கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 15, 2019

மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும்

மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும் 




அப்துல் கலாமின் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட இந்த நினைவிடத்தை DRDO மிகச்சிறப்பாக பராமரிக்கிறார்கள்.




உள்ளே நுழைந்ததும் மைய ஹாலில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகம் போன்ற அமைப்பில் அவர் ஒரு மேஜைக்குப் பின்னால் அவர் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு பொம்மை வெகு தத்ரூபமாக இருக்கிறது.  இதைத்தவிர உலகத்தலைவர்களோடு அவர் அவர் இருப்பது போன்ற மெழுகு பொம்மைகளும் உள்ளன. அவர் பயன் படுத்திய பேனா, வீணை, மடிக்கணினி, அவருடைய காலணி, எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கடைசியாக அவர் கொண்டு சென்ற ஒரு சிறிய பிரீஃப் கேசில் வைத்திருந்த அவருடைய உடைகள் இரண்டே இரண்டு,மற்றும் ஒரு ஹவாய் செப்பல் இவற்றை பார்க்கும் பொழுது எத்தனை பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்! என்றுதான் தோன்றுகிறது.  கட்டிடத்திற்கு வெளியே அக்னி ஏவுகணையின் மாதிரி ஒன்றும் இருக்கிறது.

நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்தான்.
 



பண்டிகைகளை ஏன் கொண்டாட வேண்டும்?

Sunday, October 6, 2019

பெட்டர் ஹாஃப்

பெட்டர் ஹாஃப் 



மனைவியை பெட்டர் ஹாஃப் என்று சொல்வது பழக்கம். இது யாருக்கு ரொம்ப பொருத்தம் தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும்தான். ஒன்று என்னும் எண்ணை இரண்டு பகுதிகளாக  பிரித்தால் ஒரு பாதி .5, மறு பாதி .5 என்று பிரியும். இரண்டும் சமமாக இல்லாமல் ஒரு பகுதி .48 என்றும் மற்றொரு பாதி .52  என்று இருந்தால் இரண்டையும் .5 என்றுதான் எடுத்துக் கொள்வோம். ஆனாலும்  .48, .52 என்னும் இரு பாதிகளில் இரண்டாவது பெட்டர் இல்லையா? அதைப்போல மகா விஷ்ணுவையும், லக்ஷ்மி தேவியையும் எடுத்துக் கொண்டால் பெருமாளுக்கு செருக்கு, பரத்துவம் என்னும் குணங்கள் உண்டு. தாயாருக்கோ தண்டிக்கவே தெரியாது. கருணையே வடிவானவள். எனவே பெருமாள் .48 பாதியாகவும், தாயார் .52 என்னும் பெட்டர் ஹாஃப் ஆகவும் இருக்கின்றனர். 

- துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசத்தில் கேட்டது.



விகடர் என்று சொன்னாலே எல்லோருக்கும் வாரப்பத்திரிகை ஞாபகம்தான் வரும். ஹாஸ்யத்திற்கு, பரிகாசம்-கேலி, சிரிக்க சிரிக்க பண்ணுவதற்கு 'விகடம்' என்று பெயர் சொல்லுகிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதுர்யமும் இருக்கும். 'விகடகவி' என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டு பண்ணுபவரை சொல்கிறது. அந்த பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திருப்பி படித்தாலும் விகடகவி என்றே வரும். சாமர்த்தியமாக பேசி ஏமாற்று பண்ணுவது அகடவிகடம் என்பார்கள். ஏமாற்று என்றாலும் அதிலிருந்த சாமர்த்தியத்தில் சிரிக்கும்படியும் இருக்கும். 

சம்ஸ்க்ருத டிக்ஷ்னரியில் 'விகட' என்பதற்கு அர்த்தம் பார்த்தால் ஹாஸ்யம்,தமாஷ் என்று இருக்காது. கோரம், பயங்கரம் என்றுதான் போட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் ஹாஸ்யம் பண்ணுவது, சிரிக்க வைப்பது, சிரிக்கும்படியாக ஏமாற்று சாமர்த்தியம் பண்ணுவது, இதெல்லாம்தான் விகடம். விதூஷகன்-காமிக் பாத்திரமென்று இந்நாளில் சொல்கிறார்கள் - அவன்தான் விகடன் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். டிக்ஷ்னரி அர்த்தப்படி 'ப்ரதிநாயகன்' அதாவது வில்லன் என்று இருக்கிற பாத்திரம்தான் விகடன் - கோர ரூபத்தோடும்,குரூரமான காரியத்தோடும் இருப்பவன். 

-தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் 

அம்பிகையின் மூன்று வடிவங்களான மஹாகாளி, மஹா சரஸ்வதி, மஹா லட்சுமி குறித்து பாண்டிச்சேரி அன்னை கூறியுள்ளது. 


இந்த மூன்று வடிவங்களில் மனிதர்களுக்கு மிக நெருங்கி இருப்பவள் மஹா சரஸ்வதி. தன்னை மனிதன் அழைக்க மாட்டானா? என்று காத்திருப்பவள். ஒரு முறை அழைத்தாள்  போதும் ஓடி வந்து அருள் புரிவாள். எத்தனை தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் அவனுக்கு அருள் புரிந்து அவனை கை தூக்கி விடத்  துடிப்பவள்.

மஹாலக்ஷ்மியின் அருளுக்கு பாத்திரமாவது கடினம். அவளை தக்க வைத்துக் கொள்வதும் கடினம். நழுவி ஓடி விட துடித்துக் கொண்டிருப்பாள். 

கருணை மிகுந்தவள் மஹா காளி, ஆனால் சிறு ஒழுங்கீனத்தையும் சகித்துக் கொள்ள மாட்டாள், தண்டித்து விடுவாள். 

இதை நாம் இப்படி புரிந்து கொள்ளலாம். எந்த தேர்வையும் எடுத்துக் கொள்ளுங்கள் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருந்தாலும், 100 மார்க் வாங்கினால்தான் தேர்ச்சி என்பது கிடையாது. குறைந்த பட்சம் 35 அல்லது நாற்பது வாங்கினால் போதும் பாஸாகி விடலாம். அது கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம். ஆனால் அந்த தேர்வை நாம்தான் எழுத வேண்டும். நமக்காக மற்றவர்களை எழுதச் சொல்லக் கூடாது.  அப்படி செய்தால் மஹா சரஸ்வதி, மஹா காளியாகி விடுவாள்.  

சரஸ்வதி பூஜை அன்று கருணை வடிவான அன்னைக்கு நம் வணக்கங்கள்.


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் 
பண்கண்டளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற் 
கண்கண்ட தெய்வமுளதோ  சகல கலாவல்லியே 



Friday, October 4, 2019

Rangoli - Jamakalam


கோலம் போடுவது, ரங்கோலி வரைவது போன்றவைகளில் திறமையுள்ள என் சகோதரி ரங்கோலியில் வரைந்த ஜமுக்காளம் உங்கள் பார்வைக்கு. 

Monday, September 30, 2019

ஆனை ஆனை, அழகர் ஆனை!

ஆனை ஆனை, அழகர் ஆனை!


சில நாட்களுக்கு முன்பு சன் டி.வி.யின் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரியாக  அதிலும் யானைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.சிவ கணேசன் கலந்து கொண்டார். அவர் யானைகளைப் பற்றி தெரிவித்த விஷயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மனிதர்களிடம் இருக்கும் சில பழக்கங்கள் யானைகளிடமும்  உண்டாம். குட்டியை ஈன்ற தாய் யானை அதை பராமரிக்காதாம். அதன் அத்தைகளும் மூத்த சகோதர, சகோதரிகளும்தான் பராமரிக்குமாம். அதாவது நம்முடைய பழைய கூட்டு குடும்ப மரபு.

கூட்டத்தில் ஒரு யானை இறந்து விட்டால் அதன் உடல் டீகம்போஸ் ஆக இரண்டு அல்லது மூன்று மாதங்களாகுமாம். அப்படி இறந்து போன யானையின் எலும்புகளை அதன் குடும்பத்தை சேர்ந்த யானை எடுத்து அருகிலிருக்கும் நீர் நிலையில் போட்டு விட்டு, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்துமாம்.

தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்த யானையை இருபது வருடங்களுக்குப் பிறகும் அதன் லத்தியை பரிசோதித்து, தன்னுடைய குடும்பமா இல்லையா என்று கண்டறிந்து தங்கள் குடும்பமாக இருந்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாம்.

குடும்பத் தலைமையை வகிப்பது பெண் யானைதான். அந்த குடும்பத்தின் மூத்த பெண் யானைதான் அந்த பொறுப்பை வகிக்கும். ஒரே வயதில் நான்கு பெண் யானைகள் இருந்தாலும் எல்லாம் தலைமைக்கு வந்து விட முடியாதாம்.  தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த மூத்த பெண் யானை தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனக்கு பிறகு யார் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதை தீர்மானித்து  அந்த குட்டி யானைக்கு இளம் வயதிலேயே அதற்கான பயிற்சிகளை கொடுத்து தயார் செய்து விடுமாம்.

யானைக்கு பார்வைத்திறன் குறைவுதானாம். ஆனால் மோப்ப சக்தி மிக அதிகமாம். யானையை பழக்க நினைக்கும் பாகன் தன் உடல் வாசனை அதற்கு பழக வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் வரை கூட குளிக்காமல் இருப்பதுண்டாம். இந்தியாவிலேயே யானைகளை பழக்குவதில் தமிழகத்திற்குதான் முதலிடம் என்றார்.

கோவில்களில் பெண் யானைகளைத்தான் வைத்துக் கொள்வார்களாம். அவைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று நியதி இருக்கிறதாம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது கோவில் யானைகள் வருடத்தில் ஒரு மாதம் முதுமலைக்கு ரிட்ரீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது ஒரு நல்ல விஷயம் என்றார்.

ஒருமுறை சூலுற்ற ஒரு யானை அவரையும் அவரது உதவியாளரையும் துரத்தியதாம், அவரது உதவியாளர்,"உங்களால் வேகமாக மரம் ஏற முடியாது, நான் வேகமாக மரத்தில் ஏறி விடுவேன், எனவே, நான் மரத்தில் ஏறி விடுகிறேன், நீங்கள் பாலத்தின் அடியில் இருக்கும் கல்வெட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு, மரத்தின் மீது ஏறிக்கொண்டு விட்டாராம். அதோடு மட்டுமல்ல,"சார், கல் வெட்டுக்கு பின்னல் ஒளிந்து கொள்ளும் முன் அங்கு கரடி எதுவும் இல்லையே என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்" என்றாராம், நல்ல உதவியாளர்! இது போல் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்(!!??) என்றார். சரிதான்!




Friday, September 27, 2019

மசாலா சாட் - 11



மனம் சோர்வுற்றிருக்கும்பொழுது இசை கொடுக்கும் ஆறுதல் அலாதி. லால்குடி ஜெயராமன் அவர்களின் தில்லானாவாக இருக்கலாம். மேடை அமைப்பை பார்த்தால் வெளிநாட்டில் நடந்த கச்சேரி என்று தோன்றுகிறது.
இப்போதெல்லாம் பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. கர்நாடக இசைக்கச்சேரி மேடை போல இல்லாமல் ஆர்கெஸ்ட்ரா போல சிஷ்ய கோடிகளோடு பாடியிருக்கிறார். குட் ஜாப்!


வேடிக்கை மனிதர்கள்:

பிரிட்டனில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தையை  எந்தவிதமான பால் வேற்றுமையும் காட்டாமல் வளர்க்க வேண்டும் என்றும் விரும்பினார்களாம்.
அதனால் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிவித்தார்களே ஒழிய, என்ன குழந்தை என்று தெரிவிக்கவில்லையாம். ஆனால் குழந்தையை கொஞ்சும் பொழுதும், அழும் பொழுது சமாதானப் படுத்தும் பொழுதும் கஷ்டமாக இருந்ததாம். மற்றவர்களிடம் அந்த குழந்தையைப் பற்றி குறிப்பிடும் பொழுது, 'ஹி', என்றோ, 'ஷி' என்றோ குறிப்பிடாமல் 'தே' என்று குறிப்பிடுவார்களாம். குழந்தையின் பாட்டி ஒரு முறை டயப்பர் மற்றும் பொழுது தெரிந்து கொண்டாராம்.  இது குழந்தையை மனோ தத்துவ நீதியாக பாதிக்காதா? நேச்சுரல் இன்ஸ்டிங்ட் என்று என்று ஒன்று உண்டே, அது காண்பித்து கொடுத்து விடாதா? 'கொலையுதிர் காலம்'  நாவலில் சுஜாதா "இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களின் ஆடைகளை, ஏன் உள்ளாடைகளையே அணிந்து கொள்வது பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் அவள் பெண்தான் என்பதற்கு நிறைய சாட்சியங்கள் இருந்தன, தெரிந்தன" என்று எழுதியிருந்ததைப் போல தெரிந்து விடாதா என்ன?










Thursday, September 19, 2019

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாரே..

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாரே..


"நாளை அவருக்கு பிறந்த நாள் என்கிறீர்கள், ஒரு சின்ன கேக் வாங்கிக் கொண்டு வாருங்கள், உங்கள் நாலு பேரை ஐ.சி.யூ. உள்ளே அனுமதிக்கிறேன், செடேஷனை குறைக்கச் சொல்கிறேன், அவர் கட்டிலருகே நின்று 'ஹாப்பி பர்த் டே சாங் பாடுங்கள், அவரால் கேட்க முடியும். தன் பிறந்த நாளை  நீங்கள் கொண்டாடுகிறீர்கள்(??) என்று அவரால் உணர முடியும்." மருத்துவர் கூறியதற்கு இணங்க, அரை கிலோ சாக்லேட் கேக்கிற்கு ஆர்டர் கொடுத்து, அதை எடுத்துக் கொண்டு சென்றோம்.

"நம் வீட்டில் கேக் கட் பண்ணும் பழக்கம் கிடையாதே அம்மா? நாம் ஐயப்பன் கோவிலுக்குத்தானே செல்வோம், ஐயப்பன் கோவில் சந்தனம் இருக்கிறதா?" என்று கேட்டாள் என் மகள். இருந்தது. அதையும்  அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 31அன்று  எடுத்துச் சென்று அவருடைய நெற்றியில் இட்டு விட்டு, அவருக்கு எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து கூறினோம். அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் நர்ஸின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 31 அன்று துடிக்க ஆரம்பித்த அவருடைய இதயம், அதே ஆகஸ்ட் 31 அன்று துடிப்பதை நிறுத்திக் கொண்டது.

எங்களையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி விட்டு, எனக்கு தனிமைத் துயரையும் தந்து விட்டு இறைவனடி அடைந்து விட்டார். வீட்டில் உறவினர்கள் இருந்த வரை பெரிதாக எதுவும் தெரியவில்லை. குறிப்பாக பேத்தி இருந்த வரை தனிமையை உணரவில்லை. அவர்களும் ஊருக்குச் சென்றதும்தான் தனிமை தகிக்கிறது.

"எங்களால் ஆன எல்லாவற்றையும் செய்து விட்டோம், மெடிசன் இஸ் எ சப்போர்ட் ஒன்லி, பாடி ஷுட் ஹீல், டெத் இஸ் இன் எவிடேபில், பீ ப்ரீபெர்ட் பார் யுவர் லாஸ்"  தலைமை மருத்துவர் எங்கள் தலையில் இறக்கிய இடியை தாங்கிக் கொண்டு வெளியே வந்த பொழுது, அவரது அலுவலக வாசலில் இருந்த பெண், "திருப்பதி லட்டு" என்று பெருமாள் பிரசாதத்தை கொடுத்தாள்  "என்ன சொல்கிறார் இந்த வெங்கி?(திருப்பதி பெருமாளை நான் வெங்கி என்றுதான் குறிப்பிடுவேன்)"  எது நடந்தாலும் என் ஆசிர்வாதம் உனக்கு உண்டு என்கிறாரோ என்று தோன்றியது.

சுற்றமும், நட்பும் என்னை எழுதச் சொல்கிறார்கள். இதுவரை மூன்று முறைகளுக்கு மேல் எழுதத் தொடங்கி, தொடர முடியாமல் நிறுத்தி விட்டேன்.  அலமாரியில் இருக்கும் புடவைகளை எடுத்து மீண்டும் அடுக்க முயல்கிறேன். ஒவ்வொரு புடவையையும் மடிக்கும் பொழுதும், அவற்றை வாங்கிய தருணங்கள் மனதில் வருகிறது. பாடல் கேட்கலாம் என்றால் என் கணவருக்கு பிடித்த ஏதோ ஒரு பாடல் வந்து விடுகிறது. ஸ்லோகம் சொல்லவோ பூஜை செய்யவோ  இயலவில்லை.

என்னை வலையுலகத்திற்கு மீண்டும் வரச்சொல்லி எங்கள் பிளாக் உறுப்பினர்கள் பலரும் அழைப்பு விடுத்திருந்த அதிராவின் பதிவையும், கீதா அக்காவின் பதிவையும் ஸ்ரீராம் எனக்கு வாட்ஸாப்பில் அனுப்பி வைத்திருந்தார். இத்தனை கருணைக்கும், அன்பிற்கும் நெகிழ்ச்சியோடு நன்றி கூறிக்கொள்கிறேன்.

என் சோகம் என்னோடு, உங்களை மீண்டும் சந்திக்கும் பொழுது உற்சாகமான பதிவுகளோடுதான் சந்திக்க விருப்பம். சந்திப்போம்.


Wednesday, August 21, 2019

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்


ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெருமானை பூஜிப்பதன் மூலம்தான் அந்த தோஷம் விலகும் என்று முனிவர்கள் கூற, தான் பூஜிப்பதற்காக கைலாயத்திலிருந்து சிவ லிங்கங்களை பெற்று வருமாறு ஆஞ்சநேயரை பணிக்கிறார்.

கைலாயத்திலிருந்து இரண்டு சிவ லிங்கங்களை பெற்றுக் கொண்டு ஆஞ்சநேயர் வருவதற்கு முன் பூஜிக்க வேண்டிய நல்ல நேரம் முடிந்து விடுமே என்பதால் சீதை கடற்கரை மணலில் பிடித்து வைத்த லிங்கத்தையே ராமபிரான் பூஜித்து பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுகிறார். அதைப் பார்த்த ஆஞ்சநேயருக்கு தன்னை அவமதித்து விட்டார்கள் என்று கோபம் வருகிறது. தன கொண்டு வந்த சிவலிங்கத்தைத்தான் வைத்து பூஜிக்க வேண்டும் என்று நிர்பந்திகின்றார். அதற்கு ராமன், "உன்னால் முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றி விட்டு  நீ கொண்டு வந்து லிங்கத்தை ஸ்தாபிக்கலாம்" என்று கூற, அவர் அதை பிடுங்க முயற்சி செய்கிறார். எவ்வளவு முயற்சி செய்த போதிலும் அவரால் அதை அகற்ற முடியவில்லை. இறுதியாக தன்னுடைய வாலால் அந்த லிங்கத்தை மூன்று சுற்றுகள் சுற்றி, தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்து அசைக்கப் பார்க்கிறார். இந்த முயற்சியில் அவருடைய வால் அறுபட்டு அவர் தூக்கி எறியப்படுகிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஞ்சநேயரை தூக்கி எடுத்த ராமன், தன் மார்போடு அனைத்துக் கொண்டு ஆதுரத்துடன் அவர் உடலைத் தடவி கொடுக்கிறார். சீதையும் காயம் பட்ட ஆஞ்சநேயரின் உடலை தடவி கொடுத்தவுடன், ஆஞ்சநேயரின் உடலில் பட்ட காயங்கள் ஆறி, அவர் தன் பழைய உடல் பலத்தையும், வனப்பையும் பெறுகிறார்.

"உன் அறியாமையால் பிரும்மா, விஷ்ணு, இந்திரன் இவர்களால் அசைக்க முடியாத இந்த லிங்கத்தை நீ இவ்விதம் செய்ய முற்பட்டதால் சிவ அபாரதத்திற்கு ஆளானாய். இனி இவ்விதம் செய்யாதே. நீ விழுந்த இவ்விடம் ஹனுமத் குண்டம் என்று அழைக்கப்படும்.  நீ கொண்டு வந்த லிங்கங்களுள் ஒன்றை நான் பூஜை செய்த லிங்கத்திற்கு வடக்கே பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதராக பூஜிக்கிறேன். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் காசி விஸ்வநாதரை வணங்கி அதன் பிறகே என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை பூஜிக்க வேண்டும். மற்றொரு லிங்கத்தை நீ உனக்கு அருகே மேற்கு பக்கத்தில் ப்ரதிஷ்டை செய்து இந்த கோவிலுக்கு காவலாக இருந்து கொண்டு பூஜித்து வருவாயாக. இதனால் நீ செய்த அபசாரத்திலிருந்து விடுபடுவாய்" என்று  ராமன் கூறியதாக தல புராணம் கூறுகிறது.

பிரும்மாண்டமான அழகான கோவில். சந்நிதியில் நுழையும் முன் வல்லப கணபதியை வணங்கி உள்ளே நுழைகிறோம். பிருமாண்டமான, அழகான  நந்தி. ஆனால் அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியாமல் நெருக்கமாக கம்பிகள்.  இந்த நந்தி கோவிலின் பிரும்மாண்டத்திற்கு தோதாக பின்னாட்களில் வைக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

சீதை மணலால் பிடித்த லிங்கம் என்பதை நம்பலாம் போல அழகிய, சிறிய லிங்கம்.  அதற்கேற்றார் போன்ற சிறிய நந்தியை வரிசையில் நிற்கும் பொழுது பார்க்க முடிகிறது.  சுவாமியை தரிசித்து விட்டு வரும் பொழுது சீதா,ராம, லக்ஷ்மணர்களை வணங்கியபடி நிற்கும் ஆஞ்சநேயர், மற்றும் சுக்ரீவனை வணங்கி பிரகாரம் சுற்றி வரும் பொழுது கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி யையும், பிராகாரத்தில் பள்ளி கொண்ட பெருமாளையும் வணங்குகிறோம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்திக்கு எதிர் பக்கத்தில் பிரும்மா  இருக்கிறார். ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட காசி விஸ்வநாதர், விசாலாட்சியையும் வணங்குகிறோம். எல்லா சிவன் கோவில்களையும் போலவே நுழைவாயிலுக்கு இரு புறங்களிலும் சூரிய, சந்திரன் காட்சி அளிக்கிறார்கள்.

வெளி வந்து அம்பாள் சன்னதியில் பர்வதவர்த்தினியை தரிசித்துக் கொள்கிறோம். அம்மன் சன்னதிக்கு வெளியே தூண்களில் நவ கன்னிகையர்களின்
சிலைகள் இருக்கின்றன.





பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை இப்போது வர்ணம் பூசியிருக்கிறார்கள். எனக்கென்னவோ வர்ணம் பூசப்படாத பொழுது இன்னும் அழகாக இருந்ததோ என்று தோன்றியது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த எங்கள் அப்பா அப்போது புகைப்படம் எடுத்திருக்கிறார். இப்போது என் செல் ஃபோனால் சிறை பிடிக்க முயன்றேன். ஐந்துக்கு மூன்று பழுதில்லை அல்லவா?°

இங்கு கிழக்கு வாசலிலிருந்து பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. காலையில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி விட்டு கிழக்கு வாலில் இந்த பேட்டரி காரில் ஏறிக்கொண்டால் வடக்கு வாசலில் இறக்கி விடுகிறார்கள். அங்கிருந்து உள்ளிருக்கும் 27 தீர்த்தங்களில் நீராடி மேற்கு வாசலுக்கு வந்து விடுவோம். அங்கு உடை மாற்றிக் கொள்ள இடம் இருக்கிறது. உடை மாற்றிக் கொண்டு இறைவனை தரிசிக்கலாம்.

இந்த கோவில் சைவ,வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்பட்டாலும் வைணவர்கள் அதிகம் கண்களில் படவில்லை. வட இந்தியர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.








Sunday, August 18, 2019

திருப்புல்லாணி

திருப்புல்லாணி 



தேவிப்பட்டிணத்திலிருந்து திருஉத்திரகோசமங்கைக்கு சென்று விட்டு பின்னர் திருப்புல்லாணி சென்றோம்.  தர்பசயன ராமர் கோவில் என்று பிரபலமாக அறியப்பட்டாலும் மிகவும் புராதனமான இக்கோவில் ஆதி ஜெகந்நாதர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. 

கருவறையில் ஆதி ஜெகந்நாதர் தர்பாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இரு புறமும் ஸ்ரீதேவி,பூதேவி நாச்சியார்களோடு காட்சி அளிக்கிறார். இங்குதான் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த தசரதருக்கு பாயசம் வழங்கப்பட்டது என்கிறார்கள். அதனால் இப்போது கூட குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனுக்கு பாயசம் படைத்தது பிரார்தித்துக்கொள்ள குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிதர்சனமான நம்பிக்கை. தனிசந்நிதியில் அழகே உருவாய் பத்மாசினி தாயார். ஆண்டாளுக்கும் தனி சந்நிதி இருக்கிறது. 

பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது தனி சந்நிதியில் தர்ப்பை படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும்  ராமபிரானை தரிசிக்க முடிகிறது. சீதையை இழந்த சோகத்தில், கடலை கடந்து எப்படி சீதையை மீட்கப்போகிறோம் என்ற சிந்தனையில் தர்பை புல்லையே  படுக்கையாக விரித்து படுத்து விட்டாராம். அவருடைய தொப்பூழிலிருந்து மூன்று தண்டுகள் பிரிய ஒன்றில் பிரம்மா, ஒன்றில், சூரியன், மற்றொன்றில் சந்திரன் இருக்க, சுற்றிலும் முப்பது முக்கோடி தேவர்களும் பாலம் கட்டுவதைப் பற்றி ஆலோசனை செய்தார்களாம். 

இங்கிருந்து இலங்கை கடலின் நடுவே செல்ல பாலம் கட்டுவதற்கு சமுத்திரராஜனிடம் அனுமதி வாங்குவதற்காக அவனை வரச்சொல்கிறார் ராமர். சமுத்திரராஜன் வராததால் கோபமுற்று தன் கோதண்டத்திலிருந்து அம்பினை ஏவுகிறார், அக்னி பிழம்பாக அம்பு பாய, பயந்து போன சமுத்திர ராஜன் ஓடிவந்து ராமனின் பாதம் பணிகிறான். அதன் பிறகு இங்கிருந்துதான் பாலம் கட்டப்பட்டது. அதனால் இந்த இடம் ஆதி சேது என்று வழங்கப்படுகிறது. இங்குதான் விபீஷணன் ராமரிடம் சரணடைந்தாராம். எனவே இது சரணாகதி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

கடலைத்தாண்டி சீதையைக் கண்டு, அவளிடமிருந்து சூடாமணியை பெற்று வந்த ஹனுமான் இங்குதான் அதை ராமனிடம் தந்ததாக சொல்கிறார்கள்.

இங்கு பட்டாபிஷேக ராமருக்கு என்று ஒரு தனி சந்நிதியும், சந்தானகோபாலருக்கு தனிசந்நிதியும் இருக்கின்றன.  ஆனால் நடை சாத்தி விட்டதால் இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணரை எங்களால் தரிசனம் செய்ய முடியவில்லை.  குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கிருஷ்ணருக்குத்தான் பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  வெளி பிரகாரத்தில் அரச மரத்திற்க்கு அடியில் நிறைய நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. 

திருமங்கையாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட தலம். 108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று. மூலவர் ஆதி ஜெகன்னாதர், உற்சவர் கல்யாண ஜகந்நாதர். தாயார் பத்மாசினி மற்றும் கல்யாணவல்லி. 

இங்கிருக்கும் சமுத்திரத்தில் நீராடி விட்டுதான் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்கிறார்கள். நாங்கள் தரிசனம் மட்டும் செய்து கொண்டோம். 

Thursday, August 15, 2019

தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம்

தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம் 



ராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் தேவி பட்டிணம் சென்று அங்கு ராமபிரான் ஸ்தாபித்த நவபாஷாண நவகிரகங்களை வணங்கி, பின்னர் திருப்புல்லாணி சென்று தர்பசயன ராமரை சேவித்து பின்னரே ராமேஸ்வரம் வந்து பர்வதவர்த்தினி சமேத ராமநாதரையும், அவருக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் காசி விஸ்வநாதரையும், விசாலாக்ஷியையும் வணங்க வேண்டுமாம். இந்த நடைமுறை எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் யதேச்சையாக இப்படி நேர்ந்தது இறையருள் என்றுதான் கூற வேண்டும். 

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்றவுடன் தேவிபட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தலங்களுக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தோம்.

தேவிப்பட்டிணம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நவபாஷாண நவக்கிரகங்கள். ஆனால் இந்த இடம் பல புராதன பெருமைகளை உடையது. மூல சேது என்று அழைக்கப்படும் இங்கு ஒரு முறை தர்ம தேவதை தன்மைகொண்டது நான்கு கால்களோடு தவம் புரிந்து சிவ பெருமானின் வாகனமாகிய ரிஷபமாகியதால் இதற்கு தர்ம தீர்த்தம் என்று ஒரு பெயர் உண்டு. 

காலவ மகரிஷி என்பவர் இங்கு மஹாவிஷ்ணுவை குறித்து அக்னிக்கு நடுவில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பொழுது, மிகுந்த பசியோடிருந்த துர்தமன் என்னும் அசுரன் பயங்கர சப்தம் எழுப்பியபடி இவரை விழுங்க வந்தான். அவன் எழுப்பிய சப்தத்தால் தவம் கலைந்த காலவ மகரிஷி அவனைக் கண்டு பயந்து போய் கண்களை மூடி  மஹாவிஷ்ணுவை மனதில் இருத்தி மீண்டும் தவத்தில் ஈடுபட, மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் துர்தமனை வதம் செய்தார். காலவ மகரிஷி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருக்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருப்பதால் இது சக்ர தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. 

மஹிஷாசுரனுக்கும், அம்பிகைக்கும் யுத்தம் நடந்த பொழுது, மகிஷாசுரன் இங்கிருக்கும் சக்ரகுளத்தில் வந்து ஒளிந்து கொள்கிறான். அம்பிகை தனது வாகனமாகிய சிங்கத்திடம், இந்த குளத்தின் நீரை  குடிக்கச் செய்து மகிஷாசுரனை வதம் செய்கிறாள். எனவே இந்த குளம் வற்றி விடுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை கொண்டுவந்து இதை நிரப்புகிறார்கள். ஏனவே இது அமிர்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.  மஹிஷனை அம்பிகை அழித்த இடமாகையால் தேவிப் பட்டிணம் என்னும் பெயர் பெற்றது. 





ராமபிரான், ராவணனோடு யுத்தம் செய்யவும் முன் இங்கு நவபாஷாணத்தால் ஆன நவகிரகங்களை அமைத்து,வழிபட்டுவிட்டு சென்றாராம். இப்போது தேவி பட்டினம் என்றால் எல்லோருக்கும் அதுதான் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் கடலுக்குள் இருக்கும் அந்த நவபாஷாண நவகிரகங்களை கடலுக்குள் இறங்கித்தான் வணங்க முடியும். இப்போது அதைச் சுற்றி பாலம் போல அமைத்து விட்டார்கள். இயலாதவர்கள் அந்த பாலத்தில் மேல் நடந்து சென்று நவகிரகங்களை சுற்றி வர முடியும். நாங்கள் அதைத்தான் செய்தோம். 

அடுத்து தர்பசயன ராமரை தரிசிக்கலாம்.

*கடைசி புகைப்படம் உபயம் கூகுள். 

Monday, August 12, 2019

திருஉத்திரகோசமங்கை

திருஉத்திரகோசமங்கை


நீண்ட நாட்களாக திருஉத்திரகோசமங்கை செல்ல வேண்டும் என்ற என் ஆசை சமீபத்தில் நிறைவேறியது. காசிக்கு செல்லும் முன் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பதால் அங்கு சென்ற பொழுது உத்திரகோசமங்கைக்கும் சென்றோம்.

சைவர்களுக்கு மிகவும் முக்கியமான கோவிலான இது ராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரத்திற்கும் ராமேஸ்வரத்திற்கு இடையில், இராமேஸ்வரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது.  . ராமாயண காலத்திற்கு முற்பட்ட மிகவும் புராதனமான கோவில்என்கிறார்கள். மண்டோதரி இங்கிருக்கும் மங்களேஸ்வரரை வழிபட்டுதான் ராவணனை கணவனாக அடைந்தாளாம்.

உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்பது இங்கே பார்வதி தேவியை குறிக்கிறது. சிவபெருமான் மங்கையாகிய பார்வதி தேவிக்கு, வேதங்களின் பொருளை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால் உத்திரகோசமங்கை. திரு என்னும் அடைமொழி சேர்த்து திருஉத்திரகோசமங்கை.
இறைவன்: மங்களேஷ்வரர்/மங்கள நாதன்
இறைவி : மங்களேஷ்வரி
ஸ்தல விருட்சம் : இலந்தை
நடராஜர் : ஆதி சிதம்பரேசன்


இரண்டு கோபுரங்கள் தெரிகிறதா?

பெரிய விஸ்தாரமான கோவில். சுவாமி சந்நிதிக்கு, அம்பாள் சந்நிதிக்கு என்று இரண்டு கோபுரங்கள். கோவில் வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

இந்த கோவிலின் கருவறைக்கு முன்பு வலது பக்கத்தில் பெரிய சாளக்ராமமா?? சிறிய லிங்கமா என்று தெரியாமல் ஒன்று இருந்தது.  அதைப்பற்றி விசாரித்தபொழுது, அந்த அர்ச்சகர்," இது இராவணன் பூஜித்த சாளக்ராமம்" என்றார்.  புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

ராவணன் பூஜித்த சாளக்ராமம் 



ராமநாதபுரம் ராஜா

மரகத நடராஜர் சன்னதி

இந்த கோவிலில் பல வித்தியாசமான விஷயங்கள் உள்ளன.

சாதாரணமாக எல்லா சிவன் கோவில்களிலும் நுழைவு வாசலில் இடது புறம் விநாயகருக்கும், வலது புறம் முருகனுக்கும் சிறிய சந்நிதி இருப்பதை காணலாம். இங்கு அது இடம் மாறி வலது புறத்தில் முருகனுக்கும், இடது புறம் விநாயகருக்கும் சிறிய சந்நிதிகள் காணப்படுகின்றன.

சிவனுக்கு ஆகாது என்று சொல்லப்படும் தாழம்பூவால் இங்கிருக்கும் சிவபெருமானை அர்ச்சனை செய்யலாம்.

இங்கிருக்கும் நடராஜர் முழுவதும் மரகத கல்லால் வடிக்கப்பட்டவர். அதிக ஒலி மரகத கல்லில் விரிசலை ஏற்படுத்தும் என்பதால் இந்த கோவிலில் மேளம் போன்ற அதிக ஒலியை ஏற்படுத்தும் கருவிகள் வாசிக்கப்படுவதில்லை. சப்தத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வருடம் முழுவதும் இந்த நடராஜர் சந்தன காப்பிடப்பட்டு இருக்கிறார்.  மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் திருவாதிரை அன்று மட்டும்(பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளில்தான் வரும்) சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்படுமாம்.  பிறகு மீண்டும் சந்தன காப்பிடப்பட்டு விடுகிறது.

இங்கிருக்கும் நடராஜருக்கு கையில் பாம்பு கிடையாது, இடுப்பில் புலித்தோல் கிடையாது, தலையில் கங்கை கிடையாது என்று கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் முதன்முதலாய் நடராஜா நடனம் ஆடினாராம், அதற்குப்பின்னர்தான் சிதம்பரத்தில் ஆடினாராம், எனவே இது ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இத்தனை சிறப்புக்கள் கொண்ட நடராஜர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுதருளியிருக்கிறார்.

திருவிளையாடற்புராணத்தில் வரும் வலை வீசி மீன் பிடித்த படலம் இங்கேதான் நிகழ்ந்தது.

தற்சமயம் கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனாலோ என்னவோ, இந்த கோவிலின் சிறப்பு அம்சமான திறந்த வாய்க்குள் சுழலும் பந்தோடு கூடிய யாளியை பார்க்க முடியவில்லை. அறுபது மூவர் சிலைகளுக்கு மேல் ஒவ்வொரு நாயனாரும் செய்த திருப்பணி ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது.

கோவிலை விட்டு வெளியே வந்த பொழுது எங்கள் காரோட்டி,"இந்த கோவிலுக்கு எல்லோரும் வந்து விட முடியாது, இங்கிருக்கும் சிவன் அழைத்தால்தான் வர முடியும்" என்றார். கடவுளுக்கு நன்றி கூறி கிளம்பினோம். தென்னாடுடைய சிவனே போற்றி!



                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       













Saturday, August 10, 2019

கேட்ட வரம்

கேட்ட வரம்
 

உப்பரிகையில் நின்று கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தியின் கண்களில், கீழே நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்த ராமனும், சீதையும் பட்டார்கள். சீண்டலும்,சிணுங்கலும், சிரிப்புமாக நடந்து கொண்டிருந்த அவர்களை பார்க்க பார்க்க அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது. 


"எதைப்பார்த்து இத்தனை சந்தோஷம் உங்களுக்கு?"  குரல் கேட்டதும்தான், கௌசல்யா அங்கு வந்திருப்பதை உணர்ந்தார். 

"அங்கே பார், நம் குழந்தைகளின் சந்தோஷத்தை? அதை விட வேறு எது நமக்கு மகிழ்ச்சி தரும்?"

தசரதர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த கௌசல்யா,"நம் குழந்தைகளாகவே இருந்தாலும், தனிமையில் இருக்கும் தம்பதிகளை கவனிப்பது தவறு. மேலும், பெற்றோர்களின் கண் மிகவும் பொல்லாதது. அவர்களுக்கு கண்ணேறு பட்டு விடப்  போகிறது நகர்ந்து வாருங்கள்." கணவரை நகர்த்தி அருகில் இருந்த ஊஞ்சலில் அமர வைத்தாள். 

" நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது...! விஸ்வாமித்திரர் வந்து தன் யாகத்தை பாதுகாக்க ராமனை துணைக்கு அழைத்தது, நான் தயங்கியது, பிறகு வசிஷ்டர் ஆலோசனைப்படி அனுப்பி வைத்தது, பிறகு ராமன் ஜனகரின் சிவ தனுசை முறித்து சீதையை மணக்கும் வாய்ப்பை பெற்று விட்டான் என்று செய்தி வந்தது...எல்லாம் நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது." பழைய நினைவுகளில் ஆழ்ந்த தசரதர் தொடர்ந்து, "அப்போது குழந்தை பருவத்தை கடந்து, யுவனாக மாறிக் கொண்டிருந்த ராமன், இன்று கட்டிளம் காளையாகி விட்டான், அவனுக்காகவே பிறந்தது போன்ற, எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடான மனைவி சீதா. சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள், என்றாலும்.. " என்று இழுத்து நிறுத்த, 

"அவர்களின் சந்தோஷத்திற்கு சாட்சியாக இன்னும் ஒரு மழலைச் செல்வம் வாய்க்கவில்லை என்பதுதானே உங்கள் வருத்தம்?" என்ற கௌசல்யா, தொடர்ந்து "என்ன செய்வது இது சூரிய வம்சத்திற்கு ஏற்பட்ட சாபமோ? ஹரிச்சந்திர மஹாராஜாவுக்கே நீண்ட காலம் கழித்துதான் லோகிதாசர் பிறந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பாட்டனார் திலீப சக்ரவர்த்திக்கும் இது நிகழ்ந்தது, நமக்கும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பிறகுதானே மழலைச் செல்வம் வாய்த்தது? ராமனுக்கும்  பிறக்கும். ஆனால் அதற்கு முன்னால் ராமனுக்கு இன்னும் கூடுதல் பொறுப்புகள் கொடுப்பது நல்லதில்லையா?"

"பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்து விட்டால் இறக்கி வைக்க முடியாது கௌசல்யா, பாவம் அவன் குழந்தை, இன்னும் சிறிது நாட்கள் சந்தோஷமாக இருக்கட்டுமே. நான் திடமாகத்தானே இருக்கிறேன்.."ஊஞ்சலில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் போட்டுக்கொண்டார்.

பதில் எதுவும் சொல்லாத கௌசலை, மெல்ல சிரிப்பதை பார்த்த தசரதர்,"எதற்காக இந்த சிரிப்பு?" என்றதும்,

"வேறு ஒன்றும் இல்லை, பெண்களைப் பெற்றவர்களுக்கும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்தேன், சிரிப்பு வந்தது"

"என்ன வித்தியாசம்?"

"பெண்ணைப் பெற்றவர்கள், அந்த பெண்ணை குழந்தையாக கருதுவது சொற்ப காலத்திற்குத்தான். மிகச்சிறிய வயதிலிருந்தே எதிர்காலத்தில் அவள் ஒரு குடும்பத்தலைவியாக விளங்க வேண்டியதற்காக அவளை தயார் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பிள்ளையைப் பெற்றவர்களோ பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அவனை குழந்தையாகவே நினைக்கிறார்கள்."

"நீ ஏதோ பூடகமாக பேசுகிறாய் கௌசல்யா.."

"இல்லை அரசே, தெளிவாகத்தான் கூறியிருக்கிறேன். எனக்கு மாலை நேர பூஜைக்கு நேரமாகி விட்டது, வருகிறேன்"

"பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் விட்டுவிட்டு செல்வது தவறான பழக்கம்"

"என்ன செய்வது? அரங்கன் அழைக்கிறானே..?"

"ம்ம்.. நீ ரங்கநாதனை பூஜித்து, பூஜித்து, அவனே கீழே இறங்கி வந்து விடப் போகிறான்.."

"அப்படி வந்தாலும் வந்திருப்பது அவன்தான் என்று புரிந்து கொள்ளும் ஞானம் வாய்க்க வேண்டாமா?"

"என்ன, இன்றைக்கு ஏதோ பூடகமாகவே பேசுகிறாய்?"

பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கௌசல்யா சென்று விட, தசரதனின் மனதுக்குள் ஏகப்பட்ட எண்ணங்கள் , ரிஷி பத்தினியாகியிருக்க வேண்டியவள் நாடாளும் அரசனின் பட்ட மகிஷி ஆகி விட்டாள். என்ன சொல்கிறாள்? ராமனுக்கு முடி சூட்ட வேண்டும் என்கிறாளா? எதையும் உடைத்து பேசும் பழக்கம் கிடையாது. அவள் மனதில் உள்ளது சுமித்ராவுக்கு தெரிந்திருக்கும், ஆனால் அவள் தனக்கென்று கருத்து எதுவும் இல்லாதவள். கைகேயிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு முன்னால் நம் குலகுரு வசிஷ்டரிடம் சென்று ஆலோசனை பெற்று வரலாம்.

*******************************************************************************************
வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு அரசர் தசரதர் வரப்போகிறார் என்பதை அறிந்து அங்கிருந்த மாணாக்கர்கள் பரபரப்பு அடைந்தார்கள். 

"தசரத சக்கரவர்த்தி வருகை தரப்போகிறாராமே? என்ன விஷயம்? ஏதாவது அரசாங்க ஆலோசனையா? நம்மால் அவரை அருகில் பார்க்க முடியுமா? பேச முடியுமா?" ஏகப்பட்ட யூகங்கள், ஹேஷ்யங்கள், ஆனால் அரசர் வரும்பொழுது அவர்கள் யாரும் அருகில் இருக்க அனுமதிக்கப்படவில்லை. சற்று தொலைவில் இருந்தபடிதான் அரசரை பார்க்க முடிந்தது.

வந்து தன்னை வணங்கிய தசரதனை ஆசிர்வதித்த வசிஷ்டர், எதுவும் பேசாமல் அருகிலிருந்த மரத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அதில் தாய்  பறவை ஒன்று கொஞ்சம் வளர்ந்து விட்ட தன் குஞ்சிற்கு பறக்க கற்றுக் கொடுப்பதை தீவிரமாக வேடிக்கைப் பார்த்தார். 

தாய்க்கு அருகில் உட்கார்ந்திருக்கும் குஞ்சினை பலவிதமாக பறக்கத் தூண்டும் தாய் பறவை, அதை சுற்றி சுற்றி பறந்து, குஞ்சின் கண்ணிற்குப் படாமல் மறைந்து கொள்ள, குஞ்சு பறக்கத் தொடங்கியது. 

"பார்த்தாயா தசரதா? பறவைகள், விலங்குகள் எல்லாமே உரிய பருவம் வந்ததும் தம் குழந்தைகள் சுயமாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் செயல்படுகின்றன.  தன்னையே சார்ந்து இருப்பதை விரும்புவதில்லை."  என்று கூறியதும், தசரதனுக்கு சட்டென்று மனதுக்குள் ஒரு பொறி தட்டியது. 

"நீ வந்த விவரத்தை கூறவே இல்லையே? என்ன விஷயமாக வந்தாய்?"

"இப்போது இந்த பறவை செய்ததைத்தான் நானும் செய்ய விரும்புகிறேன். ராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறேன். அதுவும் கூடிய விரைவில் அதை நடத்த முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி. அதற்கு ஒரு பொருத்தமான நாளை தாங்கள்தான் பார்த்து சொல்ல வேண்டும்." 

முகம் மலர தசரதனை மீண்டும் ஆசிர்வதித்த வசிஷ்டர், "சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஜோதிடம் பார்க்கக்கூடாது. நாளை காலை நானே அரண்மனைக்கு வருகிறேன், அப்போது முடிவு செய்யலாம்." என்றதும், ஒரு விடுதலை உணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும், தசரதன் நிம்மதியாக உறங்கச் செல்ல, தன் அரண்மனையில், உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தான் ராமன்.

*******************************************************************************************
ராமா என்ன இது?  உன் தந்தை உனக்கு பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். இதற்காகவா நீ இங்கு வந்தாய்? கர தூஷணர்களை அழிக்க வேண்டும். கபந்தனுக்கு மோட்சம் அளிக்க வேண்டும். இதை எல்லாவற்றையும் விட ராவண சம்ஹாரம். நமக்கு உதவி செய்வதற்காக வந்த வாலி, வந்த நோக்கத்தை மறந்து எதிரியோடு கை கோர்த்துக் கொண்டு விட்டான், அவனை அவனறியாமல் அப்புறப் படுத்த வேண்டும். அது மட்டுமா? எத்தனை ரிஷிகள் உனக்காக வனத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? சபரி உனக்காகவே தவம் இயற்றிக் கொண்டிருக்கிறாள். இவை எல்லாவற்றையும் மறந்து நீ பட்டம் கட்டிக் கொண்டு அரச போகத்தை அனுபவிக்கப் போகிறாயா? இந்த பட்டாபிஷேகம் நடக்கக்கூடாது. 



பலவிதமாக சிந்தித்த ராமன் பட்டாபிஷேகத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்தான். மிகவும் மகிழ்ச்சியோடு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் தந்தையிடம் எப்படி இதை கைவிடுங்கள் என்று சொல்வது? இதற்கு சிற்றன்னை கைகேயிதான் உதவ முடியும். ராமன் கைகேயியை சந்திக்க முடிவு செய்தான். 

அவன் சிற்றன்னை கைகேயியின் அரண்மனைக்குள் நுழைந்த பொழுது, அவனை வணங்கி, நின்ற தாதிப்பெண்களை ஜாடைக் காட்டி, வெளியே போகச்சொன்னான். தன் பஞ்சணையில் அமர்ந்து தன்னுடைய குதிரைக்காக வாங்கியிருந்த கழுத்து மணியை அழகு பார்த்துக் கொண்டிருந்த கைகேயியின் பின்புறமாகச் சென்று அவள் கண்களை பொத்தினான். 

பஞ்சு போன்ற அதே சமயத்தில் உறுதியான கரங்கள். மேனியிலிருந்து புறப்பட்ட சுகந்தம், "ராமா, என்ன இது விளையாட்டு? சிறு குழந்தை போல? 

"உங்களுக்கு நான் எப்போதுமே குழந்தைதானே அம்மா?"

"சரிதான், இதை சீதா கேட்டால் என்ன நினைத்துக் கொள்வாள்? ஆமாம், என்ன நீ மட்டும் வந்திருக்கிறாய்? சீதா எங்கே?" 

"ஏன்? நான் தனியாக வந்தால் ஆகாதா? பரதன் வேறு மாமா வீட்டிற்கு சென்றிருக்கிறான், தனியாக இருப்பீர்களே? பேசிக் கொண்டிருக்கலாம் என்று வந்தால்.." ராமன் போலிக் கோபத்தோடு எழுந்திருக்க, 

"இன்னும் நீ அதே பழைய ராமன்தான். சிடுக்கென்று வரும் அதே கோபம். நீ சிறுவனாக இருந்த பொழுது, பரதன் என் மடியில் அமர்ந்தால் உனக்கு காணப்  பொறுக்காது.."கைகேயி சிரித்துக் கொண்டே ராமன் தோளில் கை வைத்து இருக்கையில் அமர வைத்தாள். 

"என்ன சாப்பிடுகிறாய்?" என்று கை தட்டி தாதியரை அழைக்க முற்பட, அவளை தடுத்த ராமன்," எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்.." என்று இழுத்து நிறுத்த, 

"வேறு என்ன வேண்டும்?" என்று அவனை கூர்மையாக பார்த்தபடி அவனுக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்த கைகேயியை பார்த்த ராமன் மனதுக்குள் வியந்தான். இந்த கூர்மைதான் தந்தைக்கு இவள் மீது அதிக ப்ரேமையை உண்டாக்கியதோ? அழகு, ஆளுமை, போர் களத்தைக் கண்டு அஞ்சாமல் லாகவமாக தேரை செலுத்தும் திறமை, எந்த அரசனுக்குத்தான் பிடிக்காது? அரசப்பதவி என்பது யானையின் மீது சவாரி செய்வதைப் போன்றது. கீழிருந்து பார்க்கிறவர்களுக்கு அதன் கம்பீரம் மட்டுமே தெரியும், அதிலிருக்கும் ஆபத்தையும், சிரமங்களையும் உணர்ந்து நடந்து கொள்ளும் மனைவியை கொண்டாடத்தானே தோன்றும். 

எதுவோ சொல்ல வந்துவிட்டு எதுவும் பேசாமல் தன்னையே வெறித்து  பார்த்தபடி அமர்ந்திருக்கும் மகனை பார்த்த கைகேயி," "என்ன ராமா? ஏதோ வேண்டும் என்றாய்..?"

சிற்றன்னையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் வைத்திருந்த குதிரைக்கான கழுத்து மணியை கைகளில் எடுத்துக் கொண்ட ராமன்,"குதிரைகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிரேமை இன்னும் குறையவே இல்லை"

"ஆமாம், ஏழு சகோதரர்களுக்குப் பிறகு ஒரு சகோதரியாக பிறந்ததாலோ என்னவோ ஆண்களைப் போலவே அவர்களுக்குரிய எல்லா விளையாட்டுகளையும் கற்றுக் கொண்டேன். குறிப்பாக, குதிரை ஏற்றமும், தேர் ஓட்டுவதிலும் தனி ஈடுபாடு". 

"அந்த திறமையை கொண்டுதான் சம்பாசுரனுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்தில் என் தந்தைக்கு தேர் ஓட்டி உதவினீர்களோ?"

"அதெல்லாம் பழைய கதை. நீ என்னிடம் ஏதோ கேட்க நினைக்கிறாய், அதை நேரிடையாக சொல்லாமல் சுற்றி வளைக்கிறாய்"

"சில நொடிகள் தாமதித்த ராமன், அரசாங்கம் என்றால் எத்தனை போர்? எதற்கு இவ்வளவு யுத்தம்?

"சரிதான், விரைவில் பட்டம் சூட்டிக்கொண்டு நாட்டை ஆள வேண்டியவன் பேசுகிற பேச்சா இது?"

"அம்மா, உண்மையில் என்னை விட பரதனுக்குத்தான் நாட்டை ஆளும் தகுதி நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது."

"ராமா, என்ன ஆயிற்று இன்று உனக்கு? இது என்ன பேச்சு? மூத்தவன் நீ இருக்க, இளையவன் பரதன் அரசனாவதா? உன் தந்தை உனக்கு விரைவில் பட்டம் கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்".

"எனக்கும் அது தெரியும் தாயே" என்று கூறியபடியே தன் ஆசனத்தில் இருந்து எழுந்த ராமன், கைகேயியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவள் கண்களை உற்றுப் பார்த்து, "ஆனால் அது நடக்கக் கூடாது.தாங்கள்தான் என் பட்டாபிஷேகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும்" என்றதும், 

"ராமா என்ன பிதற்றுகிறாய்?" 

"இல்லை தாயே, நான் வந்த நோக்கம் அயோத்தியில் அரசனாக ராஜா போக வாழ்க்கையை இப்போது அனுபவிப்பது அல்ல, எனக்கு வேறு சில கடமைகள் இருக்கின்றன."

இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயலுவது போல அப்படி என்ன பொல்லாத கடமை. 

அம்மா, எல்லாவற்றையும் உடைத்துக் கூற முடியாது. சில வருடங்கள் நான் வனவாசம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.

ராமன் கூறியதை கேட்ட கைகேயி காதுகளை பொத்திக் கொண்டாள். "என்ன விபரீதம்? நாடாள வேண்டியவன் காட்டிற்குச் செல்வதா? ராஜாங்கம் என்னவாகும்? 
"அதற்குத்தான் என் தம்பி பரதன் இருக்கிறானே?"

"கொஞ்சம் கூட நியாயமில்லாத செயல். அதற்கு பரதன் உடன்படுவான் என்று எப்படி நினைக்கிறாய்?" 

"பரதன் தன் பொறுப்பை தட்டிக் கழிக்க மாட்டான். நான் சொன்னால் ஏற்றுக் கொள்வான். அவனை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு."

"இந்த அடாத செயலுக்கு உன் தந்தை உடன்படுவாரா?"

"அவரை உடன்படச் செய்யத்தான் உங்களை வேண்டுகிறேன். உங்களால்தான் அது முடியும்." 

"உங்கள் அரசியல் சதுரங்கத்தில் என்னை பகடைக் காயாக்கப் பார்க்கிறாய்." 

ராமன் கைகேயியின் கரங்களை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். "வேறு வழியில்லை அம்மா. என்னை மன்னித்து விடுங்கள்". 

ராமனின் பார்வையும், ஸ்பரிசமும் கைகேயியின் வாதிடும் குணத்தை மாற்றின. 

"நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?" 

"எனக்கு பட்டம் கட்டப் போவதாக தந்தை கூறினால், அதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள். அது போதும்." 

"இப்படி ஒரு இழி செயலை புரிந்த என்னை காலமெல்லாம் உலகம் தூற்றாதா?" 

"என்ன செய்வது அம்மா? காரணமில்லாமல் காரியம் இல்லை. எல்லா செயல்களும் நல்லதா கெட்டதா என்பதை அது நிகழும் நேரத்தை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது.  மேலும் சில நன்மைகள் நடக்க வேண்டுமென்றால், சிலர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். உங்களுடைய இந்த தியாகத்தின் பரிசை வருங்கால பெண் குலத்திற்கு நான் வழங்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்த தேசத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு பெரிய பதவிகளை வகிப்பார்கள். ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறைகளிலும் அவர்கள் தன் முத்திரையை பதிப்பார்கள்." 

"இதுதான் உன் சங்கல்பம் என்றால் அது நிறைவேற தடையேது சீதாராமா?" பேசிக்கொண்டே கைகேயி உறக்க நிலைக்குச் செல்ல, அவளை படுக்கையில் கிடத்திய ராமன் மின்னலென வெளியேறினான்.

அவன் செல்லும் வழியில் தூரத்தில் மந்தரை வருவதைப் பார்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டான். மனதிற்குள் சரஸ்வதி தேவியை துதித்தான். "வாக் தேவி தாயே, என் சிற்றன்னை கைகேயியை பார்க்கச் செல்லும் இந்த மந்தரையின் வாக்கை செல்லும் வாக்காகச் செய். இவள் சொல்வதை என் தாய் கைகேயி கேட்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்தான். 

அங்கே   கண் விழித்த கைகேயி குழம்பினாள்."என்ன இது பகலில் இத்தனை நேரம் தூங்கி விட்டேன்? என்னென்னவோ கனவு. அது கனவா? நிஜமா? ராமன் மட்டும் வந்தது போல இருக்கிறது. என்னென்னவோ பேசினான். அவனுக்கு பட்டாபிஷேகமாம், ஆனால் பரதன்தான் அரசனாக வேண்டுமாம், எனக்கு கெட்ட பெயர் ஏற்படுவது போலக்கூட தோன்றியது... என்ன கனவு இது? என்று அவள் குழம்பிக் கொண்டிருக்க, ஒரு தேவ நாடகத்தை அரங்கேற்ற மந்தரை அவள் அரண்மனைக்குள் நுழைந்தாள்.

Tuesday, August 6, 2019

நழுவ விட்ட மஹாலக்ஷ்மி, கை கொடுத்த சஹாயாத்ரி

நழுவ விட்ட மஹாலக்ஷ்மி, 
கை கொடுத்த சஹாயாத்ரி

கோலாப்பூர் ஹோட்டலிலிருந்து கிளம்பும் பொழுது என் கணவர் சாதாரணமாகத்தான் இருந்தார். அந்த கொண்டை ஊசி வளைவுகளில் ஏறி இறங்கியது வயிற்றை பிரட்டுவதாக கூறினார். அதோடு பகல் காட்டில் குடித்த சாய்,  உடனே கீழே காளேஸ்வர் கோவில் வாசலில் குடித்த லஸ்ஸி எல்லாம் வயிற்றுக்கு   ஒவ்வாமல் வாமிட்டிங், வயிற்றுப்போக்கு என்று அவஸ்தைப்பட அங்கிருந்த ஸ்டேஷன் இன்சார்ஜிடம் நிலைமையை விளக்கி, என் கணவரை எங்காவது படுக்க வைக்க முடியுமா? என்று கேட்டதற்கு "அதெல்லாம் முடியாது,  பிளாட்பாரத்தில் இருக்கும் பெஞ்சுகள் ஏதாவது ஒன்றில் படுக்க வையுங்கள்" என்று கூறி விட்டார்.  இத்தனைக்கும் நாங்கள் முதல் வகுப்பில் பயணச்சீட்டு எடுத்திருந்தோம். அங்கு முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு என்று தனி வெயிட்டிங் ரூம் இல்லை. எனவே பொதுவான தங்கும் அறையில்தான் நாங்கள் இருக்க வேண்டியிருந்தது.  சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு சற்று தெளிவானார்.

நாங்கள் மும்பை சென்று என் நாத்தனாரின் கணவரை பார்த்து விட்டு அங்கிருந்து மந்த்ராலயம்        சென்று விட்டு பெங்களூர்            திரும்புவது என்று திட்ட மிட்டிருந்தோம், ஆனால் என் கணவரின் உடல் நிலையை கருதி மும்பையிலிருந்து பெங்களூர் திரும்பி விடலாம் என்று திங்கட்கிழமை பயணம் செய்ய விமானத்தில் டிக்கெட் புக் பண்ணிய என் கணவர் மும்பை, பெங்களூர் ரயில் டிக்கெட்டை கான்சல் செய்தார். அதில் எது தவறாகியது என்று தெரியவில்லை. கோலாப்பூர், மும்பை ரயில் டிக்கெட்டும் கான்சலாகி விட்டது. நேரிடையாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் எனறால் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் இல்லை, வேண்டுமானால் சஹாயாத்ரி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.  அவசர அவசரமாக ரிசர்வேஷன் விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணி, கார்டோடு நீட்டினால், "கார்ட் என்றால் நீங்கள் முன்பே சொல்லியிருக்க வேண்டும், இப்போது முடியாது கேஷ்தான் வேண்டும்" என்று ஹிந்தியில் பாத் கர்த்தினார் ஒரு வார்த்தை ஆங்கிலம் பேச மாட்டேன் என்று விரதம் எடுத்திருந்த கவுண்டரில் இருந்த டிப்டாப் ஆசாமி. நல்ல வேளையாக கையில் பணம் இருந்ததால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் வெயிட்டிங் அறையில் தேவுடு காக்கத் தொடங்கினோம்.

நான் மட்டும் இரவு உணவு சாப்பிட காண்டீனுக்குச் சென்ற பொழுது அங்கிருந்த ஒரு தம்பதியினர் தாங்கள் ஏதோ ஒரு பாசன்ஜர் ரயிலுக்காக காத்திருப்பதாக ஹிந்தியில் கூறினார்கள். அப்போது ஹிந்தியில் வந்த அறிவிப்பு ஒன்று பாசன்ஜர் ரயில் ஒன்று ஒன்றாம் எண் பிளாட்ஃபாரத்தில் வரும் என்றது.
சற்று நேரத்தில் ஒரு வண்டி முதலாம் பிளாட்ஃபாரத்தில் வந்து நின்றது. அது கிளம்பி சென்ற பிறகு சஹாயாத்ரி வரும் என்று நினைத்தோம். என் கணவர், "எதற்கும் இங்கே விசாரிக்கலாம், ஒரு வேளை சஹாயாத்ரி இரண்டாவது பிளாட்ஃபாரத்தில் வந்தால் மாடிப்படி ஏறி இறங்க வேண்டும், போர்ட்டரும் இல்லை, நாம்தான் லக்கேஜை தூக்கி க்கொண்டு செல்ல வேண்டும்." என்றார். எனவே அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவரிடம்,"சஹாயாத்ரி எந்த பிளாட்ஃபாரத்தில் வரும்?" என்றதும், "இதோ நிற்கிறதே, இதுதான் சஹாயாத்ரி" என்றதும் தூக்கி வாரி போட்டது. நல்லவேளையாக வெயிட்டிங் ரூமிற்கு எதிராகவே செகண்ட் ஏ.சி. கோச் நின்றது. ஏறி உட்கார்ந்து ஒரு பெரிய பெருமூச்சு விட்டோம்.

ரயிலில் இருந்த போர்டில் ஹிந்தியில் மட்டுமே பெயர் எழுதப்பட்டிருந்தது. அறிவிப்புகளும் ஹிந்தியில் மட்டுமே செய்தார்கள். ஹிந்தி தெரியாதவர்களுக்கு கஷ்டம்தான். நம் ஊர் தொலைகாட்சிகளில் ஹிந்தியை எதிர்ப்போம் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முழங்குகிறார்கள். வாழ்க!




  . 

Friday, August 2, 2019

கோலாப்பூர் உலா

கோலாப்பூர் உலா

New Palace @ Kolhapur
சதாராவிலிருந்து வந்ததும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு, மாலை கடை வீதிக்குச் சென்றோம். கோலாப்பூர் சென்று விட்டு கோலாப்பூரி செப்பல் வாங்காமல் வர முடியுமா? ஒரு வீதி முழுவதும். செருப்பு கடைகளே இருந்தன. எனக்கு மட்டும் ஒரு ஜோடி வாங்கி கொண்டு அந்த கடைக்காரரிடம், "புடவைக்கடைகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டதற்கு அவர் என்ன சார் நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து வருகிறீர்கள், காஞ்சீபுரத்திலிருந்து இங்கு புடவைகள் வருகின்றன, நீங்கள் இங்கே போய் புடவைகள் வாங்க விரும்புகின் றீர்கள்?, இந்த ஊரில் செருப்பு, மற்றும் வெல்லம்தான் ஃபேமஸ்" என்றார் நாங்கள் மீண்டும் கேட்டதும், எதிர்த்தாற்போல் இருக்கிறது இன்று கை காட்டினார்.  அங்கு ஒரு கடையில் இரண்டு புடவைகள் வாங்கினேன்.

கோலாப்பூர் கார்ப்பரேஷன் கட்டிடத்தின் முன்புற, பக்கவாட்டுத் தோற்றம்  


அடுத்த நாள் கோலாப்பூரை சுற்றிப் பார்த்துவிட்டு, மும்பை செல்ல இரவு 8:30 மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரெஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். அன்று காலை முதல் ஆடி வெள்ளி என்பது என் நினைவில் இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் அன்னை மஹாலக்ஷ்மியை தரிசித்து விட விரும்பினேன். என் கணவர் வரவில்லையென்று கூறிவிட்டதால், நான் மட்டும் தனியாக கோவிலுக்குச் சென்றேன். காலை நேரத்திலேயே நல்ல கும்பல். ஆனால் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் சுலபமாக தரிசிக்க முடிந்தது.  அம்மனுக்கு அருகில்தன கொஞ்சம் தேக்கம். சிறப்பு பூஜைக்காக பணம் கட்டியவர்களை பின் பக்கம் சென்று அமரச் சொன்னார்கள் போலிருக்கிறது. அதில் இருந்த ஆண்களும் பெண்கள் வரிசையை பிளந்து கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் தள்ளுமுள்ளு, அதனால் சலசலப்பு. பெண்கள் ஏன் இத்தனை கூச்சல் போடுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தாலும் தாயாரை நிதானமாக நன்றாக தரிசனம் செய்ய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி!.

அன்று காலை பூ போன்ற இட்டிலியும், நன்றாக வெந்து ஆனாலும் உதிர் உதிராக, சுவையாக இருந்த போகாவும் காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்பாஸ்டில் இருந்தன. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் என்ற பெயரில் அடர்ந்த சிவப்பில் ஒரு திரவம். அதை தவிர்த்து விட்டு, சட்னி எடுத்துக் கொண்டேன். ப்ரெட் டோஸ்டும் இருந்தது. அவர்களுக்கு காபி மட்டும் போடத் தெரியவில்லை. அதனால் டீ.

அந்த ஹோட்டல்காரர்களே டூரிஸ்ட் வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  முதலில் நியூ பேலஸ் எனப்படும். ஷாஹு மஹாராஜின் இருப்பிடமான அரண்மனையே தற்சமயம் மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளே செல்லும் பொழுது செல்போனை ஆஃப் செய்து விடுங்கள் என்கிறார்கள். ஷாஹு மஹராஜ் என்றதும் மிகவும் கம்பீரமாக இருப்போரோ என்று எதிர்பார்த்தால், நம்மூர் மயில்சாமிக்கு ராஜா வேஷம் போட்டது போல், கண்களில் கொஞ்சம் பயத்தோடு இருக்கிறார்.

அவர் உபயோகித்த பொருள்கள், அமர்ந்த ஆசனம், ஆடை, போன்றவை காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. தர்பார் மண்டபம் என்னை மிகவும் கவர்ந்தது. எந்தனை உயரமான, வேலைப்பாடோடு கூடிய விதானம்! அதைப்  போல அந்தக் கால ஆயுதங்கள், விதம் விதமான கத்திகள், ஈட்டிகள், சிறிய கைத்துப்பாக்கி முதல், பீரங்கி வரை.. கருத்தை கவருகின்றன. இரும்பாலான தலைக்கவசம் அழகாக இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தை தற்போது ஷாஹூஜி மஹாராஜின் வாரிசுகள் நிர்வகிக்கின்றனராம்.

அங்கிருந்து ஓவியங்களில் ஒரு ஓவியம் என்னைக் கவர்ந்தது. கைக்குழந்தையோடு தனியே செல்லும் ஒரு பெண்ணை, கவர்ந்து செல்லும் ஒருவன், அவன் கீழே தள்ளி விட்ட குழந்தையை அணைத்து பாதுகாக்கும் ஒரு சிங்கம். அந்த மனிதனின் கண்களில் தெரிந்த வெறி, பெண்ணின் பயம், சிங்கத்திடம் காணப்பட்ட அமைதி. இதில் யார் மனிதன்? யார் மிருகம்?

அங்கிருந்த ஆவணங்களில் இங்கிலாந்தின் அரசர் ஜார்ஜ், ஷாஹூஜியை, கோலாப்பூரின் அரசராக நியமித்து, மகாராஜா என்று அழைக்கப்பட  உரிமை வழங்குவதாகவும் எழுதப்பட்ட கடிதத்தை பார்த்ததும் கொஞ்சம் கோபம் கூட வந்தது. யாருடைய மண்ணிற்கு ராஜாவை யார் நியமிப்பது? இது கூட உரைக்காமல் நம் நாட்டு அரசர்கள் இருந்ததால்தான் அன்னியர்க்கு அடிமை ஆனோம்.

அங்கிருந்து, கோட்டை ஒன்றை பார்க்கச் சென்றோம். நிறைய கொண்டை  ஊசி வளைவுகளோடு இருக்கும் மலைப்பாங்கான சாலையில் பயணித்தால்
சத்ரபதி சிவாஜி அமைத்த பகல்காட் கோட்டை, தானியங்கள் சேமிப்பதற்காக பன்ஹாலா என்னும் இடத்தில் கட்டப்பட்ட இடம் போன்றவற்றை பார்த்தோம்.

காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை 
பகல்காட் கோட்டை பிக்கினிக் ஸ்பாட்டாக விளங்குகிறது. இந்த கோட்டை மூன்று அடுக்குகளை கொண்டது, கீழ் அடுக்கு விருந்தினர் தங்குவதற்கும், மத்தியில் ஆயுதங்களை சேமிக்கவும், மேல் அடுக்கு தண்ணீரை சேமிக்கவும் பயன்பட்டதாம். அங்கு வந்திருந்த ஒருவர் கூறினார்.

பகல்காட் கோட்டையிலிருந்து கீழே தெரியும் காட்சி 
அங்கிருக்கும் சாலையோர உணவு விடுதிகள் ஒன்றில் சாய் குடித்தோம். தந்தூரி சாய் என்றார் கடை வைத்திருந்த பெண்மணி. ஒரு மண் குவளையை அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்துகிறார். பின்னர் அதில் கலக்கப்பட்ட தேநீரை ஊற்றித் தருகிறார். புகை வாசனையோடு இருக்கும் அதுதான் தந்தூரி சாய்!

பனாலா என்னும் இடத்தில் தன்னுடைய படையில் இருந்த வீரர்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் தானியங்களை சேமித்து வைக்க சத்திரபதி சிவாஜி  கட்டப்பட்ட கோட்டையில் அவரும் அவ்வப்பொழுது வந்து தங்குவாராம். மிக அழகாக இருக்கிறது. இதுவும் தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பின் கீழ் வருகிறது.




வசதிகள் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் இங்கெல்லாம் பயணிப்பது சுலபமாக இருக்கிறது. மலைப்பாங்காகவும், அடர்ந்த வனமாகவும் இருக்கும் இங்கெல்லாம் கோட்டைகள் கட்டுவது என்பது நினைக்கும் பொழுதே பிரமிப்பாக இருக்கிறது.  சிவாஜியின் கொரில்லா தாக்குதல்களுக்கு அதுதான் மிகவும் வசதியாக இருந்திருக்கிறது போலும்.

அங்கிருந்து கீழிறங்கும் வழியில் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். லிங்கமாகவும் இல்லாமல், ஆவுடையார் மீது, சிவபெருமானின் திருமுகம் என்றும் இல்லாமல், அமர்ந்த திருக்கோலத்தில் கருப்பு நிறத்தில், முண்டாசு அணிந்து கொண்டு வித்தியாசமான ரூபம். பிரகாரத்தில் ஒரு பெரிய காமதேனு பிம்பம்.

கோவில் வளாகம் முழுவதும் கத்தரிப்பூ நிற குங்குமம் சிதறிக் கிடக்கிறது. கோவிலுக்குள் நுழையும் பொழுது, நம்மிடம் இருக்கும் தேங்காயை வாங்கிக்கொண்டு, தக்ஷனை போடுங்கள் என்று தட்டை நீட்டி, நம் நெற்றியில் கத்தரிப்பூ நிற குங்குமத்தை இட்டு விடுகிறார்கள்.

கோலாப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களில் மற்றொன்று ரங்காலா ஏரி. நல்ல சுத்தமான  நீர் நிரம்பி இருக்கும் நீர் நிலை. அதுவும் சமீபத்திய மழையினாலோ என்னவோ நீர் அலையடிக்க ததும்பிக் கொண்டிருந்தது. மாலை நேரங்களை கழிக்க உள்ளூர் வாசிகளுக்கு ஒரு இடம். குழந்தைகளுக்கு விளையாடுமிடங்கள், சாட் ஐட்டங்கள், ஐஸ் க்ரீம்கள் என்று எல்லாம் இருக்கின்றன. ஏரியின் ஒரு புறத்தில் போட்டிங் போக வசதி இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றது அதன் எதிர் புறம், அதனால் ஐஸ் க்ரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம்.
நடுவில் தெரியும் கட்டிடம் நீராழி மண்டபமாக இருக்கலாம்
அதிக பட்ச நீரால் பெரும்பான்மை மஇருக்கிறது 

மொத்தத்தில் கோலாப்பூர் பயணம் நன்றாக இருந்தது, கடைசியில்தான் எதிர்பாராத சில விஷயங்களால் வெகு சீக்கிரம் ரயில் நிலையத்திற்கு சென்று விட்டாலும் எங்களால் திட்டமிட்டபடி மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் பயணிக்க முடியவில்லை, அதை தவர விட்டோம்.







Wednesday, July 31, 2019

சிதம்பரத்தில் ஒரு மதுரை

சிதம்பரத்தில் ஒரு மதுரை





கோலாப்பூரிலிருந்து சதாராவிற்கு ஒரு கார் அமர்த்திக்கொண்டு சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே காம்ப்ளிமென்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் இருந்தது. உப்புமா, ப்ரெட் டோஸ்ட், கார்ன் ஃபிளேக்ஸ் இருந்தன. நான் ப்ரெட் டோஸ்டும், கார்ன் பிளேக்ஸ்சும் எடுத்துக் கொண்டேன்.  காலை 9:30க்கு கோலாப் பூரிலிருந்து கிளம்பிய நாங்கள் 11:30க்கு சதாராவை அடைந்தோம். சுகமான, சௌகரியமான சாலைப் பயணம். மலை, வயல், ஓடை என்று கண்ணையும், கருத்தையும் கவரும் காட்சிகள்

சதாராவில் ரத்ன சபாபதிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அபிஷேகம் முடிந்து தீபாராதனையில் ஆடலரசனை தரிசித்தோம். சிதம்பர ரகசியத்தை தரிசிக்க முடியுமா? என்று கேட்டதும், தலைக்கு 50 ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும் என்றார்கள். புனாவிலிருந்து வந்திருந்த மற்றொரு குடும்பத்தினர்களுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாதாம், "உங்களால் நாங்களும் பார்த்தோம்" என்றார்கள். 

1980ஆம் வருடம் சாதுர்மாஸ்ய விரதத்தின் பொழுது சதாராவில் தங்கிய மஹா பெரியவராகிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலைப்போல போல ஒரு கோவிலை சதாராவில் நிர்மாணிக்க விரும்பினார். சாமண்ணா என்னும் பெரியவாளின் பக்தர் நிலம் கொடுக்க, தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில அரசுகள் ஒவ்வொரு கோபுர கட்டுமான செலவை ஏற்றுக்கொள்ள, கோவிலின் பிரதான மண்டபத்தை கட்ட தேவையான தேக்கு மரங்களை கேரள அரசு வழங்க, நல்ல மனம் கொண்ட பக்தர்களின் நன்கொடையால் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1984 வருடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.



பூர்வ சிதம்பரத்தோடு ஒப்பிடுகையில் மிகச்சிறியது. தெற்குப் பார்த்த நடராஜர். இந்த பிரதான கோபுரத்தைத்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழக அரசு கட்டிக் கொடுத்தது.

விநாயகி போல தோற்றமளிக்கும் விநாயகர்

உள்ளே நுழைந்ததும் இடது புறம் கிழக்குப் பார்த்த விநாயகர் சந்நிதி. பிரும்மாண்டமான விநாயகர். அதற்கு அடுத்து நின்ற கோலத்தில் கூப்பிய கரங்களோடு இருக்கும் பெரிய ஆஞ்சனேயருக்கு ஒரு சந்நிதி. மேற்கு கோபுரத்தை அடுத்து ராதா கிருஷ்ணர் சன்னிதி. அதை அடுத்து ஆதி மூலநாதர் சந்நிதி. அங்கு தரிசித்து விட்டு, வலம்  வரும்பொழுது நவக்கிரக சன்னிதி. இங்கெல்லாம் வணங்கி விட்டு கிழக்கு வாசல் வழியே வெளியே சென்றால் ஐயப்பனுக்கு ஒரு சிறிய கோவில்.

கோவில் பிரகாரத்திலேயே குளம்
முழுவதும் தேக்கு மரத்தால் கூரை அமைக்கப்பட்ட பிரதான மண்டபத்தில் மஹா பெரியவரின் படம் ஒரு சிறிய பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரதான மண்டப சுவர்களில் பரத நாட்டிய கரணங்களை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். பழைய கோவிலின் சிற்பங்களின் அழகு, துல்லியம், உயிர்ப்பு இவைகளோடு ஒப்பிடுகையில்...ஹும்! தென்னிந்திய பாணியில் ஒரு கோவில் என்ற வகையில் செல்லலாம். செல்லாவிட்டாலும் பெரிதாக எதையும் தவற விட்டவர்களாக மாட்டோம். ஒரிஜனல் கோவிலில் கிடைக்கும் இறையனுபவத்தையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.



இந்த கோவிலில் செய்யப்படும் பூஜைகள், அதற்கான கட்டணங்கள் இவைகள் அலுவலகம் போன்ற ஒன்றின் போர்டில் 
குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  அங்கேயே உருத்திராட்சம், ஸ்படிக மாலை, ஊதுபத்தி, சூடம் போன்ற பூஜைபொருள்களும், ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் சாற்றுவதற்கு வேஷ்டி மற்றும் புடவை போன்றவைகளும் கிடைக்கின்றன. செப்டம்பரில் விமானங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகளை துவங்க உள்ளார்களாம்.   





நாங்கள் கோவிலுக்குள் நுழைந்த பொழுது, அங்கு வேலை செய்யும் ஒருவர், "வாங்கம்மா, ஊரிலிருந்து வரீங்களா? நான் மதுரை.." என்று வரவேற்றார். சிதம்பரமும், மதுரையும் பிரிக்க முடியாதவைதான்  போலிருக்கிறது.