கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, March 28, 2020

நம்புவதே வழி

நம்புவதே வழி   

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் என்கிறார்கள். ஆனாலும் மக்கள் மனதில் ஒரு பீதி. இதையெல்லாம் பார்க்கும் பொழுது இப்படி பீதியூட்டிய வேறு சில தருணங்கள் நினைவுக்கு வந்தன.

Thursday, March 19, 2020

நிழலும், நிஜமும்


நிழலும், நிஜமும்

பொது இடங்களைப் பற்றி நமக்கு கிடைக்கும் பல பிம்பங்களை சினிமாக்கள்தான் உருவாக்குகின்றன. ஆனால் நிழலுக்கும் நிஜத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். உங்களில் யாராவது போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கறீர்களா? எனக்கு அந்த சான்ஸ் கிடைத்தது. 

Wednesday, March 4, 2020

மசாலா சாட் - 16 சில நிகழ்வுகள், சில செய்திகள்

மசாலா சாட்  -  16  
சில நிகழ்வுகள், சில செய்திகள்

என்னுடைய சென்ற சென்னை விஜயத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண மாலை நிகழ்சிக்கான பேச்சரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன்.

சென்னையில் நடை பெற்ற ஆன்மீக பொருட்காட்சியில்தான் அது நிகழ்ந்தது. நிகழ்ச்சி ஐந்து மணிக்கு துவங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நாங்கள் நாலு முப்பதுக்கே அரங்கத்திற்கு சென்று விட்டோம்.  அப்போதுதான் மேடையை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

Monday, February 17, 2020

ஒன்றைப் படித்தேன், ஒன்றை ரசித்தேன்.

ஒன்றைப் படித்தேன், ஒன்றை ரசித்தேன்.



அதெல்லாம் ஒரு காலம், தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு, பட்சணங்கள், இதோடு தீபாவளி மலர்களும் இடம் பிடித்த காலம். தீபாவளி மலர்கள் விலை அதிகம் என்பதால் வீட்டில் வாங்க மாட்டார்கள். யார் வாங்குகிறார்களோ அவர்கள் வீடுகளில் அதைப் பார்க்கும் பொழுதே கை துறுதுறுக்கும். அவர்களோ அதை தொட விட மாட்டார்கள். அவர்கள் கவனிக்காத பொழுது, நைசாக புரட்டி விட்டு கீழே வைத்து விட வேண்டும். அவர்கள் வீட்டில் எல்லோரும் படித்த பிறகுதான் படிக்க கொடுப்பார்கள். சில சமயங்களில் ஒரு மாதம் கூட ஆகி விடும்.

Monday, February 10, 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2020
தொடர்ச்சி  


ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் அமைக்கப் பட்டிருந்த சில ஸ்டால்கள். 
கீழே காணப்படுவது ஃபைபரினால் செய்யப்பட்டிருந்த பொம்மைகள். 




வாயிலில் வைக்கப்பட்டிருந்த சமயபுரம் மாரியம்மன்.


மேலும் சில ஃபாய்பர்  பொம்மைகள்.


அயோத்தியில் அமையப்போகும் ஸ்ரீராமர் கோயிலின் மாடல்.



கீழே காணப்படுவது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட பொம்மைகள். 


மாதா அமிர்தானந்தமயி மடங்களில் காணப்படும் பிரும்மஸ்தானங்களின் மாடல். 









வேலூரைசேர்ந்த ஜெய்சங்கர் என்னும் இவர் ஒரு பாசிட்டிவ் மனிதர்.  அனாதை பிணங்களை அடக்கம் செய்வதை ஒரு சேவையாக செய்து வருகிறாராம். பழைய பேப்பர் வியாபாரியாக இருந்த இவருக்கு தினமும் நிறைய அழைப்புகள் வருவதால் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டு விட்டாராம். திருமணமும் செய்து கொள்ளவில்லை. எல்லோரிடமும் உதவிகள் பெற்று அனாதை பிணங்களை அடக்கம் செய்வதாக கூறினார். 



கை குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இடம். 


இதோ இங்கே வருகிறது நம்ம ஏரியா! Multi cuisine food court!



அதிராவின் அரிசி அல்வா!





ஜவ்வரிசி கொழுக்கட்டை! முதல் முறையாக சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. பாண்டிச்சேரி ஸ்பெஷலாம். ஜவ்வரிசிக்குள் தேங்காயை வைத்து ஆவியில் வேகவைத்து, அதன் மீது பனங் கல்கண்டை தூவி தந்தார்கள். நன்றாக இருந்தது. 

Sunday, February 9, 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 2020

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 2020



ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி இந்த வருடம் சென்னை வேளச்சேரியில் இருக்கும் குருநானக் கல்லூரியில் ஜனவரி 28ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 03ஆம் தேதி வரை நடந்தது.

தென்னகத்தில் இருக்கும் பல்வேறு ஆன்மீக இயக்கங்கள் தங்கள் அமைப்புகள் குறித்தும், அவை செய்யும் சேவை குறித்தும் காட்சி படுத்தியிருந்தார்கள். ருத்திராட்சம், ஆன்மீக புத்தகங்கள், விபூதி, குங்குமம், ஸ்படிக மாலை போன்றவை விற்பனைக்கிருந்தன. சென்ற வருடங்களை விட இந்த வருடம் கோ சம்ரக்ஷணை செய்யும் அமைப்புகள் நிறைய கண்ணில் பட்டன. சுத்தமான பசு நெய், கோமியம், வரட்டி, இயற்கை உரம் போன்றவை விற்கப்பட்டன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், தினத்தந்தி, தினமலர், குமுதம், ஆனந்த விகடன், தி ஹிந்து போன்ற ஊடகங்களும் ஸ்டால்கள் போட்டிருந்தன.  அவை தங்கள் யூ ட்யூபிற்காக கவரேஜ் செய்தன.

இவை தவிர இந்தியா போஸ்ட்டும் ஸ்டால் அமைத்திருந்தது. அதில் முன்னூறு ரூபாய்க்கு நம்முடைய ஃபோட்டோவோ, அல்லது நமக்கு பிரியமானவர்களின் புகைப்படமோ கொடுத்தால் உடனடியாக 10 ஸ்டாம்புகள் தயாரித்து கொடுப்பதாக சொன்னார்கள்.  நான் செய்து வரும் இலக்கிய பணிக்காக அரசாங்கமே என் தபால் தலையை வெளியிடலாம். அதனால் வேண்டம் என்று சொல்லி விட்டேன்.  ரூபாய் 65க்கு ராமாயண காட்சிகள் தபால் தலைகளாக வந்திருக்கின்றன. அவைகளை நாம் பயன் படுத்தலாம், யாருக்காவது பரிசளிக்கலாம், அல்லது அப்படியே சேமிப்பாகவும் வைத்திருக்கலாம். என் சகோதரி தன் பேரனுக்காக ஒன்று வாங்கினார். அதைப்போல சென்ற வருடத்தின் சிறப்பு நிகழ்வான அத்தி வரதரின் வருகையை முன்னிட்டு ஒரு சிறப்பு என்வெலப் கூட வெளியிடபட்டிருக்கிறது. அதையும் நாம் பயன் படுத்தலாம் அல்லது நினைவாக வைத்துக் கொள்ளலாம்.

Athi Varadhar envelope 
 


இந்த வருடம் ஆன்மீக கண்காட்சிக்காக எடுத்துக் கொண்ட பொருள் 'பெண்மையை போற்றுவோம்' அதனால் நம் தேசத்தில் வாழ்ந்த பெருமை மிகு பெண்களைப் பற்றிய ஓவியங்கள் நுழையும் பொழுது வரவேற்றன.  ஆரம்பத்தில் நுழை வாயிலில் வைத்திருந்த கண்ணகி சிலையை பின்னர் மத்தியில் வெளியேறும் வழியைப் பார்த்தவாறு மாற்றி விட்டார்கள். கண்ணகி சிலையில் முகத்தில் ஆக்ரோஷத்திற்கு பதிலாக சிரிப்பு!!



கண்காட்சியை தொடங்கி வைத்தது மாதா அமிர்தானந்தமயி. அன்று மேடையில் ஹிந்து ஆன்மீக, சேவை நிறுவனத்தின் தலைவி திருமதி.ராஜலக்ஷ்மி, பத்மா சுப்பிரமணியம், ஷீலா ராஜேந்திரன் என்று அனைவரும் பெண்கள்தான்.

கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய அமிர்தானந்தமயி அவர்கள் மலையாளத்தில் உரையாற்றியதை அவருடைய சீடர் ஸ்வாமிஜி ராமக்ரிஷ்ணானந்தபுரி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். ராஜலக்ஷ்மி அவர்களும், பத்மா சுப்பிரமணியம் அவர்களும் நீண்ட உரை நிகழ்த்தினார்கள். இதில் ராஜலக்ஷ்மி அவர்கள் மேலை நாட்டில் பெண்ணை வீக்கர் செக்ஸ் என்று கூறும் பொழுது, நம் நாட்டில் பெண்ணை சக்தி என்கிறோம் என்றார். பத்மா சுப்பிரமணியம் நம்முடைய ஹிந்து ஆன்மீக அமைப்புகள் செய்யும் சமூக சேவைகளை பட்டியலிட்டு பிரமிக்க வைத்தார். உதவி செய்து விட்டு அதனால் மதம் மாற்றுவது நம் நோக்கமல்ல,வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்னும் கொள்கையை நாம் பின்பற்றுவதால் நம்முடைய சேவைகளை நாம் பிரகடனப் படுத்திக்க கொள்வதில்லை என்றார்.  உண்மையில் இந்த கண்காட்சியில் சென்று பார்த்த பொழுதுதான் ஹிந்து அமைப்புகள் எத்தனையெத்தனை சேவைகளை சத்தம் போடாமல் செய்து கொண்டிருக்கின்றன என்பது புரிகிறது.



வருகை புரிந்த ஆயிரக்கணக்கானவர்களில் பெரும்பாலும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள். அல்லது பள்ளிக்குழந்தைகள். இளைஞர்களும், மத்திம வயதினரும் குறைவாகத்தான் இருந்தார்கள். இந்த வருடம் இதை தவற விட்டவர்கள், அடுத்த முறை கண்டிப்பாக வருகை தாருங்கள். ஒரு அருமையான, பெருமிதம் கொள்வீர்கள்.

கல்யாணமாலை நிகழ்ச்சிக்கான பேச்சரங்கம் சனி அன்று நடை பெற்றது. காலம்தோறும் பெண் என்பதில் பக்தியில் பெண் என்னும் தலைப்பில் டாக்டர்.சுதா சேஷய்யன் ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். குடும்பத்தில் பெண் என்பதைக் குறித்து திருமதி.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் 
பேசி கை தட்டல்களை அள்ளினார். அவரைத் தொடர்ந்து திருமதி.கவிதா ராமானுஜம் என்னும், மும்பையில் வருமானவரித்துறையில் உயரதிகாரியாக பணியாற்றும்  இளம் பெண், நிர்வாகத்தில் பெண் என்னும் தலைப்பில்  மேடைப் பேச்சில் ஜாம்பவான்களுக்கு ஈடு கொடுத்தார். இறுதியில் இலக்கியத்தில் பெண் என்பது பற்றி திருமதி பாரதி பாஸ்கர்,  நேரம் சற்று குறைவாக இருந்தாலும் உரையாற்றி அசர அடித்தார். மறக்க முடியாத மாலையாக அது அமைந்தது. 

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனோடும், பாரதி பாஸ்கரோடும் நானும் என் அக்கா பெண்ணும்.

மேலும் சில தகவல்களும் புகைப்படங்களும் அடுத்த பதிவில்.




Thursday, February 6, 2020

படித்தேன், ரசித்தேன்

படித்தேன், ரசித்தேன்



சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்களை பற்றி சொல்ல ஆசை.
முதலில் வருவது 'தாமிரபரணி என்னும் சினேகிதி' என்னும் புத்தகம்தான். 

ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் கீழே வைக்காத நாட்களெல்லாம் திருமணத்திற்கு முன்புதான்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு அழகான ஓவியங்கள், புகைப்படங்களோடு எல்லோரும் படிக்கக்கூடிய பெரிய எழுத்துக்கள், ஹார்ட் பவுண்ட் அட்டையோடு கூடிய ஒரு புத்தகத்தை படித்து முடித்தேன் என்றால் அது தாமிரபரணி என்னும் சினேகிதி. மத்யமர் இரண்டாம் ஆண்டு விழாவில் விற்பனைக்கு வைத்திருந்த திரு.நெல்லை கணேஷ் எழுதிய இந்த புத்தகத்தை ஒரு தோழி எனக்கு பரிசளித்தார். 

ஒரு ஐ.டி.கம்பெனியில் மிகப் பெரிய பதவியில் இருக்கும் திரு. நெல்லை கணேஷ் இரண்டு வருடங்களாக ஃபேஸ் புக்கின் மத்யமர் குழுவில் எழுதிய கட்டுரைகள், ஒன்றிரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல். வெகு சரளமாக கொஞ்சம் சுஜாதாவின் சாயலில் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். 

வந்தியத்தேவனை கால எந்திரத்தில் ஏற்றி தஞ்சாவூருக்கு அனுப்புகிறார். சோழர் , பாண்டியர், விஜயநகர, நாயக்கர்கள் கால சிற்பங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்களை விளக்குகிறார். திருமங்கையாழ்வாரை குமுதவல்லியின் கணவனாகவும், பெரியாழ்வாரை ஆண்டாளின் தகப்பனாராகவும் காட்டுகிறார். தான் ரசித்த கர்னாடக இசைக்கச்சேரியை அழகாக விமர்ச்சிக்கிறார். என்னைப் போலவே இவருக்கும் மதுரை மணி ஐயர் கச்சேரி கேட்டுத்தான் இசையில் ஈடுபாடு வந்ததாம். 

தனக்கு பிடித்த கடவுளாக திருமால் ஆனதற்கான காரணமாக அவர் சொல்வது, செவிக்கு நல்ல தமிழும், அருமையான ததியோன்னமும், புளியோதரையும்,சாப்பிட்ட பின் இனிப்புக்கு அக்கார அடிசிலும், லட்டுவும் தரும் பெருமாளே கடவுளின் உருவமாக இருந்து விட்டு போகட்டுமே. போகட்டுமே என்று நமக்கும் தோன்றுகிறது. 

இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தவை 'காவல் தெய்வம்', 'அமெரிக்கா ஒரு தேடல்', மற்றும் 'தாய் மாமன்' என்னும் கட்டுரைகள் ஆகும். காவல் தெய்வம் என்னும் கட்டுரையில் தென் தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தில் நேர்மையாக பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டரைப் பற்றியது.  "சார் இராமர் வாலியை எப்படிக் கொன்னாரு? சட்டப்படியா செஞ்சாரு? மறைஞ்சு இருந்துதான அம்பு போட்டாரு? சட்டப்படி செல்லாதுதான், ஆனா அவர் செஞ்சது தர்மம், நியாயம்தானே? எது நியாயமோ அதச் செய்யறதுக்குத்தான் சட்டம், ஸ்டேஷன் எல்லாம்".  என்ற அந்த இன்ஸ்பெக்டர் நேர்மையாக இருந்ததாலேயே எந்த ஊரிலும் ஆறு மாதத்திற்கு மேல் இருந்ததில்லையாம். 

குடிகார புருஷனால் தினமும் அடி  உதை என அவஸ்தைப்பட்ட ஒரு பெண் அந்த இன்ஸ்பெக்டரிடம் வந்து, கம்பளைண்ட் கொடுக்க மறுத்து, "கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லுங்க சார்" என்று  அழுதாளாம்.  அவள் புகார் கொடுக்காததால் அவளுடைய கணவன் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே ஒரு நாள் ஓடுகிற பஸ்ஸில் ஒரு பெண்ணிடம் வம்பு செய்தான் என்று அவனைப் பிடித்து லாக் அப்பில் வைத்து, ஒரு நாள் முழுவதும் மிதி மிடி என்று மிதித்தாராம். அவனுடைய மனைவியின் வலி தெரிய வேண்டும் என்று சொல்லியே அடித்தாராம். அதன் பிறகு அந்த ஆசாமி குடியெல்லாம் விட்டு விட்டு மனைவியோடு அன்பாக இருக்க ஆரம்பித்தானாம். அப்போது அவர் கூறியவைதான் வாலி வதம் பற்றிய நியாயம். அப்படிப்பட்ட அந்த நேர்மையான காவல் அதிகாரி அகலமாக மரணித்ததை பற்றி நெல்லை கணேஷ்  "வைகுண்டத்தில் என்ன லா அண்ட் ஆர்டர் பிரச்சனையோ பெருமாளுக்கு? சீக்கிரமே ராமையாவை(இன்ஸ்பெக்டர்) நித்யசூரியாக்கி அழைத்துக் கொண்டு போய் விட்டார். என்கிறார்.   

அமெரிக்கா ஒரு தேடலில் அமெரிக்கா என்னைப்போல் பல பேர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாடு. முதல் கார், முதல் முத்தம் என பல முதல் அனுபவங்கள் பலருக்கும் இங்குதான். வாழ்வில் தொட்ட உயரங்களுக்கெல்லாம் ஏணிகள் இங்குதான் கிடைத்தன. என்று தொடங்கும் இந்த கட்டுரையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் பல நகரங்களுக்கும் சென்று அந்த அனுபவங்களை எழுதியிருக்கிறார். நியூ டவுன், கனெடிக்கெட் பயணம் பற்றிஎழுதும் பொழுது, "சாலைகள் பல இடத்தில விரிசல் விட்டு இருக்க, பாலங்கள் நியாயம் இழந்து வெளிறி இருந்தன. சமீபத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி போல் நகரம் பழைய பெருமையை  இன்னும் இழக்காமல், ஆனால் சற்று ஆடிப்போயிருப்பது போல் தெரிந்தது. போகும் வழியில் பல நகரங்கள் - டெர்பி, ஷெல்டன் இங்கெல்லாம் பல பாக்டரிகள் இருந்திருக்கின்றன. இப்போது எதுவும் இல்லை. பல கட்டிடங்களில் கண்ணாடி எல்லாம் உடைந்து இருக்கிறது. ரோடுகள் எல்லாம் குண்டும் குழியுமாய். டாலஸ் விமான நிலையம். வயதாகி,வலு குறைந்து,காலை இழந்த முனையங்கள்(டெர்மினல்ஸ்).  என்றெல்லாம் இவர் எழுதியிருப்பதை படிக்கும் பொழுது அமெரிக்காவின் இன்னொரு முகத்தை, நமக்கெல்லாம் தெரியாத முகத்தை காட்டுகிறார். 

இருந்தாலும், காவிரியில் முழு வருடமும் பொங்கி ஓடும் தண்ணீரும், தாவணி அணிந்த இளம் பெண்களின் கோலாட்ட குதூகலங்கள் நிறைந்த அக்கிரகாரங்களும் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் அங்கு வசித்த குடும்பங்களின் பல வாரிசுகள் இன்று ஹட்சன் நதிக்கரையில் விநாயக சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதே சுபிட்சம் இடிந்து விழுந்த கண்ணாடி கட்டிடங்கள் மட்டுமே உள்ள டெர்பி, கனெக்டிகட் போன்ற ஊர்களில் வாழும் வயதானவர்களின் வாரிசுகளுக்கும் வர பெரிய பெருமாளோ, மேரி அம்மையோ ஆசிர்வதிக்கட்டும். என்று முடித்திருப்பதில் அவருடைய நன்றி உணர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.   

தாய் மாமன் கட்டுரையில் அவருக்கும் அவருடைய மாமாவுக்கும் இருந்த உணர்வு பூர்வமான பந்தத்தை விவரித்து விட்டு, மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதை, "கலங்கிச் சகதியாய் ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி நதியில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு முங்கி எழுந்தேன். கண்ணீரையும் சேர்த்துத் துடைத்துக் கொண்டு ஓடியது தாமிரபரணி.

திருநெல்வேலிக்கு வந்தால் திரும்பிப் போகவே மனம் வராத எனக்கு, இரவே பஸ் பிடித்துச் சென்று விடலாம் என்று தோன்றியது. திருநெல்வேலிக்கு வர வேண்டிய காரணங்கள் எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றன. மாமாவும் சாம்பலாகி தாமிரபரணியில் கரைந்து போனார். 

குல தெய்வம் நடுக்காவுடையாரும், கோடாலி வெட்டுக் காயத்துடன் நெல்லையப்பரும் இருக்கிறார்கள். கல்லாய் சமைந்து போன இருவர். யாருக்கென்ன! இருந்து விட்டு போகட்டும்" என்று கையறு நிலையில் வரும் விரக்தியை  கூட அழகாக பதிவு செய்திருக்கிறார். 

எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி எழுதியிருப்பது இதுவரை கேள்விப்படாதது. ஜெயலலிதா மாண்டியா ஐயங்கார் என்பது கூட தவறுதான். அவருடைய தந்தையின் பூர்வீகம் திருச்சிக்கு அருகில் இருக்கும் நங்கவரம்.   

அகவை ஐம்பது என்னும் கட்டுரையில் ஐம்பதாவது வயதை எட்டிய தான் எடுத்திருக்கும் சில தீர்மானங்களை எழுதிவிட்டு இறுதியில் 
கடைசியாய் ஒன்று "தாய் மொழியில் எழுத பேசாத தெரியாதவர்கள் அடுத்த பிறவியில் குரங்காய் பிறப்பார்கள் என்கிறார் பாரதி. மகனோ, மகளோ, தாய் மொழியில் பேசுவதற்காவது சொல்லிக் கொடுத்து விடுங்கள். உயில் தாய் மொழியில் எழுதி வைத்து விடுவது இதற்கு கை கொடுக்கும் என்று புன்னகைக்க வைக்கிறார்.

மன்னிக்கவும் கடைசி கடைசியாய் இன்னொன்று. ஐம்பது வயதுக்குப் பிறகு, இது மாதிரியான அச்சு பிச்சென்று புத்திமதி சொல்லும் பதிவுகளை 'படித்ததில் பிடித்தது, பிடித்தால் பகிரவும், தமிழனாய் இருந்தால் பகிர்ந்து விடு, இருபது நிமிடத்தில் இருபது பேருக்கு ஃபார்வர்ட் செய்தால் நினைத்தது நடக்கும் என்று எழுதி அனுப்ப வேண்டாம். உடனேயே குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடவும்" என்று மிகுந்த தன்னடக்கத்தோடு சொல்லியிருக்கிறார். ஆனால் அவருடைய இந்த தாமிரபரணி என்னும் சினேகிதியை நிச்சயம் குப்பைத் தொட்டியில் போட மாட்டோம். பத்திரமாக நம் கலெக்ஷனில் வைத்துக் கொள்வோம். 

Friday, January 24, 2020

மசாலா சாட் -15

மசாலா சாட் - 15
(மாறுதல் வரும்) 


சமீபத்தில் ஏதோ ஒரு சேனலில் குடும்பம் ஒரு கதம்பம் படம் போட்டார்கள். அதில் ஒரு காட்சியில் எஸ்.வி. சேகர்,"பொண்ண பெத்தவங்க என்ன இப்படி அலையறாங்க? பாஸ்கர் ஊரிலிருந்து வந்து முழுசா ஒரு வாரம் ஆகல, அதுக்குள்ள ரெண்டு ஜாதகம் வந்து விட்டது" என்பார். அதை இன்றைய நிலையோடு ஒப்பிட்டேன் சிரிப்பு வந்தது. பையனுக்கு பெண் தேடும் அம்மாக்கள் எல்லோரும் சொல்லுவது,"பெண் வீட்டிலிருந்து கூப்பிடவே மாட்டேன் என்கிறார்கள். நாம்தான் ஃபோன் பண்ண வேண்டியிருக்கு." என்பதாகும்.  இப்படியே போய்க்கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என்று வேண்டி ஆண்கள் பாவை நோன்பு நோற்க நேரிடலாம் என்று  நான் முக நூலில் பகிர்ந்த பொழுது ஒரு நண்பர், அது 'காளை நோன்பு' ஆகும் என்று பின்னூட்டம் இட்டிருந்தார். 

இப்படி பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ மாற்றங்களை தவிர்க்க முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது.    

கல்யாண மாலை நிகழ்ச்சியில் பெண்கள், "என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் பையன் வேண்டும்" என்கிறார்கள். "பெண்ணுக்கு சமைக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, நான் நன்றாக சமைப்பேன்" என்கிறார் ஒருவர்.  

சமையல் என்றதும் ஒரு விஷயம் தோன்றுகிறது. ஒரு காலத்தில் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவது கௌரவக் குறைச்சல். ஹோட்டல்களும் குறைவுதான். மெஸ் என்பது பேச்சுலர்கள் சாப்பிடும் இடம். சமையல் புத்தகம் என்றால் அது மீனாட்சி அம்மாள் சமயல் புத்தகம் மட்டும்தான். புத்தகத்தை பார்த்து சமைப்பது கேலிக்கு உரிய விஷயமாக கருதப்பட்டது. 

அரிசியை கழுவி,நீர் ஊற்றி, குக்கரில் வைத்து விட்டு 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சாதம் ஆகவே இல்லை. ஏனென்றால் அடுப்பை பத்த வைக்க வேண்டும் என்று அதில் போடாததால் என் மனைவி அதை செய்யவில்லை. 
போன்ற ஜோக்குகள் அப்போது பிரபலம். 

ஆனால் இப்போதோ ஏகப்பட்ட சமையல் புத்தகங்கள். டி.வி.யில் நாள் முழுக்க எந்த சானலை திருப்பினாலும் யாராவது சமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதைத்தவிர யூ டியூப், முக நூல், ஹலோ ஆப் என்ற எல்லாவற்றிலும் சமைத்துத் தள்ளுகிறார்கள்.  இருந்தாலும் பலர் வீட்டில் சமைப்பதாக தெரியவில்லை. 

ஹோட்டல்களுக்குச் சென்றால் பார்சல் வாங்கும் இடத்தில் ஸ்விகிகாரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதைத்தவிர சமைத்து கொண்டு வந்து வீட்டில் கொடுக்க  ஏகப்பட்ட கேட்டரிங்குகள்.  வீடு கட்டுபவர்கள், குறிப்பாக அப்பார்ட்மெண்டுகள் சமையலறையின் அளவை குறைத்து விடுகின்றன. காரணம் கேட்டால் இப்போதெல்லாம் யார் சமைக்கிறார்கள்? என்கிறார்கள்!!

எத்தனை விதமான உணவுகள் இருக்கின்றதோ அத்தனை விதமான டயட் முறைகளும் இருக்கின்றன. பேலியோ டயட், வேகன் டயட், ஃப்ரூட் டயட், என்று என்னென்னவோ சொல்கிறார்கள். அரிசி சாப்பிடக் கூடாது, எண்ணெய் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததை ருஜூதா திவாகர் முற்றிலுமாய் மறுக்கிறார்.   இரவில் அரிசி சாப்பிடக் கூடாது என்பவர்கள் கரீனா (கபூர்) கானைப் பாருங்கள். அவர் இரவில் தால் சாதம், தயிர் சாதம்தான் சாப்பிடுகிறார். என்கிறார். மேலும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளில் கொழுப்பு அதிகம் என்பதையும் இவர் ஏற்பதில்லை. நம்முடைய பாரம்பரிய உணவுகளையும், நம் நாட்டில் விளையும் காய்கறிகள், பழங்களையும் தவிர்க்கத் தேவையில்லை என்பது இவர் கருத்து. 


"நெய் சாப்பிடக் கூடாது என்று சொன்ன மேற்கத்தியர்கள் இப்போது நெய் உடலுக்கு அவசியம் என்பதால் அதை காபியில்(ப்ளாக் காபி)  கலந்து குடிக்கிறார்கள். சாதத்தோடு கலந்து கொண்டால் தீமை அளிக்கும் நெய், காபியில் கலந்து கொண்டு விட்டால் நன்மை செய்து விடுமா?  நம்முடைய பாரம்பரிய உணவுகளை  வெளி நாட்டவர் தவிர்க்கச் சொன்னால் அதை ஆராய வேண்டும்" என்று அரசியலும் பேசுகிறார். 

Rujutha Diwakar - celebrity dietician
பார்க்கலாம் இன்னும் என்னென்ன மாறுமோ? இப்போதெல்லாம் பிஸ்ஸாவில் டாப்பிங்காக கத்திரிக்காய் போட ஆரம்பித்து விட்டார்களாமே? கஞ்சியாக குடித்துக் கொண்டிருந்த ஓட்ஸில், இட்லி, தோசை, எல்லாம்  செய்கிறார்கள். நான் ஓட்ஸில் உப்புமா செய்தேன். 

ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.  எல்லா உப்புமாக்களுக்கும் தாளிப்பது போல் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து ஓட்ஸை அதோடு சேர்த்து, உப்பு போட்டு தண்ணீரை தெளித்து, தெளித்து கிளற வேண்டும். அரிசி மாவில் செய்யும் உப்புமா போல் சுவையாக இருக்கிறது. 


ஓட்ஸ் உப்புமாவோடு 'மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா..' என்னும் பாடலையும் சுவையுங்கள் சுட்டி இணைக்கப்பட்டிருக்கிறது. https://youtu.be/oE6zm6OAghg











Sunday, January 19, 2020

திருவள்ளுவர் கோவில், மயிலாப்பூர்

திருவள்ளுவர் கோவில், மயிலாப்பூர்


கோவில் முகப்பு 
நேற்று தோழி ரமா ஶ்ரீனிவாசன் சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

ஐயன் வள்ளுவர் 


வாசுகி தாயாரின் சந்நிதி 
மயிலை விவேகானந்தா கல்லூரிக்கு அருகில் இருக்கும் திருவள்ளுவர் சிலையிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது திருவள்ளுவர் கோவில். மிகப்பெரியதும் இல்லை. மிகச்சிறியதும் இல்லை.  சிவன் சன்னிதி, அம்பாள் சன்னிதி, இரண்டு விநாயகர் சன்னதிகள், அதில் ஒரு விநாயகர் வித்தியாசமாக இருக்கிறார். நவகிரக சன்னதி, அதைத்தவிர திருவள்ளுவர் மற்றும் வாசுகிக்கு தனி சன்னதிகள் இருக்கின்றன. திருவள்ளுவர் பிறந்ததாகக் கருதப்படும் இலுப்பை மரத்தினடியில் திருவள்ளுவரின் தாய் தந்தைக்கு சிலைகள் உள்ளன.  இந்த கோவில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படுகிறது.

வட இந்திய கோவில்களில் காணப்படுவதைப் போன்ற விநாயகர் 




வள்ளுவரின் தாயும்,தந்தையுமான ஆதி, பகவன்


ஆனால் எனக்கென்னவோ வள்ளுவரை இப்படி கோவிலில் வைத்து கும்பிடுவதை விட, நிறைய பேர்கள் திருக்குறளை அறியும் வண்ணம் செய்வதுதான் அவருக்கு செய்யும் நிஜமான மரியாதை என்று தோன்றுகிறது. 

Wednesday, January 15, 2020

கோலாகலப் பொங்கல்!

கோலாகலப் பொங்கல்!

எங்கள் குடியிருப்பில் பொங்கல் விழாவை 12.01.2020 அன்றே கொண்டாடி விட்டார்கள். கர்நாடகா, ஆந்திரா இங்கெல்லாம் சங்கராந்தி என்கிறார்கள். 




காலையில் பட்டம் விடும் போட்டி, மதியம் கோலப்போட்டி, இரவில் லோடி என்று களை கட்டியது. ஸ்டால்களும் இருந்தன.  இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டோம்.

அவ்வளவாக காற்று இல்லையே பட்டம் எப்படி பறக்கும்? என்று நினைத்ததற்கு மாறாக இரண்டு பட்டங்கள் மிக நன்றாகப் பறந்தன. அவற்றை என் செல்ஃபோனில் படம் பிடிக்க எனக்குத் தெரியவில்லை. அத்தனை பெரிய குடியிருப்பில் நாலு க்ரூப்புகள்தான், கலந்து கொண்டன. ஒரு அணியில் இரண்டு பேர் கலந்து கொள்ளலாம் என்ற அனுமதி இருந்த போதிலும் மூன்று அணிகளில் இரண்டிரண்டு பேர்களும் ஒரு பெண்மணி தனியாகவும் மொத்தம் ஏழு பேர்கள்தான் கோலப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.


இரவு லோரி! பஞ்சாபியர்கள் போல் இரண்டு மூன்று மரத்துண்டுகளை முக்கோணமாக நிறுத்தி அதை எரிய விட்டு, அதைச்சுற்றி ஹிந்தி சினிமா பாடல்களுக்கு ஆடினார்கள்.  கேக், சமோசா, பாணிபூரி, பேல்பூரி போன்றவை சாப்பிடக் கிடைத்தன. ஆக பொங்கல் தவிர மற்ற விஷயங்களோடு பொங்கலைக் கொண்டாடினோம். 












Tuesday, January 14, 2020

எதிர்பாராத வி.ஐ.பி.மீட்!

எதிர்பாராத வி.ஐ.பி.மீட்!


திரு.ககன்தீப் சிங் பேடியோடு கட்டுரையாசிரியர்

சனிக்கிழமை நான் ஒரு வேலையாக வெளியில் சென்றிருந்தபொழுது செல்போன் அழைப்பு. "துக்ளக் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன், அதில் வரும் வி.ஐ.பி. மீட் பகுதிக்காக தமிழக அரசு செகரட்டரி திரு.ககன்தீப் சிங் பேடி அவர்களோடு உரையாட வேண்டும். உங்களுக்கு விவசாயத்தில் ஈடுபாடு உண்டா?" என்று கேட்டார்கள். அடிப்படையில் நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவள், அதனால் கலந்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.  என் மகனும் ஒப்புதல் அளிக்க, ஞாயிறு எங்கள் காலனியில் நடந்த சங்கராந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, இரவு பேருந்தைப் பிடித்து சென்னை வந்தேன்.

மதியம் 1:30க்கு கோட்டையில் இருக்கும் வேளாண்துறை அலுவலகத்திற்கு வந்து விடுங்கள் என்றார்கள். நான் அங்கு செல்லும் பொழுது மணி 1:15. ககன் தீப் அலுவலகத்தில் ஏற்கனவே ஒருவர் மட்டும் வந்திருந்தார். நான் சென்ற பிறகு மற்றவர்களும் வந்தார்கள். எங்களுக்கு அங்கே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை முடித்துக்கொண்டு, திரு.ககன்தீப் அவர்களை சந்திக்கச் சென்றோம்.

எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வேறொரு பெண்மணி பாண்டிச்சேரியிலருந்து வந்திருந்தார். "இதற்காக வெளியூரியிலிருந்து
வந்திருக்கிறார்களா? என்று அவர் கேட்டதும், துக்ளக் நிருபர், என்னை சுட்டிக்காட்டி "அவங்க பெங்களூரிலிருந்து வந்திருக்கிறார்கள், வெளி மாநிலம்.." என்றார்.  பிறகு உரையாடல் தொடங்கியது.   நாங்கள் என்னவெல்லாம் கேட்டோம், அதற்கு அவர் என்ன பதில் கூறினார் என்பதை நீங்கள் அடுத்த வார துக்ளக்கில் படிக்கலாம்.  இந்த சந்திப்பில் என்னைக் கவர்ந்த விஷயங்களை மட்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பஞ்சாபை சேர்ந்த திரு.ககன்தீப் சிங் சிறு வயதிலிருந்தே ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தாராம். அதற்கு ஆசிரியர்களாக இருந்த தன் பெற்றோர்களும், தன் ஆசிரியர்களும் காரணம் என்றார். பிளஸ் டூ சி.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் ராங்க் வாங்கிய அவருக்கு பொறியியல், மருத்துவம் இரண்டிலுமே சீட் கிடைத்தாலும், ஐ.ஏ.எஸ். படிப்பதற்கு பொறியியல் படிப்பதே உதவும் என்பதால் அதை  தேர்ந்தெடுத்தாராம்.  பொறியியல் முடித்தும், கேம்பஸ் தேர்வில் மிகச்சிறந்த நிறுவனங்களில் தேர்வானாலும், அவைகளை ஏற்றுக் கொள்ளாமல் இந்தியன் ரயில்வே சர்வீஸின் பொறியியல் பிரிவில் பணிக்குச் சேர்ந்தாராம். அங்கிருந்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றாராம். "என்னுடைய நண்பர்கள் பலர் மில்லியர்களாகவும், பில்லியனர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் ஒரு ஐ.ஏ.அஸ். அதிகாரியாக பணி புரிவதில் கிடைக்கும் நிறைவு வேறு எதிலும் கிடைக்காது, ஐயாம் ஹாப்பி" என்றார்.

தமிழ் சற்று கொச்சையாக இருந்தாலும், ள், ல், நெடில், குறில் போன்றவைகளை உச்சரிப்பதில் தடுமாற்றம் இருந்தாலும் நன்றாகப் பேசினார்.  ஆப்(app) என்று சொல்லாமல் செயலி என்றதும், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசியதும் வியப்பாக இருந்தது.  ஆரம்பத்திலிருந்தே தமிழ் நாட்டில்தான் பணிபுரி கிறாராம்.  அவருடைய குழந்தைகள் பள்ளியில் முன்றாவது மொழியாக தேர்ந்தெடுத்தது தமிழ்தான் என்றார்.  இவருடைய தந்தை திருக்குறளை பஞ்சாபியில் மொழி பெயர்த்திருக்கிறாராம்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு உதவுவதற்காக 'உழவன்' என்றொரு செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறதாம். இதன் மூலம் விவசாயி தனக்குத் தேவையான பல விஷயங்களைப் பெற முடியுமாம். உதாரணமாக ஒரு விவசாயிக்கு உரம் தேவையென்றால் அது எங்கே கிடைக்கும்? என்ன விலை? அந்த கடை செயல்படும் நேரங்கள், அந்த வியாபாரியின் தொடர்பு எண் போன்றவை கிடைக்குமாம்.  "இதைப் போன்ற பல தொழில் நுட்பங்களை தமிழக விவசாயிகள் உடனே ஏற்றுக் கொள்கிறார்கள். மற்ற மாநிலங்களில் அரசாங்கம் கூவி கூவி அழைத்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை" என்றார்.

எனக்கு இரண்டு கேள்விகள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. முதல் கேள்வி சோலார் பவர் பேனல்கள் அமைப்பது , அதற்கு அரசாங்கம் விவசாயிகளுக்கு அளிக்கும் மான்யம் பற்றியது. இரண்டாவது கேள்வி கூட்டுப் பண்ணை பற்றியது. இரண்டு கேள்விகளையும் எக்ஸலெண்ட் கொஸ்டின் என்று பாராட்டிய அவர், "உங்களுக்கு விவசாயம் பற்றித் தெரியுமா? என்று கேட்டார். "நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வருபவள், இப்போதும் என் சகோதரர் மற்றும் உறவினர்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   என் சகோதரரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டேன்"என்றேன்.

சொட்டு நீர்ப் பாசனத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பது தன்னுடைய தீவிர ஈடுபாடு உள்ள துறை என்றார். அதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைககள் ஆச்சர்யப்படுத்துகின்றன. தமிழக விவசாயிகள் பற்றிய எல்லா விவரங்களும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். தன்னுடைய ஐ பேடில் அதை இயக்கியும் காட்டினார். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில், குறிப்பிட்ட வார்டில், குறிப்பிட்ட கிராமத்தில் எத்தனை விவசாயிகள் எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்கிறார்கள்? அதில் கிணறு இருந்தும் எத்தனை பேர் சொட்டு  நீர்ப்பாசனத்தை மேற்கொள்ளவில்லை? போன்ற விவரங்களை ஒரு தட்டலில் பெற முடிகிறது. இதைக் கொண்டு அவர் ஏன் சொட்டு நீர்ப் பாசனத்தை மேற்கொள்ளவில்லை? என்று அவரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்களாம்.

இந்த சந்திப்பு என்னைப் பொருத்தவரை ஒரு ஐ ஓபனராக இருந்தது. அரசைப் பற்றியும், நிர்வாக இயந்திரத்தைப் பற்றியும் நான் கொண்டிருந்த எண்ணம் மாறியது. துக்ளக்கிற்கு நன்றி. இன்று பொன்விழா ஆண்டு கொண்டாட இருக்கும் துக்ளக் பத்திரிகைக்கு என்னுடைய வாழ்த்துகள்!








Sunday, January 12, 2020

தர்பார்(திரைப்பட விமர்சனம்)

தர்பார்


இந்த படத்திற்கு என்ன விமர்சனம் எழுதுவது? ரஜினியை முன்னிறுத்தி ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார். அதில்  நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி, அனிருத், நயன்தாரா என்று பலரும் அங்கம் வகித்திருக்கிறார்கள்.

சும்மா சொல்லக்கூடாது ரஜினி அசத்துகிறார். எழுபது வயதா இந்த மனிதருக்கு என்று நம்பவே முடியவில்லை.

நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் நிவேதா தாமஸ். (பாபநாசத்தில் கமலின் மூத்த மகளாக வந்தவராமே?) யோகி பாபு முதல் பாதியில் ரஜினியை கலாய்த்து கலகலப்பூட்டுகிறார். இடைவேளைக்குப் பிறகு என்ட்ரி கொடுக்கும் சுனில் ஷெட்டி பெரிதாக செய்யப் போகிறார் என்று நினைக்கிறோம். ம்ஹும்!

காதில் பஞ்சு வைத்துக் கொண்டால் தேவலாம் போல் அனிருத்தின் இசை அலறுகிறது. ஆனால் இந்த படத்திற்கு இது தேவைதான், இல்லாவிட்டால் எடுபடாது என்கிறார்கள். பாடல்கள் என்று ஏதோ வருகிறது. அவற்றின் வரிகள் காதில் நுழைந்தால்தானே மனதில் நுழையும்.

திருமண வயதில் பெண்ணை வைத்துக் கொண்டிருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நயன்தாராவின் இமேஜுக்கு சரி படாது என்பதாலோ என்னவோ, ரஜினிக்கு நயன் ஜோடிதான், ஆனால் ஜோடி இல்லை என்பது போல் அமைத்திருக்கிறார்கள்.  ஆனால் ஒரு பாடலில் ரஜினிக்கு இணையாக ஸ்டைல் காட்டி தான் சூப்பர் ஸ்டாரினி என்று நிரூபித்திருக்கிறார். அடுத்த படத்தில் ரஜினி ஜோடி இல்லாமல், அல்லது, தன் வயதிற்கேற்ற ஜோடியோடு நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

போலீஸ், அதுவும் கமிஷனர் என்கிறார்கள் தலை முடியை ட்ரிம் பண்ணிக்கொள்ள வேண்டாமா? க்ளீன் ஷேவ்டாக இருக்க வேண்டாமா? ரஜினி சிறையில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன் கொடுப்பது வில்லனின் நண்பருக்கு எப்படி தெரிய வந்தது?  என்ற கேள்விகள் எல்லாம், வீட்டில் வந்து உட்கார்ந்து யோசிக்கும் பொழுதுதான் தோன்றுகிறது. தியேட்டரில் எதுவும் தோன்றவில்லை. வெளியே வரும்பொழுது 'சும்மா கிழி' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

குப்பத்து ராஜா என்று ஒரு ரஜினி படம் எழுபதுகளின் இறுதியில் வந்தது. டி.ஆர்.ராமண்ணா இயக்கம். அந்த படத்திற்கு குமுதத்தில் 'என்னவோ நினைச்சுகிட்டு உள்ளே போனோம், எதையோ கலக்கி கொடுத்தாங்க, எல்லாம் மறந்து விட்டது' என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படத்திற்கும் அதேதான். புதிய மொந்தையில் பழைய கள்ளாக இருக்கலாம். இருந்து விட்டு போகட்டுமே,  செம போதை!


 










Saturday, January 11, 2020

மாட்சிமை பொருந்திய சுல்தான் காபூஸ்

மாட்சிமை பொருந்திய சுல்தான் காபூஸ்

ஓமான் நாட்டின் அரசரான மாட்சிமை பொருந்திய சுல்தான் காபூஸ் அவர்கள் மறைந்து விட்டார் என்னும் செய்தியை படித்த பொழுது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. 

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலத்தில் அக்கறை காட்டியவர். ஓமான் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் அங்கு மற்ற மதத்தவர்களுக்கும் பாதுகாப்பும், வரையறுக்கப்பட்ட சுதந்திரமும் இருந்தது. 

ஓமானில் விநாயக சதுர்தியிலிருந்து ஆரம்பித்து இந்து மத பண்டிகைகள் அனைத்தும் விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் மற்ற மதத்தினர்களும் தங்கள் தங்கள் பண்டிகைகளை கொண்டாடலாம். ஸ்வாமி சின்மயானந்தா, பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி உட்பட பல இந்து மத ஆன்மீக பெரியோர்கள் அங்கு வருகை தந்திருக்கின்றனர். அது மட்டுமல்ல அந்த நாட்டில் மினிஸ்ட்ரி ஆஃப் ஹிந்து எண்டோமென்ட் உண்டு. சுல்தான் காபூஸ் ஒரு உண்மையான செகுலரிஸ்ட்! 

பெரும்பாலும் சலாலாவில் வசித்த அவர் மஸ்கட் வரும் பொழுதெல்லாம் எந்தவிதமான போக்குவரத்து கெடுபிடியும் இல்லாமல் அவர் செல்லும்
பாதையில் மட்டும்  கொஞ்ச நேரம் போக்குவரத்து நிறுத்தப்படுமே ஒழிய மக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. தன் நாட்டு மக்களை கல்வி அறிவில் முன்னேற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது.   

இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஓமானுக்கு வருகை புரிந்த பொழுது அவருடைய மாணவனாக இவர் இருந்ததால், தான் ஒரு அரசர் என்று கூட நினைக்காமல் அவர் வந்த விமானத்திற்குள் சென்று அவரை வரவேற்று, அவர் அமருவதற்காக தன் கார் கதவை திறந்து விட்டதோடு, தானே அந்த காரை 
ஓட்டியும் சென்றார்.  சாதாரணமாக அரசியல் பிரமுகர்கள் வருகை தரும் பொழுது  அந்த நாட்டின் தலைவர்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள். அந்த மரபுகளை அவர் பின்பற்றாததற்கான காரணத்தை அவரிடம் கேட்டபொழுது, "திரு.சங்கர் தயாள் சர்மா என்னுடைய ஆசிரியர். அவரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். ஒரு மாணவனாக என் ஆசிரியருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதையைத்தான் நான் செய்தேன்" என்று கூறினார். எவ்வளவு எளிமை!

1990, ஆகஸ்டில் சதாம் ஹுசைன் குவைட்டை கைப்பற்றி அதன் விளைவாக வளைகுடா போர் மூண்ட பொழுது, மக்கள் அச்சத்தில் சாமான்களை வாங்கி பதுக்க ஆரம்பித்தார்கள். சூப்பர் மார்கெட்டுகள் அசுர வேகத்தில் காலியாகின, காய்கறிகள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டது. எல்லாம் ஒரே ஒரு நாள்தான். அடுத்த நாளே, மக்கள் அச்சப்பட தேவையேயில்லை, எல்லாம் கிடைக்கும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாணை வந்தது. இயல்பு வாழ்க்கை உடனே திரும்பியது. கோனு புயலால் பாதிக்கப்பட்ட பாலங்கள், சாலைகள் போன்றவை மிக விரைவாக சரி செய்யப்பட்டன. நாட்டு முன்னேற்றத்தின் மீதும், மக்கள் நலனின் மீதும் அக்கறை கொண்ட நிஜமான தலைவர். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.  




Sunday, January 5, 2020

திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை

திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை 




பாவை நோன்பு நோற்பது நல்ல கணவனை அடையவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும்தான். தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்ட  மாணிக்கவாசகர், தனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று இறைவனிடம் நிபந்தனை விதிக்கிறார்.

இப்போது பரவலாக ஒரு பேச்சு என்னவென்றால் பெண்கள் திருமணத்திற்கு நிறைய கண்டீஷன்கள் போடுகிறார்கள் என்பது. ஆனால் நம் நாட்டில் அந்தக் காலத்திலேயே நிபந்தனை விதித்து திருமணம் செய்து கொண்ட பெண்களை நாம் குமார சம்பவத்திலும், மகாபாரதத்திலும் பார்த்திருக்கிறோம்.

இங்கே திருவெம்பாவை பெண் என்ன நிபந்தனை விதிக்கிறாள்? மணமகளை கைபிடித்து இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் தாரை வார்த்தல், அல்லது கைத்தலம் தருதல் என்னும் சடங்கினை நினைத்தால் அவளுக்கு அச்சமாக இருக்கிறதாம். வார்த்தையை கவனியுங்கள் 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்னும் அங்கம் பழம் சொற் புதுக்கும் எம் அச்சத்தால்.." என்கிறாள். நல்ல கணவனை அடைய வேண்டும் என்று நோன்பிருக்கும் பெண் திருமணத்தை நினைத்து அச்சப்படுவாளா? என்னும் கேள்வி இங்கே வருகிறது. என்னுடைய பெண்ணை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று தாரை வார்த்து கொடுப்பதை ஏன் பழம் சொல் என்கிறார்? ஏனென்றால் காலம் காலமாக இதைச் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மிகவும் பழமையான வேத மந்திரங்களை ஓதித்தான்  திருமண சடங்குகளைச் செய்வது பழக்கம்.
அதனால்தான் அந்த சொற்களை கேட்கும் பொழுது அவளுக்கு அச்சம் வருகிறது.  ஒரு சிவ பக்தனின் தோள்களைத்தான் நான் தழுவிக்கொள்வேன், சிவ பக்தனுக்கே அடிமையாக சேவை செய்வேன். இந்த பரிசை மட்டும் எனக்கு அளித்து விடுவதாக நீ உறுதி கூறினால் சூரியன் எங்கே உதித்தாலும் எனக்கு கவலை இல்லை. என்று தீர்மானமாக கடவுளிடம் வரம் கேட்கும் அந்தப் பெண்ணின் பக்தியும், திடமும், உறுதியும் என்னை வியக்க வைக்கும். 

உன் கையிற் பிள்ளை  உனக்கே அடைக்கலாமென்(று)
அங்கப் பழஞ் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம்  கேள்
எம்கொங்கை நின்னபரல்லாதார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல்  பகலென்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்

Tuesday, December 31, 2019

என்னைக் கவர்ந்த திருப்பாவை எல்லே இளம் கிளியே ...

என்னைக் கவர்ந்த திருப்பாவை 
எல்லே இளம் கிளியே ...





திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம், "எல்லே இளங்கிளியே... " என்று துவங்கும் இந்த பாடல். பாவை நோன்பு நோற்க ஒவ்வொரு பெண்ணாக எழுப்பி அழைத்து வரும் ஆண்டாள் மற்றும் அவள் தோழிகளுக்கும்  இன்னும் எழுந்து வராமல் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் நடக்கும் உரையாடலை அப்படியே பாடலாக்கி இருக்கிறாள்
  
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

வாசலில் நிற்கும் பெண்கள்,"இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்"?  என்று கேட்க, "சில்லென்று பேச வேண்டாம், வந்து விட்டேன்" என்கிறாள் உள்ளே இருக்கும் பெண். வார்த்தையை கவனியுங்கள், "சில்"லென்று அழைக்க வேண்டாம்" என்கிறாள்.. சாதாரணமாக கோபமாக பேசுவதை "சுள்" என்று பேசுவது என்றுதான் சொல்வோம். ஆனால் குளிரான மார்கழி மாதத்தில் அதிகாலையில் "சுள்" என்று பேசுவதை விட, "சில்" என்று பேசுவதுதானே பொறுக்க முடியாமல் இருக்கும்?

வா.நி.பெ.: உன்னுடைய வாய் சவடால் எங்களுக்குத் தெரியும் (தெரியாதா ? என்பது உட் கிடை)அடுத்து வரும்   'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'  என்னும் இந்த இரண்டு வரிகளும் மிக முக்கியமானவை.

"என்னை வாய் சவடால் என்று கூறும் நீங்கள் மட்டும் என்ன?, சரி அப்படியே இருக்கட்டும்" இதுதான் சண்டையை வளர்த்தாமல், சமாதானமாக போகும் வைணவ கோட்பாட்டை விளக்குகிறது.

வா.நி.பெ.: சரி, வேறு எதையும் பற்றி எண்ணாமல் சீக்கிரம் கிளம்பேன்..

உ.இரு.பெ.: என்னை விரட்டுகிறீர்களே, மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?  - இதுதானே, நம்முடைய வழக்கம். நம்மை யாராவது ஒரு நல்ல செயலுக்கு தூண்டும் பொழுது, நான் மட்டும்தான் கிடைத்தேனா? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்பதுதானே நம் பழக்கம்? 

வா.நி.பெ.: எல்லாரும் வந்தாச்சு, சந்தேகம் இருந்தால் வந்து எண்ணிக்கொள்..

குவலய பீடம் என்னும் யானையை கொன்றவனும், தீயவர்களை அழிக்கக் கூடியவனுமாகிய, மாயவனை பாட வாராய் என்று முடியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் வைணவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகளை வலியுறுத்துவதால் இது மிக முக்கியமான பாசுரம்(அத்தனை விரிவாக நாம் பார்க்கவில்லை). பாடல் வடிவில் ஒரு ஓரங்க நாடகத்தையே நம் கண் முன் நிறுத்தும் ஆண்டாளின் திறமை மனதை கொள்ளை கொள்கிறது! 

Saturday, December 28, 2019

என்ன என்ன வார்த்தைகளோ...?

என்ன என்ன வார்த்தைகளோ...?

என்னுடைய சென்ற பதிவில் காத்திருப்பதைப் பற்றி எழுதும் பொழுது சதாசிவ ப்ருமேந்திரரைப்பற்றி எழுதியிருந்தேன். "பசிக்கிறது சாப்பாடு போடு" என்று கேட்ட அவரிடம் அவருடைய தாய், "பத்துநிமிடம் பொறுத்துக் கொள்" என்று கூறிய வார்த்தை ஏற்படுத்திய தாக்கத்தையும் அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும் சிந்தித்த பொழுது, வேறு சில மகான்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு வார்த்தை, அல்லது ஒரு வாக்கியம் ஏற்படுத்திய மாற்றங்கள் நினைவுக்கு வந்தன.

சதாசிவ ப்ருமேந்திரரிடமே தொடங்கலாம். மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான புலவராக சதாசிவம் இருந்த பொழுது, தமிழ் நாட்டிலிருந்து வரும் புலவர்களுக்கு ஒரு தலைவலியாக விளங்குகிறார். மைசூர் மகாராஜாவை சந்தித்து, அவரிடம் தங்கள் புலமையை காட்டி, பரிசுகள் பெறலாம் என்று நோக்கத்தோடு வரும் புலவர்களை மெச்சி அரசன் பரிசு கொடுக்க முன் வந்தாலும், அங்கிருக்கும் சதாசிவம் அவர்கள் இயற்றிய செய்யுளில்  குற்றம் கண்டு பிடித்து, கேள்விகள் கேட்டு, பரிசுகள் பெறவொட்டாமல் செய்து விடுகிறார். இதனால் எரிச்சலடைந்த புலவர்கள், அப்போதைய காமகோடி பீடாதிபதியிடம் சென்று, "இந்த சதாசிவத்தால் எங்கள் பிழைப்பில் மண் விழுகிறது. அரசன் பரிசு கொடுக்க தயாராக இருந்தாலும், இவன் குறுக்கே பேசி எங்களுக்கு அது கிடைக்காமல் செய்து விடுகிறான்"  என்று குற்றம் சொல்கிறார்கள். பீடாதிபதி சதாசிவம் அவர்களை அழைத்து," உன்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாதா?" என்று கேட்கிறார். குருவின் அந்த கேள்வியை அவருடைய கட்டளையாக பாவித்து அன்றிலிருந்து மௌன விரதத்தை மேற்கொள்கிறார். வாயால் மட்டுமல்லாமல் மனதாலும் பேசாமல், மந்திரத்தை மட்டும் ஜபித்தபடி இருக்க, அது அவருக்கு சித்தியாகிறது.



திருச்சுழியில் பிறந்து, மதுரையில் வாழ்ந்த வெங்கடரமணன் என்னும் அந்த சிறுவனுக்கு பதிமூன்று வயதாகும் பொழுது அவனுடைய பக்கத்து வீட்டுக்காரர் இறந்து விடுகிறார். மரணம் என்றால் என்ன? என்னும் கேள்வி அவனுக்குள் பிறக்கிறது. அப்பொழுது அவன் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர், "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்று கூறியதை கேட்ட அந்த நொடியில், தான் திருவண்ணாமலை செல்ல தீர்மானித்து விடுகிறான். திருவண்ணாமலை எங்கு இருக்கிறது? அதற்கு எப்படி செல்ல வேண்டும்?  என்பது எதுவும் தெரியாத அந்த குழந்தை விழுப்புரம் வரை ரயிலில் வந்து, அங்கிருந்து கால்நடையாகவே திருவண்ணாமலையை அடைந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து, ஓடிப்போய், அந்த லிங்கத்தை,"அப்பா,வந்துட்டேன்ப்பா" என்று கட்டிக் கொண்டதாம்.  அந்த சிறுவனைத்தான் பகவான் என்றும், ரமண மகரிஷி என்றும் உலகம் கொண்டாடுகிறது. அவரை செலுத்தியது உறவினர் கூறிய "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்னும் வாசகம்.



அதே திருவண்ணாமலையில் இசை வேளாளர் மரபில் பிறந்த அவன் ஆணழகன், இசையிலும், தாளத்திலும் விற்பன்னன். பெண்கள் மீது அவனுக்கும், அவன் மீது பெண்களுக்கும் மோகம் அதிகம். இளமை, செல்வம் இரண்டும் இருக்கும் வரை உல்லாசத்திற்கு குறைவில்லை. இரண்டும் குறைந்து, நோயும் வந்தவுடன் அவனை விரும்பிய அதே பெண்கள் அவனை புறக்கணிக்கிறார்கள். இதனால் மனம் வெதும்பும் அவனிடம் அவன் சகோதரி,"பெண் சுகத்திற்குத்தானே ஏங்குகிறாய்? நானும் ஒரு பெண்தான், என்னிடம் தணித்துக் கொள் உன் வேட்கையை" என்று கூற, அதிர்ந்து போகும் அவன், தன்னை வெறுத்து, உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்து அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் வெள்ளாள கோபுரத்தின் மேலேறி, அதிலிருந்து குதித்து உயிரை விட துணிந்த பொழுது, முருகப் பெருமானால் காப்பாற்றப் பட்டு அருணகிரிநாதராக மலர்ந்தது நாம் அறிந்ததுதானே.

கஞ்சக்கருமியாக இருந்த பட்டினத்தாரை மாற்றியது அவருடைய மகனாக வந்த சிவ பெருமான் ஓலை நறுக்கில் எழுதி அனுப்பிய, "காதறுந்த  ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்னும் வாசகம்.

குயவரான அவர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டிலே அழகான மனைவி இருந்தாலும் மற்ற பெண்களை நாடுவதிலும் அதிக விருப்பம் கொண்டவர். ஒரு நாள் வேறொரு பெண்ணோடு இருந்து விட்டு வீட்டிற்க்கு வரும் அவரிடம் அவர் மனைவி கோபமாக,"எம்மைத் தீண்டாதே திருநீலகண்டம்" என்று சிவன் மீது ஆணையிட்டு கூறுகிறாள். அவள் என்னைத் தீண்டாதே என்று கூறியிருந்தால் தன்னை மட்டும் இனிமேல் தீண்டக்கூடாது என்று எடுத்துக் கொள்ளலாம், ஆனால், எம்மை என்று பன்மையில் கூறியதால் பெண்கள் யாரையுமே தீண்டக் கூடாது என்று அவள் கூறியிருப்பதாக கொண்டு அன்று முதல் பிரும்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு திருநீலகண்ட நாயனாராக உருவெடுக்கிறார்.

இதே போல வேறொருவரையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது அவர் மனைவி கூறிய வார்த்தைதான். மனைவி மீது அதீத காதல் அவருக்கு. ஒரு நாள் கூட, அல்லது ஒரு இரவு கூட மனைவியை பிரிந்து இருக்க முடியாது. ஒரு முறை மனைவி அவருடைய பெற்றோர்களில் ஒருவருடைய திதிக்காக பிறந்த வீடு சென்றிருக்கிறார். அன்று இரவு இவர் மனைவியைத்  தேடிக்கொண்டு செல்கிறார். வழியில் ஒரு ஆற்றினைத் தாண்ட வேண்டும், நதியில் ஏதோ மிதக்கிறது,அதை மரக்கட்டை என்று நினைத்து நதியில் மிதக்கும் பிணத்தை பற்றிக்கொண்டு கடக்கிறார். அர்த்த ராத்திரியில் கதவைத்தட்டி மற்றவர்களை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து, ஓட்டிலிருந்து தொங்கும் பாம்பினை மரத்தின் விழுது என்று கருதி, அதை பற்றிக் கொண்டு மேல் ஏறி, ஓட்டினை பிரித்து உள்ளே குதிக்கிறார். அவரைக்  கண்ட அவர் மனைவிக்கு மிகுந்த கோபம் வந்து விடுகிறது. "சீ! ஒரு நாள் கூடவா உங்களால் நான் இல்லாமல் இருக்க முடியாது? அழியக்கூடிய இந்த உடலின் மேல் அப்படி என்ன விருப்பம்? இந்த பற்றினை பரம்பொருளான ராமன் மீது வைக்கக்கூடாதா?" என்ற அவளின் கேள்விதான் அவருடைய அகக்கண்களை திறக்கிறது.  ராம நாமத்தை விடாமல் ஜபித்து, ராமாயணத்தை ஹிந்தியில் ராம சரித மானஸ் என்னும் காப்பியமாக நமக்கு கொடுத்த துளசிதாஸரின் வாழ்க்கையை மாற்றியது மனைவியின் வசனங்கள்தான்.

மகான்களின் வாழ்க்கையில்தான் இம்மாதிரி நடக்குமா? இல்லை சாதாரண மனிதர்கள் வாழ்க்கையிலும் இம்மாதிரி சம்பவங்கள் நடந்து அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடலாம். அந்த இளம் வக்கீலுக்கு அதுதான் நிகழ்ந்தது. நாடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக தலைகாட்டிக் கொண்டிருந்தார். ஒரு முறை நண்பர்களோடு காரில் வந்து கொண்டிருந்த பொழுது அவர் அப்போதைய பத்திரிகைகளை கேலி செய்து ஏதோ கூறியிருக்கிறார். உடனே அவர் நண்பர் ஒருவர்,"எல்லோரையும் கிண்டல் செய்கிறாய். கேலி செய்வது எளிது.  இந்த அம்சங்கள் இல்லாமல் ஒரு பத்திரிகை ஆரம்பித்து, உன்னால் வெற்றிகரமாக நடத்த முடியுமா?" என்று கேட்டிட்டிருக்கிறார்.
"அப்படி நடத்தி காண்பித்தால் என்ன தருவாய்? "
"ஐம்பது ரூபாய் தருகிறேன்"
"நான் நடத்தி காண்பிக்கிறேன்" என்று நண்பரிடம் சவால் விட்டு ஐம்பது ரூபாய்க்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை  ஐம்பதாவது ஆண்டான பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்திரிகை எது என்று யூகித்திருப்பீர்களே.. ஆமாம், துக்ளக் தான் அந்த பத்திரிகை.













Tuesday, December 24, 2019

மசாலா சாட் - 14

மசாலா சாட் - 14

இந்த முறை என்ன பதிவிடலாம் என்று யோசித்த பொழுது இரண்டு பேர் அதற்கு வழி காட்டினார்கள். முதலில் திரு. வெங்கட், அவர் தன் 17,டிசம்பர் பதிவில் இனி நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழக தினமாக கொண்டாட தமிழக அரசு முடிவு  செய்திருப்பதை  குறிப்பிட்டிருந்தார். எனக்கு என்னவோ அது தேவையில்லாத செயல் என்று தோன்றுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளை 'மெட்ராஸ் டே'  என்று கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட பொழுது மெட்ராஸ் ராஜதானி என்றழைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் நாட்டில் தமிழகம்(அப்போதைய சென்னை), கர்னாடகா(அப்போதைய மைசூர்), கேரளா, ஆந்திரா எல்லாமே இணைந்திருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது  ஆந்திரா, கர்நாடகா, போன்றவை தமிழகத்திலிருந்து பிரிந்து புது மாநிலமாக உருவானதால் நவம்பர் ஒன்றாம் தேதியை அந்தந்த மாநிலங்கள் கொண்டாடுவதில் ஒரு பொருள் உண்டு. நாம் அப்படியேதானே இருக்கிறோம்? எதற்கு தமிழ் நாடு தினம்? ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். "தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு உலக தொலைக்காட்சியில் முதன் முதலாக..."என்று ஏதாவதொரு போணியாகத திரைப்படத்தைப்  பார்க்கலாம். இதைத்தவிர வேறு என்ன லாபம்?  என்று யாராவது கூறுங்களேன்.



அதன் பிறகு சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் தன் 'வெண்டைக்காய் பிட்லை' பதிவில் காத்திருப்பதை பற்றி எழுதியிருந்த விஷயம் என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது.

காத்திருத்தலோடு மிகவும் சம்பந்தப்பட்டது காதல். காதலைப் பற்றி பாடியவர்கள் எல்லோரும் காத்திருத்தலைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள் பாரதி உட்பட.  பாலகுமாரனின்
உனக்கென்ன சாமி, பூதம்
கோவில் பூஜை
ஆயிரம் ஆயிரம்
வலப்பக்கத்து மணலை
இடப்பக்கம் இரைத்திரைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே!
நாளையேனும் மறக்காமல் வா
என்னும் புதுக்கவிதை பெரிதும் கொண்டாடப்பட்ட ஒன்று.

இந்த அவஸ்தை எல்லாம் வேண்டாம் என்று துறவறம் பூண்ட ஒருவர் உண்டு. அவர் இளைஞராக இருந்த பொழுது ஒரு நாள் தன் அம்மாவிடம்,"பசிக்கிறது அம்மா, சாதம் போடு" என்றார். அவர் அம்மா," இப்பொழுதுதான் சாதத்தை வடித்து இறக்கியிருக்கிறேன், சாதம் உலைப்புர வேண்டும்,ஒரு பத்து நிமிடம் காத்திரு" என்கிறாள். இந்த வார்த்தைகள் அவருள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. " எனக்கு இப்போது பசிக்கிறது, சாப்பிட வேண்டும், ஆனால் அம்மாவோ பத்து நிமிடம் காத்திரு என்கிறாள், நான் இந்த லோகாயுத வாழ்க்கையில் தொடர்ந்து இருந்தேன் என்றால் எத்தனை விஷயங்களுக்கு எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?" என்று நினைத்த அவர் வீட்டை துறந்து சென்று விடுகிறார். அவர்தான் சதாசிவ ப்ருமேந்திரர் ஆக பரிணமித்தார் .



நம்முடைய புராணத்தில் காத்திருப்பிற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
கடோபநிஷத் பிறந்ததே இந்த காத்திருப்பால்தானே? ஒரு ரிஷி குமாரனாக பிறந்த நசிகேதஸ் தன்னுடைய தந்தை அவர் செய்த யாகத்தில் பால் வற்றிய பசு போன்ற உபயோகம் அற்ற பொருள்களை தானம் செய்வதை பார்த்து, அவரிடம், "எதற்காக இந்த தானங்கள்?" என்று கேட்கிறான். அவர் "நாம் வேண்டியதைப் பெற" என்கிறார். என்னை யாருக்கு தானம் கொடுக்கப் போகிறீர்கள்?" என்று மீண்டும் மீண்டும் கேட்கிறான். எரிச்சல் அடைந்த அவர்,"உன்னை எமனுக்கு தானம் கொடுக்கிறேன்" என்று கூறி விடுகிறார். நசிகேதஸ் அவர் தந்தையை வற்புறுத்தி தன்னை எமனுக்கு தானம் கொடுக்கச் செய்கிறான்.  அவனுடைய தந்தை அப்படியே செய்ய, அவன் எமலோகம் சேர்ந்து விடுகிறான். அவனுடைய ஆயுள் முடியாததால், அவனை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றனர். அவனோ,தான் எமனை காணாமல் போக மாட்டேன் என்று எமனுடைய அரண்மனை வாசலிலேயே காத்திருக்கிறான். மூன்று நாட்கள் காத்திருந்த பின்னரே எமனுக்கு இந்த விஷயம் தெரிகிறது. ஒரு அந்தணச் சிறுவனை மூன்று நாட்கள் காக்க வைத்து விட்டோமே என்று பதறி ஓடி வரும் எமதர்ம ராஜா அவனுக்கு மூன்று வரங்கள் தர முன் வருகிறான். ஆனால் நசிகேதஸோ, இக லோக சுகங்களைத்தாண்டி ஆன்மா என்பது என்ன? மரணம் என்றால் என்ன? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே ஆர்வம் காட்டி அதை தெரிந்து கொள்கிறான். எமன் நசிகேதஸுக்கு செய்த உபதேசங்களே கடோபநிஷத் ஆகும். 


காத்திருந்து பயனடைந்த இரண்டு ராமாயண கதா பாத்திரங்கள் அகலிகையும், சபரியும். அகலிகையாவது தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறாள். சபரிக்கோ ராமன் யார் என்று தெரியாது, தன்னுடைய குருவின் வாக்கை நம்பி ராமன் ஒரு நாள் நிச்சயம் வருவான் என்று  காத்திருந்த அவளுடைய குரு பக்தியும், அசையாத நம்பிக்கையும் காத்திருத்தல் என்பதற்கு முழுமையாக நியாயம் செய்கின்றன.

இதற்கு மாறாக தன் கணவனால் தன்னிடம் அளிக்கப்பட்ட முட்டை பொரியும் வரை காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு அதை உடைத்து விடுகிறாள்  காஷ்யபரின் மனைவி வினதை. அதனால் அதிலிருந்து வெளி வந்த அருணன்(சூரிய பகவானின் தேரோட்டி) என்னும் பறவை ஊனமாக பிறக்கிறது. தன் தாயாரின் அவசர புத்தியே இதற்கு காரணம் என்று கோபம் கொண்ட அருணன் அடிமையாக போகும்படி தன் தாயை சபிக்கிறார். அதன் விளைவாகவே காஷ்யபரின் மற்றொரு மனைவியாகிய கத்ருவுக்கு அடிமையாகிறாள் வினதை.


சிவன் கோவில்களில் சிவ பெருமானுக்கு முன்  அமர்ந்திருக்கும் நந்தி கூட காத்திருப்பதைத்தான் குறிக்கிறது என்பார்கள். ஜீவாத்மாவைக் குறிக்கும் நந்தி பரமாத்மாவோடு ஒன்றும் நோக்கத்தோடு ஒருமுகப்பட்ட சிந்தனையோடு காத்திருப்பதாக சொல்வதுண்டு.

நம் புராணங்களில் தவம் புரிபவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் புரிந்தார்கள் என்று வருவது கூட, ஒரு நல்ல விஷயத்திற்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறதோ?

இவை அத்தனையையும் சொல்லிவிட்டு 'THEY ALSO SERVE WHO STAND AND WAIT' என்னும் பாரடைஸ் லாஸ்டில் வரும் மில்டனின் புகழ் பெற்ற வாசகத்தை சொல்லாவிட்டால் இந்த பதிவு முடிவு பெறாது.