கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 7, 2018

நாள் காட்டியும், நாள் குறிப்பும்

நாள் காட்டியும், நாள் குறிப்பும் 


















புது வருடம் என்றால் தவிர்க்க முடியாத விஷயங்களில் முக்கியமானவை காலண்டரும் டைரியும். புது வருடம் பிறக்கும் பொழுது புது காலண்டர் வீட்டில் இருந்தே ஆக வேண்டும் என்று நினைக்காத குடும்பஸ்தர்கள் உண்டா? குறிப்பாக ஆண்களுக்கு டைரியில் இருக்கும் ஆர்வம் பெண்களுக்கு பண்டிகைகளுக்கு புத்தாடை வாங்கி கொள்வதில் இருக்கும் ஆர்வத்திற்கு நிகரானது.

 பெண்கள் காலண்டரில் காட்டும் ஆர்வத்தை டைரியில் காட்டுவதில்லை.  நல்ல டைரி ஏதாவது காம்ப்ளிமென்ட்டாக கிடைத்து, அதை வீட்டம்மாவிடம் ஐயா கொடுத்தாலும், அதில், தொலைக்காட்சியில் காட்டப்படும் சமையல் குறிப்புகள், பரிகார ஸ்லோகங்கள், போன்றவற்றை எழுதி வைக்கத்தான் பயன் படுத்துவார்கள். சிலர் ஸ்ரீ ராமஜெயம் எழுதவும் உபயோகப்படுத்திக் கொள்வதுண்டு.

தினசரி கணக்கெழுதும் எங்கள் தாத்தாவுக்கு அதற்கு லிஃ ப்கோ டைரிதான் வேண்டும்.  எங்கள் தாத்தா வயதொத்த பெரியவர்கள் பலருக்கு தினசரி டைரி எழுதும் பழக்கமிருந்தது. எங்கள் அப்பாவின் மாமா  தினசரி விடாமல் டைரி எழுதுவார். ஒவ்வொரு வருடமும் புது டைரி வாங்கிய பிறகு சென்ற வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை புது டைரியில் குறித்து வைத்து விடுவார். உதாரணமாக 2015 டிசம்பர் 2ல்  சென்னையில் வெள்ளம் வந்ததல்லவா, அதை 2016 டைரி வாங்கியவுடன் டிசம்பர் மாத ரெண்டாம் தேதி அன்று சென்ற வருடம் வெள்ளம் வந்தது என்று குறித்து வைத்துக் கொள்வதோடு ஒவ்வொரு வருடமும் அப்டேட்டும் செய்து கொள்வார்.  இதனால் அவருடைய ஞாபக சக்தி மிகப் பிரமாதமாய் இருக்கும். குடும்பத்தில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் வருடம், தேதி, கிழமையோடு சொல்வார். 

அது மட்டுமல்ல நெருங்கிய உறவினர்களுக்கு குழந்தை பிறக்கும் பொழுது பிறந்த தேதி, கிழமை, நட்சத்திரம் நேரம் இவற்றை குறித்து வைத்துக் கொள்வார். எங்கள் குடும்பத்தில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதகம் குறிக்க வேண்டும் என்னும் பொழுது அவரிடமிருந்துதான் தங்கள் குழந்தைகளின் பிறந்த விவரங்களை பெற்றுக் கொள்வார்கள்.  வருடத்தை சொன்னால் அந்த வருட டைரியை எடுத்துப் பார்த்து, தேவையான தகவல்களை சொல்லி விடுவார்.  

மற்றபடி வேறு யாரும் அவ்வளவு முறையாக நாட்குறிப்பு எழுதி நான் அறியவில்லை. பெரும்பான்மையோர் அதிக பட்சமாக இரண்டு   மாதம் வரை எழுதுகிறார்கள் பின்னர் லாண்டிரி கணக்கு எழுதத்தான் பயன்படும், அல்லது சும்மா கிடக்கும். சுஜாதா டைரி எழுதுவதை குறித்து,"மற்றவர்கள் டைரியை படிப்பது அநாகரீகம், நாம் எழுதுவதை மற்றவர்கள் படிக்கக் கூடாது என்றால் ஏன் டைரி எழுத வேண்டும்? அதனால் எழுதுவதில்லை" என்று கூறியிருந்தார். 

என் சிறு வயதில் நிறைய டைரிகள் வீட்டிற்கு வரும். அதன் பிறகு பேப்பர் விலை, அச்சிடும் செலவு இவை அதிகமானதும் பலர் டைரிகள் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். 

காலண்டர்கள் இன்னும் தங்கள் மவுசை இழக்கவில்லை. அப்போதெல்லாம் திருச்சியில் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்  காலண்டர் மிகவும் பிரசித்தி. அதில் தேதி பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும், மேலும் பக்கவாட்டில் தேதி குறிப்பிடப்பட்டு இடம் விடப்பட்டிருக்கும். அதில்  பால் கணக்கு, போன்றவை குறித்துக் கொள்ளலாம். அதை பெண்கள் மிகவும் விரும்பி சமையல் அறையில் மாட்டி வைத்துக் கொள்வார்கள். 

எனக்கு நினைவில் இருக்கும் வேறு சில பிரபலமான காலண்டர்கள் என்றால் மேட்டூர் கெமிக்கல்ஸ் வெளியிடும் காலண்டர். ஒவ்வொரு வருடமும் ஆயில் பெயிண்டிங்கில் மிக அழகான கடவுள் படங்களை வெளியிடுவார்கள். அவற்றில் மிக முக்கியமானவை ஸ்ரீகுருவாயூரப்பன், மீனாட்சி கல்யாணம் போன்றவை. அவைகளை பலர் சட்டமிட்டு தங்கள் பூஜை அறையில் மாட்டி வைத்திருக்கிறார்கள். பின்னர் மேட்டூர் கெமிக்கல்ஸ் காலண்டர் வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள்.

ஏர் இண்டியாவின் காலண்டர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் பாரம்பரிய சிறப்பை விளக்குவதாக இருக்கும். இப்போது அவையும் வருவதாக தெரியவில்லை. 

பாம்பே டையிங் காலண்டர்கள் பிரும்மச்சாரிகளுக்காக என்று நினைக்கிறேன். ஓவ்வொரு  வருடமும் அந்த வருடத்தின் பிரபல பாலிவுட் நடிகைகளின் பெரிய அளவு புகைப்படம் இடம் பெற்றிருக்கும் பெரிய சைஸ் காலண்டர்கள் அவை.

இப்போது நிறைய பேர் விரும்புவது GRT நிறுவனத்தின் காலண்டர் என்று நினைக்கிறேன்.  ஒரு மினி பஞ்சாங்கம் போல அதில் எல்லா விவரங்களும் அடங்கியிருக்கும். அதைப் போலவே வேறு சில நகை கடைகளும் காலண்டர்கள் வெளியிடுவதே அதன் சிறப்பை உணர்த்துகிறதே.  இதைத்  தவிர தினமலர் காலண்டருக்கும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. பாலக்காட்டுக்காரர்கள் விரும்புவது மாத்ரு பூமி காலண்டர்களை. 


இது அட்லாண்டாவிற்கான காலண்டர் 
டேட் ஷீட் காலண்டர் எல்லாம் ஒரே மாதிரி அமைப்பு கொண்டவைதான்.  கிரிகோரியன் காலண்டர் தேதி (ஆங்கில வருட தேதி), முஸ்லீம்களுக்கான காலண்டர் தேதி, இந்துக்களுக்கான தேதி என்ற மூன்றோடு அந்த நாளின் நட்சத்திரம், யோகம், நல்ல நேரம், போன்ற விஷயங்கள் தவிர, அகத்திக்கீரை சாப்பிடுவது வாய்ப்புண்ணை ஆற்றும் போன்ற தகவல்களும் இடம் பெற்றிருக்கும். 

மஸ்கட்டில் எங்களுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் ஒரு குறிப்பிட்ட தினசரி காலண்டர்தான் வேண்டும் என்பார். அவருக்கு நட்சத்திரம், நல்ல  நேரம் போன்ற விவரங்கள் தேவை இல்லை. ஆனால் டெய்லி ஷீட் பெரிய சைசில் இருக்க வேண்டும்,  ஆங்கில,தமிழ்,இஸ்லாமிய தேதிகள் மூன்றும் பெரிதாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பார். நம் கையில் ஒரு சாம்பிள் ஷீட்டையும் கொடுத்து விடுவார்.  யாரெல்லாம் டிசம்பர் மாதத்தில் இந்தியா வருகிறார்களோ அவர்கள் எல்லோரிடமும் சொல்லி வைத்து விடுவார். எனவே எல்லோரும் ஒரு காலண்டர் வாங்கி  வந்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் சென்று பார்த்தால் ஹாலில் ஒன்று, டைனிங் ரூமில் ஒன்று, இரண்டு படுக்கை அறைகளிலும் தலா ஒன்று, சமையல் கட்டில் ஒன்று, நடைபாதையில் ஒன்று என்று எல்லா இடங்களிலும் நாள்காட்டிகள் நீக்கமற நிறைந்திருக்கும்.

இந்த வருடம் கனடாவில் இருக்கும் என் பெண்ணிற்காக ஒரு டெய்லி ஷீட் காலண்டர் வாங்கி அங்கிருந்து வந்திருக்கும் அவளுடைய தோழியிடம் கொடுத்தனுப்ப விரும்பினேன். என் மகனும், கணவரும் இப்போதெல்லாம் செல் போனில் நாள் காட்டிகள் வந்து விட்டன. எதற்கு காலண்டர் என்கிறார்கள்.   

26 comments:


  1. இன்னும் காலண்டர்கள் டைரிகள் உபயோக்கிறார்களா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி..! வருகைக்கு நன்றி!

      Delete
  2. //குறிப்பாக ஆண்களுக்கு டைரியில் இருக்கும் ஆர்வம் //

    எனக்கு அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை. இப்பவும் இல்லை.

    ReplyDelete
  3. ஆமாம். ஜி ஆர் டி கேலண்டரும் தினமலர் கேலண்டரும்தான் எங்கள் வீட்டிலும்!

    ReplyDelete
  4. என் அப்பா டைரி எழுதும் பழக்கம் வைத்திருந்தார். நிறைய எழுதினர். இப்போது எங்கோ மேலே பரணில் பின்னாடி போட்டு விட்டார் என் மூத்த சகோதரர். அவரை அவற்றை எடுத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    நான் 18, 20 வயதுகளில் எழுதியதுண்டு. அப்புறம் நிறுத்தி விட்டேன். அதன் சில பக்கங்களைக் கிழித்து வைத்திருந்தேன். சமீபத்தில் எங்கோ கிடைத்தது அது. அதை எடிட் செய்து பகிரலாமே என்ற எண்ணம் இருந்தது. மறுபடி எங்கோ வைத்து விட்டேன்!

    ReplyDelete
  5. இதே போலத்தான் வரவு செலவுக்கு கணக்கும். அப்பா கடைசி வரை எழுதிக் கொண்டிருந்தார். எங்களையும் எழுதச் சொல்லி வற்புறுத்துவார். நான் கூட 2003 வரை எழுதிக் கொண்டிருந்தேன். என் அம்மாவின் மறைவுக்குப் பின் ஏனோ நின்று விட்டது!

    ReplyDelete
    Replies
    1. டைரி மிகச்சில நாட்கள் எழுதினேன். என் கணவர் வெளிநாட்டிலும், நான் இங்கே தனியாகவும் இருந்த பொழுது ஒழுங்காக கணக்கு எழுதிக் கொண்டிருந்தேன். அவர் இங்கு திரும்பி வந்து வரவு செலவை ஏற்றுக்கொண்ட பிறகு கணக்கு எழுதுவதில்லை.

      Delete
  6. முன்னெல்லாம் இந்தக் காலண்டர், டைரிக்கு எல்லோரும் அடிச்சுப்பாங்க! என் நாத்தனார் கணவர் ஒவ்வொரு வருஷமும் எனக்கெனப் புத்தம்புதிதாக அருமையான டைரி கொடுத்தனுப்புவார். என்றாலும் நான் தொடர்ந்து டைரி எழுதியதில்லை. ஷார்ட்ஹான்ட் பழகவும், அக்கவுன்டன்சி கணக்குகள், ஃபார்முலாக்கள் எழுதிப் பார்க்கவும் வைச்சுப்பேன்.

    ReplyDelete
  7. சுந்தரம் ஃபைனான்ஸ் வருடாவரும் மாதக் காலண்டர் அவங்களிடம் ஃபிக்சட் டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கொடுப்பார்கள். எத்தனை கணக்கு இருக்கோ அத்தனை கிடைக்கும். இப்போதெல்லாம் ஒருத்தருக்கு ஒன்று எனக் குறைத்திருக்கிறார்கள். லக்ஷ்மி சுந்தரம் ஃபைனான்ஸில் வாடிக்கையாளர்களின் விலாசத்துக்கே டைரி அனுப்புவார்கள். நாம் நேரே போய் மீட்டிங்கில் கலந்து கொண்டால் தோல் பை, டைரி, காலண்டர் போன்றவை கிடைக்கும்.

    ReplyDelete
  8. பொதுவா நாங்க விலைக்குக் காலண்டரோ டைரியோ வாங்கினதில்லை. தினசரி காலண்டர் மளிகை சாமான்கள் வாங்கும் கடையிலேயோ, அல்லது வேறே யாருமோ கொடுத்துடுவாங்க! இல்லைனா இருக்கவே இருக்கு குமுதம் பக்தி, தினமலர் பத்திரிகைகள் ஆகியவை இலவசம் என்னும் பெயரில் விலையை உயர்த்திக் கொடுக்கும் காலண்டர்கள்! :) ஆனால் இப்போதெல்லாம் பேப்பர், புத்தகம் வாங்குவதை நிறுத்தி விட்டோம். என்றாலும் ஓசிக் காலண்டர் கிடைக்குது!:)

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டிலும் தினசரி காலண்டர் மளிகை சாமான்கள் வாங்கும் கடைக்காரர்கள் தருவதுதான்.
      எங்கள் வீட்டுக்கு மேலே குடியிருப்பவர் லுங்கி வியாபாரம் செய்கிறார். அவரும் எல்லா வருடங்களும் ஒரு டெய்லி ஷீட் காலண்டர் தருவார்.

      Delete
  9. //பாம்பே டையிங் காலண்டர் பிரமச்சாரிகளுக்கு//

    மோடி வீட்டில் கூட இந்த காலண்டர்தானாம்.

    நல்வாவே அலசி இருக்கின்றீர்கள் நானும் டைரி எழுதுவதை நிறுத்தி 10 வருடமாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா!எல்லாவற்றிர்க்கும் மோடியை இழுப்பது நியாயமா சகோ?

      Delete
  10. காலண்டரைப் பற்றியும் டைரியைப் பற்றியும் நல்ல அலசல். ஆரம்பத்தில் டைரி எழுதிக்கொண்டிருந்தேன். இப்பொழுது அப்பழக்கம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்! பெரும்பான்மையோர் டைரி எழுதும் பழக்கத்தை ஏனோ பாதியில் விட்டு விடுகிறோம்

      Delete
  11. எங்க அப்பா இன்னும் டைரி எழுத்துறார்....

    வீட்டு கணக்கு...செல்லும் இடங்கள்...தரிசனங்கள் எல்லாம்...அதை பார்க்கும் போது நானும் எழுத நினைப்பேன்...ஆன அவர போல முடியறது இல்ல..

    எங்க வீட்லயும் தினமலர் காலேண்டர் தான்..

    திருப்பதி தேவஸ்தான காலேண்டர் ரொம்ப அழகா இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் திருப்பதி தேவஸ்தான காலண்டர் மிக அழகாக இருக்கும். எங்கள் சம்பந்தி வீட்டில் வைத்திருப்பார்கள். எல்லா வருடங்களும் அந்த காலண்டர் அவர்கள் தெரிந்தவர்கள் மூலம் கிடைக்குமாம். மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தான காலண்டரும் நன்றாக இருக்கும்.

      Delete
  12. SBI காலண்டர்களின் பின் பக்கங்கள் தாம் பிரமாதம். பார்த்ததில்லையா?..

    (நீங்கள் தான் பின்னூட்டங்களுக்கு பதிலே சொல்வதில்லையே?
    யாரானும் சொல்றாங்களான்னு பார்ப்போம்.)

    ReplyDelete
    Replies
    1. SBI காலண்டர் பார்த்ததில்லை. ஐயையோ! பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை என்று ஒரேயடியாக கூறிவிட்டீர்களே..:((( உடனடியாக சொல்வதில்லை, ஆனால் கண்டிப்பாக சொல்வேன்.சொல்லியிருக்கிறேன். Better late than never, என்வபதே என்ரு பாலிஸி. வருகைக்கு நன்றி!

      Delete
  13. எனக்கு வரும் டைரிகளை யாருக்காவது கொடுத்து விடுவேன். தில்லி வந்த புதிதில் டைரி எழுதிக் கொண்டிருந்தேன். சில வருடங்கள் தான். அதன் பிறகு எழுதுவதில்லை. கணக்கும் எழுதுவது சில மாதங்கள்/வருடங்கள் நடந்தது. இப்போது இல்லை.

    இந்த வருடமும் டைரிகள் வந்தவற்றை உடனேயே வேறு சிலருக்கு கொடுத்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நம்மில் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறோம். வருகைக்கு நன்றி வெங்கட்!

      Delete
  14. டைரி எழுதுவது நல்ல பழக்கம். திட்டமிட்டுப் பணியாற்றுபவர்களுக்கு டைரி இன்றியமையாதது. நல்ல பதிவு. நன்றி

    இரா முத்துசாமி

    http://agharam.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. //டைரி எழுதுவது நல்ல பழக்கம்.// உண்மைதான், ஆனால் நாம் கை நழுவ விட்ட பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்றாகி விட்டதே. முதல்முறையாக வருகை தந்திருக்கிறீர்கள். நன்றி! மீண்டும் வருக!

      Delete
  15. ஆ!!! இதுக்கு நாங்க போட்ட கமென்ட் எங்க போச்சு?!!!

    துளசி: டைரி எழுதும் பழக்கம் இல்லை. ஆனால் இப்போதும் காலண்டர் அதுவும் டே காலண்டர் உண்டு.

    கீதா: நான் டைரி எழுதும் பழக்கத்தை கல்லூர்ரிக்காலத்துக்குப் அப்புறம் விட்டுவிட்டேன். கல்லூரிக் காலத்டில் டைரி எழுதுவதோடு 2, 3 டைரி வைத்திருப்பேன் மற்றதில் நோட்ஸ் எடுக்கவும் டைரி பயன்படுத்துவேன். அந்தந்த தேதியில் சரியாக நோட்ஸ் இருக்கும்...

    டைரி அப்புறம் சமையல் குறிப்புகள், வீட்டுக் கணக்கு, என்று எழுதிவிட்டு அப்புறம் அதுவும் இலலமல் போயாச்சு. இப்போது வருவதும் இல்லை..பயன்படுத்தும் பழக்கமும் போச்சு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன்!

      நன்றி கீதா! வருகைக்கும் மீள் வருகைக்கும் நன்றி!

      //நான் டைரி எழுதும் பழக்கத்தை கல்லூர்ரிக்காலத்துக்குப் அப்புறம் விட்டுவிட்டேன்.// அந்த பழைய டைரிகளை வைத்திருக்கிறீர்களா? படித்து பார்ப்பதுண்டா? அப்போது எழுதியவைகளை இப்போது படித்தால் வேடிக்கையாக இருக்கும்.

      Delete
  16. காலண்டர் எனக்கு டெய்லி காலண்டர் தான் பிடிக்கும் அதில் பொன்மொழிகள் கூட இருக்கும்..அது ரொம்பப் பிடிக்கும்..

    கீதா

    ReplyDelete