கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, February 13, 2019

தொட்ட மாலூர்(Dhodda Maloor) - சென்னப்பட்டினம்


தொட்ட மாலூர்(Dhodda Maloor) - சென்னப்பட்டினம்

                                           




நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்தது நேற்றுதான் நடந்தது. ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தால் போதாது, அங்கிருக்கும் தெய்வம் நம்மை அழைக்க வேண்டும் என்பார்கள். நாங்கள் பல நாட்களாக ஆசைப்பட்டாலும், ஸ்ரீ.அப்ரமேயராமா நேற்றுதான் எங்களை அழைத்தார். 

காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, வழியில் அடிகாவில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, பதினொன்று பதினைந்திற்கு தொட்ட மாலூரை அடைந்தோம். அர்ச்சனைத்தட்டும், துளசி மாலையும் வாங்கிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தோம். சிறிய கோவில். (மரத்தால் ஆன) கொடிமரம், பலிபீடத்தை தாண்டி, படியேறி உள்ளே சென்றால் மூலவர் அப்ரமேயராமா சந்நிதி. நின்ற திருக்கோலத்தில், மேலிரு கைகளில் சங்கு, சக்கரமும், கீழ் இடது கையில் கதையும் தாங்கி, வலது கரம் அபயஹஸ்தத்தோடு காட்சி அளிக்கிறார். அர்ச்சகர் முழுமையாக அர்ச்சனை செய்கிறார். எல்லா பெருமாள் கோவில்களைப் போலவும் தீர்த்தம் கொடுத்தார்கள், ஆனால் சடாரி சாதிக்கவில்லை.



பிரகாரத்திலிருந்து உள் விமான தோற்றம்
 கோவிலின் வாகனங்கள் ப்ரும்மாண்டமாக இருக்கின்றன.



 


பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தை வலம் பொழுது மீண்டும் படியேறினால், தாயார் சந்நிதி. அமர்ந்த திருக்கோலத்தில் அழகான அரவிந்தவல்லியை சேவித்து விட்டு, அதே திண்ணை போன்ற அமைப்பில் வலது பக்கம் திரும்பி தொடர்ந்து நடந்தால் மாலூர் கிருஷ்ணன் எனப்படும். நவநீத கிருஷ்ணனை தரிசிக்கலாம்.  "கண்ணா, கருமை நிறக்கண்ணா .." என்பதற்கிணங்க ஒரு கையில் வெண்ணையோடு தவழும் கருமை நிற கண்ணன் ஜீவ களையோடு! முகம் தவிர உடல் முழுவதும் வெண்ணை காப்பிடப்பட்ட கிருஷ்ணன். காதுக்கருகில் தொங்கும் குழல் கற்றை, இடுப்பில் சலங்கை இவைகளை வெண்ணை காப்பிடவில்லை. அழகான அந்த கண்ணனை அப்படியே தூக்கி வைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.




குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இந்த நவநீத கிருஷ்ணனை வகிழிபட்டு வேண்டிக்கொள்ள, அவர்களுக்கு உடனே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல, நடைமுறையும் கூட. குழந்தை  பிறகு அந்த குழந்தையை இந்த கோவிலின் வெள்ளித்தொட்டிலில் விடுவார்களாம். நாங்கள் கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது, இரண்டு மாத குழந்தையோடு ஒரு குடும்பம் வந்து கொண்டிருந்தது. 

பிரகாரங்களில் வேதாந்த தேசிகர், ராமானுஜர், இவர்களோடு கூரத்தாழ்வாருக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இதைத்தவிர ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. நிறைவாக தரிசனம் முடித்து வெளியே வந்தோம். 

அந்த கோவிலுக்கு வெளியே கடைகளில் கிடைக்கும் புளிக்காய்ச்சலும், புளியோதரையும் மிகவும் நன்றாக இருக்கும் என்று எங்கள் சம்பந்தி சொல்லியிருந்தார். ஆனால் ஒரே ஒரு ஐயங்கார் மெஸ் என்பதைத் தவிர வேறு கடைகள் ஏதும் கண்ணில் படவில்லை. பக்கத்தில் இருக்கும் நதி நரசிம்மர் கோவிலில் கிடைக்கலாம் என்று இங்கே வாங்காமல் விட்டு விட்டோம். ஆனால் அங்கேயும் கிடைக்கவில்லை., புளியோதரை போச்சு...:((( 

மாலூர் அப்ரமேயராமா கோவிலிருந்து 1.2 கி.மீ. தொலைவில் வயல்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது நதி நரசிம்மர் கோவில். மிகவும் சிறிய கோவில். 1200 வருடங்களுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று அங்கிருக்கும் அர்ச்சகர் கூறுகிறார்.  ஆனால் அப்படிப்பட்ட புராதன கட்டிட கலை அமைப்பு அதுவும் தெரியவில்லை.

நதி நரசிம்மா கோவில்

இப்பொழுது இந்த நரசிம்மர் கோவில் அமைந்திருக்கும் இடம்தான் முன் காலத்தில் ஊராக இருந்ததாம். அருகில் இருக்கும் கண்வ நதியில் வெள்ளம் வந்து ஊரு முழுவதும் நீரில் மூழ்கி, பின்னர் மண் மேடிட்டு விட்டதாம். கன்னடத்தில் மரலூர்(sand city) என்றால் மண் என்று பொருளாம். மரலூர் என்பதே மாலூர் என்று மறுவியதாம். 

கண்வ மகரிஷி (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) இங்கு தவம் செய்ததாகவும், அப்போது வனமாக இருந்த இந்த பகுதியில் அவருக்கு காட்சி அளித்த நரசிம்மர், தனக்கு ஒரு கோவில் இங்கே கட்டி வழிபட சொன்னதோடு, அவருக்கு என்ன வரம் வேண்டும் என்றும் கேட்கிறார். கண்வ மகரிஷி," இங்கு வந்து தங்களை வழிபடுபவர்களின் தேவைகளை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாராம்.ஆகவே அந்த நரசிம்மரை, ஸ்வாதி நட்சத்திரத்தன்று வழிபடுபவர்கள் கேட்கும் வரத்தை இந்த நரசிம்மர் வழங்குவார் என்றும் கூறினார். சிறிய கோவிலாக இருந்தாலும், அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள். நல்ல அதிர்வுகளை உணர முடிந்தது. அங்கும் வழிபட்டு விட்டு வீடு திரும்பினோம்.  

நவநீத கிருஷ்ணன் படம் உதவி: கூகுள்.நன்றி.


9 comments:

  1. இரண்டு முறை தொட்டமளூர் போயிருக்கோம். இரு முறைகளிலும் மாலை போனதால் நதி நரசிம்மர் கோயிலுக்குப் போக முடியவில்லை. மற்றபடி தொட்டமளூர் கோயிலில் நல்ல தரிசனம் இரு முறைகளும் கிடைக்கப் பெற்றது.

    ReplyDelete
  2. மேல்கோட்டை போயிட்டு வந்தாச்சா? நம்ம ஸ்ரீரங்கத்து நம்பெருமாள் அங்கே சில மாதங்கள் ஒளிஞ்சுட்டு இருந்தார். அங்கேயும் கோயிலுக்கு எதிரே மலையில் நரசிம்மர். ஆனால் நாங்க போனப்போ நல்ல வெயில் காலம் என்பதோடு மலை மேல் ஏறும்போது பாதுகாப்புக்கும் ஒன்றும் இல்லை. ஷெட் போட்டிருந்தால் ஏறி இருந்திருப்போம். காலங்கார்த்தாலேயே ஏறிடணுமாம். எங்களால் முடியலை! சோழ மன்னனிடம் பிடிக்காமல் போனதால் அங்கிருந்து கிளம்பிய ராமாநுஜர் இங்கேயே சில வருடங்கள் இருந்து பின்னரே மறுபடியும் ஸ்ரீரங்கம் வந்தார்.

    ReplyDelete
    Replies
    1. மேல்கோட்டை செல்லும் பாக்கியம் இன்னும் வாய்க்கவில்லை.
      //சோழ மன்னனிடம் பிடிக்காமல் போனதால் அங்கிருந்து கிளம்பிய ராமாநுஜர் இங்கேயே சில வருடங்கள் இருந்து பின்னரே மறுபடியும் ஸ்ரீரங்கம் வந்தார்.//
      அதனால்தான் வீர சைவர்கள் இருந்த தேசத்தில் வைணவத்தை பரப்ப முடிந்தது.

      Delete
  3. தொட்டமளூர் கோவிலுக்கு இருமுறை சென்றிருக்கிறோம். 'அப்ரமேயர்' (விஷ்ணு சகஸ்ரநாமத்தில் அப்ரமேயோ ரிஷீகேசோ பத்மநாபோ அமரப்ரபுஹு என்று வரும்) பெயரில் அந்த ஒரு சன்னிதிதான் சேவித்திருக்கிறோம். தொட்டமளூர் கிருஷ்ணன் மிக அழகு. இதனையெல்லாம் புகைப்படம் எடுத்திருக்கிறேன். தேடிப்பார்த்து அனுப்பிவைக்கிறேன் (தேவைனா).

    கோவிலுக்கு எதிரே ஒரு தெரு இருக்கும். அங்கு ஒரு சிறிய மண்டபம் (சிறிய சன்னிதியோடு) உள்ளது. அங்கு 15 பேர், நாங்கள் ஒரு தடவை சென்றிருந்தபோது, திவ்யப்ப்ரபந்தம் பாராயணம் செய்துகொண்டிருந்தார்கள். செய்தி என்னன்னா, அவர்கள் வைத்திருந்த புத்தகம் கன்னட எழுத்தில் ப்ரிண்ட் செய்த ப்ரபந்தம் புத்தகம். அந்த வைணவர்கள் ஒரு காலத்தில் தமிழ் மொழி பேசி, பிறகு அவர்கள் மொழியே கன்னடம் கலந்து (அல்லது துளு வா?) புரிந்துகொள்ள முடியாத தமிழ் மொழி ஆகிவிட்டது.

    ReplyDelete
  4. நவநீத கிருஷ்ணன் வெகு அழகுதான். ஆனால் என்னை புகைப்படமெடுக்க அனுமதிக்கவில்லை.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    அழகான கோவிலை பற்றி அருமையாக கூறியிருக்கிறீர்கள். தொட்டமளூர் இது வரை சென்றதில்லை. உங்கள் பதிவை பார்த்த பின் சென்று வர ஆசை வருகிறது. எது எப்போ பிராப்தமோ அப்போதுதானே நடக்கும். படங்கள், கோபுர தரிசனபடங்கள், அனைத்தும் அருமையாக உள்ளது. நரசிம்மர் கோவிலும் அழகாய் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. தொட்டமளூர் கோவிலைப் பற்றிய தகவல்கள் அருமை அம்மா...

    ReplyDelete
  7. பானுக்கா முதல் படம் அட்டகாசம் அந்த கோபுரம்....கோயில் பற்றிய தகவல்க அருமை அக்கா...

    எங்க ஏரியாவிலிருந்து ..ஒன்னேமுக்கால் மணினேரம் தான்னு சொல்றதுண்டு......ரோடு தொட்டமலூர் ரோடுனே இருக்கே....

    //1200 வருடங்களுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று அங்கிருக்கும் அர்ச்சகர் கூறுகிறார். //

    ஒரு வேளை அந்த விக்கிரகமா இருக்கும்...அக்கா

    கீதா

    ReplyDelete
  8. அழகான கோவில்கள்.... தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete