கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 3, 2024

மத்யமர் கதைகள் - சுஜாதா

இன்று சுஜாதாவின் பிறந்த நாளாம். அவருடைய மத்யமர் கதைகளைப்பற்றி பார்க்கலாம்


சுஜாதாவின் சிக்னேச்சர் இலக்கிய படைப்பு என்று 'மத்யமர்' கதைகளையும், 'ஸ்ரீரங்கத்து தேவதைகளையும்' கூறலாம்.

மத்யமர் என்பதற்கு பொருளாதார அடிப்படையை கருத்தில் கொள்ளாமல், அவர்கள் மனப்பான்மையை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கதைகள்.

"இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே உண்டு. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள். பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்கு தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.

பக்தி,காதல், பரிவு, பாசம்,தியாகம், நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும், அவசரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். சமூகம் வாசல் கதவை தட்டுவதை கேட்காதவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு, மத்யமர். என்று முன்னுரையில் கூறியிருப்பார்.

இதில் பெரும்பான்மையான கதைகளில் பெண்களின் பொறுமையும்,  தியாகமும்,  சுயநலமும் சுஜாதாவுக்கே உரிய நுணுக்கத்தோடு வெளிப்பட்டிருக்கின்றன. 
இவற்றில் எனக்கு பரிசு, அறிவுரை போன்ற கதைகளோடு 'தாய்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் இரண்டு கதைகளில் தாய்-2 என்னும் கதை பிடித்தது. 

முதல் கதையான 'ஒரு திருமண ஏற்பாடு' கதையில் அமெரிக்காவில் வசிக்கும் மகனுக்கு இந்தியாவில் வரன் தேடும் ஐயங்கார் பெற்றோர்கள்.  

ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, பதில் வந்தவற்றில் ஒன்றிர்க்கு  பையன் ஓகே சொல்ல, பெண் பார்க்க கிளம்புகிறார்கள். அதை சுஜாதா எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்

'பல நாட்கள் கிளப்பாமல் ஷெட்டில் வைத்திருந்த காருக்கு கேனில் பெட்ரோல் வாங்கி ஊற்றி, கார்பரேட் துடைத்து மாட்டி, ஆடி ஆடி  அடையாறிலிருந்து சென்றார்கள்:))

பெண்ணின் தாயார் தலைக்கு டை போட்டுக் கொண்டு, லாக்கரில் நகைகளை எடுத்து மாட்டிக் கொண்டாள்.

நரசிம்மன் புத்தக அலமாரியில் ஹெரால்ட் ராபின்சன்களை எடுத்து விட்டு ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்.'

பிள்ளையின் பெற்றோர்களான ராமநாராயணனும், கஸ்தூரியும் பெண் வீட்டிற்கு வந்ததும் அவர்களை குழைந்து வரவேற்கிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள்.

"ஏன் இவ்வளவு லேட்டாயிடுத்து?  அட்ரஸ் கண்டுபிடிக்க முடியலையா?"
என்று நரசிம்மன் கேட்க, கஸ்தூரி,"இல்லை, வழியில் கார் நின்னு போயிடுத்து. இதை குடுத்துட்டு வேற புது கார் வாங்கணும்னு பாக்கறோம், அதுக்கு இன்னும் வேள வரல" என்கிறாள்.

புதுக்காரா? என்பது போல ராமநாராயணன் பார்க்க, அதை கவனிக்காமல் "ஷூவை அவிழ்த்துடுங்கோ" என்கிறாள்.

'அவர் ஷூவை அவிழ்த்து விட்டு சாக்ஸ் ஓட்டைகளோடு உள்ளே நுழைந்தார். அவருடைய சாக்ஸ் வாடைக்கு உள்ளே ஜுடி குலைத்தது' என்று அப்பட்டமான மிடில்க்ளாஸை நகைச்சுவையோடு அறிமுகப்படுத்துகிறார்.

கதையின் இறுதியில் இரண்டு குடும்பங்களுக்கும் பிடித்துப்போய், திருமணத்தை நிச்சயித்து விடுகிறார்கள். "சிம்பிள் மேரேஜ் போதும். எங்களுக்கு கும்பல் அதிகம் வராது, உட்லண்ட்ஸில் வைத்துக் கொள்ளலாம்" என்றெல்லாம் பேசி விட்டு, வீடு திரும்பும் பொழுது, ராமநாராயணன் மனைவியிடம்," அதை அவர்களிடம் சொல்ல வேண்டாமா" என்று கேட்கிறார்.
"எதை?"
"அமெரிக்காவில் உன் பிள்ளை ஒரு நீக்ரோவை கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் கழித்து டைவர்ஸ் பண்ணியதை"
"நீங்க பேசாம இருங்கோ, அது முடிஞ்சு போன கதை"

அதே சமயத்தில் பெண் வீட்டில் உரையாடல் இப்படி செல்வதாக கதையை முடித்திருப்பார்
"இதை விட நல்ல சம்பந்தம் நமக்கு கிடைக்காது. நந்தினி ஒத்துப்பாளா?"
"அமெரிக்கானா ஒத்துப்பா"
" ஒம் பொண்ணு ஒரு பஞ்சாபி பையனோடு ஒருமாதம்.."
"நீங்க சும்மா இருங்கோ, அது முடிஞ்சு போன கதை"

பரிசு கதையில்  பத்திரிகை ஒன்றில் ஸ்லோகன் எழுதியதற்காக டில்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கு விமானத்தில் பயணம், ஸ்டார் ஹோட்டல்களில் தங்குதல் போன்றவற்றை தம்பிக்கு கிடைத்திருக்கும் வேலைக்கு காஷன் டெபாஸிட் கட்டவும், அம்மாவின் அறுவை சிகிச்சைக்காகவும் துறந்து, அதற்கு பதிலாக பணமாக வாங்கி வந்து விட்டதாக கணவன் கூறியதை "அடுத்த முறை கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம்" என்று பூர்ணிமா ஏற்றுக் கொள்ளும்பொழுது நமக்கே மனது பாரமாகி விடுகிறது. டில்லி யாத்திரைக்கு அவள் தயாராவதை சாங்கோபாங்கமாக விவரித்திருப்பார்.

'அறிவுரை'யில் நியாயமாக இருந்து எதையும் சேர்க்க முடியாத அப்பா, அவரைப் போலவே நியாயமாக, லஞ்சம் வாங்காமல் இருப்பதால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மகன்.  ஒரு பெரிய தொகை லஞ்சமாக ஆசை காட்டப் படும் பொழுது, அதை பெற்றுக்கொள்ள வற்புறுத்தும் மனைவி, அவனுடைய சான்றான்மை இரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிப்புடன், தந்தையிடம் அறிவுரை கேட்க வருகிறான்.

வாழ்நாள் முழுவதும் ஒரு பைசா லஞ்சம் வாங்காத அப்பா, "லஞ்சம் வருதுன்னா வாங்கிடு" என்கிறார்.
"என்னப்பா சொல்றீங்க?" என்று மகன் அதிர்ச்சி அடைய,
"ஆமாண்டா, லஞ்சம் வாங்காமல் நான் என்னத்தை கண்டேன்? நகையை வித்து, பரம்பரை வீட்டை வித்து, புதுசா கட்டின வீட்டை முடிக்க முடியாம ஒழுகுது. ஒங்கம்மாவுக்கு வைத்தியம் பார்க்க முடியல.. இத்தனை பொண்ணுங்க, பசங்க இருந்தும் யாரும் சீந்தல.. நீயே கடைசியா என்ன எப்போ பாக்க வந்த? மூணு வருஷம்? நான் லஞ்சம் வாங்கி கையில் காசு வெச்சிருந்தா பசங்களும், பொண்ணுங்களும் இப்படி உதாசீனம் பண்ணுவாங்களா? என் நிலமை உனக்கு வராம இருக்கணும்னா உன் பொண்டாட்டி சொல்றது சரி.  லஞ்சம் வாங்கிடு" சொல்லிவிட்டு கிழவர் திரும்பி படுத்துக் கொண்டார். என்று முடிகிறது.

லஞ்சம் வாங்கச் சொல்லும் சுஜாதாவின் கதை என்று வெளியான காலத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளான கதை.

நீலப்புடவை ரோஜாப்பூ

இதே கருத்தில் அவர் ஏற்கனவே ஒரு கதை எழுதி, அதை ரேவதி, அமெரிக்காவை நிலைக்களனாக கொண்டு 'மித்ர my friend' என்று படமாக எடுத்திருந்தார். 

திருமணமாகி பதினெட்டு வருடங்கள் கழிந்து, குழந்தைகளும் இல்லாத ஒரு தம்பதியரிடையே  உரையாடல் வெகுவாக குறைந்து, ஒரு திரை விழுந்து விடுகிறது. அந்த வெறுமையை பேனா நட்பு மூலம் நிரப்பிக் கொள்ள முயற்சிக்கும் அவனை வினு என்ற பெயரில் கடிதம் போடும் பெண் கவர்கிறாள். நேரில் சந்திக்கக் கூடாது என்று எச்சரிக்கும் ஏஜென்சியை மீறி சந்திக்கச் செல்லும் அவனுக்கு கிடைப்பது எப்படிப்பட்ட அதிர்ச்சி!

சாட்சி என்னும் கதையில் அதிகாலையில் நூறு கிராம் கடுகு வாங்க பாய் கடைக்குச் செல்லும் சரளா, பக்கத்து பெட்டிக்கடையில் அமர்ந்திருக்கும் வாசுவை, பைக்கில் வந்த இரு இளைஞர்களில் ஒருவன் பிடித்துக் கொள்ள, மற்றவன் கத்தியால் சதக்கென்று விலாவில் குத்தி சாக அடிப்பதை பார்த்து பயந்து வீட்டிற்கு ஓடி வருகிறாள்.

கொலை செய்தவன் பெயர் கிருஷ்ணா என்பதும், அவன் பக்கத்து வீட்டிற்கு வருகிறவன், அரசியல் செல்வாக்குள்ள ரௌடி என்பதால் வீட்டு மனிதர்கள் எல்லோரும் சரளாவிடம் போலீஸ் கேட்டால், "எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடு" என்று படித்து படித்து சொல்லியும், போலீஸிடம் தான் பார்த்த அத்தனையையும் ஒரு வரி பிசகாமல் சொல்லி விடுகிறாள்.

'ஜாதி இரண்டொழிய' என்னும் கதையில் ரிசர்வேஷன் பொருளாதார அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார்.

தாய் - 2
வயதான, மாதம் ரூ.600/- மட்டும் ஃபேமிலி பென்ஷன் வாங்கும் ஒரு விதவைத் தாயை யார் வைத்துக் கொள்வது? என்று போட்டி போடும் இரண்டு மருமகள்கள், அவர்களை சமாளிக்கத் திணறும் மகன்கள்.

பெரியவன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் அம்மாவை ஒன்றரை மாதங்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. வெளிநாட்டிற்கு டெபுடேஷன் என்று காரணம் காட்டுகிறான்.

இரண்டாவது மகனுக்கு அண்ணா செய்வது தவறுதான்  என்றாலும், அதற்காக தாயை நடுத்தெருவில் நிறுத்தி விட முடியுமா என்று தோன்றுகிறது. ஆனால் மனைவி மசிய மறுக்கிறாள்.

எப்படியோ பேசிப் பார்த்தும் மனைவி வழிக்கு வராததால், அம்மா வழி உறவினரான வெங்கடேசன் மாமாவை பஞ்சாயத்துக்கு அழைக்கிறான்.

அவரை தனியாக வீட்டில் விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு கோவிலுக்குச் சென்று விட்டது இவனுக்கு கோபமூட்டுகிறது.

"உள்ளே, ஃபிளாஸ்கில் உனக்கு காபி வைத்திருக்கிறாளாம்" என்றார் மாமா சகஜமாக.

கை,கால், முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு மாமாவிடம்,"சித்ரா ஏதாவது சொன்னாளா?" என்று கேட்க,

சொன்னாள், சுதாகர் லெட்டர் மேல லெட்டர், ஃபோன் மேல ஃபோன் போடறானாம் அம்மாவை அழைச்சிண்டு போக"

"ஆமாம் மாமா, இவ ஓத்துக்க மாட்டேங்கறா. எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னே தெரியல. எங்கம்மா பாவம் எங்க போவா? சுதாகர் பண்றதும் சரியில்ல, ஏதாவது சாக்கு சொல்லி அனுப்பிடறான். நான், குழந்தைகள், அம்மா எல்லாரையும் சமாளிக்க இவ திணற்ரா"

"தினா உன்னுடைய பிரச்சனை இப்போ இந்த தேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கு.  இது ட்ரான்சிஷன் ப்ராப்ளம். கூட்டுக் குடும்பங்கள் சிதைஞ்சு போச்சு, வீடுகள் சின்னதாயுடுத்து, மனிதர்களுக்கு சுயநலம் அதிகமாகி விட்டது. பல காரணங்கள்" என்று சோஷியாலஜியை அலசி விட்டு, திவாகரின் அம்மாவுக்கு இத்தனை நாட்களாக லிட்டிகேஷனில் இருந்த  பிறந்து வீட்டு சொத்தில்  தீர்ப்பு வந்து விட்டது என்றும், அதன் மூலம் எட்டு லட்சம் கிடைக்கும், அதை வைத்துக் கொண்டு திருச்சியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, சமையலுக்கும், உதவிக்கும் ஆள் போட்டுக் கொண்டு தனியாக இருக்கலாம், சுதாகர்  டெபுடேஷனில் வெளிநாடு செல்லலாம், திவாகர் நிம்மதியாக இருக்கலாம் என்கிறார்.

"இந்த விஷயம் சுதாகருக்குத் தெரியுமா?" என்று கேட்க,"நான் இன்னும் சுதாகருக்கு லெட்டர் போடல, நேத்திக்குதானே தீர்ப்பு வந்தது. ஒரு வேளை நரசு சொல்லியிருக்கலாம், அவன் டெல்லியில்தான் இருக்கான்" என்கிறார்.

"நான் நாளைக்கு சுதாகருக்கு விவரமா லெட்டர் போடறேன். நீங்க சொன்னது நல்ல ஐடியா" என்று திவாகர் கூற, இவர்கள் இருவரும் பேசுவதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த திவாகர் மனைவி சித்ரா,"என்ன நல்ல ஐடியா?" என்கிறாள்.

அன்று இரவே  திவாகர் மவுண்ட்ரோடு தபாலாபீசுக்குச் சென்று அண்ணனுக்கு,

Starting by grand trunk express tomorrow to take mother Divakar
என்று தந்தி கொடுத்துவிட்டு திரும்புகிறான்.

Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar

என்று அவனுக்கு வீட்டில் ஒரு தந்தி காத்திருக்கிறது.

சுஜாதாவுக்கே உரிய நச் முடிவு!

Saturday, April 27, 2024

ரா.கி.ரங்கராஜனின் சிறுகதையும், கத்தரிக்காய் மோர்குழம்பும், நானும்

ரா.கி.ரங்கராஜனின் சிறுகதையும், கத்தரிக்காய் மோர்குழம்பும், நானும்:

நான் ஒன்பது வயதிலிருந்தே தொடர் கதைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன். எங்கள் வீட்டில் ஆனந்த விகடன் வாங்குவார்கள், எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஐயங்கார் மாமி வீட்டில் கல்கி வாங்குவார்கள், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் பிச்சா பாட்டி என்று ஒருவர் இருந்தார். அவர்கள் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். பிச்சா பாட்டியின் மாப்பிள்ளை ரமணி என்பவருக்கு அத்தனை சின்ன வயதில் நான் புத்தகங்களை அவ்வளவு சீரியஸாக படித்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது போல.  ஞாயிரன்று  குமுதம் வந்ததும், அவர், “பானு குமுதம் வந்தாச்சு" என்று அழைப்பார். அவர்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறும் காலையில் மசால் தோசை செய்வார்கள். சில நாட்கள் எனக்கும் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று மசால் தோசை சாப்பிடக் கூடாது  என்று அம்மா திட்டுவாள்.

ஒரு வாரம் குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் கதை ஒன்று படித்தேன். அதில் பத்து வயதான பாலு என்னும் சிறுவனின் தந்தை இறந்துவிட, அவனுடைய அம்மா ஒரு உறவினர் வீட்டில் இருக்க, அவனை அவன் சித்தப்பா அழைத்துக் கொண்டு வருவார். அவன் வந்ததும் அவனுடைய சித்தி வேலைக்காரியை நிறுத்தி விடுவாள். அதனால் வீட்டு வேலைகள் எல்லாம் பாலுவின் சின்னத் தலையில் இறங்கின என்று ரா.கி.ரா எழுதியிருப்பார். ஒரு நாள் அவர்கள் வீட்டில் கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்ய வேண்டி வரும். பாலு அதற்காக கத்தரிக்காயை நறுக்கும் பொழுது, தன் விரலை நறுக்கிக் கொண்டு விடுவான். அதோடு மோர்க்குழம்பிற்காக தேங்காய் மற்றும் மிளகாய் வற்றலை அம்மியில் அரைக்கும் பொழுது, வெட்டுப்பட்ட விரல் எரியும். அதை பொறுத்துக் கொண்டு பிறகு கைக்கு கட்டுப் போட்டுக் கொள்வான். அடுத்த நாள் அவனுடைய அம்மா வருவாள். அம்மாவிற்கு எதிரே மிகவும் பாசமாக இருப்பது போல சித்தி நடிப்பாள். அம்மாவை பஸ் ஏற்றிவிட செல்லும்பொழுது, தன் கை காயம் அம்மா கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று தன் கையை ட்ரெளசர் பாக்கெட்டில் விட்டு மறைத்துக் கொள்வான். அவனிடம் அம்மா, பாடங்களில் எத்தனை மார்க் வாங்குகிறான் என்று கேட்பாள், தான் வாங்கிய மார்க்குகளை கூறிய பாலு படிக்க முடிந்திருந்தால் இன்னும்  அதிகம் மார்க்குகள் வாங்கியிருப்பேன் என்று நினைத்துக் கொள்வான். இப்படிச் செல்லும் அந்தக் கதை என்னை அதிகம் பாதித்து விட்டது.

வீட்டிற்கு வந்தால், சாப்பாட்டு நேரம். சாப்பிட உட்காரச் சொன்னார்கள். எதேச்சையாக எங்கள் வீட்டிலும் அன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் சமையல் காரமாக இருக்கும். காரமான அந்தக் குழம்பை சாப்பிட்ட எனக்கு, இதை சாப்பிடும் பொழுதே இவ்வளவு எரிகிறதே, பாவம் அந்த பாலு, வெட்டுப்பட்ட விரலோடு, இதற்காக மிளகாயை அரைத்திருக்கிறான், அவனுக்கு எப்படி எரிந்திருக்கும்? என்று தோன்றியது, அவ்வளவுதான், கண்களிலிருந்து பொல பொலவென்று நீர் கொட்டியது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மாமா, “ஏன் அழற?” என்றார். அம்மாவும்,”ஏண்டி அழற?” என்றார். கதை படித்துவிட்டு அழுகிறேன் என்றால் அவ்வளவுதான், திட்டு கிடைக்கும், ஏற்கனவே எப்போது பார்த்தாலும் கதை புத்தகம் படிக்கிறேன் என்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். அதனால் எதுவும் பதில் சொல்லவில்லை.

சமையலில் காரத்தை குறைக்க வேண்டும் என்று பாட்டியிடம் வலியுறுத்திக் கொண்டிருந்த மாமா, மோர்குழம்பின் காரம்தான் என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது என்று நினைத்து, “குழம்பு காரமா இருக்கா?” என்று கேட்டதும் நான் ஆமாம் என்று தலை ஆட்டி விட்டேன். அவ்வளவுதான், “குழந்தை கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு இப்படியா காரமாக சமைப்பீர்கள்?” என்று பாட்டியை திட்ட ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு பல வருடங்களுக்கு கத்தரிக்காய் மோர்க்குழம்பு சாப்பிட நேரும் பொழுதெல்லாம் எனக்கு அந்த பாலுவின் நினைவு வந்து தொண்டை அடைக்கும்.  

Friday, April 19, 2024

பெருகி வரும் நுகர்வோர் கலாசாரம்

பெருகி வரும் 

நுகர்வோர் கலாசாரம்

வேடிக்கையாக, ‘அம்மா வேணுமா? அப்பா வேணுமா? என்றுதான் தெருவில் விற்றுக்கொண்டு வரவில்லை, மற்றபடி எல்லாம் கிடைக்கிறது” என்பார்கள். இப்போது சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும் சில பொருள்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

அன்று என் மகன் குட்டி குட்டியான பாட்டில்கள் அடங்கிய பாக்(Pack)ஒன்றை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்தான். என்ன என்று கேட்டதற்கு ப்ரோ ப்யோடிக் ஃபெர்மென்டெட் மில்க், “குட் ஃபார் கட் ஹெல்த்” என்றான் சரி ஏதோ  என்று விட்டு விட்டேன்.

சில நாட்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு பெண்மணி ப்ரோ பயோடிக் ஃபெர்மென்டெட் கர்ட் ரைஸ் என்று ஒரு ரெசிபி எழுதியிருந்தார். அதன் செய்முறை:

சாதத்தை வெடித்து, ஆற வைத்து, பின்னர் அதில் சுத்தமான பச்சைத் தண்ணீரை ஊற்றி, ஆறிலிருந்து, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது அது நொதித்திருக்கும். அதில் உப்பு போட்டு, நன்றாக பிசைந்து, அதில் தயிர் அல்லது மோர் சேர்த்து வேண்டுமானால் கடுகு தாளிக்கலாம். சுவை அள்ளும். இந்த ப்ரோ பயோடிக் ரைஸ் வைட்டமின் பி1. பி12, கால்ஷியம்,பொட்டாஷியம் எல்லாம் நிறைந்த சத்தான உணவு. குடலுக்குமிக மிக நல்லது, அசிடிடி தொல்லை இருப்பவர்கள் இதை உட்கொள்ள, அசிடிடி, ரிஃபெக்ளெக்ஸ் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாமாம்.

அடங்கொக்கமக்கா! இதை நாங்கள் பழையது என்போம். கோடை விடுமுறையில் இதுதான் எங்கள் ப்ரேக்ஃபாஸ்ட். காலையில் குழந்தைகளுக்கு பழையது போடுவதற்காகவே சாதம் நிறைய வடிப்பார்கள். எங்கள் வீடுகளில் பழையது மேடை என்றே ஒன்று இருக்கும். இப்போ அது ப்ரோ ப்யோடிக் ஃபெர்மென்டெட் ரைசாம்!, அதை காசு கொடுத்து வாங்கணுமாம்.

இதைவிட இன்னொரு கொடுமை, நான் அரிசி களைந்த நீரை(கழுநீர்) வீணாக்காமல் செடிகளுக்கு விடுவேன். இதை கவனித்த என் மருமகள்,  இது கூந்தலுக்கு கூட நல்லது” என்றாள். நான், "கழுநீரால் கூந்தலை அலம்ப முடியுமா என்று தெரியாது, நாங்கள் சாதம் வடித்த கஞ்சியை தலைக்கு தேய்த்துக் கொள்வோம், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்” என்றேன். அதற்கு என் மருமகள், “கஞ்சியெல்லாம் நம்மால் வீட்டில் வடிக்க முடியாது, என்பதால் இப்போது அது ஒரு பேஸ்டாக விற்பனைக்கு வந்திருக்கிறது” என்றாள். சரிதான்!


இன்னும் என்னவெல்லாம் வந்திருக்கின்றன? சமைப்பதற்கு கூட மெஷின் வந்து விட்டதே. என்னதான் மெஷினை வாங்கி வீட்டில் வைத்தாலும் அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருக்கும், நாம் ஸ்விகியில் வரவழைப்போம். அப்படித்தானே?

Friday, March 15, 2024

உள்ளுணர்வு தரும் எச்சரிக்கை

உள்ளுணர்வு தரும் எச்சரிக்கை

சில சமயங்களில் நாம் சில விஷயங்களைத் தொடங்கும் பொழுது நம் உள்ளுணர்வு ‘ஜாக்கிரதை’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ எச்சரிக்கை கொடுக்கும். அதை மதிக்க வேண்டும். வெளியே செல்லும் பொழுது குடை எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளுணர்வு சொல்லும், மதிக்காமல் சென்றால் மழையில் மாட்டிக் கொள்வோம்.

என் மகளின் வளைகாப்பிற்கு பொன் காப்பு, வெள்ளி காப்பு வாங்க ஜி.ஆர்.டி. சென்றிருந்தோம். அந்த காப்புகளை கையில் வாங்கும் பொழுது, “இதை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று மனதில் தோன்றியது. “எத்தனையோ முறை நகைகள் வாங்கியிருக்கிறோம், இப்படி தோன்றியதில்லையே?” என்று நினைத்துக் கொண்டேன். பொன் காப்பு,வெள்ளி காப்பு இருந்த சிறிய நகைப்பெட்டியை என் தோள் பைக்குள் வைத்துக் கொண்டு, பையை மாட்டிக் கொண்டேன். பையின் ஜிப்பை திறக்கும் ஹூக், பின் பக்கம் இருந்தது.

அங்கிருந்து வளையல்கள் ஆர்டர் கொடுப்பத்ற்காக ரங்கநாதன் தெரு சென்றோம். அங்கு வளையல்களை செலக்ட் செய்துவிட்டு, மறு நாள் மண்டபத்திற்கு வரச்சொல்லி, அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். அந்த கடையில் கார்டில் பே பண்ணும் வசதி இல்லாததால், என் கணவர் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுக்க சென்றார்.

என் சகோதரியிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டியிருந்ததால், சகோதரியை செல்ஃபோனில் அழைத்தேன். கடைக்குள் சிக்னல் சரியாக கிடைக்காததால் வெளியே வந்து அவளோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நலைந்து பெண்கள் வந்து, கடையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஹேர் கிளிப்புகளை கிளறி, “இது எடுக்கலாம், இது வேண்டாம்..” என்றெல்லாம் சளசளவென்று பேசியபடியே தேடினார்கள். நான் என் சகோதரியோடு ஃபோனில் உரையாடிக்கொண்டே அவர்களை கவனித்தேன். அப்போது என் தோள் பைக்குள் யாரோ கை விட்டு அசைப்பது போல உணர்ந்தேன். “ஏய் யாரது..?” என்று கேட்டபடியே திரும்பியதும், என் பின்னால் நின்று கொண்டு என் தோள் பைக்குள் கையை விட்டு துழாவிக் கொண்டிருந்த ஒரு பெண் கையை எடுத்து விட்டு சட்டென்று நகர்ந்தாள். அவளோடு கிளிப்புகளை பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் நகர்ந்து விட்டார்கள், அவர்கள் எல்லோரும் ஒரு குழுவாக வந்து, சிலர் ஏதோ வாங்குவது போல பேச்சு கொடுத்து என் கவனத்தை கலைத்திருக்கிறார்கள். நான் செல் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தது, என் பையின் ஜிப்பின் ஹூக் திறக்க சௌகரியமாக பின் புறம் இருந்தது எல்லாம் அவர்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஆனால் அதை முழுமையாக திறக்க முடியவில்லை, மேலும் தோள் பை பெரியதாகவும், நீளமாகவும் இருந்ததால் அவள் கைக்கு எதுவும் சிக்கவில்லை. பொன்காப்பு, வெள்ளிகாப்பு பத்திரமாக இருந்ததை உறுதி செய்து கொண்டதும்தான் நிம்மதியானது. வீட்டிற்கு போய் ஸ்வாமிக்கு முன்னால் வைத்து, நன்றி சொல்லி, நமஸ்கரித்தேன்.

சமீபத்தில்(டிசம்பர் 23) பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் ஓர்ப்படியை பார்க்க நானும், என் நாத்தனார் பெண்ணும் ஈரோடு சென்றோம். என் நாத்தனார் மகள் அங்கிருந்து அப்படியே பெங்களூர் திரும்பி விட்டாள். நான் சென்னை சென்று விட்டு திரும்பலாம் என்று அதற்கேற்றார்போல் டிக்கெட் வாங்கியிருந்தேன். ஆனால் மனசுக்குள் சென்னை செல்ல வேண்டாம், பெங்களூரே திரும்பி விடலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதை மதிக்காமல் சென்னைக்குச் சென்று, அந்த மழை, வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு, போக நினைத்த இடங்களுக்கு  போக முடியாமல், பார்க்க விரும்பியவர்களை பார்க்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பும் பொழுது, இறங்கும் அவசரத்தில் என் செல்ஃபோனை தவற விட்டு… இப்படி ஏகப்பட்ட கந்தரகோளங்கள்! இப்போது சொல்லுங்கள் உள்ளுணர்வு தரும் எச்சரிக்கையை மதிக்க வேண்டுமா? வேண்டாமா?

Friday, March 8, 2024

முதல் முதலா..

முதல் முதலா..

என்னுடைய முதல் முதலா அனுபவங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு வேடிக்கையான அனுபவம் இருக்கிறது. 

எங்கள் வீட்டில் என்னுடைய கடைசி அக்கா உபவாசமெல்லாம் இருப்பாள். சங்கடஹர சதுர்த்தியன்று காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், பட்டினி கிடந்து விட்டு, ராத்திரிதான் சாப்பிடுவாள் எனக்கும், என்னுடைய மூன்றாவது அக்காவுக்கும் பட்டினி கிடக்க முடியாது.”பானு உன்னாலும், என்னாலும் பட்டினியெல்லாம் கிடக்க முடியாது. அப்படிப்பட்ட பூஜையெல்லாம் நமக்கு வேண்டாம்” என்பாள். 

ஷிர்டி பாபா பட்டினி கிடக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். என்று பாபாவை துணைக்கு அழைத்துக் கொள்வேன். எனக்கு பசியே பொறுக்காது. அப்படிப்பட்ட நான் சஷ்டியில் உபவாசம் இருப்பதால் விளையும் நன்மை பற்றி படித்து விட்டு, சஷ்டியில் உபவாசம் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது எனக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும். காலையில் கஞ்சி மட்டும் குடித்தேன். வேறு எதுவும் சாப்பிடவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக மதிய உணவு உட்கொள்ளவில்லை. மூன்று மணிக்கு பசிப்பது போல இருந்தது. அதை மற, புத்தியை வேறு எதிலாவது செலுத்து என்று மனதிற்கு ஆணையிட்டேன். நேரம் ஆக ஆக, பசி அதிகரிக்க, புத்தி முழுவதும் பசிதான் இருந்தது. ஏழு மணிக்கு முகம் சுருங்கி, அழுது விடுவேன் போல ஆகி விட்டேன். என் பெரிய அக்கா, “ஏன் என்னவோ போல இருக்கிறாய்?” என்று கேட்டார். “இன்னிக்கு சஷ்டி, விரதம் இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் ரொம்ப பசிக்கிறது” என்று சொல்லும்போதே கிட்டத்தட்ட அழுது விட்டேன். “அட பைத்தியமே! உன்னையெல்லாம் யார் உபவாசம் இருக்கச் சொன்னது? முதலில் சாப்பிடு.” என்றதும், சாப்பிட்டு விட்டேன். அப்பாடா! உயிர் வந்தது. இப்படியாக என்னுடைய முதல் உபவாசம் பாதியில் பணால் ஆனது 

Monday, February 12, 2024

கர்னாடகா யாத்திரை - 2

கர்னாடகா யாத்திரை – 2 

இடகுஞ்சி மஹாகணபதி கோவில் முன்பு


கோகர்ணத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, அடுத்த இடகுஞ்சி மஹாகனபதி கோவிலை தரிசித்துக் விட்டு முருடேஷ்வர் செல்ல வேண்டும் என்பது ஒரிஜினல் திட்டம். ஆனால், கோகர்ணத்திலிருந்து கிளம்பவே நேரமாகி விட்டதால் நேராக முருடேஷ்வர் சென்று விட்டோம். 

முருடேஷ்வர் கோவில் முகப்பு 




முருடேஷ்வர் கோவில் கோபுரம் இரவில்



முருடேஷ்வர் கோவில் கோபுரம் பகலில்

சக பயணிகள் திருமதி புவனா & திருமதி வசந்தா

பஸ்ஸிலிருந்து க்ளிக்கியது 

முருடேஷ்வர் கோவில் கோகர்ணத்தைப் போல் அவ்வளவு புராதனமானது இல்லை 500 வருட பாரம்பரியம் மட்டுமே உண்டு என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் கோகர்ணம் கோவில் தல புராணத்தோடு சம்பந்தப்பட்டிருகிறது.

சிவபெருமானிடமிருந்து பெற்று வந்த ஆத்ம லிங்கத்தை, சிறு பையனாக வந்த விநாயகர் தந்திரமாக கீழே வைத்ததும், அதை பெயர்த்தெடுக்க முயலும் ராவணன் லிங்கத்தின் மேல் இருந்த கவசங்களை கழற்றி வீசி எறிகிறான். அவை விழுந்த இடங்களுள் முருடேஷ்வரும் ஒன்று. சமீப காலத்தில், பெரிய சிவன் சிலை அமைத்த பிறகு, இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக படகு சவாரி, வாட்டர் ஸ்கீய்ங் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. கோவில் பிரும்மாண்டமாகவும், நவீனமாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் தெய்வீகத்திற்கும் குறைவில்லை. 



நாங்கள் சென்ற பொழுது அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கும் நேரம். அப்போது நடக்கும் சீவேலியை காணும் பாக்கியம் கிடைத்தது. சீவேலி முடிந்து கண்குளிற ஸ்வாமி தரிசனம் செய்து, வெளியே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆனாலும், பெரிய கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் லிஃப்டில் ஏறி பார்க்க முடியாத குறை பலருக்கு இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் கடற்கரை. ஆனால் அங்கிருந்து சிவன் சிலையின் பின் புறத்தைதான் பார்க்க முடிந்தது. நேர் தோற்றம் கிடைக்கவில்லையே என்பது என் வருத்தம். 

மறு நாள் அதிகாலையில் இடகுஞ்ஜி விநாயகரை தரிசிக்க கிளம்பினோம். பஸ்ஸை கோவிலுக்கு சற்று தொலைவிலேயே நிறுத்தி விட்டு, நடந்து செல்ல வேண்டும். கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் விஸ்தாரமாக இருந்தாலும், பிரதான கோவில் சிறியதுதான். இடம் என்றால் இடது புறம், குஞ்ஜி என்றால் தோட்டம், ஷராவதி நதிக்கு இடது புறம் அமைந்துளதால் இடகுஞ்சி என்று பெயராம். விநாயகரின் தோற்றம் வித்தியாசமாக இருக்கிறது. சாதாரணமாக விநாயகருக்கு நான்கு கரங்கள்(தும்பிக்கையை சேர்த்து ஐந்து) இருக்கும், இங்கு விநாயகருக்கு இரண்டு கரங்கள்தான். இடது கையில் மோதகமும், வலது கையில் தாமரை மலரும் ஏந்தி, நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். வாமன ரூப என்பதற்கு ஏற்ப கால்கள் குட்டையாக இருக்கின்றன. விநாயகர் மிகவும் வரப்பிரசாதியாம். இவரிடம் நாம் எதற்காக வேண்டிக் கொள்கிறோமோ அந்த காரியத்தை கட்டாயம் நிறைவேற்றிக் கொடுப்பாராம், நம் வேண்டுதல் நிறைவேறியதும், அவரை தரிசித்து, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ காணிக்கை செலுத்தினால் போதுமாம்.

நாங்கள் சென்ற நேரம் காலை அபிஷேகம் துவங்கும் நேரம். எங்கள் குழுவில் எல்லோரும் ஸ்வாமியை தரிசித்துக் கொண்டு வெளியே வந்து விட்டோம். ஒரு தம்பதியினர் மட்டும் வராததால் அவர்களுக்காக காத்திருந்த நேரத்தில் எங்களுக்கும் பால் அபிஷேகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மனம் குளிர தரிசித்தோம். 

ஹோட்டலுக்குத் திரும்பி, பகலுணவு முடித்துக் கொண்டு, கடற்கரையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கொல்லூர் நோக்கி சென்றோம். 

தல புராணம்: 

துவாபர யுகத்தின் முடிவில் கிருஷ்ணர் இந்த பூவுலகத்தை விட்டு, தன் இருப்பிடத்திற்கு திரும்ப முடிவு செய்திருப்பதை உணர்ந்த முனிவர்கள் கலியுகம் பிறக்கப் போவதை அறிந்து அச்சம் கொள்கிறார்கள். அதன் தீமைகளிலிருந்து விடுபட கிருஷ்ணரின் உதவியை நாடி, வால்கில்ய முனிவர் கர்நாடகாவின் ஷராவதி நதிக்கரையில் குஞ்சவனத்தில் யாகங்கள் செய்யத் தொடங்கினார். ஆனால் அதில் பலவிதமான தடைகள் வரத் தொடங்க நாரதரின் உதவியை நாடுகிறார். அவர் விநாயகரை வழிபடச் சொல்கிறார். வாலகில்ய முனிவரின் வேண்டுகோளை ஏற்று நாரதரும், மற்ற முனிவர்களும் சேர்ந்து தேவதீர்த்தம் என்னும் ஏரியை உருவாக்குகிறார்கள். அவர்கள் விநாயகரை துதித்து, பார்வதியிடம் விநாயகரை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறார்கள். விநாயகரும் அவர்கள் கோரிக்கையை ஏற்று, அங்கே வர இசைகிறார். அதுவே இடகுஞ்சி ஆகும். அந்த சமயத்தில் மேலும் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு விநாயக தீர்த்தம் என்று பெயரிடப்படுகிறது. விநாயகர் இன்றும் தன்னை வழிபடுவோரின் இன்னல்களை தீர்த்து வருவது கண்கூடு.

Friday, February 2, 2024

கர்நாடகா யாத்திரை

 கர்நாடகா யாத்திரை

கர்னாடகாவில் இருக்கும் சில முக்கியமான,பிரசித்தி பெற்ற கோவில்களை தரிசிக்க வேண்டும் என்பது பல நாட்கள் ஆசை. ஃபேஸ்புக்கை மேய்ந்த பொழுது, கர்நாடகா யாத்திரை அழைத்துச் செல்வதாக விளம்பரப் படுத்தியிருந்த சில ட்ராவல்ஸ்களில் திருவடி தரிசனம் என்னும் டிராவல்ஸின் அறிவிப்பு என்னைக் கவர்ந்தது. அதில் புக் பண்ணிக் கொண்டேன்.


டிசம்பர் 19 புறப்படுவதாக இருந்தது. டிசம்பரில் சென்னையில் மழை ஏற்படுத்திய பாதிப்பால் அங்கிருந்து வந்தவர்கள்(என்னைத்தவிர எல்லோரும் சென்னைவாசிகள்தான்) பயணத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்ததால், பிரயாணம் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற எல்லோரும் சென்னையிருந்து 4ஆம் தேதி மதியம் கிளம்ப, நான் பெங்களூரிலிருந்து பெலகாவி செல்லும் வேறு ஒரு ரயிலில் இரவு புறப்பட்டேன்.  எல்லோரும் ஹூப்ளியில் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் பெங்களூர் வழியாகத்தான் ஹூப்லியை அடையும். அதே ரயிலில் எனக்கும் புக் பண்ணியிருக்கலாம். அவர்கள் ரயிலும் லேட், என்னுடையது அதைவிட லேட். காலை 6:05க்கு ஹூப்ளி செல்லவேண்டிய ரயில் 7:00 மணிக்குத்தான் ஹூப்லியை அடைந்தது. அதற்குள் முன்னால் அங்கு சென்று விட்ட குழுத்தலைவர் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் எனக்கு ஃபோன் செய்து, நான் வந்து விட்டேனா என்று விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக நான் போய் சேர்ந்ததும், அவருடைய உதவியாளர், என்னிடமிருந்து பெட்டியை பிடுங்கிக் கொண்டு, ஐம்பதடி தூரத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார். இங்கு ஒரு சிறு தகவல். ஹூப்ளி ஸ்டேஷனின் நடை மேடைதான் இந்தியாவிலேயே நீளமான நடை மேடை(1505மீட்டர்). இதற்கு முன் இந்தப் பெருமையை கோரக்பூர் ரயில் நிலைய நடை மேடை பெற்றிருந்தது.


ஹூப்லியில் ஒரு ஹோட்டலில் குளித்து, உடை மாற்றி, சிற்றுண்டி(பூரி மசால், வடை, ஊத்தப்பம் சற்று காரமான சட்னி, காபி/டீ) சாப்பிட்டு விட்டு, கர்னாடகா யாத்திரையின் முதல் தலமான கோகர்ணத்தை அடைந்தோம். வழியில் மதிய உணவிற்காக நிறுத்தினார்கள். அதிலும் சாம்பார் சற்று காரமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அங்கு செல்லும்பொழுது மணி பகல் 2:30 இருக்கும். அந்த நேரத்தில் கோவிலின் நடை சாத்தியிருந்தது, மாலை 4:00 மணிக்குத்தான் திறக்கும் என்பதால், நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம்.


சக பயணி திருமதி வசந்தா




உத்தர(வடக்கு) கர்னாடகாவில் அரபிக் கடற்கரையில் அமைந்திருக்கும் இடம் கோகர்ணம். மிகவும் புராதனமான கோவில். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். பாடல் பெற்ற தலங்களில் கர்நாடகாவில் அமைந்திருக்கும் ஒரே ஒரு தலம் இது மட்டுமே. அப்பரும்,சம்பந்தரும் பாடியிருக்கிறார்கள்.


கோவில் இருக்கும் வீதியிலும், கடற்கரைக்குச் செல்லும் வழியிலும் வரிசை கட்டி நிற்கும் கடைகளில் மசாலா பொருள்களும், கலர் கலராக சாம்பிராணியும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மஹாபலேஷ்வர் கோவிலுக்குச் செல்வத்ர்கு முன்பாக ஒரு கணபதி கோவில் இருக்கிறது. அதிலிருக்கும் விநாயகர் நாம் சாதாரணமாக பார்க்கும் விநாயகரைப் போல் இல்லாமல் வித்தியாசமாக, நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதற்கான காரணத்தை அறிய வேண்டுமென்றால் தல புராணத்தை அறிய வேண்டும்.


நாலு மணிக்குத்தான் நடை திறக்கும் என்றாலும், அதற்கு முன்பே கோவில் திறக்கப்பட்டு விட்டதால், உள்ளே சென்று, வரிசையில் நின்றோம். கேரள பாணியில் அமைந்திருந்த சிறிய கோவில். கேரள கோவில்களைப் போலவே மரத்தில் ஓடுகள் வேயப்பட்ட தாழ்ந்த விதானம். சன்னிதிக்கு எதிரே இரு பக்கங்களிலும் திண்ணைகள். கருவறைக்குள் நாம் சென்றதும் ஆவுடையாருக்கு கீழே புதைந்திருக்கும் மஹாபலேஷ்வர் என்னும் ஆத்மலிங்கத்தை நம்மை தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் இந்த கோவிலின் சிறப்பு. மற்ற கோவில்களில் கருவறையில் இருக்கும் மூர்த்தங்களை பூஜாரியைத் தவிர மற்றவர்கள் தொட முடியாது. ஆனால் இங்கு எல்லோரும் பூஜிக்கலாம், தொடலாம், தொடுவதற்கு அனுமதிக்கக் காரணம், ஆத்மலிங்கம் அளவில் மிகச்சிறியது. அதை தரிசிப்பது கடினம், தொட்டுதான் உணர வேண்டும்.

ஆதி மஹாபலேஷ்வர் சன்னதி

மஹாபலேஷ்வரை தரிசனம் செய்து விட்டு, கோவிலை வலம் வரும் பொழுது, அருகிலேயே ஆதி மஹாபலேஷ்வர் என்று ஒரு சன்னிதியில் இருக்கும் சிவபெருமானை வணங்கி, நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தாமிரகௌரி என்றழைக்கப்படும் அம்பாளையும் வணங்கி, அங்கிருந்த ஒரு குளத்தை பார்தோம். அந்த குளத்தின் சிறப்பு, அங்கு இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கலாமாம். மேலும் இங்கிருக்கும் கடற்கரையில் இரவில் பைசாச ஸ்ரார்தம் என்று ஒன்றும் தேவஸ்தானதால் நடத்தப்படுமாம்.

இதற்குப் பிறகு, அருகில் இருந்த மஹாகணபதி கோவிலுக்குச் சென்று தலையில் கிரீடம் எதுவும் இல்லாமல், நின்ற கோலத்தில் காட்சி தரும் விநாயகரை வணங்கினோம். முறைப்படி வழிபடுவதாக இருந்தால் முதலில் இந்த விநாயகரைததான் முதலில் வணங்க வேண்டும்.


தல புராணம்:


சிவ பக்தையாகிய ராவணனின் தாயார், தன் மகனுக்காக பிரார்த்தித்து ஒரு சிவ லிங்கத்தை வழிபட்டு வந்தார். அவளுடைய கடுமையான பூஜைக்கு இரங்கி, சிவ பெருமான் வரம் தந்து விட்டால் தனக்கு ஆபத்தாகி விடுமோ என்று அஞ்சிய இந்திரன், அவள் பூஜித்த சிவ லிங்கத்தை கடலில் வீசி விடுகிறான். இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான தன் தாயாரிடம், தான் கைலாயத்திலிருந்தே சிவலிங்கத்தை பெற்று வருவதாக கூறி கைலாயம் செல்கிறான். கைலாச மலையை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்று விட அவன் முயலும் பொழுது சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டு நசுங்கி விடுகிறான். ஆனால் அந்த நேரத்திலும் வீணை வித்தகனான அவன் தன் நரம்புகளையே வீணையின் கம்பிகளாக்கி சாம வேதத்தை வாசிக்க, அதில் மயங்கிய சிவ பெருமான் அவன் முன் காட்சி அளித்து, அவன் வேண்டும் வரம் என்ன? என்று கேட்க, தனக்கும், தான் ஆளும் இலங்கைக்கும் அழிவு வரக்கூடாது என்றும், தன் தாயாருக்காக, சிவலிங்கமும் வேண்டுகிறான். சிவபெருமான் தன் பிராணசக்தியையே மிகச் சிறிய வடிவில் ஒரு லிங்கமாக்கி(ஆத்மலிங்கம்), அதை தலையில்தான் சுமந்து செல்ல வேண்டும் என்றும், கீழே வைத்து விட்டால் அந்த இடத்திலிருந்து எடுக்க முடியாது என்னும் இரண்டு நிபந்தனைகளோடு அவனிடம் தருகிறார்.


அவன் அந்த லிங்கத்தை சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்த தேவர்கள் கவலை கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று ஆத்மலிங்கம் ராவணனுடன் இலங்கைக்குச் செல்வதை தடுக்க வேண்டுகிறார்கள். ராவணன் திரிகால சந்தியாவந்தனத்தை தவறாமல் செய்பவன் என்பதால், தன்னுடைய சுதர்ஷன சக்கரத்தால் சூரியனை மறைத்து, அதே நேரத்தில் விநாயகரை ஒரு சிறுவன் வடிவில் ராவணன் இருக்கும் இடத்திற்கு செல்லுமாறு பணிக்கிறார். மாலை நேர சந்தியாவந்தனம் செய்ய நேரம் வந்து விட்டது ஆனால் லிங்கத்தை கீழே வைத்து விட்டால் எடுக்க முடியாது, அருகில் யாராவது இருந்தால் அவர்களிடம் கொடுத்து விட்டு, சந்தியாவந்தனம் செய்யலாமே என்று யோசிக்கும் அவன் கண்களில் சிறுவனாக வந்த விநாயகர் படுகிறார். லிங்கத்தை வாங்கிக்கொண்ட விநாயகர், “நான் மூன்று எண்ணுவதற்குள் நீ வந்து விட வேண்டும்,வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன்” என்கிறார். ராவணனும் அந்த நிபந்தனைக்கு கட்டுப்படுகிறான். ஆனால் விநாயகர் அவசர அவசரமாக எண்ணிவிட்டு, ராவணன் வராததால் லிங்கத்தை கீழே வைத்து விடுகிறார். பூமியில் பதிந்து விட்ட லிங்கத்தை ராவணன் எத்தனை பலத்தை பிரயோகித்து முயன்றும் எடுக்க இயலவில்லை. அவனுடைய முயற்சியில் அந்த இடமே பசுவின் காது வடிவிற்கு மாறியதாம். அதனால்தான் அவ்விடம் ‘கோகர்ணம்’ என்னும் பெயர் பெற்றது. கோ என்றால் பசு, கர்ணம் என்றால் காது. மிகப்பெரிய பலம் பொருந்திய லிங்கம் என்பதால் அந்த லிங்கம் மஹாபலேஷ்வர் என்னும் பெயர் பெற்றது.


தன்னை ஏமாற்றிய அந்தச் சிறுவனை துரத்திச் சென்று அவன் தலையில் ஒரு குட்டு வைக்கிறான். விநாயகர் தன் உண்மை ஸ்வரூபத்தை காட்ட, திடுக்கிட்டு அவரை குட்டிய தவறுக்கு பிராயசித்தம் செய்யும் விதமாக தன் தலையில் ரத்தம் வரும் அளவிற்கு குட்டிக் கொள்கிறான். அதனால்தான் இன்று வரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் விநாயகருக்கு முன் தலையில் குட்டிக் கொள்கிறோம்.


கோகர்ணத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு அருகில் இருக்கும் மஹாகணபதி கோவிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகருக்கு தலையில் கிரீடம் இல்லை. யானகளுக்கு இருப்பது போல நெற்றியில் இரண்டு முண்டுகளுக்கு இடையில் ஒரு பள்ளம் இருக்கிறது. அது ராவணன் குட்டியதால் ஏற்பட்டதாம்.


அம்மனின் பெயர் தாமிரகௌரி. பிரும்மாவின் கையிலிருக்கும் தாமரை மலரிலிருந்து தோன்றிய பெண் சிவபெருமானை மணந்து கொள்ள விரும்பினாள், அதற்காக தவம் செய்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு.