிருக்கும்? கொஞ்சம் பதட்டமாக இருந்தது. மிக சமீபத்தில் என் மகன் வாங்கித் தந்திருந்த வாட்ச். அங்கிருந்த பணியாளரிடம் தெரிவித்த பொழுது, “நீங்கள் வைத்த டிரேயில்தான் இருக்கும், சரியாக பாருங்கள்” என்றார். அந்த டிரேயைத் தேட முடியவில்லை, ஏனென்றால் அதற்கு மேல் பல டிரேகள் வந்து விட்டன.

கம்ப்யூட்டர் திரையில் ஸ்கேன் செய்யப்படும் பொருள்களை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கூரியதும், அவர் செக் செய்து விட்டு, “வாட்ச் உங்கள் கைப்பையில்தான் இருக்கிறது, சரியாகப் பாருங்கள்” என்றார். “ஐயா, இது வேறு கடிகாரம், நான் தேடுவது ஸ்மார்ட் வாட்ச்” என்றதும், என்னை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார். பிறகு ஒருவர் என்னை அழைத்து, “மேடம், உங்கள் வாட்ச் அந்த் டிரேயில்தான் இருந்திருக்கிறது, நீங்கள் சரியாக பார்க்கவில்லை, வந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி, எக்ஸ்-ரே மிஷினிலிருந்து வெளியே வந்த ஒரு டிரேயில் இருந்த என் ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கொடுத்து விட்டு, “சிலர் பதட்டத்தில் லாப் டாப்பைக் கூட விட்டு விட்டு சென்று விடுவார்கள்” என்றார்.

பிஜுபட்னாயக் விமான நிலையத்தில் ஆஞ்சனேயர்(மணல் சிற்பம்)




உள்ளே சென்று அமர்ந்து ட்ரவலர்ஸ் கொடுத்திருந்த இட்லி, ஃப்லாக்ஸ் சீட்ஸ் சத்துரண்டை இவற்றை மட்டும் சாப்பிட்டேன். கம்பு புட்டை விமானத்தில் சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் விமானத்தில் தூங்கி விட்டதால் சாப்பிட முடியவில்லை. உணவிற்குப் பிறகு காபி சாப்பிடலாம் என்று தோன்றியது. அங்கிருந்த காஃபிடேயில் ஒரு காபி 280 ரூபாய் என்றாள் அங்கிருந்த பெண். சீ! சீ! இந்தக் காபி கசக்கும் என்று திரும்பி விட்டோம். விமானத்தில் பேப்பர் படித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். குறித்த நேரத்திற்கு சற்று முன்பாகவே பிஜுபட்னாயக் விமான நிலயத்தை அடைந்தது எங்கள் விமானம். பெட்டி வருவதற்குள் அங்கு மணலில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் முன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். வெளியே எங்களை வரவேற்ற அந்த ஊர் கைட் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் ஒரு அழகான முத்துமாலை கொடுத்து, அடையாளத்திற்காக அதை வெளியே செல்லும் பொழுது அணிந்து கொள்ள வேண்டும் என்றார். நான் மட்டுமே அதை கடை பிடித்தேன். மற்றவர்கள் ஒரு நாள் மட்டுமே அணிந்து கொண்டார்கள்.

ட்ராவலர்ஸ் கொடுத்த முத்து மாலை

- தொடரும்

Saturday, April 15, 2023

கனவு பலித்தது

 கனவு பலித்தது



என் படைப்புகளை புத்தகமாக பதிப்பிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. ஆனால் நமக்கு அது சாத்தியப்படுமா? என்று ஒரு சந்தேகம் அடி மனசில் இருந்து கொண்டே இருந்தது. நிச்சயமாக முடியும் என்று நம்பிக்கை தந்து குவிகம் பதிப்பகத்தை  திரு. ராய செல்லப்பா அவர்கள் அறிமுகம் செய்வித்தார்.  அதோடு மட்டுமல்லாமல் என் கதைகளில் வெளியிடக் கூடிய தகுதிக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததோடு, அவற்றில் சிறு திருத்தங்களும் கூறினார். 



என் தோழியான கீதா ரங்கன் ப்ரூஃப் ரீடிங் செய்து தர, நம் ரேவதி பாலாஜி அழகான அட்டைப் படம் வரைந்து தர, சகோதரர் அனந்த நாராயணன் அவர்களும், இனிய தோழியான ஆன்சிலா பெர்னாண்டோவும் அணிந்துரை எழுதித் தர, குவிகம் பதிப்பகம் தரமாக அச்சிட்டு என் கனவை நனவாக்கி விட்டார்கள். இதற்கு முன் நான்கு மின் நூல்கள் வெளியிட்டிருந்தாலும் நம் புத்தகத்தை அச்சில் பார்க்கும் பொழுது அலாதி சந்தோஷம்.  

உணவை சமைத்தால் மட்டும் போதுமா? எல்லோரும் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தானே சமைத்தவருக்கு சந்தோஷம். அதைப் போல் என்னுடைய இந்த நூலை நீங்கள் எல்லோரும் வாங்கி, படித்தால்தான் இந்த என் பணி பூரணமடையும். புத்தகத்தின் விலை பிரதி ஒன்று ரூ.100/- மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் என்னை 9841178728 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.  நன்றி. 



Wednesday, April 12, 2023

பிரார்த்தனை, நேர்த்திக் கடன்

பிரார்த்தனை, நேர்த்திக் கடன்


நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது சப்ஸ்டிட்யூட்டாக வந்த ஒரு ஆசிரியை பாடம் எதுவும் எடுக்காமல், பொதுவாக எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எல்லோரிடமும்,” கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வீர்கள்” என்று கேட்டார். பெரும்பான்மையோர் “நன்றாக படிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்வதாக சொன்ன பொழுது நான், “எதுவும் வேண்டிக்கொள்ள மாட்டேன்” என்றேன். அதற்கு அவர், “நிஜமாகவா? பெரிய விஷயம்” என்றார்.

ஆனால் நாம் எப்போதும் பத்தாம் வகுப்பு மாணவியாகவே இருந்துவிட முடியுமா என்ன? வளர, வளர நாம் எதிர்கொள்ளும் தோல்விகள், நிராசைகள், சந்திக்கும் துக்கங்கள் நம்மை வேண்டிக்கொள்ளத்தான் தூண்டுகின்றன. என்னுடைய பிரார்த்தனைகள் பெரும்பாலும் கோவிலுக்கு நடந்து செல்வது, எனக்கு பிரியமான ஏதாவது ஒன்றை அந்தக் காரியம் நடக்கும்வரை விட்டுக் கொடுப்பது என்றுதான் இருக்கும்.

என் மகன் சி.ஏ. தேர்வில் இரண்டாம் முறையும் தோற்றப் பொழுது மிகவும் மனமுடைந்து போய், “இனிமேல் என்னால் பரீட்சை எழுத முடியாது, நான் வேலைக்குச் செல்கிறேன்” என்றான். என் மகன் பட்டப் படிப்பு முடித்து விட்டுதான் சி.ஏ.வில் சேர்ந்தான். லயோலாவில் அவன் கோல்ட் மெடலிஸ்ட்! அவன் பள்ளித் தோழர்களில் பலர் ப்ளஸ் டூவிற்குப் பிறகு இஞ்ஜினீயரிங்க் முடித்து வேலையிலும் அமர்ந்து விட்டது அவனுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை தந்தது.

அப்போது எனக்கு, அவன் சி.ஏ.வில் தேர்ச்சி அடையும் வரை நமக்கு பிடித்த ஏதாவது ஒன்றை விடுகிறேன் என்று ஷிர்டி பாபாவிடம் வேண்டிக் கொள்ளலாம் என்று தோன்றியதால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் எது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

சாப்பாட்டு விஷயத்தில் இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது என்பது கிடையாது. சாக்லேட் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். ஆனால் எல்லாவற்றையும் விட ரொம்ப ரொம்ப பிடித்தது புத்தகங்கள் படிப்பதுதான். அதிலும் கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். எனவே, என் மகன் சி.ஏ.முடிக்கும் வரை கதைகள் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். அப்போது பார்த்து பாலகுமாரன் ஃபோன் செய்து, “நான் கங்கை கொண்ட  சோழன் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல். நீ நல்ல ரீடர், நன்றாக இருந்தால் நன்னா இருக்கு என்பாய், நன்றாக இல்லாவிட்டால், நன்றாக இல்லை என்று சொல்லி விடுவாய்” என்கிறார். எப்படி இருக்கும் எனக்கு? “கொஞ்ச நாள் கதைகள் படிக்க வேண்டாம் என்று இருக்கிறேன் சார்” என்றேன் கொஞ்சம் வருத்தத்தோடு.



என் மகள், “இவ்வளவு பெரிய ரைட்டர் உன்னிடம் அபிப்ராயம் கேட்பதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது. நீ கண்டிப்பாக அந்த புத்தகத்தை படித்து அதைப் பற்றி அவரிடம் சொல்லத்தான் வேண்டும்” என்று கூறி எனக்கு ‘கங்கை கொண்ட சோழன்’ எல்லா பகுதிகளையும் வாங்கித் தந்தாள். என் மகனும் அந்த முறை சி.ஏ.வில் தேர்ச்சி அடைந்து விட்டான். நான் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை படித்து முடித்து, பாலகுமாரனிடம் அதைப் பற்றிய என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.   

Wednesday, March 29, 2023

சேமிப்பு, சிக்கனம்

 சேமிப்பு, சிக்கனம்

சென்ற வாரம் மத்யமரில் கொடுக்கப்பட்ட வாராந்திர டாபிக் சேமிப்பு, சிக்கனம். 

இந்த தலைப்பில் பெரும்பாலானோர் பொருளாதார சிக்கனத்தைப் பற்றி மட்டும் எழுதியிருகிறார்கள். ஆனால் பொருளாதாரத்தை தாண்டி, தண்ணீர், எரி பொருள், மின்சாரம், போன்ற விஷயங்களிலும் சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டியது அவசியம்.

வீடுகளில் கிணறுகள் இருந்த காலத்தில் பாத்திரம் தேய்க்க, துணி தோய்க்க தண்ணீரை சிக்கனமாகத்தான் செலவு செய்வார்கள். எந்த அளவு தண்ணீர் செலவாகிறதோ அந்த அளவு காசு செலவாகும் என்று கூறுவார்கள். கிணற்றிலிருந்து நாம்தானே நீர் இரைக்க வேண்டும்? மோட்டார் போட்டு, தண்ணீர் இரைத்து, குழாயை திறந்தால் தண்ணீர் கொட்டும் என்னும் நிலை வந்த பிறகு தண்ணீர் சிக்கனம் என்பது இல்லாமல் போய் விட்டது.

குழாயைத் திறந்து வைத்துக் கொண்டு பல் தேய்ப்பது பலர் பழக்கம்(ரயில் பயணங்களிலும் சில பயணிகள் இப்படி நடந்து கொள்வார்கள்). 2015ல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது எங்கள் குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, தரை தளத்தை ஆக்கிரமித்து விட்டது. தரை தளத்து வீடுகளில் இருந்தவர்களில் ஒரு பெங்காலி தந்தைக்கும், மகளுக்கும் எங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தோம். Water water everywhere, not a drop to drink என்பது போன்ற நிலை. ஒவர்ஹெட் டாங்கில் தண்ணீர் இருந்ததால் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது, மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். கீழ் வீட்டுக்காரரோ குழாயை திறந்து விட்டுக் கொண்டு பல் தேய்க்கிறார். “ஐயா, தயவு செய்து குழாயை மூடுங்கள், தண்ணீர் சிக்க்னம், தேவை இக்கணம்” என்றதும் அவர்,   “நான் கங்கை ஓடும் பிரதேசத்திலிருந்து வருகிறேன். எங்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது” என்றார். சிக்கனம் என்பது ஒரு நாளில் வந்துவிடாது. பழக வேண்டும். சிலர் குளிக்கும் பொழுது சோப்பு தேய்த்துக் கொள்ளும் பொழுது கூட ஷவரை திறந்து வைத்துக்கொண்டு குளிப்பார்கள்.

எரி வாயு, மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்த பல குறிப்புகள் வந்துகொண்டிருப்பதால் அவற்றை இங்கே விரிவாக கூறத் தேவையில்லை என நினைக்கிறேன்.

நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய இன்னொரு சிக்கனம் வார்த்தை சிக்கனம். வளவளவென்று பேசுகிறவர்களை விட சுருக்கமாக பேசுகிறவர்களுக்கு எப்போதுமே மரியாதை அதிகம். மிகச்சிறந்த உதாரணம் திருக்குறள். எவ்வளவு பெரிய விஷயங்களை இரண்டே அடிகளில் நச்சென்று சொல்லி விடுகிறது! நவீன எழுத்தாளர்களில் சுஜாதாவின் சிறப்பு சின்ன, சின்ன வாக்கியங்கள்.

இவ்வளவு ஏன்? மூச்சை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும் என்பதுதானே யோக சாத்திரம். வேக வேகமாக மூச்சு விடுவது மூச்சை விரயம் செய்வதற்கு ஒப்பானது. காமம், கோப வசப்படும்பொழுது மூச்சு விரயமாவதால்தான் அவற்றை கட்டுப்படுத்தச் சொல்கிறார்கள்.

இந்த கட்டுரைக்கு போஸ்ட் ஆப் தி வீக் கிடைத்தது. இதை நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது யூ டியூபில் எதையோ கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வந்த மிகவும் பொருத்தமான ஒரு விளம்பரம்.  



 

Monday, March 20, 2023

ஒரு விளக்கம்

ஒரு விளக்கம்:

என்னுடைய சென்ற பதிவில் முரளி என்பவரின் மர்ம மரணம் படித்தவர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது புரிந்தது, காரணம் நான் சில தகவல்களை முழுமையாகத் தரவில்லை.  அதில் அவர் மனைவி முதல்  நாளே பேஸஞ்சர்ஸ் மேனிஃபெஸ்ட்   பார்க்காததுதான் எனக்கு உறுத்தியது. முதலில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே பேசெஞ்சேர்ஸ் மேனிபெஸ்ட் பார்த்திருக்கிறார். அதன் பிறகு போலீஸில் புகாரும் கொடுத்திருக்கிறார். ஆனால்   போலீஸ் மெத்தனமாக இருந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. திறமையாக செயல்பட்டிருந்தால் அடையாளம் தெரியாத உடலை இவருக்கு காட்டியிருப்பார்கள். 

ஒரு ஜோதிடர், உங்களுக்கு அவரைப் பற்றி செய்தி வரும் என்று கூறிய சில நாட்களிலேயே அவருடைய உடை மற்றும் பாஸ் போர்ட் பார்சலில் வந்திருக்கிறது. அதில் மிகவும் பயந்து போய் விட்டார் அவர் மனைவி. உடனேயே அவரைப் பற்றிய தகவல் மராட்டிய செய்தித் தாளில் வந்து, அவர் போலீசால் தகனம் செய்யப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. எங்கேயோ, ஏதோ தவறு நடந்திருக்கிறது, அதை தோண்டப் போய் குழந்தைகள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற பயத்தில்தான் அவர் கேஸை வாபஸ் வாங்கி விட்டார். 

அதன் பிறகு எங்களுக்கு கிடைத்த செய்தி இறந்து போன முரளி ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடு பட்டிருந்தாராம். அது கூட துர் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம், அதை அவர் மனைவி அறிவாரா? என்பதும் தெரியாது. நமக்கு சரியாக தெரியாத விஷயங்களை எழுத வேண்டாமே என்று விட்டு விட்டேன். 

Friday, March 17, 2023

கடலைக் கடந்து - 10

 கடலைக் கடந்து - 10


டிராவல் ஏஜெண்டிடமிருந்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்ட முரளி, அதை சரி பார்த்து விட்டு, மனைவிக்கு ஃபோன் செய்து, தான் ஊருக்கு வரப்போகும் நாளை உறுதி படுத்தினான்.

வளைகுடா நாடுகளிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் எல்லோரையும் போல் முரளியும் மனைவியிடம், என்ன வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று கேட்க, அவள் அப்போது(1990ன் துவக்க காலங்கள்) இந்தியாவில் கிடைக்காத நட்டெல்லா, ஃபேளவர்ட் சீஸ், குழந்தைகளுக்கு உடைகள், தனக்கு யார்ட்லி சோப், மாமியாருக்கு ஆக்ஸ் ஆயில், பாதாம், முந்திரி, குங்குமப்பூ என்று பட்டியலிட, எல்லாவற்றையும் குறித்துக் கொண்ட முரளி, அவள் கேட்காத நகை ஏதாவதும் வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

தொடரும் முன் முரளியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். பம்பாயில் கெமிகல் இஞ்சினீயரிங் முடித்த முரளி அங்கேயே ஒரு கம்பெனியில் முதலில் வேலை பார்த்தான். பிறகு ஓமானில் ஒரு பிரபலமான  கம்பெனியில் வேலை கிடைத்து வந்தது அவனுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். திருமணமாகி முதல் குழந்தைக்கு எட்டு வயதாகும் வரை ஒமானில் குடும்பதோடு வசித்தான். மனைவி இரண்டாவது முறை கருவுற்றபோது பிறக்கப் போவது இரட்டை குழந்தைகள் என்பது தெரிந்தது. மேலும் சில சிக்கல்களும் இருந்ததால், குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விட்டு, தான் மட்டும் மஸ்கட்டில் இருந்தான். பணி நிமித்தமாக அடிக்கடி இன்டீரியர் செல்ல வேண்டி வரும். ஊருக்குச் செல்லும் முன் ஒரு வாரம் அப்படி இன்டீரியரில் வேலை இருந்தது. அங்கு வேலையை முடித்து விட்டு புதன் கிழமை நகருக்குத் திரும்பி வெள்ளியன்று பம்பாய்க்கு பயணப்படலாம் என்று நினைத்தான். வியாழனன்று ஷாப்பிங் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.  

புதன் மாலை இண்டீரியரில் வேலையை முடித்துக் கொண்டு அலுவலகத்தில் விடை பெற்றுக் கொண்டு, அலுவலக வண்டியில் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டான்.

வெள்ளி இரவு ஒரு மணிக்கு ஓமானிலிருந்து புறப்படும் விமானம், பம்பாயை அதிகாலை அடைந்து விடும். இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் போன்ற சடங்குகளை முடித்துக் கொண்டு வெளியே வந்து, டாக்ஸி பிடித்தால் ஏழு மணிக்கு வீட்டை அடைந்து விடலாம்.

ஆனால் ஏழு மணிக்கு அவன் வீட்டிற்கு வரவில்லை, எட்டு மணியானது, ஒன்பது, பத்து என்று நேரம் ஓடியதே தவிர முரளி வரவில்லை. அவன் மனைவி லதாவுக்கு கவலை வந்தது. அவளுக்கு ஏனோ பேசஞ்செர்ஸ் மேனிஃபெஸ்ட் வாங்கிப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. மஸ்கட்டில் கணவனின் வீட்டு டெலிஃபோனை தொடர்பு கொண்டாள். ரிங்க் போனது, யாரும் எடுக்கவில்லை. அலுவலகத்தை தொடர்பு கொண்டாள். அவர்கள் அவன் புதன் கிழமை கேபிடலுக்கு திரும்பி விட்டான் என்றதோடு நிற்காமல், விமான நிலையத்தில் விசாரித்து அவன் வெள்ளியன்று ஓமானிலிருந்து கஸ்டம்ஸ் மற்றும் இமிக்ரேஷன் முடித்து விமானம் ஏறியதை உறுதி படுத்தினாகள். அதன் பிறகு பம்பாய் விமான நிலையத்தில் அவன் பயணம் செய்த விமானத்தின் பேசஞ்சர்ஸ் மேனிஃபெஸ்ட் பார்த்ததில் அதில் முரளியின் பெயர் இருந்தது. ஓமானிலிருந்து கிளம்பியவன் பம்பாய் வந்திருக்கிறான், ஆனால் வீடு திரும்பவில்லை. எங்கே சென்றான்? எந்த தகவலும் இல்லை. லதா பூஜைகள், ஜோசியர்கள் என்று போனாளே தவிர, போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

பதினைந்து நாட்கள் கழிந்து அவள் வீட்டிற்கு கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்சல் வந்தது. அதில் முரளியின் ஒரு பேண்ட்,ஷர்ட்,பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட் இருந்திருக்கின்றன. அனுப்பியவர் விவரம் எதுவும் இல்லை. முரளியின் குடும்பதினர்களுக்கு எதுவும் புரியவில்லை.

அந்த சமயம் அவர்கள் பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் இந்த விஷயங்களை கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் மராட்டிய தினசரி ஒன்றில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஒன்றின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, உறவினர்கள் தகுந்த ஆதாரம் காட்டி அந்த உடலை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பு வெளியானது என்று கூறியிருக்கிறார். அந்த செய்தி தாளை வாங்கி பார்த்ததில் அது முரளிதான் என்று தெரிந்திருகிறது. உடனே போலீஸை அணுகியதில்,“இத்தனை நாட்களாக யாரும் க்ளைம் செய்யாததால், நாங்களே எரித்து விட்டோம்” என்றார்களாம்.

என்ன கொடுமை பாருங்கள்? முரளி எப்படி இறந்தான்? விபத்தினாலா? அல்லது கொலை செய்யப்பட்டனா? கொலை என்றால் என்ன காரணம்? இப்படி எதுவுமே தெரியாது. அவன் மனைவி அந்த கேசை தோண்ட வேண்டாம் என்று கூறி விட்டாள்.

எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளித்த மரணம் இது. முரளியைத் தெரியும். நெருங்கிய நட்பு என்று கூற முடியாவிட்டாலும் பழக்கம் உண்டு. நாங்கள் அறிந்த வரையில் நாகரீகமானவர். இந்த மாதிரி மரணங்களில் என்னென்னவோ புரளிகள் வருமே, அது போல முரளியைப் பற்றியும் அவர் ஹவாலா பணப்பறிமாற்றம் செய்தார் என்று செய்திகள் வந்தன. நாங்கள் அவற்றை புறம் தள்ளி விட்டோம்.

இது இப்படி என்றால், இன்னொருவர் குடும்பம் இந்தியாவில் இருந்தது, அவர் மட்டும் தனியாக மஸ்கட்டில் இருந்தார். காலை அலுவலகத்திற்கு சென்று விட்டு, உணவு இடைவேளையின் பொழுது வீட்டிற்கு வந்தவர் உணவு இடைவேளைக்குப் பிறகு அலுவலகம் திரும்பவில்லை. அலுவலகத்தில் அதை பெரிதாக நினைக்கவில்லை. மறுநாளும் அவர் அலுவலகதிற்கு வரவில்லை, எந்த தவலும் அவரிடமிருந்து இல்லை, என்றதும் அலுவலகத்திலிருந்து அவரை ஃபோனில் அழைத்திருக்கிறார்கள், ஃபோன் எடுக்கப்படவில்லை, மதியம் ஒரு முறை அழைத்திருக்கிறார்கள், அப்போதும் பதில் இல்லை, ஏதோ தவறாக இருக்கிறதே? இப்படி சொல்லாமல், கொள்ளாமல் லீவு போடுகிறவர் இல்லையே? என்ற சந்தேகத்தோடு அவர் வீட்டு கதவை உடைத்துப் பார்த்தால், சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே மரணத்திருக்கிறார்.

இப்படிபட்ட செய்திகளை கேள்விப்படும்பொழுதெல்லாம் ‘திக்’கென்றிருக்கும். கடவுளே! நான் இந்த ஊருக்கு பயணியாகத்தான் வந்தேன், பயணியாகவே திரும்பச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத் தோன்றும்.   

 

 

  

Wednesday, March 1, 2023

விந்தை உலகம்!

விந்தை உலகம்!

என் மகன், மருமகள் இருவரும் தொலைகாட்சியில் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி 'ஷார்க் டேங்க்'. இதில் சிறு தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பற்றி தெரிவித்து, அதற்கு முதலீட்டார்களை பிடிக்க வேண்டும். நடுவர்களாக வந்திருக்கும் தொழிலதிபர்கள் இவர்களிடம் நிறைய கேள்விகளை கேட்பார்கள், அவர்களுக்கு திருப்தியானால் முதலீடு செய்ய முன்வருவார்கள். பேரங்களும் நடக்கும். 

அதில் ஒரு இளம் பெண் தான் பெண்டெண்டுகள் செய்து தருவதாக கூறினார். எல்லாம் விலை உயர்ந்த பதக்கங்கள். விலை உயர்வுக்கு காரணம் அவை எக்ஸ்க்லூசிவ்! மேலும் சாதரணமாக பதக்கங்கள் என்றால் வைரம், வைடூர்யம், போன்றவைதானே நமக்குத் தெரியும்? இவர் தாய்ப்பால், ரத்தம் போன்றவைகளை உறையச் செய்து, அதில் நாம் விரும்பும் உருவங்கள், படங்கள் இவைகளை பதித்துக் கொடுப்பாராம். இவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார். அது மட்டுமல்ல, ஆணின் விந்துக்களில் கூட லாகெட் செய்து தரச் சொல்லி சிலர் கேட்கிறார்களாம்.  இதை அவர் கூறியதும், நடுவர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அனுபம் மிட்டலின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே..!  

(எங்கள் கேள்வி : சமீபத்தில் நீங்கள் பார்த்த / படித்த / கேள்விப்பட்ட வித்தியாசமான செய்தி எது?) - இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படவில்லை. இருந்தாலும் இதை பார்த்ததும் எனக்கு நினைவில் வந்ததை பகிர்ந்து கொண்டிருகிறேன்.

***************************************************************************************************************

ஸமீபத்தில் ரசித்த திரைப்படம் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி'  



வரிசையாக, ரத்தக்களரி, பிரும்மாண்டம், துப்பாக்கி சூடு என்றே படங்களை பார்த்து அலுத்த கண்களுக்கு ஒரு நல்ல மாற்று 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' நேற்று ஓ.டி.டி.யில் பார்த்தேன்.  

நடுக்காவேரி என்னும் சின்ன கிராமத்தில் இருக்கும் குறும்புக்கார கமலி என்னும் பெண், சி.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த அஸ்வின் என்னும் மாணவன், தொலைகாட்சியில் பேட்டி கொடுப்பதை பார்த்து விட்டு அவனிடம் மனதை பறி கொடுக்கிறாள். அவன் ஐ.ஐ.டி. மெட்றாஸில் படிப்பதை அறிந்து, தானும் அங்கு சேர  என்று ஆசைப்படுகிறாள்.  ஐ.ஐ.டி. என்பது என்ன? அதன் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராவது போன்ற விஷயங்களைத் அறிந்து கொண்டு, ஒய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர்(பிரதாப் போத்தன்) பயிற்சி அளிக்க ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் 258வது ரேங்க் எடுத்து, ஐ.ஐ.டி. மெட்ராஸில் கம்பியூட்டர் சயின்ஸ் கிடைத்து சேருகிறாள். முதல் நாள்,தன் ரூம் மெட்டான, நல்ல ரேங்க் கிடைக்காததால் கெமிக்கல் இன்ஜினீயரிங் கிடைத்த கடுப்பில் இருக்கும் நகரத்து பெண்ணிடம், வெள்ளந்தியாக, தான் ஒரு பையனை காதலிப்பதாகவும், அவனைக் காணவே  அங்கு வந்திருப்பதாகவும் கூறி விடுகிறாள். அந்தப் பெண் இவளுக்கு சிண்ட்ரெல்லா என்று பெயர் வைத்து, அதை எல்லோரிடமும் பரப்பி விடுகிறாள். 

இதற்கிடையில் அந்த மாணவனை பார்த்து விட்ட கமலி, அவனை தொடர்வதிலும், கனவு காண்பதிலும் தி நேரத்தை வீணாக்க, முதல், வகுப்புத்  தேர்வில் எல்லாப் பாடங்களிலும் 
தோற்கிறாள். ஆசிரியர் அவளிடம், " நல்ல ரேங்க் வாங்கி இங்கு வந்திருக்கும் உனக்கு என்ன பிரச்னை?" என்று வினவ, ஒரு மாணவி,"அவள் இங்கு படிக்க வரவில்லை, தன் காதலனைத் தேடி வந்திருக்கிறாள்" என்று கூறுகிறாள். இந்த செய்தி காம்பஸ் முழுவதும் பரவுகிறது. எல்லோரும் கேலி செய்யும் சிண்ட்ரெல்லா தான்தான் என்பது அவளுக்குத் தெரிய வந்து மிகவும் அவமானப்படுகிறாள். யாரைத் தேடி அவள் அங்கு வந்தாளோ  அவனே அவளை இது குறித்து கேலியாக பேசுவதை கேட்க நேர்ந்து, மனம் உடைந்து, படிப்பை தொடர விருப்பமின்றி  ஊர் திரும்புகிறாள். அங்கு இவளை முன் மாதிரியாகக் கொண்டு இன்னும் சில மாணவிகளுக்கு, இவளுக்கு பயிற்சி அளித்த பேராசிரியர் பயிற்சி கொடுப்பதை பார்த்து தான் இனிமேல் செய்ய வேண்டியது என்ன என்பதை உணர்ந்து, கல்லூரிக்குத் திரும்பும் அவள் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவதோடு, ஆல் இந்தியா ஐ.ஐ.டி. வினாடி வினாவில் கலந்து கொள்ள தேர்வாகி, அதே அஸ்வினோடு டில்லி வரை பயணித்து, அங்கு வெற்றி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறாள். திரும்பி வரும்பொழுது அஸ்வின் அவளிடம்,"நான்தானே அது?" என்று கேட்க, அவள் நாணி,காணாமல், அல்லது புளகாங்கிதமடையாமல் "மே பி" என்று கூறுவதோடு படம் முடிகிறது. 

இந்தப் படத்தில் பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள் கிடையாது, தனி காமெடி ட்ராக் கிடையாது, குத்துப் பாட்டு கிடையாது, ஆடம்பரமான செட்டுகள் கிடையாது. மிகவும் இயல்பான அமைதியான, அழகான நிலைக்களன்(எங்கள் ஊருக்கு அருகில்), யதார்த்தமான மனிதர்கள், இயல்பான வசனம், எல்லாவற்றுக்கும் மேலாக படித்த பெண், படிக்காத ரௌடியை காதலிக்கிறாள்  என்னும் அபத்தம் கிடையாது. மலையாள படங்களுக்கு நிகரான தமிழ்ப் படம். Zee5 ல் பார்க்கலாம்.   

ஆனந்தி(பரியேறும் பெருமாளில் நடித்தவர்), ரோஹித் சராஃப், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி போன்றவர்கள் நடித்திருக்கும் படத்தை இயக்கியிருக்கும் ராஜசேகர் துரைசாமிக்கு இது முதல் படமாம். நல்ல முயற்சி!



Monday, December 26, 2022

ஆன்லைன் அலப்பறைகள்!

 ஆன்லைன் அலப்பறைகள்!


எழுபதுகளின் துவக்கத்தில்தான் திருச்சியில் முதன்முதலாக சிந்தாமணி சூபர் மார்கெட் வந்தது. அதுவரை செட்டியார் அல்லது நாடார் கடைகளில் மளிகை சாமாங்களை வாங்கிய மக்களுக்கு பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்யபட்ட துவரம் பருப்பு, கடலைப் பருப்பு எப்படி இருக்குமோ? என்ற சந்தேகம் இருந்தது.  

அப்போதெல்லம், ஏன் எண்பதுகளில் கூட வருடாந்திர சாமான் என்று ஒரு வருடதிற்கு தேவையான பருப்பு, புளி, மிளகாய் வற்றல், போன்றவற்றை மொத்தமாக பங்குனி, அல்லது சித்திரை மாதங்களில் வாங்கி வெய்யிலில் காய வைத்து, பரணில் பெரிய பானைகளில் வைத்து அவ்வப்பொழுது எடுத்து பயன் படுத்துவார்கள். வீடுகள் சிறியதாக ஆக பரண் என்னும் சங்கதி வழக்கொழிந்து போனது. இப்போதைய லாஃப்டுகள் பரணுக்கு அருகே வர முடியாது.      

அதன் பிறகு மாதந்திர சாமான்கள் வாங்கும் வழக்கம் வந்த பொழுது, நாடார் கடைகளில் பேப்பரை கூம்பு வடிவத்தில் செய்து அதில் மடித்து தரும் து.பருப்பு, க.பருப்பு, ப.பருப்புகளை கையால் தொட்டுப் பார்த்து வாங்குவதில் கிடைக்கும் திருப்தி, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சீல் செய்யப்பட்டு விற்கப்படும் பண்டங்களை வாங்குவதில் இல்லை என்று அப்போது நினைத்தார்கள். நாளடைவில் நாடார் கடைகளிலும் நெகிழி பைகளே உபயோகத்திற்கு வந்தன.

அதைப் போலத்தான் ஆன் லைன் வர்தகங்கள். 55+ல் இருக்கிறவர்கள் வேண்டுமானால் ஆன் லைன் வியாபாரத்தில் விருப்பம் காட்டாமல் இருக்கலாம். இளைய தலைமுறை பெரும்பாலும் ஆன் லைன் வர்த்தகத்தைத்தான் விரும்புகிறார்கள். அதுவும் கொரோனா உபயத்தால் ஆன்லைனுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். எங்கள் உறவில் ஒருவர் அமெரிக்காவில் வசிக்கிறார். சமீபத்தில் தன் மகனுக்கு  திருமணத்தை அங்கேயே நடத்தினார். கல்யாண ஜவுளி, நகை எல்லாவற்றையும் ஆன் லைனிலேயே முடித்து விட்டாராம்.   

எங்கள் வீட்டைப் பொருத்தவரை இப்போதெல்லம் எல்லாம் ஆன் லைனில்தான். போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட வேண்டாம். இரண்டு மூன்று சைட்டுகளில் விலையை ஒப்பிட்டு பார்த்து ஆர்டர் செய்கிறார்கள். பொருள்கள் தரமாக இருக்கின்றன. காய்கறிகள் கூட நன்றாகத்தான் இருக்கின்றன. மேலும் காய்கறிகளை கொடுத்து விட்டு,” நன்றாக இருக்கிறதா? என்று செக் பண்ணிக் கொள்ளுங்கள், உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால் வேறு மாற்றிக் கொண்டுவந்து தருகிறோம்” என்பதோடு அவர்களின் கைபேசி எண்ணை தந்து விட்டு, “தயவு செய்து இந்த எண்ணிற்கு போன் பண்ணுங்கள், காய்கறிகள் சரியில்லையென்று அலுவலகத்திற்கு போன் பண்ணி விடாதீர்கள், எங்கள் வேலைக்கு பிரச்சனையாகிவிடும்” என்று ஒருவர் கூறியபொழுது கஷ்டமாக இருந்தது.

மகன் வரவழைத்த ஜம்போ சைரஸ் சாம்பிராணி கூம்பும் புகை படர்ந்திருக்கும் எங்கள் வீடும் 

சமீபத்தில் என் மகன் சாம்பிராணி கூம்பு ஆன் லைனில் ஆர்டர் பண்ணிய பொழுது ஜம்போ சைஸ் என்பதை கவனிக்கவில்லை. அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு சிறிய பூ தொட்டி போல சாம்பிராணி கூம்பு! அதை ஏற்றி வைத்தால் வீடு ஏதோ பூத் பங்களா செட் போட்டது போல ஆகி விடுகிறது. வெளி நாடுகளாக இருந்தால் fire alarm அலறியிருக்கும். இப்படி சில பாதகங்கள்.  

புது வருடம் பிறக்கப் போகிறது. எனக்கு டெய்லி ஷீட் காலண்டர் அவசியம் வேண்டும். மகன், மகள் குடும்பத்திற்கு காலண்டர் அனாவசியம். செல்ஃபோன் இருக்க காலண்டர் எதற்கு?” என்பார்கள். எனக்கு காலை எழுந்து, பல் தேய்த்தவுடன் அந்த தேதியை கிழிக்க வேண்டும். அதில் வெறும் தேதி மட்டுமா இருக்கிறது? நட்சதிரம், திதி, போன்றவைகளையும் தெரிந்து கொள்ளலாமே?

அன்று இந்திராநகர் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு அருகில் இருக்கும் திப்பஸந்திராவில் தமிழ் காலண்டர்கள் கிடைக்கும் என்பதால் அங்கு சென்று காலண்டர் வாங்கி வரலாம் என்றேன். மகனும்,மருமகளும் சிரித்து விட்டு, “ஆன்லைனிலேயே ஆர்டர் பண்ணலாம்” என்று கூறியதோடு, மருமகள் உடனே ப்ரௌஸ் பண்ணி என்னிடம் காட்டி,”உங்களுக்கு எந்த மாதிரி வேண்டும்?” என்று கேட்டு, உடனே ஆர்டர் செய்தாள். இரண்டு நாட்களுக்குள் வந்து விட்டது.

ஆன்லைனில் வந்த காலண்டர்.

அப்பா அம்மா தவிர பாக்கி அத்தனையையும் ஆன் லைனில் வாங்கிவிடலாம். என்றாள் மறுமகள். அதையும்தான் வாங்கிவிட முடிகிறதே.. சர்ரகேட் மதர்!!


Tuesday, December 6, 2022

தப்பிச்சேண்டா சாமி

 தப்பிச்சேண்டா சாமி

நாங்கள் பெங்களூர் வந்த புதிது, ஹொரமாவு என்னும் இடத்தில் இருந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகில் மெயின் ரோடில் ஒரு‌ கடையில் ஃப்ரெஷ் காய்கறிகள் புதன்கிழமையன்று வரும். நான் புதனன்று அங்கு சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பக்கத்தில் ஒரு கடையில் மங்கையர் மலர், சிநேகிதி போன்ற புத்தகங்களையும் வாங்கி வருவேன்.
எங்கள் அப்பார்ட்மெண்டிலேயே என் நாத்தனாரின் பெண்ணும் இருந்தாள். அவளுடைய ஸ்கூட்டரில் தான் செல்வேன். அப்பொழுது அங்கு அண்டர் பாஸ்(நாம் சப்வே என்பதை பெங்களூரில் அண்டர்பாஸ் என்கிறார்கள்) கட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான் எப்போதும் போல் ஒரு பெரிய கட்டைப் பை நிறைய காய்கறிகள் வாங்கி அதை ஸ்கூட்டியின் முன் பக்கத்தில் வைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தேன். அண்டர்பாஸ் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த இடமே குண்டும் குழியுமாக இருந்தது. இடது பக்கம் பெரிய பள்ளம். தோண்டப்பட்டிருந்தது. என்னைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. நான் ப்ரேக் போட்டு இடது காலை ஊன்றிக் கொள்ளலாம் என்றால் பள்ளம், வலது காலை ஊன்றினேன். இடது பக்கம் அளவிற்கு பள்ளமாக இல்லாவிட்டாலும் பள்ளம்தான். வலது பக்கம் அதிகமாக சரிய, பேலன்ஸ் இழந்த நான் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோவிற்குள் விழுந்து விட்டேன். ஆட்டோ டிரைவர் ப்ரேக் பிடித்து வண்டியை நிறத்தியதால் தப்பித்தேன். ஆட்டோவில் பயணித்த பெண்மணி என்னை தாங்கி கொண்டதாலும் அடி படாமல் தப்பித்தேன்.
நான் ஆட்டோவிற்குள் விழாமல் அதற்கு முன்னால் விழுந்திருந்தாலோ, வந்தது ஆட்டோவாக இல்லாமல் காராக இருந்திருந்தாலோ மிகப் பெரிய விபத்தை சந்தித்திருப்பேன். இறையருளால் தப்பித்தேன்.

Saturday, December 3, 2022

ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் ஜே.பி.நகர், பெங்களூர்

 ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் 
ஜே.பி.நகர், பெங்களூர் 


சமீபத்தில் மத்யமர் மூலம் அறிமுகமானவர்களில் ஒருவர் ரேவதி ஜானகிராமன். இந்தியன் வங்கியில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலகல, பரபர, சுறுசுறு வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு கொஞ்சம்  அருகாமையில் இருக்கிறார். ஓலா ஆட்டோவில் சென்றால் ரூ,130 ஆகும். 

சென்ற வாரம் சந்தித்தப் பொழுதே கோவில்கள் எங்காவது சேர்ந்து செல்லலாம் என்றார்.  "3.12.22, சனிக்கிழமை, ஏகாதசி இரண்டும் சேர்ந்து வருகிறது, கார்த்திகை மாதத்து ஏகாதசியை குருவாயூர் ஏகாதசி என்பார்கள், எனவே அருகில் ஏதாவது குருவாயூரப்பன் கோவில் இருந்தால் போகலாமா?" என்று கேட்டேன். 

அவர் குருவாயூரப்பன் கோவிலுக்கு பதிலாக ஜே.பி.நகரில் இருக்கும் லட்சுமி வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலுக்குச் செல்லலாமா? என்று கேட்டார். ஏதோ ஒரு பெருமாள் கோவில் ஓ.கே. என்று சொல்லி விட்டேன். 

காலை எட்டரைக்குள் கோவிலில் இருக்கும்படி வரச் சொன்னார். எங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்ல நாற்பது நிமிடங்களாகும் என்று கூகுள் சொன்னாலும், ஒரு மணி நேரம் ஆனது. 

கோவில் ரொம்ப பெரியது என்று சொல்ல முடியாது, ஆனால் விநாயகர், யோக நரசிம்மர், வெங்கடேச பெருமாள், லக்ஷ்மி, பள்ளிகொண்ட பெருமாள் மூர்த்தங்கள் பெரிதாகத்தான் இருக்கின்றன. 


முதலில் விநாயகர், ஆஞ்சநேயர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சந்நிதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை பிரதி எடுத்ததை போன்றே இரண்டு கரங்கள், வலது கரத்தில் சிவலிங்கத்தோடு காட்சி அளிக்கிறார். இன்று வெள்ளிக்கவசம் சாற்றியிருந்தார்கள். 

ஆஞ்சநேயரும், கிருஷ்ணரும் அளவில் சற்று சிறிய மூர்த்தங்கள். காளிங்க நர்தனருக்கு கீழே வேலோடு முருகன்!! ஆச்சர்யமாக இருந்தது.

அந்த சன்னதிகளில் தரிசனம் செய்து விட்டு பள்ளிகொண்ட பெருமாள் சன்னதிக்கு பிரதட்சிணமாக சென்றால் வலது பிரகாரத்தில் ஒரு சிறிய ஜன்னல் போன்ற அமைப்பின் வழியாக பெருமாளின் திருவடியை மட்டும் சேவிக்க முடிகிறது.(நவதிருப்பதிகளில் ஒரு கோவிலில் இப்படியிருக்கும்). சயனித்திருக்கும் பெருமாளின் காலடியில் மஹாலக்ஷ்மி தாயாரும், ஆண்டாளும் எழுந்தருளியிருக்கிறார்கள்.  


இந்த தரிசனங்களை முடித்துக் கொண்டு வெங்கடேச பெருமாளின் சந்நிதிக்கு வருகிறோம். சாஷாத் திருப்பதி பெருமாள். சங்கு, சக்கரம், வட்சஸ்தலம், வெள்ளியில் யக்னோபவீதம்(பூணூல்), சாளக்கிராம மாலை, என்று அற்புதமாக காட்சியளிக்கிறார். 

ரேவதியின் மகன் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கி வைத்திருந்தார். எனவே உட்கார்ந்து உற்சவருக்கு நடந்த பால் அபிஷேகம்  பார்க்க முடிந்தது. அர்ச்சனை, தீபாராதனை முடிந்து ஸ்வாமிக்கு வெகு அருகில் சென்று தரிசிக்க அனுமதித்தார்கள். பெருமாளின் காலடியில் சிறிய கருடாழ்வாரையும் தரிசிக்க முடிந்தது. பெருமாளுக்கு அடுத்து தனி சந்நிதியில் தாயாரையும் தரிசித்து வெளியே வந்தோம். சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஒரு டப்பா நிறைய புளியோதரை பிரசாதம் கொடுத்தார்கள். மனதிற்கு நிறைவைத் தந்த தரிசனம்!


ரேவதியும் நானும் 

Monday, November 7, 2022

பேத்திகளின் அலப்பறைகள்

பேத்திகளின் அலப்பறைகள்:

என் பேத்தியின் தோழி ஒரு நாள் ப்ளே டேட்டிற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அதாங்க ஃபிரண்ட் வீட்ல போயி விளையாடுவதை தான் அங்கே பிளே டேட் என்கிறார்கள் இரண்டு பேரும் விளையாடிவிட்டு சாப்பிட வந்தார்கள். என் பேத்தியின் தோழி சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு காய்கறிகளை சாப்பிடவில்லை உடனே என் பேத்தி என்னிடம், "விச் காட் கிவ்ஸ் அஸ் ஃபுட்?" என்று கேட்டாள். நான் அன்னபூரணி என்றேன் உடனே அவள் தன் தோழியிடம்,"இப் யு டோன்ட் ஈட், அன்னபூரணி வில் கர்ஸ் யூ" என்றாள். அந்த குழந்தை உடனே "அன்னபூரணி கிவ்ஸ் அஸ் ரைஸ் ஒன்லி ஐ ஏட் ரைஸ்" என்றதும் என் பேத்தி அவளிடம், "தட் இஸ் ஹாஃப்
அன்னபூரணி ஒன்லி, யு ஹவ் டு ஈட் வெஜிடபிள்ஸ் ஆல்ஸோ" என்றாளே பார்க்கலாம் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
*******""
எங்கள் வீட்டில் நாளைக்கு என்று சொல்ல மாட்டோம். பிச்சைக்காரனுக்கு என்றுதான் கூறுவோம். உதாரணமாக "நாளைக்கு கோவிலுக்கு போகலாம் என்பதற்கு பதிலாக "பிச்சைக்காரனுக்கு கோவிலுக்கு போகலாம்" என்போம். சமீபத்தில் என் பேத்திக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு முதல் நாள் அவளோடு தொலைபேசியில் பேசிய பொழுது, "பிச்சைக்காரனுக்கு உனக்கு பர்த்டே வா?" என்று கேட்டேன் அவள், "நோ பாட்டி நாளைக்கு எனக்கு தான் பர்த்டே பிச்சைக்காரனுக்கு இல்லை" என்றாள். பிச்சைக்காரனுக்கு என்று ஏன் சொல்கிறோம் என்று சில வருடங்கள் கழித்து அவளுக்கு விளக்க வேண்டும். 
*****
இரண்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் என் இன்னொரு பேத்திக்கு சில சமயங்களில் வாயில் விரல் போட்டுக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று நினைத்த என் மகனும் மருமகளும் ஒருநாள் அவள் கட்டை விரலில் காபி பவுடரை தடவி விட்டார்கள் அது காபி பவுடரை ருசித்து விழுங்கிவிட்டு, மீண்டும் தடவுவதற்காக  விரலை நீட்டியதும்  இவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. 

இன்னொரு முறை என் மகன் மருமகளிடம், "நான் வாயில் விரல் போட்டுக் கொள்கிறேன் நீ என் விரலை எடுத்து விட்டு அவளிடம், "பாரு அப்பா வாயிலிருந்து விரலை எடுத்து விட்டார் நீயும் வாயில் விரல் போட்டுக் கொள்ளக் கூடாது" என்று சொல்லு என்று கூறிவிட்டு அவன் வாயில் விரலை போட்டுக் கொண்டான் என் மருமகள் என் மகனின் விரலை எடுத்து விட்டு பேத்தியிடம், பார் அப்பா "வாயிலிருந்து விரலை எடுத்து விட்டார்" என்று கூறியதும், என் பேத்தி என் மருமகளின் கையை சட்டென்று இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் இவர்கள் இரண்டு பேருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
******

Monday, October 3, 2022

கொலுவின் பரிணாமம்

 கொலுவின் பரிணாமம் 

எங்கள் வீட்டு குட்டி கொலு 

நவராத்திரி என்பதில் ஆஷாட நவராத்திரி,சாரதா நவராத்திரி, பௌஷ்ய அல்லது மக நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று நான்கு இருந்தாலும், வட இந்தியாவில் வசந்த நவராத்திரியும், தென்னிந்தியாவில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு சாரதா நவராத்திரி துவங்குகிறது. இதில் பொம்மை கொலு என்று மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப் படையில் படிகளை அமைத்து அதில் பொம்மைகளை வைத்து வழிபடுவது என்பது தமிழ் நாட்டில் மட்டுமே இருக்கும் பழக்கம் என்று நினைக்கிறேன். 

இந்த பொம்மை கொலு வைக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது என்று சரியாகத் தெரியவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கியிருக்கலாம். முதலில் மரப்பாச்சி பொம்மைகள் வைப்பதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்போதும் கூட கண்டிப்பாக இரண்டு மரப்பாச்சி பொம்மைகளையாவது வைக்க வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். எங்கள் அப்பா முதலில் மரப்பாச்சியைத்தான் வைக்க வேண்டும் என்பார். அதை இன்று வரை நாங்கள் கடை பிடிக்கிறோம். 

எங்கள் தாத்தா வீட்டு பொம்மைகளெல்லாம் இரண்டு அடி உயரம். அப்போதைய கிராமத்து வீடுகளின் பெரிய கூடங்களுக்கு ஏற்ப பெரிய பொம்மைகள், அவற்றை வைக்க பிரும்மாண்ட படிகள். அதற்கு அடுத்த கால கட்டத்தில் நகரத்து வீடுகளுக்கு ஏற்ப ஒரு அடியாக குறைந்தன. அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்ததும் பொம்மைகளும் சிறியதாகி விட்டன.  இப்போது எடை குறைந்த, சுலபத்தில் பொருந்தக்கூடிய ஃபைபர் படிகள் வந்து விட்டன. 

அப்போதெல்லாம் பெரும்பான்மையான வீடுகளில் கொலுப்படிகள் கிடையாது, வீட்டில் இருக்கும் பலகைகள், பெஞ்சுகள், ட்ரம்கள், அட்டைப் பெட்டிகள், போன்றவற்றைக் கொண்டு படிகளை கட்டுவார்கள். சில சமயம் "அம்மா அது என்னோட புக்.." என்று நாங்கள் அலறுவதை பொருட்படுத்தாமல்  முட்டுக் கொடுக்க எங்கள் புத்தகங்களைக் கூட  அம்மா எடுத்துக் கொண்டு விடுவாள்.  

அப்போதெல்லாம் கொலு வைப்பார்களே தவிர ஒரு சில வீடுகளைத் தவிர பெரும்பாலானோர்  பேக் ட்ராப் என்பதை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அலங்காரங்களும் குறைவுதான். 

எழுபதுகளின் துவக்கத்தில் அழகான கொலுவிற்கு பரிசு கொடுக்கும் பழக்கம் துவங்கியது. அதன் பிறகே தோரணங்கள் கட்டுதல், டிஸ்கோ அலங்காரம் போன்றவை நவராத்திரி கொலுவில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. தீமட்டிக் கொலு என்னும் கான்செப்ட் வந்தது.

அப்போதெல்லாம் வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழத்தோடு நியூஸ் பேப்பரில் மடித்துக் கொடுக்கும் சுண்டல் மட்டுமே. பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு என்று துவங்கும் சுண்டல் மெதுவாக வெல்லம் போட்டு காராமணி சுண்டல், புட்டு அல்லது ஒக்காரை, பட்டாணி என்று மொமண்டத்தை எட்டி, கொத்துக் கடலை சுண்டலோடு முடியும். கொத்துக் கடலையும் அப்போதெல்லாம் கருப்பு கொத்துக் கடலை தான் இப்போது போல வெள்ளை காபூலி சன்னா கிடையாது. 

இப்போது சோஷியல் மீடியாக்களில் நவராத்திரியின் 
முதல் நாள் என்ன கலரில் உடை அணிந்து கொள்ள வேண்டும், இரண்டாம் நாள் என்ன கலரில் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று வருகின்றன. பெண்களும் அந்தந்த கலரில் புடவை கட்டிக்க கொண்டு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்கிறார்கள். 

அதைப்போல இப்போது நவராத்திரி கிஃப்ட் என்று கொடுப்பது போல் முன்பெல்லாம் கொடுக்க மாட்டார்கள். தாம்பூலத்தோடு கண்ணாடி, சீப்பு , ரவிக்கைத் துணி இவைகள் வைத்து கொடுப்பது நலம் என்பதால் அவைகளை வைத்துக் கொடுக்க ஆரம்பித்தார்கள், அந்த ரவிக்கைத் துணி சுற்றி வரத் தொடங்கியதாலும், இப்போது வரும் புடவைகளில் ரவிக்கையும் சேர்ந்து வருவதாலும் அதை தவிர்த்து விட்டு வேறு ஐட்டம்களுக்குத் தாவினார்கள். முதலில் எவர்சில்வர் கிண்ணங்களை கொடுத்தார்கள், இரும்பு தானம் செய்வது நல்லதில்லை என்று சொல்லப்பட்டதால் இப்போது பிளாஸ்டிக் கிண்ணங்கள், தட்டுகள், டப்பாக்கள், ஃபைபரில்  குட்டி குட்டி சுவாமி  விக்கிரகங்கள் இவற்றைத் தருகிறார்கள். எவ்வளவு ஸ்வாமி விக்கிரகங்களை வீட்டில் வைத்துக் கொள்ள முடியும்? பழையபடி வெற்றிலை பாக்கு, பழம், சுண்டலோடு நிறுத்திக் கொள்ளலாம். 

ரேவதி பாலாஜி வரைந்திருப்பது போல முன்பெல்லாம் சிறு பெண்கள் அழகாக பாவாடை,சட்டை அணிந்து கொண்டு எல்லா வீடுகளுக்கும் சென்று,"எங்காத்துல கொலு வெச்சிருக்கோம், வெற்றிலை பாக்கு வாங்கி கொள்ள வாங்கோ என்று அழைத்து விட்டு, தெரிந்த இரண்டு பாடல்களையே எல்லா வீடுகளிலும் வெட்கப்படாமல் பாடி வெற்றிலை பாக்கு, சுண்டல் வாங்கி கொண்டு வருவார்கள். நாங்களெல்லாம் அப்படித்தான் செய்தோம். துணைக்கு சகோதர்களை அழித்துச் செல்வதுண்டு. அவர்கள் உள்ளே வராமல் வாசலிலேயே அமர்ந்து கொள்வார்கள். மாமிகள் அவர்களுக்கு சுண்டல் மட்டும் கொடுப்பார்கள். கிருஷ்ணர், ராதை, பட்டு மாமி என்றெல்லாம் வேஷங்கள் போட்டுக் கொள்வதுண்டு. 

இப்போது எந்தக் குழந்தையும் அப்படி அழைக்கச் செல்வதில்லை. சில வருடங்களுக்கு முன்பு எந்த நாளில் தாம்பூலத்திற்கு வர வேண்டும் என்று போஸ்ட் கார்டில் அழைப்பு விடுத்தார்கள். இப்போது வாட்ஸாப்பில் அழைக்கிறார்கள். 

பல மாநிலத்தவர்களும் வாழும் எங்கள் குடியிருப்பு போன்ற இடங்களில் தாண்டியா போன்ற நிகழ்ச்சிகளில் எல்லா மாநிலத்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். அதற்கான பயிற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. 

ஒரு பக்கம் பூஜை, இன்னொரு பக்கம் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது, அவர்களை நம் வீட்டிற்கு அழைப்பது, வீட்டையும், தன்னையும் அழகாக அலங்கரித்துக் கொள்வது, ரங்கோலி, அழகான கோலம் இவைகள் வரைவதன் மூலம் தன்  திறமையை காட்டுவது, பாட்டுப் பாடுவது, விதம் விதமாக சுண்டலும், சிற்றுண்டிகளும் செய்வது போன்ற பெண்களின் பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறப்பான  கொண்டாட்டம்  நவராத்திரி.  மாறுதல்களுக்கு உட்பட்டாலும், நவராத்திரி என்னும்  இந்த அழகான, பண்டிகை தொடர்ந்து கொண்டாடப்படுவது சந்தாஷம்தான். 

Sunday, September 11, 2022

விருத்தாசலம் விசிட்டும், மத்யமர் மீட்டும்

 விருத்தாசலம் விசிட்டும், 

மத்யமர் மீட்டும்

எனக்கு ஒரு பிராது கொடுக்க வேண்டியிருந்தது, அட! மத்யமரில் இல்லைங்க, விருத்தாசலத்தில் குடி கொண்டிருக்கும் கொளஞ்சியப்பரிடம். அதற்காக பெங்களூரிலிருந்து நானும், என் மகனும் செல்லலாம் என்று 
முடிவெடுத்த இரண்டு நாட்களிலும் செல்ல முடியவில்லை. ஆறாம் தேதி மாலை சென்னையிலிருக்கும் என் சினேகிதி ஒருவர் ஃபோனில் அழைத்து, அவரும் இன்னொரு தோழியும் எட்டாம் தேதி கொளஞ்சியப்பர் கோவிலுக்கு செல்ல விருப்பதாகவும், விரும்பினால் நானும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதனால் ஏழாம் தேதி பகல் 11:50 பஸ்ஸுக்கு டிக்கெட் புக் பண்ணி கொடுத்தார் மகன். 

சாதாரணமாக இரவில் கிளம்பும் பேருந்துகள் எலக்ட்ரானிக் சிட்டிக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் வரும். இது பகல் நேரம் என்பதாலோ என்னவோ அன்று டாணென்று வந்து விட்டது. ஆனால் (மிகப்பெரிய ஆனால்) 6:45க்கு வடபழனியை அடைய வேண்டிய பஸ் எட்டே முக்காலக்குத்தான் வட பழனியை அடைந்தது. வழியில் மழை மற்றும் வாகன நெரிசல் தாமதத்திற்கு காரணம் என்றார்கள். நான் கிண்டியில் இறங்கி வேளச்சேரியில் இருக்கும் என் தோழியின் வீட்டை அடையும் பொழுது கிட்டத்தட்ட பத்து மணியாகி விட்டது. 

மறுநாள் காலை 5:30க்கு கிளம்பினோம். வழியில் காலை உணவை முடித்துக் கொண்டோம். இதற்கிடையில் நான் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் செல்லப்போவதை ஒரு காலத்தில் விருத்தாசலத்தில் வசித்த மத்யமராகிய திருமதி.சியாமளா வெங்கட்ராமன் அவர்களிடம் கூறியிருந்தேன். அவர் தற்சமயம் அங்கு வசிக்கும் மத்யமராகிய சந்திராவிடம் தெரிவித்திருக்கிறார்.  அவர் நான் பெங்களூரிலிருந்து வரும் பொழுதே என்னை கை பேசியில் அழைத்து நான் நேராக அவர் வீட்டிற்கு வர வேண்டும் என்று அன்போடு அழைத்தார். ஆனால் என்னோடு வந்தவர்கள் நேராக கோவிலுக்குச் சென்று விடலாம் என்றதால் நேராக கோவிலுக்குச் சென்று விட்டோம். அங்கே எங்களுக்கு முன்பே அவர் வந்து காத்திருந்தார். அந்த கோவிலின் நடைமுறைகளை எங்களுக்கு விளக்கி எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். விநாயகருக்கும், கொளஞ்சியப்பருக்கும் அர்ச்சனை செய்து பிறகு வெளியில் இருக்கும் முனீஸ்வரன் சன்னதிக்கு எங்களை போகச் சொன்னார்கள். முனீஸ்வரனுக்கு தீபாராதனை காண்பித்த பிறகு எங்கள் பிராது எழுதப்பட்ட சீட்டுகளை முனீஸ்வரன் சன்னதிக்கு எதிரே இருக்கும் மரத்தில் கட்டிய அர்ச்சகர் இரண்டு எலுமிச்சம் பழங்களை அங்கிருக்கும் சூலங்களில் குத்தி வைக்கப் சொன்னார். 

பிராது சீட்டுகள் கட்டப்பட்டிருக்கும் மரம்

ஒரு காலத்தில் கொளஞ்சி மரக்காடாக இருந்த இடத்தில் ஒரு பசு மாடு தன் காலால் ஒரு மேட்டை சிராய்த்து விட்டு பால் சொறிவதைக் கண்ட கிராம் மக்கள் அந்த இடம் தெய்வீக சக்தி பொருத்திய இடமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, பலிபீடம் போன்ற அமைப்பை வழிபடத் தொடங்கி யிருக்கிறார்கள். உருவம் இல்லாவிட்டாலும் எந்த தெய்வ சாந்நித்தியம் கொண்டதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பி, ஆராய்ந்த பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் திருமுதுக்குன்றம் என்னும் இந்த இடத்தில் முதியவர்களாக இருக்கும் இவர்கள் நமக்கு என்ன பொருள் கொடுத்துவிட முடியும்? என்று நினைத்து வராமல் செல்கிறார். உடனே இங்கே உறையும் சிவபெருமான் தன் மகனாகிய முருகனிடம்,"சுந்தரன் என்னை மதிக்காமல் செல்கிறான், அவனை இங்கே வரச்செய்"  என்று பிராது கொடுத்தாராம். அந்த இடம் விருத்தாசல கோவிலுக்கு மேற்கே இருக்கும் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரிந்தது. எனவே இங்கு குடிகொண்டிருப்பது முருகன் தான் என்ற முடிவுக்கு வந்தார்களாம். தற்சமயம் அந்த பலிபீடத்திற்கு மேல் கிரீடம் ஒன்று வைத்து, வெள்ளியில் கண்களும் பொருத்தி, வேலும் சார்த்தியிருப்பதால் முருகனாக நம்மால் உருவகிக்க முடிகிறது.

சிவபெருமானே இங்கே பிராது கொடுத்திருப்பதால் மக்களும் தங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற இங்கே பிராது கொடுக்கும் பழக்கம் வந்திருக்கிறது.

திருமுதுகுன்றம் கோவில்


கண்டராதித்தன் கோபுரம் என்றதும் பொ.செ.தான் நினைவுக்கு வந்தது.

எங்கள் பிராத்தனையை அங்கு முடித்துக் கொண்டு வெளியே வந்த பொழுது நெய்வேலி ஜவஹர் பள்ளியில் கெமிஸ்ட்ரி ஆசிரியராக பணியாற்றிய திரு. நாகசாமி அவர்களும் அங்கு வந்தார். மத்தியமராகிய அவர் எங்கள் சந்திப்பை பற்றி ஏற்கனவே மத்யமரில் எழுதி விட்டார்.


நாங்கள் எல்லோரும் சந்திரா அவர்களின் வீட்டிற்குச் சென்றோம். என் தோழிக்கு முதலில் அங்கு சென்றால் நேரமாகி விடும் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் சந்திராவின் அன்பான உச்சரிப்பில் மனம் குளிர்ந்து விட்டார். அதிலும் தன் வீட்டில் விளைந்த வெள்ளை வெற்றிலையையும், எலுமிச்சம் பழத்தையும் சந்திரா கொடுத்த பொழுது என் தோழி குஷியாகி விட்டார். அவரிடமிருந்து வெற்றிலைக் கொடியை வேறு வாங்கிக் கொண்டார். திரு.நாகசாமி அவர்களோ, சகோதரிகளுக்கு சீர் கொடுப்பதை போல ஒரு தட்டு நிறைய பழங்களையும், பூவையும் எங்களுக்கு திருப்பாவை பாசுரம் ஒன்றைக் கூறி வழங்கினார். 

ஆழ்ந்து பிள்ளையார் கோவில்

நாங்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று விட்டு ஊர் திரும்ப வேண்டும் என்பதால் அவர்களோடு அமர்ந்து ஆற அமர உரையாட முடியவில்லை என்பது கொஞ்சம் குறையாகத்தான் இருந்தது. இன்னொரு முறை நிதானமாக சென்று, விருத்தாசலம் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் தலங்களையும் தரிசித்து விட்டு வர விருத்தாம்பாள் சமேத விருத்தகிரீஸ்வரரும், ஆழத்து பிள்ளையாரும் அருள வேண்டும். 

பிரும்மாண்டமான விருத்தகிரீஸவரர் கோவிலையும் கூட அவசர அவசரமாகத்தான் தரிசனம் செய்தோம். திரும்பும் வழி முழுவதும் இன்னொரு தோழியாகிய ராணி ராம திலகம், "மத்யமர் இவ்வளவு பெரிசா? நாம் யார் என்றே அவர்களுக்குத் தெரியாது, மத்யமர் என்பதால் பாசத்தோடு நமக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறார்கள்!" என்று வியந்து கொண்டே வந்தார். 

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’ மத்யமரால் என்று கூறலாம்.