கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 21, 2024

2024 ல் முக்கிய நிகழ்வுகள்:

2024 ல் முக்கிய நிகழ்வுகள்

இந்த ஆண்டின் சிறந்த நிகழ்வு என்றால் நான் ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. இரண்டை சொல்லுவேன். முதலாவது, பிரேக் தரிசனம் எனப்படும் ஸ்ரீவாணி தரிசனத்தில் திருப்பதி பெருமாளை மிக அருகில் தரிசித்ததும், இரண்டாவது மாதா அமிர்தானந்தமயிக்கு ஆரத்தி எடுக்கும் பாக்கியம் வாய்த்ததுமே. ஆனால் அந்த நிமிடங்களில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்கும் திறமை எனக்கிருக்கிறதா? என்பது சந்தேகமே. முடிந்த அளவு என் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு திருப்பதியில் அங்க பிரதட்சினம் செய்த பிறகு பெருமாளை அருகே தரிசித்தேன். அதன் பிறகு சென்ற பொழுதெல்லாம் பெருமாளை எட்டி இருந்துதான் தரிசிக்க முடிந்தது. அதிலும், ஜருகண்டி விரட்டல், நமக்கு முன்னால் இருப்பவர் உயரமாக இருந்து விட்டால் வரிசையில் நகரும்பொழுதே பெருமாளை தரிசிக்கும் சான்ஸ் அவுட்! எல்லா கோவில்களிலும் சுவாமியை பார்ப்பது போல் திருப்பதி பெருமாளை தரிசிக்க முடியுமா? என்ற ஏக்கம் உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்தது. நாம் எதற்காவது அடி மனதில் ஆசைப்பட்டால் அதை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றும் என்பார்களே அப்படி என்னுடைய இந்த ஆசையும் 2024 ஜூலையில் நிறைவேறியது.

என்னுடைய பெரிய அக்காவின் மகளுக்கு திருமணமாகி ஜூலையில் 25வது வருடம்,வெள்ளிவிழா ஆண்டு. இந்த வருடம் அவளுக்கு 50 அகவை முடிகிறது. இவை இரண்டிற்காகவும் அவளுடைய மகனும்,மகளும் இந்த ஸ்ரீவாணி தரிசனதிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதும், என் அக்கா பெண்ணிடம், “எனக்கும் டிக்கெட் கிடைக்குமா? என் மகனும் மகளும் எனக்காக ஸ்பான்ஸர் செய்ய ரெடி, என்றதும், அவள் அவர்கள் ஏஜெண்டிடிடம் கேட்டு "எட்டாம் தேதிதான் கன்ஃபர்ம் பண்ண முடியும்” என்றாள். எட்டாம் தேதி மதியம் “உங்களுக்கும் டிக்கெட் கிடைத்து விட்டது, சென்னைக்கு கிளம்பி வாருங்கள், பத்தாம் தேதி திருப்பதிக்கு காரில் போகலாம் என்றாள்”

நான் ஜூலை ஒன்பதாம் தேதி பெங்களூரிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டு சென்னை சென்று பத்தாம் தேதி திருப்பதிக்கு கிளம்பினோம். அங்கு ஸ்ரீவாணி சேவைதாரர்களுக்கு தங்கும் இடம் ஒதுக்குகிறார்கள். அறை விஸ்தாரமாகவும்,சுத்தமாகவும் இருந்தது. 11ஆம் தேதி காலை, எழுந்து, குளித்து, அருகில் இருந்த ஒரு ரெஸ்டாரெண்டில் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

வழக்கமாக செல்லும் பாதைதான், ஆதார் கார்ட், ஸ்ரீவாணி டிக்கெட் செக்கிங் போன்ற ஃபார்மாலிடிகளை முடித்துக் கொண்டு கூண்டுகளிள் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் காபி, பால் போன்றவை வழங்கப்பட்டன. அதை அடுத்து பொங்கலும், தயிர் சாதமும். நாங்கள் ஏற்கனவே சிற்றுண்டி சாப்பிட்டு விட்டதால் காபியோடு நிறுத்திக் கொண்டோம்.

சற்று நேரத்தில் கூண்டுகளை திறந்து விட்டார்கள். நீளமாக நடந்து, ஏறி, இறங்கி, கோவிலின் பிரதான வாயிலில் காலை நனைத்துக் கொண்டு, பலி பீடத்தை தாண்டி, இதோ பெருமாள் சன்னதியை நெருங்கி விட்டோம். கருடாழ்வாரை சேவித்துக் கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக சன்னதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மனது கோவிந்தா, கோவிந்தா என ஸ்மரிக்க, கோவிந்தனை நெருங்கி விட்டோம். பச்சை பட்டாடை உடுத்தி அந்த மாதவன் நம்மை உற்றுப் பார்க்கிறான். ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல அந்த அழகு முகத்தைப் பார்த்த நமக்கு வேறு எதையும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படியோ உற்சவரையும் சேவித்துக் கொண்டேன். பெருமாளுக்கு காட்டிய தீபாராதனையை ஒத்திக் கொள்ளச் சொல்கிறார் அர்ச்சகர். பிறகு வாழைப்பழ பிரஸாதம், தீர்த்தம், சடாரி எல்லாம் சாதிக்கப்படுகின்றன. வெளியே வந்த பிறகுதான் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் நம் கண்ணில் படவேயில்லையே? என்று தோன்றியது. மற்றுமொரு வாய்ப்பு வாய்க்காமலா போய் விடும்? பெருமாளின் அந்த அழகு முகம் நிறை கொண்டது என் நெஞ்சினில்.

 




அமிர்தபுரியில் ஆரத்தி:

ஒரு வேண்டுகோள்: மாதா அமிர்தானந்தமயி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து கடந்து போய் விடுங்கள். 







ஜூலையில் தன் திருமண நாளுக்கு திருப்பதி சென்ற என் அக்கா மகள் செப்டம்பரில் அவளுடைய பிறந்த நாளுக்கு அமிர்தபுரி சென்று மாதா அமிர்தானந்தமயியிடம் ஆசி பெற விரும்பினாள். இப்போதும் நான் அவளோடு சேர்ந்து கொண்டேன். இரண்டு அக்காக்கள், ஒரு அக்கா பெண், ஒரு அக்காவின் பேத்தி இவர்கள் சென்னையிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் வர, நான் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் கொச்சியை அடைந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அங்கிருந்து இன்னோவா காரி்ல் அமிர்தபுரியை அடைந்தோம்.  

என்னுடைய பெரிய அக்கா அடிக்கடி அமிர்தபுரி செல்பவர் என்பதால் அங்கு நிறைய பேர்களைத் தெரியும். எங்களுக்கு ரூம் ஒதுக்கிய பெண் அக்காவை வரவேற்றார். அன்று இரவு தொலைபேசியில் அக்காவை அழைத்து மறுநாள் மாலை அம்மாவிற்கு (அமிர்தானந்தமயி) ஆரத்தி எடுக்க ஒரு ஸ்லாட் இருப்பதாகவும், எங்களில் ஒருவர் அதற்கு வரலாம் என்றும் கூறினார். அமிர்தபுரிக்கு முதல் முறை வந்திருந்த என் கடைசி அக்காவிற்கு அந்த வாய்ப்பை கொடுத்தோம். 

சாதாரணமாக அம்மாவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டுமென்றால் முன்னாலேயே பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி திடீரென்று கிடைப்பது அதிர்ஷ்டம்தான். 

அடுத்த நாள் முன்பே பதிவு பண்ணி வைத்திருந்த என் அக்கா பெண் அம்மாவிற்கு ஆரத்தி எடுத்தாள். அவர்கள் என்னையும் பதிவு பண்ண சொன்னார்கள். நான் நம்பிக்கை இல்லாமல்தான் பதிவு பண்ணினேன். அதற்கு அடுத்த நாள் காலை ஆரத்திக்கு ஒருவர் தேவைப்படுவதாகவும், என்னால் வர முடியுமா என்றும் தொலைபேசியில் கேட்ட பொழுது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. 

ஆரத்தி எடுக்கப் போகிறவர்களுக்கு சிறிய பயிற்சி கொடுத்தார்கள். அந்த பயிற்சியின் பொழுதே என்னோடு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு உணர்ச்சி வசப்பட்டதால் கைகள் நடுங்கின. ஆரத்தி எடுத்த பொழுது அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது. எனக்கும் கூட, ஏன் ஆரத்தி எடுத்த அத்தனை பேருக்கும். ஒருவர்கூட அழாமல் இல்லை. அதை அழுகை என்பது தவறு, நம் உள்ளுக்குள் ஏதோ உடைந்து கண்களின் வழியே வழிகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆரத்தி எடுக்கும் பொழுது நாம் அம்மாவை பார்க்காமல் இருக்கலாம், நம்மை அம்மா பார்த்துக் கொண்டே இருக்கிறாரே, அது எவ்வளவு பெரிய பாக்கியம்! குரு பார்க்க கோடி பாவம் தீரும். 



Tuesday, December 10, 2024

லப்பர் பந்து (சினிமா விமர்சனம்)

பழைய எம்.ஜி.ஆர். படங்களில் நல்லவனும், ஏழையுமான கதாநாயகனை அந்த ஊரின் பணக்காரரான பெண் விரும்புவாள். அவளுடைய தந்தை தன் குடும்பத்தின் பரம வைரி என்பதை அறியும் கதாநாயகனின் தாய் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பாள். கதாநாயகனும், கதாநாயகியின் தந்தையும் ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இறுதியில் இதெல்லாம் மாறி கதாநாயகனும், நாயகியும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் முடிவாக இருக்கும்.

இதை அப்படியே வைத்துக்கொண்டு, கதை நடக்கும் களத்தை மட்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு சென்றால் அது 'லப்பர் பந்து'

பூமாலை(அட்டக்கத்தி தினேஷ்) ஒரு பெயிண்டர். ஆனால் அதை விட அவர் அதிகம் நேசிப்பது கிரிக்கெட்டை. வேலைக்கு மட்டம் போட்டு விட்டு மாட்ச் விளையாட போகிறார். அவர் அடிக்கும் சிக்ஸர்கள் பனைமரம் உயரத்திற்கு  பறக்கின்றன. அதனால் 'கெத்து' என்னும் பெயர்.

அவரைப்போலவே கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் அன்பு(ஹரீஷ் கல்யாண்) அவருடைய மகள் துர்காவை(சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) நேசிக்கிறார். ஒரு மாட்சிற்குப்பின் பூமாலை பேட்டிங்கை அன்பு குறைவாக பேசுவதை கேட்ட பூமாலையின் தோழர் அவரிடம் போட்டுக் கொடுத்துவிட, அவருக்கு அன்பு மீது வெறுப்பு வருகிறது.

அடுத்த மாட்சில் அன்புவின் பந்து வீச்சால் பூமாலையின் அணி தோற்கிறது. அதுவும் பூமாலையின் வீக் பாயிண்டை புரிந்து கொண்டு அன்பு பந்து வீச, பூமாலையால் வழக்கம்போல் சுழற்ற முடியவில்லை.
இதற்கிடையில் இந்த விவகாரங்கங்கள் எதுவும் தெரியாத அன்புவின் தாய்(தேவ தர்ஷினி) பூமாலை வீட்டிற்கு பெண் பார்க்க வருகிறார், இரண்டு வீட்டார்களுக்கும் பரஸ்பரம் திருப்தியாக, திருமணத்தை நிச்சயிக்க முடிவெடுக்கிறார்கள்.

மறுநாள் காதலி வீட்டிற்கு வரும் அன்புவிற்கு தன் மாமனாராக வரப்போவது யார் என்று தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். பூமாலையின் மனைவி யசோதாவிற்கு(ஸ்வஸ்திகா) மாப்பிள்ளையும் தன் கணவனைப் போல கிரிக்கெட் பைத்தியம் என்று தெரிந்து விடுகிறது. இவனை மணந்து கொண்டால் தன்னைப் போலவே தன் மகளும் கஷ்டப்படுவாள் என்று பெண்ணைக் கொடுக்க மறுக்கிறாள். (எம்.ஜி.ஆர். படங்களில் எதிரியின் மகளை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கதாநாயகனின் அம்மா தடை போடுவார், இதில் பெண்ணின் அம்மா மறுக்கிறார்).

இன்னொரு மாட்சில் இருவருக்கும் கைகலப்பாக எதிர்கால மாமனாரும், மாப்பிள்ளையும் மைதானத்தில் கட்டிப் புரள்கிறார்கள். யசோதா  கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள். பூமாலையும், அன்பும் திருந்தினார்களா? அன்பு காதலியை கைப்பிடித்தாரா? என்பது மீதிக்கதை.

படம் பார்ப்பது போல் இல்லாமல், நிஜமாக ஒரு கிராமத்தில்  நடப்பதை பார்ப்பது போல இருக்கிறது. படத்தில் வரும் அத்தனை கதை மாந்தர்களும் ரத்தமும், சதையுமாக நம் கண் முன்னே உலவுகிறார்கள். அதிலும் தினேஷின் மனைவியாகவும், மகளாகவும் நடித்திருக்கும் பெண்கள் அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக தினேஷ் மனைவியாக வரும் ஸ்வஸ்திகா இளம் வயதில் அம்மா ரோலில், அதுவும் திருமண வயதில் இருக்கும் பெண்ணிற்கு அம்மாவாக பாத்திரம் ஏற்று மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

துர்காவாக நடித்திருக்கும் சஞ்சனா பார்க்கவும் அழகு, நடிப்பும் அழகு. இந்த இரு பெண்களையும் தமிழ் திரையுலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அட்டகத்தி தினேஷ் அப்பாவா? அதுவும் இத்தனை பெரிய பெண்ணுக்கு? என்று வியப்பாக இருக்கிறது. ஆனால் பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஹரீஷ் கல்யாணுக்கு 'பார்க்கிங்' படத்தை அடுத்து நடிக்க வாய்ப்புள்ள நல்ல ரோல். வாய்ப்பை தவற விடவில்லை ஹரீஷ். அவசரப்படாமல் நல்ல பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பாராட்டுவோம். ஹரீஷின் தோழனாக வரும் பாலா சரவணன், காளி வெங்கட், அம்மாவாக வரும் தேவதர்ஷினி, தினேஷின் தாய் கீதா கைலாசம் எல்லோருமே ஏற்ற பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

சாதாரணமாக திரைப்படங்களில்  கதாநாயகன் டீம் ஜெயிப்பது போலத்தான் முடியும், இந்த படத்தில் கதாநாயகர்கள் இருக்கும் டீம் தோற்கிறது. அதற்கு செல்லப்படும் காரணமும் சிறப்பு.

வசனங்கள் இயல்பாகவும், நன்றாகவும் இருக்கின்றன. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்ணனி இசை மிக நன்றாக இருக்கிறது. இயல்பான நகைச்சுவை.

கிரிக்கெட் மாட்ச் கொஞ்சம் அதிகம் என்றாலும், குடும்பத்தோடு  ரசிக்கக்கூடிய நல்ல படம்.

நீதி: எம்.ஜி.ஆர் பட ஃபார்முலா எவர்கிரீன்!

Tuesday, October 29, 2024

பாட்டி GOAT!

பாட்டி GOAT!

சீருடை அணிந்து கொண்டு, காலில் ஷூவையும், முதுகில் பையையும் மாட்டிக் கொண்டு, பள்ளிக்கு கிளம்பிய என் பேத்தி, டி.வி. ரிமோட்டை என் கையில் கொடுத்து, "நௌ இட்ஸ் பாட்டி டைம்(டி.வி. பார்க்க என்பது தொக்கி நிற்கும் பொருள்)" என்றாள். அவள் வீட்டில் இருக்கும் பொழுது கார்ட்டூன்தான் ஓடிக் கொண்டிருக்கும். "ஆனால் பாட்டி ஷூட் நாட் வாட்ச் கிருஷ்ணா கார்டூன்" 

"ஏன்? பாட்டிக்கும் கிருஷ்ணா பிடிக்கும், ஷீ ஆல்சோ வாட்ச் கிருஷ்ணா கார்ட்டூன்" என்றான் என் மகன்.

"நோ, தட்ஸ் மை கிருஷ்ணா கார்டூன்.." என்றவள் கொஞ்சம் இடைவெளி கொடுத்து, "பாட்டி வில் வாட்ச் குக்கிங்" என்றதும், என் மகனும், நானும் அடக்க முடியாமல் சிரித்தோம்.

'வாசலில் கிடக்கும் 

பால் பாக்கெட்டை அம்மாவிடமும்

செய்தித்தாளை அப்பாவிடமும்

கொடுக்க வேண்டுமென்று

குழந்தைக்கு 

யார் சொல்லிக் கொடுத்தார்கள்?'

என்னும் புதுக்

கவிதை நினைவுக்கு வந்தது.'

எப்படியோ பேத்தியை சரிகட்டி GOAT(உம்) பார்த்து விட்டேன்.  அதற்கு வந்த விமர்சனங்கள் பயமுறுத்தின, ஆனால் அத்தனை மோசமான இல்லை. கிளைமாக்ஸ் இழுவை சகித்துக் கொள்ள வேண்டும். வெங்கட் பிரபுவின் படங்கள் அத்தனை மோசமாக இருக்காதே என்ற என் நம்பிக்கை பிழைத்தது. 

தங்கப்பதக்கத்தில் விஜய் நடித்தது போலிருந்தது என்று நான் கூறினால் சிவாஜி ரசிகர்களுக்கு கோபம் வரலாம். ஏன் எனக்குள் இருக்கும் சிவாஜி ரசிகையே ஏற்றுக்கொள்ளவில்லை. "எதை எதோடு ஒப்பிடுகிறாய்? என்ற கேள்வி வந்தது.  

நல்ல படம் வேறு, நல்ல பொழுதுபோக்கு படம் வேறு. GOAT இரண்டாம் ரகம்.

பி.கு: பாட்டி goat(greatest of all time) என்று நான் சொல்லவில்லை. பாட்டியும் கோட்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

Wednesday, October 16, 2024

Bad Newz (Hindi movie review)

 Bad Newz (Hindi movie review)




என் அக்கா ஸ்போக்கன் ஹிந்தி கற்றுக் கொள்கிறாள். அவளுடைய டீச்சர் "ஹிந்தி படங்கள் பாருங்கள்" என்றாராம். எனக்கு ஹிந்தி ஓரளவிற்கு புரியும், ஹிந்தி படங்களை சப் டைட்டில் இல்லாமல் பார்த்தால் ஹிந்தி அறிவு விருத்தியாகும் என்று 'Bad News' (பெயரைப் பார், சகுனமே சரியில்லை)என்று ஒரு ஹிந்தி படத்தை கிளிக்கினேன்.   ரொம்ப வித்தியாசமான ஒரு கதை.


ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஷெஃப் ஆக பணியாற்றும் சலோனி பாகாவிற்கு (திருப்தி டிம்ரி) தான் பணியாற்றும் ரெஸ்டெரெண்டிற்கு மெராக்கி ஸ்டார் டைட்டில் வாங்கித்தர வேண்டும் என்று ஆசை. ஆனால் அவள் திருமணம் செய்து கொண்ட Akil Chadda (ரிக்கி கௌஷல்) மனைவி மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்த செய்யும் செயல்களால் அவள் பணியாற்றும் ரெஸ்டெரண்ட் மெராக்கி ஸ்டார் வாங்கும் வாய்ப்பை நழுவ விடுகிறது, அதனால்அவள் வேலையிலிருந்து தூக்கப்படுகிறாள். வெறுத்துப் போன அவள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து முஸ்ஸோரியில் குர்பீர் சிங் பன்னு(Ammy Virk) என்னும் சர்தார்ஜி நடத்தும் ஒரு ரெஸ்டாரெண்டிற்கு வேலைக்குச் செல்கிறாள்.


சலோனியின் மாஜி கணவன் அவளை வெறுப்பேற்றுவதற்காக நிறைய பெண்களொடு சந்தோஷமாக இருப்பது போல் புகைப்படமெடுத்து அவளுக்கு அனுப்ப, அதில் காண்டான சலோனி வோட்காவை குடித்துவிட்டு குர்பீர் சிங்கை பலவந்தப்படுத்தி அவனோடு இணைகிறாள். தன் ரூமிற்கு வந்தால் அங்கே மாஜி கணவன், அவளைத் தான் இன்னும் விரும்புவதாக கூற அவனோடும் உறவு கொள்கிறாள்(என்ன கஷ்டம்டா!). அறுபது நாட்களுக்குப் பிறகுஅவள் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. தான் போதையில் இருந்ததால் தான் யாருடைய குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த இரவில் தான் உறவு கொண்ட இரண்டு ஆண்களையும் பேடர்னட்டி டெஸ்ட் செய்ய அழைக்கிறாள். அதில் என்ன டிவிஸ்ட் என்றால் அவள் வயிற்றில் உருவாகியிருப்பது இரண்டு குழந்தைகள் அதுவும் இரண்டும் இரண்டு ஆண்மகன்களுடையது(போதுமா?) heteropaternal superfecundation என்னும் அபூர்வ விஷயமாம். இதோடு முதல் பாதி முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? யாரை அவள் மணந்து கொண்டாள்? அந்த குழந்தைகளை என்ன செய்தாள்? போன்றவை அடுத்த பாதியில் ஜவ்வாக இழுக்கப்பட்டிருக்கின்றன.


முதல் பாதி ஓகே! இரண்டாவது பாதியில் தனக்குதான் நல்ல துணவனாகவும், நல்ல தகப்பனாகவும் இருக்கும் தகுதி இருக்கிறது என்பதை நிரூபிக்க ரிக்கி கெளஷலும், அமி விர்கும் செய்யும் கோமாளித்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன. இந்த கூத்தில் படம் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. 


ரிக்கி கெளஷலுக்கு கொ..ஞ்..ச..ம்.. ஓவர் ஆக்டிங் என்றாலும் நம்மூர் பிரகாஷ்ராஜ் மாதிரி நடிப்பு பிரவாகமாக வருகிறது. ஆமியும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார். 


கடைசியில் சலோமி தன் முன்னாள் கணவனோடு இணைகிறாள், குர்பீர்சிங் பழைய காதலியோடு விட்டுப்போன உறவை புதுப்பித்துக் கொள்கிறான். இரண்டு குழந்தைகளையும் இரண்டு தம்பதிகளும் வளர்க்க முடிவு செய்கிறார்கள், சலோமி ஆசைப்பட்டபடி அந்த ரெஸ்டாரெண்டிற்கு மெராக்கி ஸ்டாரும் கிடைக்கிறது. All is well, they started living happily ever after என்று சந்தோஷமாகத்தான் முடித்திருக்கிறார்கள். நமக்குதான் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நிஜமாகவே நடக்க ஆரம்பித்துவிடுமோ என்று நடுக்கமாக இருக்கிறது.


 

Wednesday, October 9, 2024

பெண்கள் திருவிழா

பெண்கள் திருவிழா


எனக்கும் என் தோழிக்கும் ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை. எங்கள் இருவருக்குமே ஏதோ அந்தக் காலம் பொற்காலம் போலவும், அதில் தவறுகளே இல்லை என்றும், இன்றைய இளைய தலைமுறையை குறை கூறுவதும் கொஞ்சம் கூட பிடிக்காது. அப்படிப்பட்ட பதிவுகளை படிக்கும் பொழுதெல்லாம் நழுவி விடுவோம். எல்லா காலங்களிலும் நன்மை,தீமை இரண்டும் கலந்துதான் இருக்கும். இளைய தலைமுறையினார் எத்தனையோ விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கும் பொழுது, பொறுப்பு எடுத்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. என்னுடைய இந்த நம்பிக்கை எங்கள் காலனியில் நடந்த நவராத்திரி விழாவில் நிரூபிக்கப்பட்டது.


நான் 2019ல் நான் ஸ்ரீராம் சம்மிட்டிற்கு வந்தேன். அந்த வருடம் எந்த விழாவிலும் பங்கு கொள்ள முடியவில்லை. 2020ல் பரிச்சயமான சிலர் நவராத்திரியின் பொழுது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தார்கள். ஐந்து வீடுகளில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் (+பிரசாதம்) செய்தோம். அடுத்த வருடம், ஒன்பது வீடுகளில் பாராயணம்+பிரசாதம். அதற்கு அடுத்த வருடம், நவராத்திரி பாராயணம் என்று வாட்ஸாப் க்ரூபில் அறிவிப்பு வெளியான உடனேயே எல்லா நாட்களுக்கும் புக் ஆகி விட்டது.

கன்யா பூஜை

அந்த சமயத்தில் கல்யாணி மாமி என்பவர் ஸ்ரீராம் சம்மிட்டிற்கு வந்தார். அவரும், உமாதேவி என்பவரும் “நவராத்திரியின் பொழுதுதான் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ண வேண்டுமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் எங்கள் வீட்டில் பாராயணம் வைத்துக் கொள்ளலாமே?” என்று அழைக்க கல்யாணி மாமி வீட்டில் வெள்ளிக்கிழமை லலித சஹஸ்ரநாம பாராயணம் தொடங்கப் பட்டது. பின்னர்,மற்றவர்களும் தங்கள் வீடுகளில் வைத்துக் கொண்டனர்.


இந்த குழுவில் இருந்த பத்மாவதி இதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். அவருடைய ஆலோசனையின் பேரில் சென்ற வருடம் எங்கள் சொசைடியில் இருக்கும் கம்யூனிடி ஹாலை அரை நாள் மட்டும் எடுத்துக் கொண்டு பூஜை செய்தோம். பிரசாதங்கள் நாங்களே ஒவ்வொருவர் ஒவ்வொரு ஐட்டம் என்று செய்து கொண்டு வந்தோம். பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது.


இந்த வருடம் ஒரு நாள் முழுவதும் ஹாலை எடுத்துக் கொண்டோம். ஞாயிறு அன்று பூஜை. ஆனால் எங்களுக்கு சனிக்கிழமை இரவு 8:45க்குத்தான் ஹால் கிடைத்தது. மழை வேறு. எங்கள் குழுவின் இளம் பெண்கள் ரங்கோலி போடுவது(ராதா,சிவசங்கரி), ஹால் அலங்காரம், பேக் ட்ராப் (ஜெயஸ்ரீ,மாயா, ஸௌரா,அபூர்வா), அம்மன் அலங்காரம் (துர்கா, கீதா,பாரதி) போன்றவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். குழந்தை பிறந்து சொற்ப காலமே ஆகியிருந்தாலும் ஷோபனா என்பவர் கைக்குழந்தையை கணவரிடம் விட்டு விட்டு இங்கே வந்து பிரசாதம் வினியோகித்தல் போன்றவற்றை செய்தார்.

ஜீன்ஸ், பேண்ட்,டீ ஷர்ட், த்ரீ ஃபோர்த்,டீ ஷர்ட் அணிந்து கொண்டு வேலை செய்த இதே பெண்கள் காலையில், பட்டுப் புடவை, திலகம், பூ என்று மங்களகரமாக அமர்ந்து பூஜை செய்தார்கள். ஸமஸ்கிருத ஸ்லோகங்களை பிழையின்றி கூறினார்கள், பஜனை பாடல்களை ஸ்ருதியும், தாளமும் பிசகாமல் பாடினார்கள். இவர்களே மாலையில் குஜராத்தி பாணியில் சேலை கட்டிக் கொண்டு தாண்டியா ஆடிய அழகை ரசிக்காமல் இருக்க முடியுமா? எல்லா ஏற்பாடுகளும் பெண்களால் மட்டுமே செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

Backdrop தயாராகிறது

இதில் என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம், இரவில் வேலை செய்த பொழுது, எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமாக, விரைவாக நேர்த்தியாக செய்தார்கள். எல்லோரும் வீட்டிற்கு தூங்கச் சென்ற பொழுது இரவு 1:30க்கு மேல் ஆகியிருக்கும். மறுநாள் முகத்தில் எந்தவித சோர்வும் இல்லாமல் எப்படி இருந்தார்கள்? அந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் நாள் முழுவதும் எப்படி இருந்தது? அதைத்தந்தது அவர்கள் ஆர்வமா? இறையருளா? முதல் நாள் மாங்கு மாங்கென்று செய்த அலங்காரங்களை மறுநாள் வெகு இயல்பாக கலைத்தார்களே அந்த பக்குவம் என்னை வியக்க வைத்தது. இதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது. இளைஞர்கள் சரியாகாகத்தான் இருக்கிறார்கள். கோவில்களுக்கும், புனித நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பொழுது தலையை விரித்துப் போட்டுக் கொண்டு செல்லாதீர்கள் என்று நாம் சொன்னால் நிச்சயம் கேட்பார்கள். வேர்கள் மண்ணில் ஆழமாக புதைந்துதான் இருக்கின்றன, கிளைகள் வளைந்திருந்தால் என்ன?   


இளைய தலைமுறையை சிலாகிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் இந்த பதிவில் யுவதிகளுக்கு ஆலோசனை கூறி வழிநடத்தியது, பஜனை, ஸ்லோகங்கள் முதலியவைகளை பயிற்றுவித்தது போன்றவைகளில் அவர்களுக்கு உதவிய சீனியர்களை நான் குறிப்பிடவில்லை. அவர்களும் அதைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். அதைப்போல இளைய தலைமுறையினரில் யார் பெயரையாவது குறிப்பிட விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்.

படிப்படியாக வடிவம் பெற்ற அம்மன்:














The entire team




Thursday, September 19, 2024

கொச்சிக்கு வந்த கொச்சு கிருஷ்ணனும் அம்மா கொண்டாடிய பொம்மை கிருஷ்ணனும்

 கொச்சிக்கு வந்த கொச்சு கிருஷ்ணனும் 

அம்மா கொண்டாடிய பொம்மை கிருஷ்ணனும்



கொச்சி விமானத்திற்காக லவுன்சில் காத்திருந்த பொழுது அந்த இளம் பெண்ணை பார்த்தேன். கையில் ஒரு சிறிய அழகிய பிரம்பு கூடையோடு நடந்து கொண்டிருந்தாள்(ர்). யாருக்கோ அன்பளிப்பாக கொடுக்க கொண்டு செல்கிறாள் என்று நினைத்தேன்.

விமானத்தில் எனக்கு அடுத்த இருக்கைகளில் அவளும், அவள் அம்மாவும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அம்மாவும் பெண்ணும் ஏகப்பட்ட செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். விமானம் புறப்படும் நேரம் செல்ஃபோன், மடிக்கணிணி எதையும் பயன்படுத்தக் கூடாது என்னும் அறிவிப்பை சட்டை செய்யாமல் வீடியோ எடுப்பது, வீடியோகால் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டது எரிச்சலைத் தந்தது.

ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு முழித்துக் கொண்ட பொழுது அந்த பக்கத்து இருக்கை பெண் தன்னுடைய பிரம்புக் கூடையை சாப்பாட்டு மேஜையின் மீது வைத்து, அதன் மூடியை திறந்து வைத்திருந்தாள். அழகாக அலங்கரிக்கப்பட்ட சிறு விக்கிரகம்.

“துர்கையா?” என்று கேட்டேன்.

“இல்லை, கிருஷ்ணா” என்றாள்

“யாருக்காவது பரிசளிக்கப்போகிறாயா?” என்று கேட்டதும்

“மதுராவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று என்னிடம் வினவினாள்.

“ஓ! ஒரு முறை சென்றிருக்கிறேன்.பர்த் ப்ளேஸ் ஆஃப் கிருஷ்ணா”

“அதுதான் என்னுடைய சொந்த ஊரும் கூட. இந்த கிருஷ்ணர் பதினைந்து வருடங்களாக எங்களோடு இருக்கிறார், எங்கள் குடும்பத்தில் ஒருவர். லட்டு கோபால்ஜி என்போம். லட்டு என்பது குழந்தைகளை செல்லமாக அழைப்பது. கோபால்ஜியை நாங்கள் செல்லமாக லட்டு கோபால்ஜி என்போம். இவருக்கு தினசரி உடை மாற்றுவோம், நாங்கள் சாப்பிடுவது எல்லாவற்றையும் இவருக்கும் கொடுப்போம்”. என்று கூடைக்குள் காட்டினாள். ஒரு கு..ட்..டி வெள்ளி டம்ப்ளர், இரு டப்பாக்கள். அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகம்.





அந்தப் பெண்ணோடு மேலும் பேசிக் கொண்டிருந்ததில் அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிந்தது. நீட் எழுதி பெங்களூர் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படித்தாராம். இப்போது மருத்துவத்தில் பி.ஜி. படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறாராம். இவருடைய கிராமத்தில் இவர்தான் முதல் மருத்துவராம். எதிர்காலத்தில் தன்னுடைய சொந்த ஊரில் மருத்துவமனை வைக்க ஆசையாம். இதற்குள் கொச்சி வந்துவிட, அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து சொல்லி விடை பெற்றேன்.

அந்தப் பெண்ணுக்கு கண்ணன் மீது இருப்பது பக்தியா பாசமா? என் அம்மா கூட இப்படித்தான். கண்ணன் மீது பாசம் கொண்டவள். எங்கள் வீட்டில் ஒரு கிருஷ்ணர் பொம்மை உண்டு. அம்மா ரோஜாப் பூவை அந்த கிருஷ்ணன் பொம்மைக்கு வைத்து விட்டு, “கிருஷ்ணனுக்கு ரோஜா பூ வைத்தால் எவ்வளவு அழகாக இருக்கு!’ என்று ரசிப்பாள். கோகுலாஷ்டமிக்கு எத்தனை விதமான பட்சணம் செய்தாலும் போதும் என்றே தோன்றாது. தன்னுடைய குழந்தைக்கு ஆசை ஆசையாக செய்வது போலத்தான் செய்வாள். மாவடு போட்டால் உடனே தயிர் சாதம் பிசைந்து மாவடுவோடு நைவேத்தியம் செய்வாள். தினசரி நைவேத்தியம் உண்டு.

ஒரு முறை அம்மா ஊருக்குச் சென்றிருந்தபொழுது நான் குளிக்காமல் சமைத்தேன். அதனால் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யவில்லை. முதல் நாள் எதுவும் தெரியவில்லை, இரண்டாம் நாள் கிருஷ்ணன்(பொம்மை) முகம் சற்று வாடியிருப்பது போல தோன்றியது. மூன்றாம் நாள் இன்னும் அதிகமாக வாடி, குறிப்பாக பசியால் வாடியது போல தோன்றியதும் குற்ற உணர்ச்சி தோன்றி விட்டது. “ஐயோ! மூன்று நாட்களாக கிருஷ்ணரை பட்டினி போட்டு விட்டோமே?” என்று அடுத்த நாள் குளித்துவிட்டு சமைத்து, நைவேத்தியம் செய்ததும், நம்புங்கள் அந்த கிருஷ்ணன்(பொம்மை என்று சொல்ல மனம் வரவில்லை) முகம் மலர்ந்தது. அதுவும் பசியால் அழுத குழந்தைக்கு ஆகாரம் கொடுத்ததும் ஒரு மலர்ச்சி வருமே.. அதே மலர்ச்சி. அம்மா தன் பக்தியால் பொம்மைக்கு உயிர் கொடுத்து விட்டாளோ?

Sunday, August 11, 2024

ஆடிப் பெருக்கும் ஆதி ரங்கநாதரும்

 

ஆடிப் பெருக்கும் 

ஆதி ரங்கநாதரும்

 

ஸ்ரீரங்கபட்ணம், நிமிஷாம்பாள் கோயில்கள்


ஸ்ரீரங்கபட்டணம் பாலத்திலிருந்து காவேரி

சென்ற வாரம் சகோதரிகளுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆடிப்பெருக்கை பற்றி நினைவு கூர்ந்தோம். திருச்சியில் வசித்தவர்களுக்கு ஆடிப்பெருக்கு ஒரு மறக்க முடியாத கொண்டாட்டம். பேசி முடித்த பொழுது “அப்போதெல்லாம் காவேரிக்குச் சென்றோம், இப்போது எங்கே போவது?” என்று ஏக்கத்தோடு முடித்தோம்.


எனக்கு, நாம் ஏன் ஸ்ரீரெங்கப்பட்டிணம் செல்லக்கூடாது? என்று தோன்றியது. என் மகனிடம் சொன்ன பொழுது, “பார்க்கலாம்..” என்றான். ஆடிப்பெருக்கு சனிக்கிழமை வந்ததால் மகன், மருமகள் இருவருக்கும் அலுவலகம் விடுமுறைதான். மருமகளின் பெற்றோரும் வருவதாக சொன்னார்கள். கலந்த சாதம் பிடிக்காத மகன் வெல்லசாதம், புளியஞ்சாதம், தயிர்சாதத்திற்கு தடா போட்டு விட்டதால் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பினோம்.


சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு கிளம்ப வேண்டும் என்று திட்டம். ஆனால் அப்படி இப்படி 8:45 ஆகி விட்டது. வழியில் அன்று பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை தொடங்கும் இடத்தில் ஏகப்பட்ட கார்கள். வேகமாக செல்ல முடியவில்லை. ஒரு வழியாக நீந்தி நெரிசலை கடந்து பாக சாலாவில் பகல் உணவுக்காக நிறுத்தினோம். நாங்கள் கேட்ட அக்கி ரொட்டி, நீர் தோசை எதுவுமே இல்லை. பகாளாபாத் காலை உணவாம்!! வேறு வழியில்லாமல் வழக்கமான இட்லி, தோசை, பூரிதான். என் மகன் கேட்ட மைசூர் மசாலா தோசையை வெஜிடெபிள் ஸ்பிரிங்க் ரோல் போல கொடுத்து அவனை ஏமாற்றதிற்கு உள்ளாக்கினார்கள். காபி நன்றாகத்தான் இருந்தது. அதை கொண்டு வந்த டம்ப்ளரை ஒரு சின்ன கிண்ணத்தில்(அதுதான் டபராவாம்) வைத்து கொண்டு வந்தார்கள். அதற்கு பக்கத்தில் இருந்த சென்னபட்ணா விற்பனை அங்காடியில் ஒரு குட்டி ஷாப்பிங் முடித்துக்கொண்டு ஸ்ரீரங்கப்பட்ணம் நோக்கி விரைந்தோம்.


நாம் ஸ்ரீரெங்கப்பட்டிணம் என்றாலும் உள்ளூர்வாசிகள் சிரங்கப்பட்ணம் என்கிறார்கள். தென்னிந்திய பாணியில் அமைந்திருக்கும் கோவில். சனிக்கிழமை என்பதாலோ என்னவோ ஓரளவு கும்பல் இருந்தது. ஆனால் தேங்காமல், நகரும் வரிசை. கோவில் ரொம்ப பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை, மீடியம் சைஸ். கொடிமரம் அமைந்திருக்கும் இடம் வித்தியாசமாக முற்றம் போல் திறந்தவெளி அருகில் பெரிய வட்ட வடிவ தூண்கள். பெரிய துவார பாலகர்களை பார்த்து பயந்த என் பேத்தி, “வொய் ஆங்க்ரி ஃபேஸ்?” என்றாள்.


 


கருவறையில் ஆதிசேஷன் மீது வலது கையை மடக்கி மலர்ந்த முகத்தோடு சயனித்திருக்கிறார். சாளகிராம விக்கிரகம் என்றார் பட்டாசாரியார். காலடியில் மகாலட்சுமியும், பூமா தேவியும். உள்சுற்றில் தனி சன்னதிகளில் லட்சுமி நரசிம்மர், யானையின் மீது கை வைத்து ஆசிர்வதித்தபடி அழகான கரி வரதர், கிருஷ்ணர் காட்சியளிக்கிறார்கள். வலதுபுற பிரகாரத்தில் பெருமாளின் பாதம். பிரகாரம் முடியும் இடத்தில் திருப்பதி வெங்கடேஸ பெருமாள், எதிரே ஆஞ்சநேயர் சன்னிதிகள். கொடிமரத்திற்கு அருகில் வணங்கி வெளியே வந்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு, திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஆதி ரங்கம் சென்றும் பிரும்மாணடமான ரங்கநாதரை தரிசித்தேன், இப்போது இந்த ஆதி ரங்கன்! அவன் அருள்தான்.


வெளியே பரப்பியிருந்த கடைகளில் ஒன்றில், ஸ்ரீரங்கத்தில் கொள்ளை விலை சொன்ன கல் சட்டி, சகாயமாக கிடைத்தது. பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்த மாக்கல் சொப்புகளும் கிடைத்தன. பானு ஹேப்பி!


கோவிலுக்கு அருகில் திப்பு சுல்தான் சமாதி இருக்கிறதாம். அங்கே செல்லவில்லை. காவேரிக்கு செல்ல விரும்பி எப்படி செல்வது என்று கேட்டபொழுது, “காவேரியில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அங்கு மக்களை அனுமதிப்பதில்லை, பாலத்திலிருந்து பாருங்கள்” என்றார்கள். பார்த்துவிட்டு திப்புசுல்தான் அரண்மனை கம் மியூசியம் சென்றோம்.


அரண்மனை என்றதும் பாஹூபலி, பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்ட எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. திப்புவின் கோடைகால வாசஸ்தலமாம். சுவர்களில் ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தான் கலந்து கொண்ட போர்களின் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. பெரும்பாலான படங்களில் அவர் ஒரு ரோஜாவை முகர்ந்தபடி இருக்கிறார். மரத்தாலான பால்கனிகள். மரத்தாலான மாடிப்படிகள் கீழ்தளத்தில் மறைவாக இருக்கிறதாம். எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை.






 

திப்பு சுல்தான் கால வாள், கத்தி, அவர் சிரங்கப்பட்ண கோவிலுக்கு வழங்கிய வெள்ளி கிண்ணங்கள், பிரிட்டிஷ் ராணுவ மெடல்கள், திப்புவின் உடை, அவர் கால ஃபர்னிட்சர்கள் வெளியே அவர் காலத்து பீரங்கி முதலியவை காணக்கிடைக்கின்றன.


திப்புவால் ஸ்ரீரங்கநாதர்
 கோவிலுக்கு வழங்கப்பட்ட வெள்ளி கிண்ணங்கள்
திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள்

திப்பு சுல்தான் கால மரச்சாமான்கள்





ஈட்டி, சுருள் கத்தி போன்றவை

 

அருங்காட்சியகத்தின்

 வாசலில் கல் உருண்டைகள்

வெளியே வந்து பார்த்தால், காரின் இரண்டு புற கண்ணாடிகளிலும் இரண்டு உணவகங்களின் விசிட்டிங் கார்ட். அவற்றில் சுக் சாகர் என்ற பெயர் இருந்த உண்வகத்திற்குச் சென்றோம். வாயில் வைக்க வழங்காத உணவை விழுங்கி விட்டு, நிமிஷாம்பாள் கோவிலுக்குச் சென்றோம்.


சின்ன கோவில்தான். வழியெங்கும் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். இங்கேயும் கும்பல் இருந்தாலும், தேங்காமல் நகர்ந்து கொண்டேயிருந்தது. சௌந்தர்யமே உருக்கொண்ட அம்மன். சிரித்த முகம். இவளிடம் நாம் செய்து கொள்ளும் பிரார்த்தனைகளை நிமிஷத்தில் நிறைவேற்றித் தருவதால் நிமிஷாம்பாள் என்ற பெயராம்.


அம்மன் சன்னதியை அடுத்து சிவ பெருமான், லக்ஷ்மி நாராயணர் சன்னதிகள். வணங்கி வெளியே வருகிறோம். பிராகாரம் துவங்கும் இடத்தில் சூரிய பகவான், அவருக்கு நேர் எதிரே விநாயகர், பிரகாரம் முடியும் இடத்தில் ஆஞ்சனேயர். வணங்கி வெளியே வருகிறோம்.


 விநாயகர்,அம்பாள், சிவ பெருமான், மஹாவிஷ்ணு, சூரிய பகவான் என்று பஞ்ச மூர்த்திகளையும் வழிபடும் பஞ்சாயாதன வழிபாட்டு முறையில் அமைந்திருக்கும் கோவில்.



வெளியே வந்தால் கரை புரண்டோடும் காவேரி. படித்துறையும் கண்ணில் பட்டது, ஆனால் அங்கே செல்லக் கூடாது என்று பாதையை அடைத்து வைத்திருந்தார்கள். காவேரிக் கரையில் அமைந்திருக்கும் கோவில். பல நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த கோவிலை தரிசிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம்