கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 16, 2025

மேப்பில் சிரப் ஃபெஸ்டிவெல்

மேப்பல் சிரப் உற்சவம்(Maple Syrup Festivel)

கனடாவின் தேசிய மரம் மேப்பில் மரம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.  ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் பால் எடுப்பதை போல மேப்பில் மரத்திலிருந்து கிடைக்கும் தேன் போன்ற இனிமையான திரவத்தை(Maple Syrup)எடுப்பார்கள்.

குளிர் குறைந்து, வசந்தம் துவங்கும் காலம்தான் மேப்பில் சிரப் எடுக்க உகந்த காலம். பனி உறையாத இரவுகள், மிதமான உஷ்ண பகல்கள், அதனால் பனி உருகத் தொடங்கி விடும் காலத்தில்தான் மேப்பில் திரவத்தை மரத்திலிருந்து எடுப்பது சுலபமாக இருக்குமாம். அப்படி சேகரித்த சிரப்பை கொதிக்க வைத்து அதிலிருக்கும் நீர் ஆவியானதும் பாட்டிலில்களில் சேகரித்து வைப்பார்களாம். இதன் அறுவடைக் காலம் நான்கு வாரங்களிலிருந்து ஆறு வாரங்கள் வரை நீடிக்குமாம். அந்த காலத்தில் ஒவ்வொரு மரத்திலிருந்தும் பத்து காலன் வரை மேப்பில் சிரப் கிடைக்கலாம். இது அந்த வருடம் நிலவும் சீதோஷ்ணம், மண் மற்றும் மரத்தின் வளத்தை பொருத்து மாறலாம்.





மேப்பில் சிரப்பில் முக்கி எடுக்கப்பட்ட ஆப்பிள் பழங்கள்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் வாரம் முதல் மே முதல் வாரம் வரை வெவ்வேறு இடங்களில் மேப்பில் சிரப் ஃபெஸ்டிவல் கொண்டாடுகிறார்கள். அன்று நகரின் பிரதான சாலை ஒன்றை வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்து சாலையின் இரு புறங்களிலும் சிறு வியாபாரிகள் தங்கள் பொருள்களை கடை பரப்பியிருக்கிறார்கள். மேப்பில் சிரப்பில் செய்த உணவு பண்டங்கள் தவிர அணிகலங்கள், உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், முக ஓவியம்(face painting) என்று பல வித கடைகள். இதற்கு நுழைவு கட்டணமும் கிடையாது, வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் கிடையாது என்பது கூடுதல் கவர்ச்சி.  காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும். 

மேப்பில் சிரப் லாலி பாப்


செவிக்கும் உணவு


மர பொம்மைகள்

பறவை வீடுகள்



Saturday, April 26, 2025

கனடா டைரி -1

 கனடா டைரி -1

சென்ற வருடம் செப்டம்பரிலேயே கனடா வந்திருக்க வேண்டும். சென்னையில் வீட்டை வாடகைக்கு விட்டதில் கொஞ்சம் சிக்கலாகி கோர்ட்,கேஸ் என்று இழுப்பறிகள் இருந்ததால் என் கனடா பயணம் ஒத்தி போடப்பட்டது. அந்த கேஸ் முடிவுக்கு வந்து விட்டதால் கனடாவுக்கு கிளம்பினேன். 

பெங்களூர்-ஃப்ராங்க்ஃப்ர்ட்-டொரண்டோ என்பது பயண திட்டம். என்னால் நடக்க முடியும், வீல் சேர் தேவையில்லை என்றாலும், என் மாப்பிள்ளை வீல் சேர் சர்வீஸுக்கு கோரியிருந்தார். டிஜி யாத்ரா ஆப்பின் QR கோட் அனுப்பியிருந்தார். அதனால் விரைவில் உள்ளே சென்றுவிட முடிந்தது. Digi yatra QR code ஐ விமான நிலையத்தில் ஸ்கேன் செய்பவர்களுக்கு தனி வரிசை. செக் இன் செய்யும் பொழுது டிக்கெட்டையெல்லாம் காட்ட வேண்டாம். செக் இன் ப்ராஸஸ் விரைவாக முடிந்து விட்ட்து. என்னை வீல் சேரில் அழைத்துச் சென்ற பெண் அமரவேண்டிய கேட்டின் முன் உட்காரச் சொல்லி விட்டு, "உங்களுக்கு மூன்று மணிக்குத்தானே விமானம், நான் இரண்டே முக்காலுக்கு வருகிறேன்" என்று கூறிச் சென்றாள்.

லவுஞ்சில் காத்துக் கொண்டிருந்த பொழுது, ஆஸ்லோவுக்கு செல்லும் ஒரு பெண், என் டெஸ்டினேஷனை கேட்டுவிட்டு, நான் தனியாக பயணப்படுவதற்கு ஆச்சரியப்பட்டாள். நான் தண்ணீர் குடித்து, கொஞ்சம் நடந்து, ஒரு கப்பிசீனோ காபி குடித்து நேரத்தை கடத்தினேன். சிறிது நேரத்தில் வீல் சேர் பெண் வந்து விட்டாள். விமானத்தில் ஏற மிக நீண்ட வரிசையில் நின்றிருக்கும் பயணிகளை பார்த்தபொழுதுதான் வீல் சேரின் மகிமை புரிந்தது. வீல் சேர் பயணிகளுக்கு முன்னுரிமை. 

விமானத்தில் எனக்கு பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்த இளம் ஜெர்மானிய பெண் இரண்டாவது முறையாக இந்தியா வந்து திரும்புகிறாராம். சென்ற முறை ஹரித்வார், ரிஷிகேஷ், ஆரோவில்(பாண்டிச்சேரி), போன்ற இடங்களுக்குச் சென்றாராம். இந்த முறை மைசூர் மட்டும் என்றார். அவரது ஆன்மீகத் தேடல் அவரை இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறது. என் பெயர் என்னவென்று கேட்டதோடு நிற்காமல் அதற்கு என்ன பொருள் என்றும் கேட்டார்.

அரபு நாடுகள் வழியே சென்றால் இந்திய மொழிப் படங்கள் நிறைய பார்க்கக் கிடைக்கும்.  லுஃப்தான்ஸா என்பதால் ஒரிரு ஹிந்தி படங்கள் மட்டுமே இருந்தன. தமிழில் 'கருடன்' இருந்தது. ஃப்ராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் இறங்கியதும் வீல் சேருக்கு கோரிக்கை வைத்தவர்களை ஒரு பாட்டரி காரில் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்தில் இறக்கி விட்டார்கள். அங்கிருந்து வேறொருவர் எங்களை விமான நிலைய மெட்ரோ ரயிலில் அழைத்துச் சென்று வேறொரு டெர்மினலில் இறக்கி விட்டார். அங்கிருந்து மீண்டும் ஒரு பாட்டரி காரில்(buggy) இமிக்ரேஷன் பண்ணும் இடத்தில் இறக்கி விட, அங்கு ஃபார்மாலிடிகளை முடித்து காத்திருந்த பொழுது பக்கத்தில் ஒரு பெண்மணி  அவர் வீட்டாரோடு செல்ஃபோனில் உரக்க உரையாடுவதை கேட்க நேர்ந்தது. ஆஹா தமிழ் குரல், விடுவேனா? ரயில் சிநேகம் போல ஒரு ஏர்போர்ட் சிநேகம். ஃப்ராங்க்ஃபர்ட் ஏர் போர்டில் வைஃபை தானே இணைத்துக் கொண்டு விட்டது. மகனோடும், மகளோடும் பேசினேன். 

அடுத்த கட்ட பயணத்தில் சாப்பிட ஏதோ கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு ஹிந்தி சினிமா, கொஞ்சம் வீடியோ கேம், கொஞ்சம் தூக்கம் என்று பொழுது போனது.  டொரண்டோ விமான நிலையத்திற்கு என்னை வரவேற்க வந்திருந்த என் மகள் ஒரு ஜாக்கெட்டை கொடுத்து அணிந்து கொள்ள சொன்னாள். "குளிரவில்லை" என்றதற்கு, "இங்கே குளிராது, வெளியே சென்றதும் குளிரும்" என்றாள். மகள், மருமகன், பேத்திகள் எல்லோருமே ஜாக்கெட் அணிந்து கொண்டிருந்தார்கள்.

குளிர்தான் (-2டிகிரி). அந்த குளிர் தாங்காமல் எனக்கு இரண்டாம் நாள் தலை சுற்றல் வந்து விட்டது. திடீரென்று அதிகமான குளிருக்கு எக்ஸ்போஸ் ஆகும்பொழுது, நம் காதில் வேக்ஸ் அதிகமாகி விடுமாம், அதனால் வெர்டிகோ வரும். சென்னையிலிருந்து பெங்களூக்கு வந்த புதிதிலும் எனக்கு வெர்டிகோ வந்தது நினைவுக்குவந்தது. காதில் லேசாக சூடாக்கிய எண்ணையை விட்டுக் கொள்ளும் பொழுது அந்த வேக்ஸ் வெளியேறி விடும் என்று கூறிய என் மகள் என் காதில் எண்ணெய் விட்டாள். அந்த ட்ரீட்மெண்டுக்கு நிஜமாகவே நல்ல பலன் இருந்தது. அதன் பிறகு சில நாட்கள் காதில் பஞ்சு வைத்துக் கொண்டேன். :)) 

ஞாயிறு(30.03.25) சாயி பஜன் சென்ற பொழுது freezing rain. அன்று எங்கள் ஏரியாவுக்கு அருகில் மரங்களில் விழுந்த பனியால் மரங்கள் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். மறுநாள் திங்களன்று பள்ளிகளுக்கு விடுமுறை. நம் ஊரில் மழை என்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தவுடன் மழை நின்று விடுவதைப் போலத்தான் இங்கும் நடந்தது. 

கன்யா பூஜை @ தேவி கோவில்

நான் அங்கு சென்றதும் வசந்த நவராத்திரி துவங்கியது. அஷ்டமி அன்று அங்கு ஒரு தேவி கோவிலில் கன்யா பூஜை செய்தார்கள். அதற்கு என் பெண்ணின் தோழியின் தாய் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண்மணி என்னைப் பார்த்து புனகைத்தார், அவர் வேறு அதிரா மாதிரி இருந்தாரா நானும் ட்ரம்ப்பின் செகரெட்டரி என்று நினைத்து புன்னகைத்தேன், ஆனால் அவர் அதற்கு மேல் பேசவில்லை. யாரோ அவர் யாரோ?




இரண்டு நாட்களாகத்தான் குளிர் குறைந்து வருகிறது. சாதாரணமாக ஏப்ரலில் இவ்வளவு குளிர் இருக்காது என்று சிலர் சொல்கிறார்கள். சென்ற வாரம் லாங் வீக் எண்ட்! என் பெண்ணின் தோழி ஒருவர் அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். மெனொபாஸில் இருக்கும் பெண்ணின் மூட் ஸ்விங்க்ஸ் போல வானம் திடீரென்று மழை, திடீரென்று வெய்யில் என்று மாறி மாறி படுத்தியது. அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் jack darling என்னும் பார்க்கிற்கு அழைத்துச் சென்றார். அந்த பார்க்கை ஒட்டியிருக்கும் பெரிய ஏரியில் சமுத்திரத்தைப் போல அலை. காற்று, தூரலும் தொடங்க பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்ததால் புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி விட்டோம்.


இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்கிறேன். பின்னர் சந்திக்கலாம். 







 

Friday, April 11, 2025

படங்களாக ஒரு பதிவு

படங்களாக ஒரு பதிவு


அம்மாவின் திவசத்திற்காக திருச்சி சென்றபோது முத்தரசநல்லூர் குருவாயூர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம் போன்ற கோவில்களுக்குச் சென்றோம். எப்போதும் செல்லும் மாணிக்க விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கமும் விடவில்லை. இவைகளைப்பற்றி என்ன எழுதுவது? படங்கள் பேசட்டும். நேரம் குறைவாக இருந்ததால் சந்திக்க விரும்பிய தோழிகளையும், பதிவர்களையும் சந்திக்க இயலவில்லை.




பரமபத வசல்



சிவராத்திரிக்காக விளக்கொளியில் ஜொலித்த திருவானைக்கோவில். நாங்கள் திருச்சியில் வசித்த பொழுது இப்படிப்பட்ட அலங்காரங்கள் கிடையாது.











மாணிக்க விநாயகர் கோவில் விதானத்தில் இருந்த விநாயகர் சிற்பங்களை படமெடுக்க முயன்றபொழுது ஒருவர்,"புகைப்படம் எடுக்காதீர்கள்" என்றார். கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவர் என்று நினைத்தால்,"ஏதாவது சாப்பிடுகிறீர்களா? போளி இருக்கு, வடை இருக்கு" என்கிறார். கர்ர்ர்....


சின்னக்கடை வீதியின் வழியே St.Joseph church




Krishna Readymade Hall:

இந்த கடையோடு ஒரு உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எங்களின் சிறு வயதில் எங்கள் அம்மா எங்களுக்கு உடைகள் (skirt& blose frock) வாங்கியிருக்கிறார். நான் என் மகளுக்கு வாங்கினேன், இப்போது என் பேத்திகளுக்கு, தொடரும் பாரம்பரியம்.

சமயபுரம் கோவிலுக்குச் சென்றபொழுது மயக்கிய அந்திவானம்

மேற்கண்ட படத்தை'தெய்வீகம்' என்ற புகைப்பட போட்டிக்கு அனுப்ப நினைத்தேன்.

திருச்சியில் நான் தவற விட்ட விஷயம் பெரிய கடை வீதியின் சவுக்கில்(செளக் என்னும் ஹிந்தி வார்த்தையை உள்ளூர்வாசிகள் சவுக்கு என்பார்கள்) இருக்கும் பழைய புத்தக கடை :((

வைத்தீஸ்வரன் கோவில் குளக்கரையில்

கங்கை கொண்ட சோழபுரம்


சிதம்பரம் செல்லும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். இதைக்கட்டிய ராஜேந்திர சோழன் தன் அப்பா கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலை விட உயரமாக இருக்கக்கூடாது என்று நினைத்ததால் இது 157 அடி உயரமாக கட்டப்பட்டதாம். பெரிய கோவில் 212 அடி. உயரம். மேற்கண்ட படத்தில் பிரமிடு போல தோன்றவில்லை? 

வெங்கட் நாகராஜ், கோமதி அக்கா, தி.கீதா போன்றவர்கள் போடும் படங்களோடு ஒப்பிடாதீர்கள். நான் ஒரு கத்துக்குட்டி.

Wednesday, April 9, 2025

பாடலாத்ரி, திருநின்றவூர்

சிங்கபெருமாள் கோவில்

கேரள விருந்தாளியோடு பாடலாத்திரி எனப்படும் சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் கோவில் எல்லாம் தரிசனம் செய்தோம். 

சிங்கப் பெருமாள் கோவில் ஒரு குடைவரை கோவில். அந்த சிறு குன்றே நரசிம்மர் என்ற கருதப்படுவதால் அந்த குன்றை வலம் வருவது சிறப்பு என்பது நம்பிக்கை. இங்கே தவம் செய்த ஜாபாலி முனிவர் தனக்கு நரசிம்மராக திருமால் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால் உக்ர நரசிம்மராக அவருக்கு காட்சி அளித்தாராம். இங்கு பெருமாளுக்கு நெற்றிக் கண் உண்டு. தீபாராதனையின் பொழுது நெற்றிக்கண்ணை திறந்து தரிசிக்க வைக்கிறார்கள். அபூர்வ அனுபவம் அது. 



ஹிருதயாலீஸ்வரர் கோவில்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் சிவ பெருமான் மீது அதீத பக்தி பூண்டவர். தற்சமயம் திண்ணனூர் என்று அழைக்கப்படும் திருநின்றவூரில் வசித்த அவர், பெரும்பாலும் அங்கிருந்த இலுப்ப மர காட்டில்தான் அமர்ந்து தியானத்தில் எடுபட்டிருப்பார். அந்த சமயத்தில் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன், கைலாசநாதர் கோவிலை கட்டிக் கொண்டிருந்தார். அதைப்போல தானும் இறைவனுக்கு ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று விரும்பிய பூசலார் மானசீகமாக இறைவனுக்கு கோவில் கட்ட ஆரம்பித்தார். பல்லவ மன்னன் கோவிலை கட்டி முடித்த அதே சமயத்தில் இவருடைய மனக்கோவிலும் முற்றுப் பெருகிறது. பல்லவ மன்னன் எந்த நாளில் கும்பாபிஷகேத்திற்கு நாள் குறித்திருந்தாரோ அதே நாளில் பூசலாரும் தன் இதயக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கிறார். 

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் பல்லவ மன்னன் கனவில் தோன்றிய சிவ பெருமான், "நாளை திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோவிலுக்கு குடமுழுக்கு,  நான் அங்கு செல்ல இருப்பதால் நீ கட்டியிருக்கும் கோவிலில் எழுதருளுவது இயலாது" என்று கூறி விடுகிறார். மறுநாள் திருநின்றவூருக்குச் சென்ற மன்னன், "இங்கு பூசலார் கட்டியிருக்கும் ஆலயம் எங்கிருக்கிறது?" என்று விசாரிக்க, அந்த ஊர் மக்கள் ஆச்சர்யமடைகிறார்கள். "எப்போதும் இலுப்ப காட்டில் உட்கார்ந்திருக்கும் ஓரு ஏழை பிராமணர் கோவில் கட்டியிருக்கிறாரா?"  அவர் மன்னன் முன் நிறுத்தப்படுகிறார். "ஐயா! நீங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கேயிருக்கிற்து?" என்று அரசன் கேட்க, அதிர்ச்சி அடைந்த பூசலார், " பிறர் அறியாமல் நான் மானசீகமாக கட்டிய கோவில் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள்?" என்று கேட்க, அரசர் தன் கனவைப் பற்றி விவரிக்கிறார். 

"என்னையும் ஒரு பொருட்டாக மதிக்கிறாரா நான் வணங்கும் ஈசன்?" என்று நெகிழ்ந்தார் பூசலார். அரசன் அவரை வணங்கி திரும்பினான் என்று  முடிகிறது பெரிய புராணம். ஆனால் பூசலார் விரும்பியது போல அவருக்கு கோவில் எழுப்பிக் கொடுத்தார் பல்லவ ராஜா என்கிறது கோவில் தல புராணம்.

பூசலார் இதய பூர்வமாக கோவில் எழுப்பியதால், இந்த கோவிலின் கருவறை விமானம் இதய வடிவத்தில் இருக்குமாம். கருவறைக்குள் சிவலிங்கத்திற்கருகில் சிலா வடிவில் பூசலாரையும் தரிசிக்கலாம். தனி சன்னிதியில் தாயார் மரகதாம்பிகை.

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் பாலாலயம் செய்திருந்ததால் மூலவரை தரிசனம் செய்ய முடியவில்லை. அருகில் இருந்த ஏரிகாத்த ராமர் கோவிலுக்குச் சென்றோம். 

அங்கு கோவில் மூடும் நேரமாகி விட்டாலும், அங்கிருந்த வயது முதிர்ந்த பட்டாச்சாரியார் மிக அன்போடு எங்களை வரவேற்று தரிசனம் செய்வித்தார். நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாக ராமர். பக்கத்தில் வாத்ஸ்யல்யமே உருவாக ஜானகி மாதாவும், இளவல் லட்சுமணனும். அந்த பட்டாச்சாரியார் எங்களை அந்த கோவிலில் மூன்று விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றார். கோவிலின் பின் பக்கம் இருக்கும் ஏரி, முன் பக்கம் இருக்கும் நவீன கஜேந்திர மோட்ச சிற்பம்,  கோவிலுக்குள் இருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் இவைதான் அந்த மூன்றும்.


ராம லட்சுமணர்களை சுமந்து செல்லும் ஹனுமான்

ஹனுமனின் பின்புறம், ராம லட்சுமணர்களின் திருவடிகள்

அவர் சொன்னபடி  செய்தோம். அங்கிருக்கும் ஆஞ்சனேயர் சிற்பம் வேறு எங்கும் காண முடியாதது. தன் இரு தோள்களிலும் ராமனையும், லட்சுமணனையும் ஹனுமன் தூக்கிச் செல்வது போன்ற அபூர்வ சிற்பம். எங்களை அந்த ஹனுமந்தனை வலம் வரச் சொல்லி ஹனுமாரின் முன்னும்,பின்னும்(மார்பிலும், முதுகிலும்)கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் ராம,லட்சுமணர்களின் பாதங்களை தரிசிக்க சொன்னதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். நன்றாக தரிசனம் செய்த நிறைவோடு வீடு திரும்பினோம்.


Thursday, March 20, 2025

இழந்த பொக்கிஷங்கள்

 இழந்த பொக்கிஷங்கள்


இதைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் உண்டு. நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது கிணறு,  ஜட்கா வண்டி ,எனப்படும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பயணங்களை.

அப்போதெல்லாம் தனி வீடுகள். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும்  கிணறு இருக்கும். அந்த கிணற்றில் நீர் இரைத்துதான் குளிக்க, குடிக்க, சமைக்க என்று எல்லாவற்றிர்க்கும் பயன் படுத்துவோம். கிணற்றுக்கு அருகில் நெல்லி மரம் இருந்தால் அந்த கிணற்று நீர் சுவையாக இருக்கும்.

கிணற்றடியில்தான் வீட்டு வேலை செய்பவர் பாத்திரங்களை துலக்குவார்.  கோடையிலும், வாடையிலும் குளிக்க இதமாக இருக்கும் கிணற்று நீரை இரைத்து குளிப்பது அலாதி சுகம்.

பாரதி ஆசைப்பட்டது போல எங்கள் வீட்டு கிணற்றுக்கு அருகில் தென்னை மரம் உண்டு, வளர்பிறை நாட்களில் நல்ல முத்துச் சுடர் போல நிலா ஒளி கிணற்று நீரில் பிரதிபலிக்கும்.

கிணறு இருந்தால் அதில் தவறுதலாக சாமான்கள் விழுவது சகஜம். அதை எடுப்பதற்கு பாதாள கரண்டி என்று ஒன்று உண்டு. அது யார் வீட்டில் இருக்கிறதோ அவர்களிடம் போய் கேட்டால் நம் வீட்டிலிருந்து ஒரு சாமானை வாங்கி வைத்துக் கொண்டுதான் பாதாள கரண்டியைத் தருவார்கள். அப்போதுதான் மறக்காமல் திருப்பித் தருவோமாம்.

இப்போது  வாஸ்துவிற்காக மீன் தொட்டி வைக்கச் சொல்கிறார்கள். அப்போது கிணறு அந்தப் பணியாற்றியது. இப்போது தனி வீடுகளில் கூட கிணறு இல்லை. பம்பு செட்தான். Gone are those days.

குதிரை வண்டி, மாட்டு வண்டி:



எழுபதுகளின் ஆரம்பம் வரையில் குதிரை வண்டிகள் இருந்தன. பழனியில் மட்டும் சமீப காலம் வரை குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. 'குதிரை கிச்சா' கதையில் சுஜாதா எழுதியது போல குதிரை வண்டி ஸ்டாண்ட் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அந்த இடத்திற்கென்று பிரத்யேகமான வாசனை உண்டு. திருச்சி உறையூரில் நாங்கள் இருந்த பொழுது அழகிரி என்பவர்தான் எங்கள் ஆஸ்தான குதிரை வண்டிக்காரர்.


பிள்ளையார் சதுர்த்தி,தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் செல்லவும், பாட்டியை குஜிலித் தெருவில் இருந்த டாக்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அழகிரியின் குதிரை வண்டிதான். கூலி எட்டணாவோ, பத்தனாவோ. அதை வண்டிச் சத்தம் என்பார்கள். அது என்ன பாஷை?

சென்னையில் கூட 1974 வரை குதிரை வண்டிகள் இருந்ததாமே? இப்போது இருக்கும் டிராஃபிக்கில் குதிரை வண்டிகளும் இருந்தால் எப்படி இருக்கும்? கார்கள், ஆட்டோக்கள், டூ வீலர்களுக்கிடையே குதிரை வண்டி.. நினைத்துப் பாருங்கள். இத்தனை ஆட்டோ மொபைல்களை பார்த்து குதிரை மிரளலாம், அல்லது குதிரையைப் பார்த்து டூ வீலர் குமரி மிரளலாம். அவளுடைய போனி டெய்லை புல் என்று நினைத்து குதிரை இழுத்து விட்டால் முடிந்தது கதை. எனிவே போன ஜட்கா வண்டி திரும்ப வரப்போவதில்லை.

விடுமுறைக்கு கிராமத்திற்கு போகும் பொழுதெல்லாம் மாட்டு வண்டியில் நிறைய பயணித்திருக்கிறோம். எங்கள் வீட்டில் தஞ்சை மாவட்டத்திற்கே உரிய மோழை மாடுகள் என்னும் கொம்பில்லா மாடுகள் நிறைய உண்டு. வில் வண்டி, மொட்டை வண்டி எனப்படும் மேற் கூரையில்லாத வண்டி இரண்டுமே இருந்தன. அந்த மொட்டை வண்டியின் மீது வளைவான கூரையை பொறுத்தி விட்டால் அது கூண்டு வண்டியாகி விடும். நிறைய பேர் சாமான்களோடு பயணிக்கலாம். பெரும்பாலும் ஊருக்குத் திரும்ப ரயில் நிலையத்திற்கு வருவதற்கு கூண்டு வண்டிதான். அது உயரமாக ஏறுவதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் ஒரு நாற்காலியை போட்டு ஏறச் சொல்வார்கள். வைக்கோல் பரப்பி, அதன் மீது ஜமக்காளம் விரித்து மெத்தென்று உட்காரும்படி செய்திருப்பார்கள்.

என்ன இருந்தாலும் வில் வண்டியின் கெத்து வருமா? வில் வண்டி வைத்திருப்பதே ஒரு அந்தஸ்தான விஷயம். எங்கள் ஊரில் இரண்டு வீடுகளில்தான் வில் வண்டி இருந்தது. அதில் ஒன்று எங்கள் மாமா வீடு. எங்களுடைய இரண்டாவது மாமாவுக்கு மாடுகள், வண்டிகள் இவற்றில் அதிக ஈடுபாடு. மாடுகளையும், வண்டியையும் விதம் விதமாக அலங்கரிப்பார். வில் வண்டியில் உட்கார மெத்தை, தலை இடிக்காமல் இருக்க குஷன் எல்லாம் இருக்கும். அதில் கடைசியில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பு கம்பியை லாக் செய்து கொண்டு,காலை தொங்க போட்டுக் கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்து வர ரொம்ப ஆசை. ஆனால் அந்த வாய்ப்பு கிடைப்பது துர்லபம்.முன்பாரம், பின்பாரம் என்றெல்லாம் சொல்லி எங்களை(குழந்தைகளை) நடுவில் தள்ளி விட்டு விடுவார்கள். ஒரே ஒரு முறை வண்டி ஓட்டுனருக்கு அருகில் முன்னால் உட்காரும் சான்ஸ் கிடைத்தது. காலை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்கேயாவது மாடு சாணம் போட்டு பாவாடையை நாசமாக்கிவிடப் போகிறதே என்று பயமாக இருந்தது. அப்படிப்பட்ட பயத்திற்கெல்லாம் இப்போது இடமில்லை. கிராமங்களில் கூட எந்த வீட்டிலும் மாட்டு வண்டிகள் இல்லை. அதன் இடங்களை டிராக்டர்களும், கார்களும் பிடித்துக் கொண்டு விட்டன. மாடுகள் என்னவாயின?

Friday, March 14, 2025

நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)

நந்தீஸ்வரர் கோவில் நந்திவரம்(கூடுவாஞ்சேரி)

சென்னையில்  ஒரு சிவன் கோவில் இருக்கிறது, நரம்பு, எலும்பு வியாதிகளுக்கு அங்கிருக்கும் சிவனை வழிபடுவது நல்லது என்று யாரோ எங்கள் கேரள விருந்தினருக்கு கூறினார்களாம், எனவே அந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். அவர் குறிப்பிடும் கோவில் கூடுவாஞ்சேரியில் நந்திவரம் என்ற இடத்தில்தான்  இருக்கிறது, நந்திவரம், நந்தீஸ்வரர் கோவில் என்று என் அக்கா பையன் கூறினார். ஆலயம் காப்போம் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் அவருக்கு கோவில் பற்றிய விவரங்கள் தெரியும். 

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரியில் மெயின் ரோடிலிருந்து இடதுபுறம் நந்திவரம் என்று பெயர்ப்பலகை தென்படுகிறது, அந்தப் பாதையில் உள்ளே சென்றால், சிறிது தூரத்திலேயே நந்தீஸ்வரம் கோவிலை அடைந்து விடலாம்.

பல்லவர்கள் ஆட்சி காலத்தில் நந்திவர்மன் என்ற அரசன் பெயரால் 'நந்திவரம்' என்று அழைக்கப்பட்ட ஊர். வெகுகாலம் அப்படித்தான் அழைக்கப்பட்டதாம். கூடுவாஞ்சேரி இதன் பக்கத்து கிராமம். ஆனால் காலப்போக்கில் கூடுவாஞ்சேரியின் ஒரு பகுதியாக நந்திவரம் மாறிப் போனது இந்தப்பகுதி மக்களுக்கு ஒரு குறைதானாம். 

கோவிலுக்குள் செல்லலாம், மிகப்பெரிய கோவிலும் இல்லை, மிகச்சிறிய கோவில் என்றும் கூறிவிட முடியாது. சாதாரணமாக கிராமங்களில் இருக்கும் ஆலயங்கள் போல இருக்கிறது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

கிழக்கு பார்த்த லிங்கத் திருமேனி, அம்பாள் தெற்கு பார்த்து எழுந்தருளியிருக்கிறாள். செளந்தர்யநாயகி என்னும் பெயருக்கேற்றார் போல் அழகாக நம் மனதை கவர்கிறாள். 

பிரகாரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதி கொண்டருளுகிறார். பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது பின்பக்கம் ஸ்தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சூரிய பகவானுக்கு தனி சன்னதி. அந்த கோபுரத்தில் தேரில் சூரிய பகவானின் அழகான சிற்பம். சூரியனுடன் தேருக்கு ஒற்றைச் சக்கரம்தான் என்பார்கள், அதை அழகுற வடித்திருக்கிறார்கள். 


முன் பகுதியில் நாகலிங்க மரத்தடியில் ஒரு நந்தி இருக்கிறது. கோவில் திருப்பணிக்காக தோண்டிய பொழுது கிடைத்ததாம். நல்ல நிலையில் இருந்ததால் வெளியே வைத்து விட்டார்களாம். அதையும் வழிபடுகிறார்கள். அதற்கு பின்பக்க சுவரில் சித்தர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நாகலிங்க மரத்தடியிலும், அதை ஒட்டி இருக்கும் சிமெண்ட் பெஞ்சிலும் சிலர் அமர்ந்து ஜபம், தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப்பக்கம் செல்லும் பொழுது அவசியம் சென்று தரிசியுங்கள். அர்ச்சகர் நன்றாக விளக்கங்கள் சொல்கிறார்.

கோவிலுக்கு எதிரே ஒரு ஏரி இருக்கிறது. ஊரப்பாக்கம் உட்பட இந்த பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு பயன் படுமாம். நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை வியக்க வைக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களில் எத்தனை ஏரிகள்! இன்று எல்லாவற்றையும் தூர்த்து வீடுகள் கட்டிவிட்டு, தண்ணீர் இல்லை என்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறோம்.  

தல வரலாறு(அர்ச்சகர் கூறியது):

இந்த ஊரில் மாடுகள் வைத்திருந்த ஒரு இடையர் அவருடைய ஒரு காராம்பசு, தினசரி ஒரு இடத்தில் பால் சொரிவதை கண்டு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்த இடத்தை தோண்ட, சிவலிங்கம் புலப்படுகிறது. அதை எடுத்து வழிபடுகிறார்கள். பின்னர் பல்லவ மன்னன் நந்திவர்மன் கோவில் கட்ட உதவி, நிவந்தங்களும் அளித்திருக்கிறார்.

ஒரு முறை மூலவரான சிவலிங்கம் பிளந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி அளித்ததால், பின்னமான லிங்கத்தை வைக்கக்கூடாது என்னும் மரபை மீறி அதை இணைத்து மீண்டும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதனால் திருமணத்தடை நீங்கவும்,ஸ குடும்ப ஒற்றுமைக்கும் வழிபடலாம்.


அப்பர் பெருமான் நந்திவரத்தை தாண்டிச் சென்ற பொழுது அவருக்கு, மூட்டு வலி இருந்ததால் ஊருக்குள் நடந்து வந்து சிவபெருமானை வணங்க முடியவில்லை, தொலைவில் இருந்தபடியே மனதால் சிவனை நினைத்து வணங்கினாராம். அதனால் இது வைப்புத்தலம் எனப்படுகிறது. அப்போது அவர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு எலும்பு, நரம்பு சம்பந்தமான நோயைகள் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டாராம், அதனால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

அப்பர் பெருமானின் பாடல்: