கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, August 26, 2018

வரலக்ஷ்மி வருவாய் அம்மா..!

வரலக்ஷ்மி வருவாய் அம்மா..!



ஆடி மாதம் வந்துவிட்டாலே பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கும். முதலில் வருவது வரலக்ஷ்மி நோன்பு அல்லது வரலக்ஷ்மி விரதம். இந்த நோன்பு அனுசரிக்கும் சிலர், அதென்ன சிலர் என்கிறீர்களா? வரலக்ஷ்மி நோன்பு செய்யும் பழக்கம் குடும்பத்தில் இருந்தால்தான் கொண்டாடுவார்கள். மாமியார் அந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் மருமகளும்  தொடர வேண்டும். திருமணம் ஆனவுடன் இதை எடுத்து வைப்பார்கள்.

இந்த வரலக்ஷ்மி விரதம் சில வருடங்கள் ஆடி மாதமும், சில வருடங்கள் ஆவணி மாதமும் வரும். திருமணம் ஆன வருடமே நோன்பு எடுத்துக் கொள்வதென்றால் எந்த மாதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மருமகளும் செய்ய ஆரம்பித்து விடலாம். முதல் வருடத்தை விட்டு விட்டால் எந்த வருடத்தில் ஆவணி மாதத்தில் வருகிறதோ அப்போதுதான் நோன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்(அதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டும்). மாமியார் வீட்டில் இல்லாவிட்டாலும் அம்மா செய்து கொண்டிருந்தால், அம்மாவிடம் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு முறை செய்ய ஆரம்பித்து விட்டால் எல்லா வருடமும் நிறுத்தாமல் செய்ய வேண்டும். ஏதாவது அசம்பாவிதத்தால் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த பூஜையை அனுஷ்டிக்கும் வேறு யாரிடமாவது அம்மன் முகத்தை பூஜிக்க கொடுத்து, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்த விரதம் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். 

வாட்சாப் வந்த படம் 
இப்பொழுதெல்லாம் எல்லோரும் வரலட்சுமியின் முகத்தை வைத்துதான் பூஜிக்கிறார்கள். முன்பெல்லாம் சிலர் வீடுகளில் சுவற்றில் வரலட்சுமியின் முகம் வரைந்து அதை பூஜிப்பார்கள். என் அக்கா, அவர் கூட சில வீடுகளில் வரலக்ஷ்மி படம் வரைந்து தந்திருப்பதாக கூறினார். நிறைய வேலை வாங்கும் பூஜை இது. முன்பெல்லாம் இதை மூன்று நாட்கள் செய்வார்கள். முதல் நாள் வியாழக் கிழமை மாலை வீட்டை அலம்பி, இழை கோலம் போட்டு, செம்மணிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, அம்மன் மண்டபத்தை அலங்காரம் செய்து, அம்மனையும் அலங்கரித்து, முதலில் வீட்டு வாசலில் ஒரு பகுதியில் ஒரு பலகையில் கோலமிட்டு அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, அம்மனுக்கு ஆரத்தி எடுத்து, இரண்டு பெண்களாக அம்மனை வீட்டுக்குள் அழைத்து வந்து மண்டபத்தில் எழுதருளச் செய்வார்கள். அம்மன் அலங்காரத்தில் தாழம்பூ வைத்து பின்னுவது முக்கியம். அதே போல அம்மனுக்கு பின்புறம் அந்த பின்னழகை காணும் வண்ணம் ஒரு கண்ணாடியும் வைப்பார்கள். 

வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி பூஜை, சனிக்கிழமை  புனர்பூஜை செய்துவிட்டு மாலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை கூப்பிட்டு வெற்றிலை பாக்கு கொடுப்பார்கள். அப்போது சுண்டல் உண்டு.

இப்போதைய அவசர காலத்திற்கேற்ப அம்மனை அழைப்பது, பூஜை, மாலையில் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுப்பது என்று எல்லாமே ஒரே நாளில் முடித்து விடுகிறார்கள். அதே போல, ஐயருக்காக காத்திருக்க தேவையில்லாமல் பென் டிரைவ் உதவியோடு பூஜை நடந்து விடுகிறது. அம்மனை அலங்கரிக்க தேவையான எல்லாம் ரெடிமேடாக கிடைப்பதால் அதுவும் ஈசியாக முடிந்து விடுகிறது.   

எங்கள் வீட்டில் வரலக்ஷ்மி பூஜை கிடையாது. எங்கள் கடைசி அத்தைக்கு உண்டு. அத்தையும் திருச்சியிலேயே இருந்ததால் நாங்கள் வரலட்சுமி நோன்பென்றால் அத்தை வீட்டிற்கு சென்று விடுவோம். எங்கள் அம்மா கோலம் போடுவது, அம்மன் அலங்காரம் போன்றவற்றில் திறமை மிகுந்தவர் என்பதால் அத்தைக்கு உதவி செய்ய முதல் நாளே சென்று விடுவார். நாங்கள் பெரும்பாலும் அடுத்த நாள் காலை செல்வோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பெரிய அக்கா ஹாஸ்டலில் இருக்கும் தன் ஸ்நேகிதிகளைக் கூட அத்தை வீட்டிற்கு அழைத்து வருவார். 

முதல் நாள் பூஜைக்கான முன்னேற்பாடுகள் தவிர நைவேத்யத்திற்கான இட்லி, கொழுக்கட்டை போன்றவைகளுக்காக மாவு அரைத்து வைத்துக் கொள்ளுதல், கொழுக்கட்டைக்கு பூரணம் தயார் செய்து வைத்துக் கொள்ளுதல் என்று வேலை நீளும். வெள்ளிக்கிழமை காலை 10:30 முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் எல்லோரும் ராகு காலத்திற்கு முன் பூஜையை முடித்து விட வேண்டும் என்று துடிப்பார்கள். பூஜை செய்து வைக்கும் ஐயருக்கு அன்றைக்கு பயங்கர டிமாண்ட். சில சமயம் ஆவணி அவிட்டமும் அன்றைக்கே வந்து விடும். அவ்வளவுதான் கதை கந்தல்!

சில சமயம் ஆகஸ்ட் 15 அன்று வரலக்ஷ்மி விரத நோன்பு வந்துவிடும். அன்றைக்கு பள்ளிக்கு வந்தே தீர வேண்டும், என்று பள்ளியில் விரட்டுவார்கள். அதுவும் ஓரு பெண் பாடக்கூடிய பெண்ணாகவோ, சுதந்திர தின நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய பெண்ணாகவோ இருந்து விட்டால் பள்ளிக்குச் செல்லாமல் இருக்க முடியாது. வீட்டிலோ, "அப்படி என்ன ஸ்கூல்? ஒரு நாள் கிழமைக்கு கூட வீட்டில் இருக்க முடியாமல்? உங்க டீச்சரெல்லாம் பொம்மனாட்டிதானே?" என்று என்னவோ ஆசிரியைகள் ஆசைப்பட்டு விசேஷ நாளில் பள்ளிக்கு வருவது போலகேட்பார்கள். நிஜமாகவே பாவம் அந்த ஆசிரியைகள் எப்படி மேனேஜ் செய்தார்கள்? 

படம் நன்றி கூகுள்


Saturday, August 25, 2018

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே


மதுரா, விஜயத்திற்குப் பிறகு ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு சுதந்திர தின பட்டிமன்றங்களை தொலைக்காட்சியில் ரசித்து விட்டு, மாலை ஜெ.என்.யூ.விற்கு எதிரே இருக்கும் காமாட்சி கோவிலுக்கும், அங்கிருந்து மலை மந்திருக்கும்சென்றோம். ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் முருகன் கோவில். சுவாமிமலையில் இருக்கும் ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போன்ற தோற்றம். படிகள் அதிகம் இல்லை. இப்போது படிகள் இல்லாமல் மேலே செல்வதற்கு ராம்ப் போல சரிவுப் பாதை அமைத்திருக்கிறார்கள். என்றாலும் நாங்கள் படிகள் வழியாகவே சென்றோம். செல்லும் வழியில் எய்ம்ஸில் டி.வி. சேனல்களின் வாகனங்களை பார்த்து உள்ளே இருக்கும் வி.ஐ.பி. யார் என்று யோசித்தோம். மறு நாள்தான் தெரிந்தது. 


மலை மந்திரில் ஓர் செல்ஃபி  
மறுநாள் காலை கிளம்பிய நாங்கள் காலை சிற்றுண்டிக்காக மூர்த்தல் என்னும் இடத்தில் வண்டியை நிறுத்தினோம். அங்கு பராத்தாக்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றும். அதற்காக நொய்டாவிலிருந்தும், டில்லியிலிருந்தும் அங்கு வருபவர்கள் உண்டு என்றும் சொன்னார்கள். இருந்தாலும், காலை வேளையில் ஸ்டஃப்ட் பராத்தா சாப்பிட முடியாது என்பதால் தாவா பராத்தா ஆர்டர் கொடுத்தோம். வெண்ணையோடு பரிமாறப்பட்ட அந்த பராத்தாவும்,அதற்குப் பிறகு குடித்த மசாலா சாய்யும் மிகவும் நன்றாக இருந்தன.

ஹோட்டலில் அரை கப் வெண்ணை கொடுத்தார்கள்.
எங்கள் வண்டி ஓட்டுனர் குரு ஷேத்திரத்தில் பிரம்ம சரோவர் என்னும் பிரும்மாண்ட ஏரிக்கு எதிரே இருந்த ஓர் ஆஸ்ரமத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தி விட்டு, "பிரும்ம சரோவர், அதன் நடுவில் இருக்கும் சிவன் கோவில், கீதோபதேச ரதம் இவைகளை பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார். 

பிரம்ம சரோவர் பின்னணியில் 
நாங்கள் முதலில் எங்களுக்கு எதிரே இருந்த ஆஸ்ரமத்திற்கு உள்ளே சென்று பார்க்க முடிவு செய்தோம். அங்கு இருந்தது பசுபதிநாத் என்னும் சிவன் ஆலயம்.  அதைத்தவிர ஒரு வேதபாட சாலையும் இயங்குகிறது. மேலும் சிறு மியூசியம் ஒன்றும் இருந்தது.  அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும், நன்கு பராமரிக்கப்படும் நந்தவனம் எல்லாம் இருக்கின்றன. 


செம்பருத்தி பூ தான், சற்று பெரியதாக, சிவப்பாக இல்லாமல் பின்கிஷ் ஆக இருந்தது
அவைகளை பார்த்து விட்டு, பிரும்ம சரோவரின் மத்தியில் அமைந்திருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றோம். சிருஷ்டியின் ஆரம்பத்தில் பிரும்மா தன் தபோ பலத்தால் உருவாக்கியதால் பிரும்ம சரோவர் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தன்று இதில் நீராடுவது சிறப்பு என்கிறார்கள். பாரதப்போரின் இறுதியில் துரியோதனன் ஒளிந்து கொண்ட மடு இதுதான் என்கிறார்கள்.

அதன் நடுவே இருக்கும் சிவன் கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு கீதோபதேச ரதத்தை காணச்சென்றோம். அதற்கு ஒரு பாலத்தை கடக்க வேண்டும். வெய்யில் சுட்டெரித்தது.  கையில் ஒரு சிறிய குடை, அல்லது தலைக்கு ஒரு தொப்பி கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது.

கீதா ரதம் 

பாலத்தை கடந்தால் ஒரு  புல்வெளி, அதைத்தாண்டி ஒரு பெரிய மைதானம். புல்வெளியில் இரும்பினால் ஆன கீதோபதேச ரதம், முப்பத்தைந்து டன் எடையாம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் அந்த ரதமும் சரி, அதில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளும் சரி, க்ரிஷ்ணார்ஜுனர்களும் சரி அசல் பரிமாணத்தில் உள்ளன. 



அங்கிருந்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்த ஜ்யோதிசர் என்று வழங்கப்படும் இடத்திற்குச் சென்றோம். அங்கு இரண்டு பெரிய ஆல மரங்கள் உள்ளன. அதில் ஒன்று இருக்கும் இடம்தான் கீதை பிறந்த இடம் என்கிறார்கள். ஒரு மேடையின் மீது இருக்கும் இதன் கீழ் ராதா கிருஷ்ண விக்ரஹம் இருக்கிறது. அதை ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை காஞ்சி காமகோடி மடத்தால் நிறுவப்பட்டது என்கிறது கல்வெட்டு. 

அங்கிருந்து கல்பனா சாவ்லா பிளானட்டோரியம் பார்த்தோம். பிறகு பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் விழுந்த பீஷ்ம குண்ட் சென்றோம். சிறிய கோவில். பிரதானமாக அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். அவருக்குப் பின்னால் கை கூப்பியபடி பஞ்ச பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி. தலை மாட்டில் சங்கு சக்கர கதாதாரியாக மஹாவிஷ்ணு. 

எப்படிப்பட்ட தியாகி! அம்பு படுக்கையில் இருந்தபடி ஆயிரம் நாமங்களால் இறைவனை துதிப்பதுஎன்பது லேசான விஷயமா?  பகவத் கீதை மனிதனுக்கு கடவுள் உபதேசித்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் மனிதன் கடவுளை நோக்கி துதித்தது. இந்த இரண்டுமே பிறந்த இடங்களை ஒரே நாளில் தரிசிக்க முடிந்தது இறையருள்தான். அங்கு அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தோம். நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கேக்கிறதா?
என் தந்தையின் நினைவு வந்தது. அவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் இரண்டு வேளை தவறாமல் பாராயணம் செய்தவர். காஞ்சி காமகோடி மட பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடம் என் தந்தையின் பெயரை குறிப்பிட்டு அறிமுகம் செய்து கொண்டால் "விஷ்ணு சஹஸ்ரநாமம்?" என்பார். என் அப்பாவின் அந்த பாராயண பலனால் தான் எனக்கு இது கிடைத்தது.



பீஷ்ம குண்டத்திற்கு அருகே ஒரு குளம் இருக்கிறது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மருக்கு தாகம் எடுக்கிறது. அவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வர துரியோதனன் ஓடுகிறான்,அவரோ அவனைத்தடுத்து, "என் பேரன் அர்ஜுனனே என் தாகத்தை தீர்ப்பான்,அர்ஜுனா எனக்கு  குடிக்க தண்ணீர் வேண்டும்" என்று கேட்க, அர்ஜுனன் பூமியை நோக்கி ஒரு அம்பு போடுகிறான். அது ஆழ்துளை கிணறு தோண்டுவது போல பூமியை பிளந்து செல்ல, பீஷ்மரின் தாயாகிய கங்கா தேவியே தன் மகனின் விடாயைத் தணிக்க, பிரவாகமாக பொங்கி வந்தாளாம். அந்த நீர்தான் இந்த குளம் என்கிறார்கள்.

பீஷ்ம குண்டத்தை ஒட்டி பத்ர காளி கோவில் ஒன்று உள்ளது. கோவில் நடை அடைக்கும் நேரம் வந்து விட்டதால் அங்கு செல்லாமல் சாப்பிட வந்து விட்டோம். அங்கு ஒரு நண்பர், "ஏன் பத்ர காளி கோவில் செல்லவில்லை? ஐம்பத்தோரு சக்தி பீடங்களில் அதுவும் ஒன்றாயிற்றே? சதி தேவியின் வலது முழங்கால் விழுந்த இடம் அது" என்றார். சரி அடுத்த முறை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டோம்.

சாப்பிட்டு முடித்ததும் ஊர் திரும்ப வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் வண்டி ஓட்டுனரோ, நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணா மியூசியத்தை பார்க்காமல் போனால் இந்த ட்ரிப் முழுமை அடையாது என்று கூறி எங்களை அங்கு அழைத்துச் சென்றார். 

நான்கு தளங்களில், ஒன்பது காலரிகளில் விரிந்திருக்கும் அந்த மியூசியம் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று. அகில இந்தியாவிலிருந்தும் தருவிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைகள், வெவ்வேறு பாணி கிருஷ்ண ஓவியங்கள், பாகவத ஓலைச்சுவடிகள், பழங்கால புத்தகங்கள், கடைசி தளத்தில் மல்டி மீடியாவின் துணையோடு  மஹாபாரத காட்சிகள், இறுதியாக அபிமன்யு மாட்டிக்கொண்ட சக்ர வியூகம் என்று புதுவித அனுபவத்தை தருகின்றது. ஒவ்வொரு தளத்திலும் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட க்விஸ் விளையாட சிறு கம்பியூட்டர். 

இந்த மியூசியத்தின் உள்ளே நுழைந்ததும் கீழ் தளத்தில் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரின் சிலையைப்  பார்க்கிறோம். அப்போது அது  நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பு வேறு. அதே சிலையை மேல் தளத்திற்கு சென்று அங்கு நமக்கு எதிரே பீஷ்மர் உடலெங்கும் அம்புகள் தைத்திருக்க நிலை குலைந்து ரதத்திலிருந்து கீழே விழுவது போல ப்ரமாண்டமாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்தோடு பார்க்கும் பொழுது ஏற்படும் பாதிப்பு வேறு. அதாவது நான்காவது தளத்தில் நம் கண் எதிரே ரதத்திலிருந்து கீழே விழும் பீஷ்மரின் ஓவியம், நம் பார்வை கீழே போகும் பொழுது பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடக்கும் சிலை. அந்த ஓவியத்திற்கும், சிலைக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணைப்பு சிறப்பாக இருக்கிறது. 

அதன் பிறகு அபிமன்யு கவுரவர்களிடம் தனியாக மாட்டிக் கொண்டு கொலையுண்ட சக்ர வியூகம் போன்ற அமைப்பு. அதன் உட்புறச் சுவர்களில் பாரதப் போர் காட்சிகள். நாம் அதற்குள் நுழைந்து சுற்றி சுற்றி வெளியே வருகிறோம். இப்படி ஒரு அமைப்பில் படைகளை அமைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  

வீடு திரும்பியவுடன் பிதாமகர் என்று அறியப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி காலமானதாக செய்தி. நாட்டு நலனுக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்த மாமனிதர்! நம் நாட்டின் ஜீவாதாரமே தியாகம்தான். அந்த தியாகம் தந்த வலுவால்தான் அம்பு படுக்கையில் கிடக்கும் பொழுது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபிக்கவும், மார்பில் குண்டு பாயும் போது 'ஹே ராம்' என்று விளிக்கவும் முடிந்திருக்கிறது சில மகாத்மாக்களால்.

இப்படி பொது வாழ்க்கையில் மட்டும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்திற்காக, உடன் பிறந்தவர்களுக்காக தன் சொந்த சுகத்தை தியாகம் செய்தவர்கள்  நம் நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட தேசத்தில் கோழைகள்தான் தியாகம் செய்வார்கள் என்னும் மேலை நாட்டு சிந்தனை எப்படியோ புகுந்து சுயநலமிகள் அதிகமாகி விட்டார்கள். நாம் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும். 

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத 
அப்யுதான அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"
(எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ, அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.    

என்று வாக்குறுதி அளித்துள்ள கீதாச்சார்யானை நம் நாட்டிற்கு தன்னலமற்ற தலைவர்களை தருமாறு வேண்டுவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் ஸ்ரீராம்! ராதே கிருஷ்ணா!

Thursday, August 23, 2018

மதுரா விஜயம்(ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்) - 2

மதுரா விஜயம்(ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்) - 2 


பகுதி -2 கோவர்தன் கிரி & ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்:

ஸ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தான் நுழைவாயில் 
கோகுலத்திலிருந்து மதுரா மீண்டும் வந்தோம். அந்த கைட்  "இந்த புண்ணிய ஷேத்திரத்தில் ஒரு பிராமணனுக்கு உணவு அளிப்பது மிகவும் புண்ணியம்" என்று கூறி பணம் பெற்றுக்கொண்டு எங்களை கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அமைந்திருக்கும் கோவில் வாசலில் விட்டு விட்டு நடையைக் கட்டினார்.

கோவில் வாசலில் செல் ஃபோன், கைப்பை இவைகளை க்ளோக் ரூமில் வைத்து விட்டு, நாங்கள் உள்ளே வந்த பொழுது கோவிலுக்குச் செல்லும் கதவை மூடிக் கொண்டிருந்தார்கள். மாலை நாலு மணிக்குத்தான் திறப்பார்களாம்.  நாங்கள் கிருஷ்ணர் பிறந்த இடம் என்று கருதப்படும் சிறைச்சாலை போன்ற அமைப்பிலேயே இருக்கும் ஜென்மஸ்தானை தரிசனம் செய்தோம். அமைதியாகவும், அழகாகவும் இருக்கிறது. பின்னர் அந்த வளாகத்தில் இருந்த செயற்கை குகை ஒன்றில் டிக்கெட் வாங்கிக்கொண்டு புகுந்து, கண்ணனின் வாழ்க்கையை விளக்கும் நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருந்ததை பார்த்து விட்டு வெளியே வந்து, எதிரே இருந்த பாபிலோன் என்னும் ஹோட்டலில் பராத்தா, பாலக் பனீர், மிக்சட் வெஜிடபிள் சப்ஜி சாப்பிட்டு விட்டு வந்த பிறகும் நிறைய நேரம் இருந்ததால் கோவர்தன் கிரியை பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று அங்கு சென்றோம்.

கோவர்தன் கிரிராஜ் மந்திர் முகப்பு 
கிருஷ்ண பக்தையான மீராவிற்கு கிருஷ்ணனின் திருநாமங்களில் மிகவும் பிடித்தது கிரிதாரி என்னும் நாமம்தானாம்.அதனால்தான் அவள் பாடல்கள் எல்லாம் 'மீரா கே பிரபு கிரிதர நாகர' என்னும் முத்திரையோடு முடிந்திருக்கும். எனக்கு மீரா அளவிற்கு பக்தி கிடையாது. ஆனாலும் எனக்கும் மீராவைப் போல கிருஷ்ணரின் பெயரில் கிரிதாரி என்னும் பெயர்தான் மிகவும் பிடிக்கும். அதனால் கோவர்தன் கிரியை தரிசிக்க வேண்டுமென்பதில் எனக்கு ஆவல் கொஞ்சம் அதிகம் இருந்தது. 

திருவண்ணாமலையை கிரி வலம் செய்வது போல் கோவர்தன மலையையும் கிரி வலம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததால் திருவண்ணாமலையைப் போல பெரிய மலையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. சிறிய கோவிலாகத்தான் இருக்கிறது. 

கோவில் உள்ளே நுழைந்ததும் வலது கை பக்கம் கிரிராஜ் சந்நிதி. அதற்கு பக்கத்திலேயே ஒரு கடையில் ஒரு சிறிய டம்பளரில் பாலும், இனிப்புகளும் விற்கிறார்கள். வட இந்தியர்கள் அங்கு பால் வாங்கி கிரிராஜுக்கு அபிஷேகம் செய்து விட்டு, இனிப்புகள் வாங்கி படைத்து விட்டுதான் கிருஷ்ணரை தரிசிக்க செல்கிறார்கள். கிருஷ்ணன் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்யும்படி கோபர்களை பணித்த காரணமாக இருக்குமோ? எப்படியிருந்தாலும் அவர்களின் பக்தி பிரமிக்க வைக்கிறது.

உள்ளே பிரதானமாக இருப்பது வட இந்திய பாணி ராதா கிருஷ்ணர்.  அழகான தோற்றம். பிரதான மேடைக்கு இரு புறமும் சுவற்றில் பெரிய கோவர்த்தன கிரியை தூக்கி ஆயர்களை காக்கும் கிருஷ்ணன் படமும், காளிங்க மர்தன கிருஷ்ணனின் படமும் மாட்டப் பட்டிருக்கின்றன.






பிரதான மேடைக்கு இடது புறமும் வலது புறமும் உள்ள மேடைகளில் பஞ்சினால் கிருஷ்ணரும், கைலாச தோற்றமும் செய்திருந்தார்கள். 

இந்த கோவிலை பரிக்ரமா என்னும் கிரிவலம் இருபத்தோரு கிலோ மீட்டர்களை சுற்றி வர நன்கு மணி நேரம் ஆகும் என்றார்கள். ஒரு வேளை அப்படி சுற்றி வரும் பொழுது மலை கண்ணில் படலாம்.  இப்போது அந்த இடம் மேட்டுப்பாங்காக இருப்பதை வைத்தும், கிரிராஜ் சந்நிதியில் காணப்படும் பாறையை வைத்தும்  ஒரு காலத்தில் மலையாக அல்லது குன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். 

அங்கிருந்து மீண்டும் மதுரா திரும்பும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. நல்ல மழை. ட்ரைனேஜ் பொங்கி வழிந்து, சாலைகளெல்லாம் சாக்கடை வெள்ளம். கடுமையான போக்குவரத்து நெரிசல். நாங்கள் சென்ற பாதையில் திரும்பி வர முடியாமல் திருப்பி விட்டு விட்டார்கள். எப்படி எப்படியோ சுற்றி வளைத்து கிருஷ்ண ஜென்மஸ்தானை அடைந்தோம். 

மழை விட்டு விட்டது. கோவில் வாசலில் பாதுகாப்பு சோதனை செய்யுமிடத்தில் பயங்கர கும்பல். அப்போது ஒரு பள்ளி மாணவன் போலிருந்தொரு சிறு பையன் எங்களிடம் வந்து, "இந்த வரிசையில் நின்று நேரத்தை வீணாக்க வேண்டாம், நான் உங்களை வி.ஐ.பி. வரிசையில் அழைத்துச் செல்கிறேன், ஒருவருக்கு இருநூறு ரூபாய் கொடுங்கள்" என்றான். மூன்று பேருக்கும் சேர்த்து இருநூறு தருவதாக சொல்லி, அவனுடன் சென்றோம். எங்களை விறுவிறுவென்று பின் பக்கமாக அழைத்துச் சென்றான். உள்ளே சென்றால் நாங்கள் எதிர்பார்த்தது போல் கும்பல் இல்லை. நாங்கள் கொஞ்சம் பொறுமையாக பாதுகாப்பு பரிசோதனையை முடித்து விட்டு உள்ளே வந்திருந்தால் சுலபமாக உள்ளே சென்றிருக்கலாம். 
படிகளில் ஏறத்தேவையில்லாமல் லிஃப்ட்டில் அழைத்துச் சென்றான். 

உள்ளே பிரதானமாக ராதா கிருஷ்ணர், அதற்கு அருகில் ராமர்,சீதையோடு லக்ஷ்மணர் இருக்க அவர்களுக்கு நேர் எதிரே ஹனுமான். உள்ளேயே வலமாக வந்தால் துர்க்கா, இவர்கள் தனி சந்நிதி கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு நவகிரகங்களும் இருக்கின்றன. முதன்முறையாக வட இந்திய கோவில் ஒன்றில் நவகிரக சந்நிதியை பார்க்கிறேன். 

எல்லா சந்நிதிகளிலும் தரிசனத்தை முடித்து விட்டு விரைவில் வெளி வந்து விட்டோம். இங்கே காசு காசு என்று பிடுங்கவில்லை.  அந்த பள்ளி மாணவனுக்கு இருநூறு ருபாய் கொடுத்தது எங்கள் தவறு. தவறான வழியில் சம்பாதிக்க முயலும் ஒரு சிறுவனை ஊக்குவித்தோமே என்று உள்ளம் குறுகுறுத்தது. 

பிறப்பால் வைஷ்ணவரும், கிருஷ்ண லீலைகளை நடனமாடி சம்பாதித்தவருமான  ஹேமமாலினி தன் தொகுதியான மதுராவின் மேம்பாட்டிற்கு எதுவும் செய்ததாக தெரியவில்லை.   

சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி,யமுனோத்ரிக்கு இணையாக சொல்லப்படும்  இங்கிருக்கும் மதுரா, பிருந்தாவன்,நந்தகிராமம்,கோவர்தன்கிரி என்ற நான்கில் மூன்றை மட்டும் இந்த முறை தரிசிக்க முடிந்தது.

பிருந்தாவன தரிசனம் அந்த நந்தகுமாரன் மனது வைத்தால் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன். ராதே கிருஷ்ணா!
   

Wednesday, August 22, 2018

மதுரா விஜயம் (ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்)

மதுரா விஜயம்  (ஸ்ரீ  கிருஷ்ண ஜென்மஸ்தான்)

பகுதி - 1: கோகுலம்: 



கோகுலம்  கோவில் 



இந்த முறை  டில்லி விஜயத்தின் பொழுது, சென்ற தடவைகளில் பார்க்க முடியாத மதுரா, பிருந்தாவன், குரு க்ஷேத்ரம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு  செய்து, அங்கு  பார்க்க வேண்டிய இடங்களை பற்றி கீதா அக்காவிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டேன். 

எங்கள் சம்பந்தி, "மதுரா, ஆக்ரா சாலை  விபத்துகள் நிகழும் சாலை என்பதால் அதிக வேகத்தில் செல்ல வேண்டாம்" என்று வண்டி ஓட்டுனரிடம் வலியுறுத்தி கூறியதாலோ என்னவோ அவர் கொஞ்சம் நிதானமாகவே ஓட்டினார். முதலில் பிருந்தாவனை அடைந்தோம்.  பிருந்தாவனில் இருக்கும் கோவிலுக்கு செல்லும் சாலை அடைக்கப் பட்டிருந்தது. காரணம் கேட்டதற்கு சுதந்திர தினம் நெருங்கிக்  கொண்டிருந்ததால் அந்த சாலையில் பள்ளி மாணவர்கள் பரேட் பயிற்சி செய்வார்கள், இரவு எட்டு மணிக்குத்தான் திறக்கப் படும் என்று கூறி  விட்டதால் நாங்கள் நேராக மதுரா சென்று விட்டோம். 

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தானாகிய மதுராவில் கோவில் வரை கார்களை அனுமதிக்க மாட்டார்கள், சற்று தொலைவில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்றார்கள். எங்களுடைய ஓட்டுனருக்கு வண்டியை எங்கே விட வேண்டும் என்று தெரியாமல் ஒரே இடத்தையே இரண்டு முறை சுற்றினார். அப்போது ஒருவர், "கோவில் வாசலிலேயே வண்டியை நிறுத்தலாம், இதோ இவர் உங்களுக்கு வழி காட்டுவார்", என்று ஒருவரை எங்கள் காரில் ஏற்றி விட்டார். அவர் ஒரு கைட் என்பது பிறகுதான் தெரிந்தது. கோவிலுக்குத்தானே செல்கிறோம் என்று கேட்டதற்கு அவர் "ஆமாம்,முதலில் கோகுலம் சென்று விடுவோம், அங்கு கோவில் மூடி விடுவார்கள்" என்றார். போகும் வரை ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று கை பேசியை ஆன் பண்ணினால்,"ஏமாற சொன்னது நானோ..?" என்று நீலப்பல்லில் இளித்தது. 

மதுராவிலிருந்து கோகுலத்திற்கு யமுனை நதியை கடந்துதான்  செல்ல வேண்டும். யமுனையின் குறுக்கே ஒரு பாலம் கட்டப் பட்டிருக்கிறது. அதில் செல்லும் பொழுது, *வசுதேவர், குழந்தை கண்ணனை ஒரு திருடனைப் போல நடு இரவில் யாருக்கும் தெரியாமல் மதுராவிலிருந்து கோகுலத்திற்கு இந்த பாதை வழியாகத்தான் கொண்டு சென்றாராம். எனவே அங்கு வண்டியை சற்று நேரம் நிறுத்தி ஒரு ரூபாய் நாணயத்தை யமுனை நதியில் போட்டு எங்களை ப்ரார்திக்கச் சொன்னார்.  

கோகுலம் கோவிலுக்குச் செல்லும் வழி 

கோகுலம் சென்று ஒரு கோவிலை அடைந்தோம். வசுதேவரின் வீடாக இருந்ததாக சொல்லப்படும் இடம் தற்பொழுது கோவிலாக மாற்றப்பட்டுள்ளது என்கிறார்கள். குழந்தை  கண்ணனைக் காண இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்த பொழுது, சிவ  பெருமானை மட்டும்,  "நீங்கள் கழுத்தில் பாம்பை அணிந்திருக்கிறீர்கள், புலித்தோலை ஆடையாக அணிந்திருக்கிறீர்கள், விரித்த சடையோடு இருக்கிறீர்கள், உங்களை பார்த்தால் என் குழந்தை பயந்து விடுவான்" என்று கூறி கண்ணனை பார்க்க அனுமதிக்க மறுத்து விட்டாளாம் யசோதை.  உடனே சிவபெருமான் அங்கேயே அமர்ந்து  தனக்கு தரிசனம் தர வேண்டி மூன்று நாட்கள் மஹாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்தாராம். அதன் பிறகே அவருக்கு கண்ணன் தரிசனம் கிட்டியதாம். 




கோவிலின் திண்ணை போன்ற பகுதியில் எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு டூரிஸ்ட் கோஷ்டியை மட்டும் கோவிலின் உள்ளே அனுமதித்து கதவை அடைத்து விட்டனர். அப்போது எங்கள் கைட் மேற்படி கதையை எங்களுக்கு கூறி, "சிவபெருமான் மூன்று நாட்கள் தவம் செய்திருக்கிறார், நீங்கள் ஒரு பதினைந்து நிமிடம், கண்ணனை நினைத்து, 'ஓம் நமோ பகவதேவாசுதேவாய' என்று ஜபம் செய்யுங்கள்" என்றார்.   

அந்த டூரிஸ்ட் கோஷ்டி நகர்ந்ததும், நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். உள்ளே சந்நிதிக்கு முன் எங்களை அமரச்  சொன்னார்கள். சன்னிதானம் திரையிடப்பட்டிருந்தது. நாங்கள் வாங்கிக் கொண்டு சென்றிருந்த பூவை என்னையும், என் கணவரையும் சேர்ந்து கைகளில் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். பிறகு, அந்த பூஜாரி, "இது மிகவும் புண்ணியகரமான பூமி, இங்கு உங்கள் தாய், தந்தையர் பெயரில் அன்னதானம், பசுவிற்கு உணவு கொடுப்பது போன்றவை செய்வது  மிகுந்த பலனை கொடுக்கும். அதற்காக நீங்கள் எவ்வளவு நன்கொடை தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார். நாம் அதற்கு ஒப்புக் கொண்டால்தான் திரையை திறக்கிறார்கள். இந்த இமோஷனல் மிரட்டலில் நமக்கு பக்தி குறைந்து விடுகிறது.

மூலஸ்தானத்தில் நந்தகோபர், யசோதை இருபுறம் இருக்க, நடுவில் பலராமன். அவர்களுக்கு கீழே, ஒரு தொட்டிலில் குழந்தை கிருஷ்ணன். நம்மை அந்த தொட்டிலை ஆட்ட சொல்கிறார்கள்.  பலராமன் முகவாயில் பதிக்கப்பட்டிருக்கும் வைரக்கல் அவுரங்கசீப்பால் வழங்கப்பட்டதாம். 

பல இந்துக் கோவில்களை இடித்த அவுரங்கசீப் இந்தக் கோவிலை இடிக்க முற்பட்டபோது அவருடைய பார்வை பறிபோனதாம். அதனால் இடிப்பதை கை விட்டதும் மீண்டும் பார்வை கிட்டியதால் இந்த வைரக்கல்லை கோவிலுக்கு தந்தாராம். இதற்கு சரித்திர பூர்வமாக ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.

அந்த ஹாலின் தூண்களில் பால கிருஷ்ண லீலைகள் சிற்பமாக இருக்கின்றன. ஆனால் அத்தனை திருத்தமாக இல்லை. வெளியே இரண்டு மூன்று படிகளுக்கு கீழே ஒரு மரம் இருக்கிறது. அந்த மரம் நம் விருப்பங்களை நிறைவேற்றும் மரம் என்கிறார்கள். அதில் நிறைய கயிறுகள் கட்டப்பட்டிருக்கின்றன. மரமாக இருந்தாலும் அதை கிரிராஜ் என்றுதான் சொல்கிறார்கள். அங்கும் இரு முதியவர்கள் அமர்ந்து கொண்டு ஒரு கோலினால் நம் தலையில் தட்டி, அவர்கள் வைத்திருக்கும் தட்டில் தட்ஷினை போடச் சொல்கிறார்கள். 

மரத்தை வலம் வந்து இடது புறம் இருக்கும் இருக்கும் மேடையில் இருக்கும் சந்நிதிக்குச் செல்கிறோம். அங்கு நந்தகோபர், யசோதா, மற்றும் லோக மாயா காட்சி தருகிறார்கள்.  லோக மாயை எனப்படும் துர்கா தேவியே யசோதைக்கும், நந்தகோபருக்கும் மகளாக பிறக்கிறாள். கண்ணனை இங்கே விட்ட விட்டு, நந்தினியாகிய மாயா தேவியைத்தான் வசுதேவர் எடுத்துச் செல்கிறாள். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முற்படும்பொழுது அவன் கையிலிருந்து விடுபட்டு செல்லும் மாயா தேவி(இது புராண மாயாதேவி) "உன்னைக் கொல்லப் போகிறவன் கோகுலத்தில் வளர்கிறான்" என்று அறிவித்து விட்டு விண்ணில் மறைகிறாள் என்னும் புராண கதை எல்லோரும் அறிந்ததுதானே. 

இந்த சந்நிதியில் வளையல், சிந்தூர் முதலியவை ஒரு தட்டில் வைத்து விற்கிறார்கள். நாம் கேட்காமலேயே நம் கையில் திணித்து ஐம்பது ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள். 
மாடுகளுக்கு வெள்ளரிக்காய் தரும் என் கணவர்.
கீழே ஒரு இடத்தில் லஸ்ஸி விற்கிறார்கள். நன்றாக இருந்தது. அங்கேயே பசு மாட்டிற்கு தருவதற்காக வெள்ளரிக்காய் விற்கிறார்கள்.  அதை ஒட்டி மூடப்பட்ட ஒரு கேட்டிற்கு பின்னால் நிறைய பசு மாடுகள் எல்லோரும் தரப்போகும் உணவுக்காக ஆவலாக தலையை நீட்டுவதை பார்க்கும் பொழுதும், ஓரளவு நன்றாக உடை அணிந்து கொண்டிருக்கும் குழந்தைகள் கூட நம்மிடம் காசு கேட்டு கை நீட்டும் பொழுதும் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்கி விட்டோமே..!

- தொடரலாம் 

* அந்த இடத்திற்கு சோரி என்று துவங்கும் ஒரு பெயரை குறிப்பிட்டார்,அதை குறித்து வைத்துக் கொள்ளாததால் என் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். 

Friday, August 10, 2018

பிக் பாஸ் - காலத்தின் கோலம் அலங்கோலம்

பிக் பாஸ் -  காலத்தின் கோலம் அலங்கோலம் 


எழுபதுகளின் ஆரம்பம் வரை பெரும் தலைவர்கள் யாரவது இறந்து விட்டால், அரசு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறதோ, அத்தனை நாட்கள் ரேடியோவில் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப்படாது. 'டொ..ய்...ங்..' என்று சித்தார் அல்லது 'பீ...ய்..ங்..' என்று ஷெனாய்தான் அழுது கொண்டிருக்கும். அதை கேட்டு எனக்கு ஷெனாய் இசை என்றாலே ஒரு அலர்ஜி. "வட இந்தியர்கள் திருமணத்தில் கூட இதைத்தான் வாசிப்பார்களாமே..?இதைப் போய் எப்படி..?" என்று நினைத்துக் கொள்வேன். 

அதன் பிறகு நிலைமை கொஞ்சம் மாறியது. அரசு துக்கம் அனுஷ்டிக்கும் நாள்களில் பக்தி பாடல்கள் ஒலி பரப்ப ஆரம்பித்தார்கள். இப்போது கலைஞர் என்னும் மாபெரும் தலைவர் இறந்திருக்கும் பொழுது ஜெயா, விஜய், ஜீ போன்ற சேனல்கள் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் வழக்கம் போல் சமைத்துக் கொண்டு, விளையாடிக்கொண்டு, ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தது  பார்க்க ரசமாக இல்லை. ஏன் கலைஞர் டி.வி. குழுமத்தை சார்ந்த மியூசிக் சேனல் வழக்கம்போல் பாட்டு போட்டுக் கொண்டிருந்தது. கலைஞரை புதைத்த உடனேயே சன் டி.வி.யிலும், கலைஞர் டி.வி.யிலும் சீரியல்களுக்கு திரும்பி விட்டார்கள். ஹும், இதுதான் உலகம்!

பார்ப்பதற்கு ரசமாக இல்லாத இன்னொரு விஷயம் பிக் பாஸ்! நான் கூட சென்ற வாரம், "கூட்டு குடும்பம் என்றால் என்னவென்று தெரியாத இந்த தலைமுறையினர் பிக் பாஸை பார்த்து கூட்டு குடித்தனத்தின் தன்மைகளை தெரிந்து கொள்ளலாம். சின்ன சின்ன பொறாமைகள், புறம் பேசுதல், சண்டைகள் எல்லாம் கொண்டதுதான் கூட்டு குடித்தனம். என்ன வேற்றுமை இருந்தாலும் எல்லோரும் ஒரு குடும்பம், ஒருவருக்கு ஒரு கஷ்டம் வரும்பொழுது மற்றவர்கள் உதவிக்கு வருவார்கள்" என்று பிக் பாஸை சிலாகித்து கூறினேன். திருஷ்டி பட்டு விட்டது போலிருக்கிறது.  அன்று 'உன்னைப் போல் ஒருவன்' என்று ஒரு டாஸ்க்!. அதில் ஒவ்வொருவருக்கும் யாருடைய படம் போட்ட டீ ஷர்ட் வருகிறதோ அந்த படத்தில் இருபவரைப் போல நடந்து கொள்ள வேண்டும். வைஷ்ணவி பாலாஜியாகவும், பாலாஜி டேனியலாகவும், டேனியல் யாஷிகாவாகவும், யாஷிகா வைஷ்னவியாகவும், ஜனனி சென்ராயனாகவும், மும்தாஜ் ஐஸ்வர்யாவாகவும், மஹத் மும்தாஜாகவும், நடித்தார்கள். தலை சுற்றுகிறதா? இதோடு விட்டு விட்டு விஷயத்திற்கு வருகிறேன். இதில் நீல அணிக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க். சிவப்பு அணியினறில், ஒருவரை அழ வைக்க வேண்டும், ஒருவரை சிரிக்க வைக்க வேண்டும், ஒருவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்ல வைக்க வேண்டும், ஒருவரை எம்ப்ராஸ்(embarrass) அடையச் செய்ய வேண்டும். 



எம்ப்ராஸ் என்னும் வார்த்தையை எப்படி புரிந்து கொண்டார் வைஷ்ணவி என்று தெரியவில்லை. பிரபல எழுத்தாளரான சாவி அவர்களின் பேத்தியாகிய இவர் பாலாஜியை சங்கடப்பட வைக்கிறேன் பேர்வழி என்று அவருக்கு முன்னால் தான் அணிந்திருந்த டீ ஷர்ட் ஐ அவிழ்த்து வேறு மாற்றிக் கொண்டார்.    

அதை பாலாஜி மட்டுமா பார்த்தார்? அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்க மாட்டார்களா? இது வைஷ்ணவியின் மண்டையில் உதிக்கவே இல்லையா? அல்லது வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கத் தயார் என்று சொல்கிறாரா? இதனால் பாலாஜி கொஞ்சம் கூட சங்கடப் படவில்லை என்பதுதான் விஷயம். வைஷ்ணவி உன்னை நினைத்து வெட்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், வருத்தப் படுகிறோம். Shame on you! இதை கமல் கண்டிப்பாரா?

Saturday, July 28, 2018

ஆனந்தமாய் சிரிக்கலாம்


☺ ஆனந்தமாய் சிரிக்கலாம்

இவையெல்லாம் எனக்கு வாட்ஸாப்பில் வந்த அந்தக்கால ஆனந்த விகடன் ஜோக்குகள். யாம் பெற்ற இன்பம் பெறுக 'எங்கள் ப்ளாக்' என்று பகிர்கிறேன்.  நகைச்சுவை துணுக்குகள் ஒரு பங்கு என்றால், படங்கள் இரு மடங்காக நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக குறிப்பாக குழந்தை பலம் பெற வேண்டும் என்பதற்காக மருந்து கொடுக்க முயலும் பெற்றோர் படம் குபீர் சிரிப்பை வரவழைத்தது.  


           











Thursday, July 26, 2018

மேகங்கள் விலகும் - 2


           மேகங்கள் விலகும் - 2

வேலைகளை முடித்துக் கொண்டு படுக்க வந்த பொழுது, கணக்கு நோட்டை பிரித்து வைத்துக் கொண்டு அவள் கணவன் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு தினமும் கணக்கு எழுத வேண்டும்.

“கார்தால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு போனேன், என்ன செலவு? எவ்வளவு மீதி?”

கொஞ்சம் யோசித்த ஸ்வர்னா, “இருபது ரூபாய்க்கு பூ வாங்கினேன்..” என்றதும் மணிகண்டனுக்கு எரிச்சல் வந்தது.

“நான் ஐநூறு ரூபாய்க்கு கணக்கு கேட்டால், நீ இருபது ரூபாய்க்கு கணக்கு சொல்ற..” 

“ரோஹித்துக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்தேன்”

“நூறு ரூபாயா? டேய் ரோஹித், எதுக்குடா நூறு ரூபாய்?”

“நூறு ரூபாய் இல்லப்பா, ஐம்பதுதான் கேட்டேன், அம்மாதான், நூறு ரூபாய் கொடுத்தா, ஸ்கூல் கார்டன் போட கேட்டாங்க..” அவன் மீதி ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான்.

“ம்.. அவன் ஐம்பது ரூபா கேட்டா, நீ நூறு ரூபா கொடு, பாக்கியும் வாங்காத, உருபட்டுடுவான்.."

அவள் ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி சொல்லி விட்டாலும், ஒரு அருபதைந்து ரூபாய்க்கு கணக்கு வரவே இல்லை.

கணக்கு தவறாக போட்டுவிட்டு ஆசிரியரின் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவனை காப்பாற்றும் வகுப்பு முடிந்து விட்டதை அறிவிக்கும் மணியைப் போல அவனுடைய செல் அழைத்து அவளை காப்பாற்றியது.

அவன் பேசி முடித்து விட்டு வரும் பொழுது அவள் உறங்கியிருந்தாள். 

எரிச்சலோடு கணக்கு நோட்டை மூடி வைத்தவன், விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டான்.

மறு நாள் காலை சிற்றுண்டி அருந்தும் பொழுது மீண்டும் அதே பேச்சை தொடங்கினான்.

“நீ இன்னும், அந்த அறுபதைந்து ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லை”

“கேவலம் ஒரு அறுபத்தஞ்சு ரூபா.. நான் செலவழிக்கக் கூடாதா?”

“அறுபத்தஞ்ஜாயிரம் கூட செலவழிக்கலாம். ஆனா, எதுக்கு செலவழிக்கிறோம்னு தெரியணும். கேவலம் அறுபதஞ்சு ரூபாயா..? சம்பாதிச்சால்தான் அதன் அருமை தெரியும்.. வீட்டில் உக்கார்ந்து சாப்பிடுகிரவங்களுக்கு என்ன தெரியும்?” என்று தொடங்கியவன், “நீ ஒரு தண்ட சோறு” என்னும் ரேஞ்சுக்கு பேசி முடித்து, அலுவலகதிற்கு கிளம்பிச் சென்றுவிட, இவளுக்கு மனது விண்டு போனது.

“சே.. என்ன வாழ்க்கை இது? நானும் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்., ஒரு அறுபத்தஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு பேச்சா? எனக்கு மரியாதை இவ்வளவுதானா?”

கோபத்தில் சாப்பிடும் நேரம் வந்த பொழுது, மாமியருக்கு மாத்திரம் தட்டு வைத்தாள்.

“அவன் ஏதோ கோவத்தில் கத்தி விட்டு போனால், நீ ஏன் சாப்பாட்டில் கோபித்து கொள்கிறாய்? ஆண் பிள்ளைகள் அப்படித்தான், சாப்பிட வா..”

“கோவம் வந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?”

“விடேன், இதையெல்லாம், காதுல போட்டுக்கொள்ள கூடாது, உன் ஸ்னேகிதாள பார்க்கப் போணும்னு சொன்னியே, சாபிட்டு விட்டு கிளம்பினா சரியா இருக்கும்.”

சாப்பிட்டு விட்டு, முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ரேவதி வீட்டிற்கு கிளம்பினாள்.

அங்கு அவள்தான் முதல் வரவு.

“என்னப்பா..? எப்போதும் நீதான் கடைசியா வருவ.. இப்போ, முதலில் வந்துட்ட..? ஞாபகம் இருக்கா..? ஒரு தடவ ஏதோ ஒரு அஜித் படத்திற்கு அட்வான்ஸ் புக் பண்ணிய கூப்பனை நீ வைத்துக் கொண்டு, லேட்டாக வந்தாய்.. நாங்களெல்லாம் உனக்காக தியேட்டர் வாசலில் காத்துக் கொண்டிருந்தோம்.. ப்ரபா பயங்கர டென்ஷனாயிட்டா..” 

ரேவதி பழைய கதையை அவிழ்த்து விட ஸ்வர்னா சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஏன் இப்பொ சொல்லி டாமேஜ் பண்ற?” என்றாள். பிறகு, “என் ஹஸ்பெண்ட் ரொம்ப பன்சுவல், ஆறு மணிக்கு ஒரு நிகழ்சின்னா ஐந்தே முக்காலுக்கு அங்க இருப்பார். ஸோ, நானும் மாறிட்டேன்.”

“வேற என்னவெல்லாம் மாறியிருக்கு? நல்லா வெய்ட் போட்டுட்ட..”
“நீ மட்டும் என்னவாம்?”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பெரும்பான்மையோர் குண்டாகி, லேசாக நரைக்கத் துவங்கி, கண்களின் கீழ் கருவளையம் விழுந்து, சிலர் பளிச்சென்றாகி.. அந்த இடமே மாறிப்போனது.

எல்லோரும் தங்கள் வயதை மறந்து பேசி சிரித்து, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, உற்சாகம் கொப்பளித்தது.

கூட்டத்தின் நம்ப முடியாத அதிசயம் காயத்ரி. படிக்கும் பொழுது மீடியாக்கர் ஸ்டூடண்ட். முதல் வருடம் அரியர்ஸ் கூட இருந்தது. ஆனால் இரண்டாம் வருடத்திலிருந்து ஒரு வேகம் எடுத்து, முதல் வகுப்பில் தேறி, வங்கித் தேர்வு எழுதி, அதிலும் தேர்ச்சி பெற்று வங்கியில் சேர்ந்ததுதான் இவர்களுக்குத் தெரியும். அவள் அதற்குப் பிறகு எம்.பி.ஏ. முடித்து, தனியார் நிறுவனத்திற்கு மாறி, இன்று அதில் முதன்மை அதிகாரியாம். விடாமல் கைபேசி அழைத்துக்கொண்டே இருந்தது. நம்பத்தான் முடியவில்லை.

கல்லூரி காலத்தில் பல ரோமியோக்களை தன் பின்னால் சுற்ற விட்ட மாலா இப்போது அடையாளமே தெரியாமல் பருமனாகி, முடியெல்லாம் கொட்டி, நிறமிழந்து.. ஏதொ மெடிசன் அலர்ஜியால் இப்படி ஆகி விட்டதாம்.

ஆனால் கட்டுப்பெட்டியாக, இறுக பின்னிய தலை, பாவாடை, தாவணி என்று இருந்த பிரேமா பாண்ட், குர்தா, குட்டையாக வெட்டப் பட்ட தலை முடி, பொட்டில்லாத நெற்றி என்று ஆச்சர்யப்படுத்தினாள். பார்க்கும் எல்லோரையும் அணைத்துக் கொண்டாள்.

அடையாளமே தெரியவில்லை. நீயே இவ்ளோ மாடர்ன்னா? உன் குழந்தை..? என்று நான் ஆரம்பிக்க, ரேவதி கண் ஜாடை காட்டினாள். உடனே பேச்சை மாற்றினேன்.

எல்லோருக்கும் ஜூஸ் கொடுக்க உள்ளே சென்றவள் என்னை அழைத்து,”ப்ரேமவுக்கு குழந்தைகள் இல்லை. அடாப்ட் பண்ணிக்கத்தான் இங்கு வந்திருக்கிறாள்" என்றாள்.

"அது சரி ஏன் லக்ஷ்மி வரவில்லை?"

"அது ஒரு பெரிய ட்ராஜிடி.."

"என்னாச்சு?" என்றாள் காயத்ரி செல் போனை துண்டித்தபடி.

"ரெண்டு வருஷம் முன்னால ஒரு ரோடு ஆக்ஸிடெண்டில் அவள் கணவருக்கு அடி பட்டு, படுத்த படுக்கையா இருக்கார், அதனால லக்ஷ்மியால எங்கேயும் நகர முடியல.."

ஹாலில் சட்டென்று ஒரு அமைதி கவிந்தது.

அதை மாற்ற “ஏய்! சுதா நீ நன்னா பாடுவியே.. ஒரு பாட்டு பாடு”
இப்பொல்லாம் பாட்டு கேட்பதோட சரி, என்று கொஞ்சம் அலட்டி விட்டு பாடத்தொடங்கிய சுதா வார்தைகள் மறந்து போய் பாதியில் நிறுத்த, அதைத் தொடர்ந்து வேறு பாடலைப் பாடிய வித்யா அதையே அந்தாக்ஷரியாக மாற்றினாள். எல்லோரும் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, “நீங்க கண்டினியூ பண்ணுங்க, நான் கிளம்பரேன்..” என்றபடி உமா எழுந்து கொண்டாள்.

“இன்னும் ஹாஃப் அன் அவர்தானே..? எல்லோரும் கிளம்ப வேண்டியதுதான்.”

“இல்ல, என் பையன் ஸ்கூலிலிருந்து வந்துடுவான்”

அரை மணி நேரம் தனியா இருக்க மாட்டானா?

யாரோ கேட்க, அரை நொடி தாமதித்த வித்யா, “அவன் ஸ்பெஷல் சைல்ட், அதனால் தனியா விட முடியாது” என்று கூறி விட்டு எல்லாரையும் மீட் பண்ணியதில் ரொம்ப சந்தோஷம், அடிக்கடி பார்க்கலாம்” என்று கிளம்பியதும், ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர். 

கூட்டத்தில் அதிகம் பேசாமல் உட்கார்ந்திருந்த நித்யா, “ரொம்ப தாங்க்ஸ் ரேவதி, இந்த ரெண்டு மணி நேரம் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அடுத்த கெட் டு கெதெர் நம்ம வீட்ல வெச்சுக்கலாம்”.

“ஷுயர்”

“ஆறு மாசம் முன்னாடி இருந்ததற்கு இப்போ, பெட்டரா இருக்கா இல்லையா?”

“ம்..ம்.., புத்ர சோகத்திலிருந்து மீள்வது அவ்வளவு ஈசியா?”

வீடு திரும்பும் பொழுது ஸ்வர்னாவின் மனசுக்குள் இந்த சந்திப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. என்ன என்ன துன்பங்களை ஒவ்வொருவரும் சந்திக்கிறார்கள்? குழந்தை பிறக்காத சோகம், பிறந்த குழந்தை நார்மலாக இல்லாத சோகம், அழகான குழந்தை இறக்கும் சோகம்,  வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப் போடும் சோகம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்?

வீட்டிர்க்குள் நுழையும் பொழுது, “நாலு மணிக்கு வரேன்னு சொல்லிட்டு போன, இப்போ மணி என்ன? பால் கூட குடிக்காமல் ரோஹித் டென்னிஸுக்கு போய் விட்டான், நான் இன்னும் காபி குடிக்கல..”மாமியார் கடுகடுத்தார்.

“பால், டிகாஷன் எல்லாம் இருக்கே..?”

காபி கலந்து குடிங்கோனு சொல்லிட்டு போனாயா? நீ வந்து கலந்து தருவாய்னு இருக்கேன்..உனக்கு அங்க கிடைச்சிருக்கும்.” நிஷ்டூரமாக பேசிய மாமியார் காபி குடித்தவுடன், "ராத்திரி நீங்கள் வெளியே போய் விடுவீர்கள், எனக்கு என்ன?" என்றார்.

“தோசை மாவு இருக்கு”

“வேண்டாம், நேத்திக்கும், தோசை, இன்னிக்கும் தோசையா? சாதம் வைத்து விடு, மோருஞ்சாதம் சாப்பிட்டுக் கொள்கிறேன்”

கொஞ்சம் தேங்காய் தொகையலும் அரைத்து வைத்து விடலாம் என்று ஸ்வர்னா நினைத்துக் கொண்டாள். இந்த தெளிவு சிறிது நாட்கள் இருக்கும்.

Monday, July 23, 2018

மேகங்கள் விலகும்


மேகங்கள் விலகும்


பட படவென கரகோஷம் எழ கை கூப்பி, நன்றி கூறி ஸ்வர்னா மேடையிலிருந்து இறங்கினாள்.

“எக்ஸலெண்ட் ஸ்வர்னா! இவ்ளோ நன்னா பண்ணுவனு நான் எதிர் பார்க்கவேயில்லை”. என்று அவள் உறுபினராக இருக்கும் லேடீஸ் க்ளப் தலைவி அணைத்துக் கொண்டார்.

“ஸூப்பர் மேடம்,”

“ரொம்ப நன்னா இருந்தது,” 

என்று பலரும் பாராட்ட, ஸ்வர்னா மகிழ்சியில் திக்கு முக்காடினாள்.
இது நகரின் பெரிய மகளிர் அமைப்பின் ஆண்டு விழா. இவள் சார்ந்திருக்கும் லேடீஸ் க்ளபிற்கு அழைப்பு விடுத்ததோடு, அவர்கள் அறிவித்திருந்த போட்டிகளில் எதில் பங்கேற்கிறார்கள் என்றும் கேட்டிருந்தார்கள்.

அழைப்பிதழை படித்த ப்ரசிடெண்ட் கலா சந்தர்,” நாம் எதில் கலந்து கொள்ளலாம்?” என்று கேட்க,

“க்ரூப் சாங்க், டான்ஸ், ட்ராமா, மிமிக்ரி” என்று ஆளாளுக்கு குரல் கொடுத்தார்கள்.

“க்ரூப் சாங்க் நிறைய பேர் வருவாங்க, ஸ்டில், கன்சிடர் பண்ணலாம். டான்ஸ் வேண்டாம், ட்ராமா.. சுமதி நீதானே சொன்ன? இன்சார்ஜ் எடுத்துகறயா?

“ஐயையோ, ட்ராமாவும் போடலாம்னு சொன்னேன்…” ஐடியா கொடுத்த சுமதி ஒரேயடியாக பல்டி அடித்தாள்.

மிமிக்ரி… குட் ஐடியா.. ஆனால் யாருக்கு மிமிக்ரி பண்ண வரும்?
ஸ்வர்னா தயங்கி கை தூக்கினாள்,

வாவ்! ஸ்வர்னா நீ மிமிக்ரி பண்ணுவியா? தெரியவே தெரியாதே… எங்களுக்கு ஏதாவது செஞ்சு காட்டினா, உன் பெயரையே கொடுத்துடுவேன். கலா சந்தர் கேட்க, ஸ்வர்னா தனக்கு தெரிந்த கிருபானந்த வாரியார், மேஜர் சுந்தர்ராஜன், ஹரிதாஸ் கிரி என்று செய்து காண்பித்தாள்.

இவ்வளவு டாலண்ட் வைத்துக் கொண்டு இத்தனை நாள் ஏன் வாயை திறக்கவே இல்லை? ரைட். உன்னோட பெயரையே கொடுத்து விடுகிறேன். அருணா சாயிராம் சேர்த்துக் கொள். ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணு, சொதப்பிடக் கூடாது.

வீட்டிற்கு வந்து கணவனிடம் தான் மிமிக்ரி செய்யப் போவதாக கூறியதும்,”மிமிக்ரியா? நீயா? அப்படினா என்னனு தெரியுமா?” என்று அவன் கேட்டதும், அவளின் உற்சாக பலூன் பட்டென்று உடைந்தது.
கல்லூரியில் படிக்கும் பொழுது அவள் மேடையை கலக்கி இருக்கிறாள் என்பது அவள் கணவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே.

எப்படியோ போட்டியில் கலந்து கொண்டு,இதோ முதல் பரிசும் பெற்றாகி விட்டது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு பாராட்டு?

சமையல், வீட்டு வேலை, தூக்கம் என்ற ஒரே வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வருவதற்கு ஒரு மாற்று. அதிலும் பாராட்டு என்பதே மறந்து விடுமோ என்றுகூட தோன்றும்.

“என்ன இன்னிக்கு சமையல் உப்பு சப்பில்லாமல் இருக்கு?” என்று குறை சொல்லத் தெரியும் நாக்கிற்கு, நன்றாக சமைத்திருக்கும் நாட்களில் ஏன் பாராட்ட மனம் வருவதில்லை?

வாசலில் கொஞ்சம் நேரம் அதிகம் செலவழித்து கோலம் போட்டால், ஃபளாட்டில் சின்னதாக கோலம் போட்டால் போதாதா? தனி வீடா தட்டு கெட்டு போறது?” என்பார் மாமியார்.

கணவனோ, “கோலம் அழகா இருக்கே..? யார் போட்டது?” என்பான். வீட்டில் இருப்பது மொத்தம் இரண்டு பெண்கள்தான். அதில் அம்மாவால் குனிந்து கோலமெல்லாம் போட முடியாது, மனைவிதானே போட்டிருக்க வேண்டும் என்பது கூட புரியாதா? அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லையா?

இதையெல்லாம் அம்மாவிடம் சொன்னால், “உங்க அப்பா என்னை பாராட்டியிருக்காரா?” என்பாள். ஏக்கங்களை முழுங்கியபடி வாழக்கற்றாள். பன்னிரெண்டு வருட ஏக்கங்களை சிதறடித்து விட்டது இந்த பரிசு.

இவள் கொண்டு வந்த பரிசுக் கோப்பையை பார்த்த மாமியார், “ கீதாவும் இப்படித்தான் காலேஜ் படிக்கும் பொழுது போட்டினு போனா பரிசு வாங்காம வர மாட்டா” என்றார்.

தபாலில் பட்டப்படிப்பை முடித்த நாத்தனார் எப்படி கல்லூரியில் பரிசு வாங்கியிருக்க முடியும்? என்ற கேள்வி எழும்பினாலும், என் மகளை விட நீ உசத்தி கிடையாது என்னும் எண்ணமே உள்ளிருப்பது என்பது புரிய மௌனமானாள்.

சென்டர் டேபிலில் வைக்கப்பட்டிருந்த ட்ராஃபியை பார்த்த மகன், “ஹை! ட்ராஃப்பி! யாரோடது?” என்றான்.

கணவனோ, “அட! நெஜமாவே வின் பண்ணிட்டயா? க்ரேட்! மொத்தம் எவ்வளவு பார்டிசிபெண்ட்ஸ்? நீ மட்டும்தானா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டதும், இவளுக்கு கோபம் வந்தது.

“பாராட்ட வேண்டாம், கேலி பண்ணாமல் இருக்கலாம்..”

“பாராட்டிடால் போச்சு, ரோஹித், கிவ் ஹெர் அ பிக் ஹாண்ட்”

தகப்பனும், மகனும் கை தட்டினார்கள். டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தவன், அவள் கொண்டு வந்து தந்த காஃபியை உறிஞ்சியபடி, “ராத்திரி சாப்பிட என்ன?” என்றான்.

"தோசை"

“வெறும் தோசை மட்டும்தானா? ஸ்வீட் எதுவும் கிடையாதா?”

“ஸ்வீட் எதுக்கு?”

“என்னம்மா இப்படி கேட்டுட்ட? ட்ராஃபி வின் பண்ணியிருக்க? செலிபிரேட் பண்ண வேண்டாமா?”

“நானே வின் பண்ணுவேன், அதுக்கு, நானே ஸ்வீட் பண்ணி கொண்டாடனுமா? தேவையில்லை.”

“சே! சே! கண்டிப்பா செலிபிரேட் பண்ரோம்.. ஆனா, இன்னிக்கு இல்லை, நாளைக்கு, வெளில போய் சாப்பிடலாம்..”

“அப்பா, பிசா ஹட்பா..”

“பிசா ஹட் வேண்டாம், லிட்டில் இட்டாலி போகலாம்..”

“வாவ்! சூப்பர்!” இவளுக்கான கொண்டாட்டத்தை இவளுடைய விருப்பத்தை பற்றி கவலைப் படாமல் அவர்களே முடிவெடுத்தார்கள்.

மாலையில் கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது அலைபேசி அழைத்தது. அவளுடைய கல்லூரித் தோழி ரேவதி. பின்னர் அழைப்பதாக குறுந் செய்தி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்ததும் அழைத்தாள். 

“நாளைக்கு என் வீட்டில் காலேஜ் ஃப்ரண்ட்ஸ்‌ ரீ யூனியன் இருக்கு. நீயும் ஜாயின் பண்ணிக்கொள், லெவென் டூ த்ரீ வந்துவிடு” என்றாள்.

“என்ன திடீர்னு?”

“ஸந்தியா யூ.எஸ்ஸிலிருந்து வந்திருக்கா, கிரிஜாவும் சிங்கபூரிலிருந்து வரா.. எல்லாரையும் மீட் பண்ண முடியுமானு கேட்டாங்க..அதுதான்..”

“ஓகே..” எல்லோரையும் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன? கல்லூரி படிப்பை முடித்து திருமணம் ஆகும்வரை எல்லோருடனும் தொடர்பு இருந்தது. அவரவர் திருமணம் ஆகிச் சென்றதும் விட்டுப்போன தொடர்பு, இப்போது முகநூல் மூலம் புதுபிக்கப்பட்டிருக்கிறது.

ரேவதியின் வீட்டிற்கு டூ வீலரில் சென்றால் அரை மணி நேரத்தில் சென்று விடலாம். காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு சென்றால் மாலை நாலு மணிக்குள் திரும்பி விடலாம்.

- தொடரும்