கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 19, 2018

மாறிய காலம், மாறாத கோலம்


மாறிய காலம், மாறாத கோலம்


சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. படிப்பில் சிறந்து விளங்கியதால் ஆசிரியர்களுக்கு பிடித்தமான மாணவன். முதல் நாள் தலை வலி, காய்ச்சல் வரும் போலிருகிறது என்றான். ஆனால் மதியதிற்கு மேல் விளையாட சென்று விட்டான். இன்றும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்றதும் அவன் அம்மா கமலத்திற்கு கோபம் வந்தது.

“நீ நல்லா படிக்கிறியேனு சந்தோஷப் பட்டது தப்பு.. என்னாச்சு உனக்கு? ஏன் இஸ்கோலு போக மாட்டேங்கற?

“எனக்கு டவுசர், சட்டை, வாங்கி கொடு, நான் ஸ்கூல் போறேன்..”

“டவுசர், சட்டையா? இப்போ என்னடா டவுசரும்? சட்டையும்? நான் எங்க போக?”

“அப்போ நானும் ஸ்கூல் போக முடியாது.”

“தீவாளிக்கு வாங்கித் தரேன்.”

“நானும் தீவாளிக்கு பொறவு ஸ்கூல் போரேன்..”

மகன் பதிலுக்கு பதில் பேசியது கமலத்திற்கு எரிச்சல் ஊட்டியது. எல்லாத்துக்கும் பதில் சொல்றியா? என்று கீழே கிடந்த விசிறியை கையில் எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தாள். 
  
அம்மாவிடமிருந்து தப்பித்து ஓட முயற்சித்த சுகுமார் வாசல்படியில் தடுக்கி விழுந்தான், கமலம் அவனை விசிறி காம்பால் விளாசத் தொடங்க, எழுந்து ஓடியவன் பக்கத்து குடிசை ஆயா மீது மோதிக் கொண்டான். சுகுமாரை தழுவிக் கொண்ட ஆயா,

“தா, கமலம், இன்னாத்துக்கு புள்ளைய அடிக்கிற?”

“ஆங்.. தெனம் சோறு துங்கரதே பெரும் பாடா இருக்கு, ஏதோ ஒரு வேளை மதிய உணவு பள்ளிகூடத்துல போடராங்களேனு அனுப்புனா தொரை புது டவுசர் இருந்தாதான் இஸ்கோலுக்கு போவாராம்..”

“ஏங்கண்ணு, அப்படியா சொல்ற…? பரிவுடன் ஆயா கேட்டவுடன், சுகுமார், ’’இல்ல ஆயா, என்னோட டவுசர், சட்டை எல்லாம் கிழிஞ்சு கெடக்கு, அதை போட்டுக்கிட்டு போனா பசங்க கேலி பண்றாங்க..” சொல்லும் போதே அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“அழுவாத கண்ணு, அம்மா வாங்கி கொடுக்கும். அதாரு? உன்னைய கேலி பண்றது? நான் உங்க பள்ளிகூடத்துக்கு வந்து வாத்தியாரண்ட சொல்றேன்..”

“ஐயோ ஆயா, அதெல்லாம் வாணாம்..”

சுகுமாரை சமாதானப் படுத்திய ஆயா, அவன் தாயாரிடம், “இந்தா கமலம், கொழந்தைக்கு டவுசர் வாங்கி கொடு, கிழிசலை போட்டுக்கிட்டு அது எப்புடி பள்ளிக்கூடம் போவும்?”

ஆயா சொன்ன பிறகு மகனுடைய ட்ரௌசரை எடுத்துப் பார்த்த கமலத்திற்கு அது அணிந்து கொள்ள முடியாத அளவிற்கு மோசமாக கிழிந்திருப்பது தெரிந்தது. உண்மையை தெரிந்து கொள்ளாமல் மகனை அடித்து விட்டோமே என்று துக்கம் பொங்கியது.

மறுநாள் தான் வேலை செய்யும் வீட்டில் அட்வான்ஸ் வாங்கி அம்மா அவனுக்கு சீருடை துணி வாங்கி தைக்கக் கொடுத்தாள். அது கிடைப்-பதற்கு மேலும் இரண்டு நாட்கள் ஆகின. புது சீருடை அணிந்து கொண்டு பள்ளி சென்ற போது வகுப்பாசிரியர், “வாங்க சார்,  எங்க நாலு நாளா ஆள காணோம்..? மாப்பிள்ளை மாதிரி புதுசெல்லாம் பொட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..” என்று கிண்டலாக கேட்டதும், ஒரு பையன், “ஸார், அவனோட டவுசர் ஒரே கிழிசல் சார், அதான் அவன் வரல.. இப்பொ புதுசு தெச்சு போட்டுக்கிட்டு வந்திருக்கான்..” என்று கூற, சிலர் சிரித்தார்கள், சுகுமாருக்கு அவமானமாக இருந்தது.

“டேய்! உங்கிட்டயாடா கேட்டேன்?” என்று அந்த அதிகப்ரசங்கி மாணவனை அதட்டி விட்டு, வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

சுகுமார் மேல் வகுப்புக்குச் சென்ற போது அதுவரை ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருந்த அவன் தந்தை ஆட்டோ ஒட்ட ஆரம்பித்தார். 

வாடிக்கையாளராக இருந்த வங்கி மேலாளர் ஒருவர் கடன் உதவி செய்ய, சொந்தமாக ஆட்டோ வாங்கியதோடு, ஸ்கூல் சவாரிகளும் கிடைக்க, நிரந்தர வருமானம் கிடைத்தது. வறுமை முற்றிலுமாக ஒழிந்து விடவில்லை, என்றாலும் கிழிசலை கட்டிக் கொள்ளும் அவலம் இல்லை.
அவன் பி.யூ.சி. படித்த பொழுது அவன் அத்தை வீட்டில் புதுமனை புகு விழா என்று அழைத்தார்கள். அவனிடமிருந்த உடைகளில் சிறந்ததை அணிந்து கொண்டு புறப்பட்டான்.

“அடடா! சுகுமாரா? பெரிய பையனாயிட்ட?” வாஞ்சையொடு வரவேற்ற அத்தை, சாப்பிட பலகாரம் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற போது தன் மகனிடம், “ஒன்னோட நல்ல பேண்ட் ஏதாவது சுகுமாருக்கு கொடு” என்று சொல்வது கேட்டது.

“ஏம்மா?”

“அவன் ஏதொ வெளுத்துப்போன பேண்டை மாட்டிக்கிட்டு வந்திருக்கான். நமக்குதான் கௌரவ குரைச்சல்”

சுகுமார், இனிமேல் இப்படிப்பட்ட இடங்களுக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

காலம் மாறியது. சுகுமாரின் படிப்பு அவனுக்கு நல்ல வேலையை பெற்றுத் தந்தது. முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, தனக்கும், தம்பிக்கும் டீ ஷர்ட் என்று வாங்கினான். பிறகு ஒவ்வொரு மாதமும் விதம் விதமாக உடைகள், தான் சிறு வயதில் ஆசைப்பட்டு வாங்கிக் கொள்ள முடியாததை எல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் வாங்கிக் கொண்டான்.

நல்ல இடத்தில் திருமணமும் நடந்தது. பானை பிடித்தவள் பாக்கியமோ என்னவோ வேலையை துறந்து விட்டு வியாபாரம் தொடங்கினான், அது சிகரத்தை தொட, சுகுமார் இன்று நகரில் ஒரு பெரும் புள்ளி. தோட்டம், நீச்சல் குளத்தோடு பங்களா, ஒரு இன்னொவா, ஒரு ஹோண்டா சிட்டி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று நிறைவான வாழ்க்கைதான். ஆனால் அவருடைய குழந்தைகள் அணிந்து கொள்ளும் உடைகள்தான் அவருக்கு வியப்பூட்டுகிறது.

மகள் அணிந்து கொள்ளும் சட்டையில் தோள்பட்டையில் கிழிந்தது போல ஒரு அமைப்பு. மகளும் சரி, மகன்களும் சரி எப்போதும் சாயம் போய் வெளுத்துப் போனது போல ஒரு ஜீன்ஸ்தான். அதிலும் அங்கங்கே கிழிசல்.

தான் எதிலிருந்து விடுபட நினைத்தோமோ அதை தன் குழந்தைகள் விரும்பி அணிவது அவருக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. 

9 comments:

  1. ம்ம்ம்ம் மறு பதிவா? மறுபடி நானும் படிச்சேன். :))))

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய சில வாசகர்கள்(பாருடா!) முக நூலில் வந்தால்தான் படிக்கிறார்கள். அதனால்தான்.

      Delete
  2. பதிவில் வந்தால் கூட பரவாயில்லை, தலைப்பில் வரலாமா எழுத்துப்பிழை!!!!

    :)))

    ReplyDelete
    Replies
    1. கடவுளே! கவனிக்கவே இல்லை. திருத்தி விட்டேன் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. முதலிலேயே தெரிந்து விட்டது எங்கள் ப்ளாகில் படித்தது என்று மீண்டும் வாசிக்கத்தானே மீள் பதிவு

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய சில வாசகர்கள்(பாருடா!) முக நூலில் வந்தால்தான் படிக்கிறார்கள். அதனால்தான். நன்றி!

      Delete
  4. அருமையான பதிவு
    தொடருவோம்!

    ReplyDelete