கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, September 17, 2018

ஒண்ணுமே புரியல உலகத்திலே..

ஒண்ணுமே புரியல உலகத்திலே..



செப்டெம்பர் 17,  தந்தை பெரியாரின் பிறந்தநாள். பெரியாரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மூட நம்பிக்கைகள் மலிந்து கிடந்த அந்த காலத்தில் விடிவெள்ளி மாதிரி அவர் தோன்றாவிட்டால் பல மாறுதல்கள் நடந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் அவை ஏன் நீடிக்கவில்லை என்று தெரியவில்லை. 

அவர் எத்தனை பிள்ளையார் சிலைகளை உடைத்தாரோ, அவைகளைப் போல பன்மடங்கு பிள்ளையார் சிலைகள்  இன்று பூஜிக்கப்படுகின்றன. அன்று நூற்றுக் கணக்கானவர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு நாத்திகம் பேசினார்கள் என்றால்,இன்று லட்சக் கணக்கானவர்கள் கருப்பு வேட்டி அணிந்து கொண்டு சபரி மலைக்குச் செல்கிறார்கள். 

எழுபதுகளில் கூட பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்களில் மிகச் சிலரே அதுவும் வயதானவர்கள் மட்டுமே கோவிலுக்குச் செல்வார்கள். இன்றோ அந்த நாட்களில் சிறிய கோவில்களில் கூட நெரிசல் தாங்க முடியவில்லை. அதுமட்டுமல்ல கிருஷ்ணபட்ச அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம், அமாவாசை,மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிரத்யங்கரா தேவிக்கு அபிஷேகம். செவ்வாய் ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கு என்று கோவில்களில் கும்பல். நேற்று கூட(16.9.18) பானு சப்தமி, மிகவும் விசேஷம் என்று வாட்ஸாப்பில் தகவல்கள் வந்தன.

சென்ற வருடம் காவேரி புஷ்கரம் என்று காவேரி பாயும் மாவட்டங்கள் விழி பிதுங்கின, இந்த வருடம் தாமிரபரணி புஷ்கரத்திற்கு ஐந்து லட்சம் பேர்களை எதிர்பார்க்கிறார்கள். நாற்பது வருடங்களுக்கு முன்பு புஷ்கரம் என்ற விஷயம் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? அதே போல இருவது வருடங்களுக்கு முன்பு அட்சயத் த்ருதியை அன்று பொன் வாங்கினால் நிறைய 
பொன் சேரும் என்பது யாருக்காவது தெரியுமா? இப்போது அன்றைக்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட வேண்டியிருக்கிறது. நகை கடையிலோ வாசலில் நிற்கும் காவலாளி நகை வாங்க வருபவர்களை,"வரிசையில் நில்லுங்கள்" என்று குச்சியால் அடிக்க வருகிறார். காலக்கொடுமையடா..!!  

1995ஆம் ஆண்டு, கும்பகோணத்தை சுற்றி இருக்கும் நவகிரக கோவிலைகளுக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். பல கோவில்களில் யாருமே இல்லை, ஆனால் இன்றோ, எல்லா கோவில்களும் பக்தர்கள் வருகையால் வழிகின்றன. எல்லா சிவன் கோவில்களும் பரிகார கோவில்களாக மாறி விட்டதில் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும், யாருமே வராமல் இருந்த கோவில்களுக்கு மக்கள் வருகை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. 

முன்பு இத்தனை ஜோதிடப் புத்தகங்கள் கிடையாது. இப்போது ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு ஜோதிடப் புத்தகம் வெளியிடுகின்றன. இஸ்லாமிய பெண் ஒருவரை ஆசிரியையாக கொண்டு கூட ஒரு ஜோதிடப் புத்தகம் வருகிறது. அதைத்தவிர குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, முன்பு அவ்வளவாக யாருக்கும்  தெரியாத அல்லது பொருப்படுத்தாத  ராகு, கேது பெயர்ச்சிகளின் பொழுது இலவச இணைப்புகள் வழங்காத பத்திரிகை இல்லை என்றே கூறலாம். அந்த நாட்களிலும் நாம் கோவில்களுக்குச் சென்றுவிட முடியாது. 

அதே போல ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்வதை ஒழித்தார்கள். இந்தியாவின் பிற மாநிலங்கள் இன்னும் ஜாதிப் பெயரை போட்டுக்கொள்ளும் பொழுது தமிழகத்தில் அதை கை விட்டிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் முன்பு இல்லாத அளவிற்கு ஜாதி சங்கங்கள் இப்போது இருக்கிறதே....??!! கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் ஜாதி சங்கங்கள் கலப்புத் திருமணம் செய்து  கொள்வதற்கு தடை விதித்திருப்பதோடு, அப்படி மீறி கலப்பு திருமணம் செய்து கொள்ளும் குடும்பங்களை ஜாதிப்ரஷ்டம் செய்கிறார்களே..??!!  தவிர ஆணவக் கொலைகளும் நிற்கவில்லை.  

ராசிபலன் சொல்லாத சேனல் கிடையாது. சன் டி.வி.யில் முதலில் நட்சத்திர பலன், பின்னர் ராசி பலன் என்று இருவிதமாக கூறுகிறார்கள். இரண்டுமே பொத்தாம் பொது என்னும் பொழுது என்ன வித்தியாசமாக சொல்லிவிடப் போகிறார்கள்?

எல்லாவற்றையும் விட என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் சன் டி.வி.யின் ஆரம்ப நாட்களில் விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் பொழுது, விநாயக சதுர்த்தி அன்று என்று கூற மாட்டார்கள்.  விடுமுறை நாளன்று என்பார்கள். இப்பொழுதோ, விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அறிவிக்கிறார்கள். அது மட்டுமல்ல, காலையில், ஆலய வழிபாடு, ஆன்மீக கதைகள், நட்சத்திரம், ராசி என்ற இரண்டின் அடிப்படையிலும் ராசி பலன், ஜெய் ஹனுமான், விநாயகர், சாயிபாபா என்று வரிசையாக தெய்வீக தொடர்கள். இவற்றில் சில காலை,மாலை என்று இரண்டு வேலைகளிலும் ஒளிபரப்பப்படும். எப்படி இவர்களுடைய பகுத்தறிவு இத்தனை சீக்கிரம் நீர்த்துப் போனது? புரியத்தான் இல்லை.

34 comments:

  1. தலைப்பு சிறப்பு. சில விஷயங்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவற்றை அப்படியே விட்டு விடுவது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட். புரியும் சில விஷயங்களையும் வெளியில் சொல்ல முடியாது. வருகைக்கு நன்றி.

      Delete
  2. ஒன்றை வேண்டாம் என்று சொல்லும்போதும், பார்க்காதே என்று சொல்லும்போதும், விட்டு விடு என்று சொல்லும்போதும்தான் அதில் ஆர்வம் அதிகம் வரும். மனித மனம்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். தவிர முழுக்க முழுக்க நாத்தீகவாதியாக இருக்க எக்கச்சக்க மனோ பலம் வேண்டும். காலமும்,சூழலும் மனிதனை பந்தாடும் பொழுது அதிலிருந்து எப்படியாவது மீண்டால் போதும் என்று தோன்றி விடும்.

      Delete
  3. இல்லை என்பவர்கள் தான், அதிகம் அதைப்பற்றி சிந்திப்பார்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், நன்றி தனபாலன்ஜி!

      Delete
  4. பக்தியாளர்கள் எண்ணிக்கை கூடியது உண்மையே... ஆனால் இறை பயம் குறைந்து விட்டதே மேடம்.

    அருமையாக அலசி இருக்கின்றீர்கள் வாழ்த்துகள். நான் எழுதி வைத்திருந்த பல விடயங்களை எழுதி விட்டீர்கள் ஆகவே எனது கேன்சல்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ஜி!..

      >>> பக்தியாளர்கள் எண்ணிக்கை கூடியது உண்மையே...
      ஆனால் இறை பயம் குறைந்து விட்டதே.. <<<

      பக்தி உடையவனுக்கெல்லாம் இறைபயம் இருக்கணும்..ன்னு அவசியமில்லை..

      ஆனால் -
      இறை பயம் உடையவனே பக்தியாளன்!...

      சரி..
      இறை பயம்... அப்படின்னா என்ன?...

      Delete
    2. தவறு செய்ய மனது உறுத்தணும், மனம் வெட்கப்பட்டால் போதுமானது குற்றங்கள் குறைந்து விடும்.

      மற்றபடி இறைவனின் உருவத்தை கண்டு பயப்படத் தேவையில்லை ஜி

      Delete
    3. சிலர் கடவுளை தாங்கள் ஆசைப்படுவதை நிறைவேற்றிக் கொடுக்கும் ஏஜெண்டாக நினைக்கிறார்கள் என்பது சோகம்தான்.
      //நான் எழுதி வைத்திருந்த பல விடயங்களை எழுதி விட்டீர்கள் ஆகவே எனது கேன்சல்.//
      நீங்கள் உங்கள் பாணியில் எழுதுங்களேன். வருகைக்கு நன்றி ஜி!

      Delete
  5. நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற
    இந்நாளைய ரெட்டை வேடதாரிகளுக்காக
    அந்நாளிலேயே அலிபாபாவும் 40 திருடர்களும்
    என்ற படத்தில் ஒரு பாட்டு எழுதி விட்டார்கள்...

    நாங்க ஆடுறதும் பாடுறதும் காசுக்கு..
    சிலர் ஆளைக்குல்லா போடுறதும் காசுக்கு..
    பலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு..
    காசுக்கு காசுக்கு!...

    அன்றைக்கு போலி நாத்திகம் பேசியதும் - காசுக்கு..
    இன்றைக்கு போலி ஆத்திகம் பேசுவதும் - காசுக்குத்தான்!...

    இந்தப் பக்கம் பெரியவர் ஒருவர் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றக் கூடாது என்பார்...

    நாலு பக்கங்களைத் தாண்டியதும் -
    ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றினால் எல்லா...
    அப்படின்னு வியாக்யானம் போட்டுருப்பாங்க!...

    இது தான் ஆன்மீகம் சொல்லிக்கிட்டு வர்ற பத்திரிக்கைகள்..

    யாரைப் பத்தியும் புறம் பேசக்கூடாது.. வள்ளுவரே சொல்லியிருக்கார்...ன்னு
    உள்ளூர் தத்துவஞானி இந்தப் பக்கம் சொல்லியிருப்பார்...

    நடுப்பக்கத்தில
    ஏடாகூடமா ஒரு படத்தைப் போட்டுட்டு
    மூனு எழுத்து நடிகை நாலு எழுத்து நடிகரோட கும்மாளம்.. ந்னு கொளுத்திப் போட்டுருப்பானுங்க!...

    இந்த மாதிரி பத்திரிக்கைகளை ஓசியில கூட படிக்கக் கூடாது...ன்னு சொன்னா யாரும் கேப்பாங்களா!...

    தொலைக்காட்சி ஆன்மீக நிகழ்வுகள் - அதைப் பற்றி பேசவே வேண்டாம்!...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! நறுக்,சுருக்கென்று பின்னூட்டம் எழுதும் துரை செல்வராஜ் சாரா இவ்வளவு நீ,,,ண் ...ட பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள்? அக்ஷர லட்சம் பெறும் வார்த்தைகள். நன்றி!

      Delete
  6. மிக விரிவான அலசல்..

    பக்தி என்பது நல்லது தான்..ஆனால் அது வியாபாரம் ஆகி போனது தான் கொடுமை..

    ReplyDelete
    Replies
    1. //பக்தி என்பது நல்லது தான்..ஆனால் அது வியாபாரம் ஆகி போனது தான் கொடுமை..// இந்த நிலை நீடித்தால் மீண்டும் நாத்தீகம் தலையெடுத்து, கொஞ்ச நாள் ஆட்டம் போடும்.

      Delete
  7. ஹைfive பானுக்கா, கில்லர்ஜி. பானுக்கா சமீப காலமாக என் மனதில் ஓடிய எண்ணங்கள்....அனைத்துமே....அதுவும் லாஸ்ட் பாரா டிட்டோ...நான் எழுத நினைத்தேன் ஆனால் வழக்கம் போல பிள்ளையயார் சுழி கூடப் போடலை.... நீங்க ரொம்ப அழகா சொல்லிட்டீங்க....சன் டிவி பார்த்து ஆச்சரியப்
    பட்டு போனேன்..

    ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க அக்கா..

    கீதா

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    நல்ல விரிவாக இன்றைய சமுதாய நிலைகளை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். உங்களது ஒவ்வொரு எழுத்துகளிலும், எங்கள் மனதிலும் அவ்வப்போது எழும் உண்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.உங்கள் பதிவை படித்துப் பார்க்கும் போது இதைக் குறித்த எண்ணங்கள், சிந்தனைகள் இன்னமும் நிறையவே விரிகின்றன. அருமையான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //உங்களது ஒவ்வொரு எழுத்துகளிலும், எங்கள் மனதிலும் அவ்வப்போது எழும் உண்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.// அப்படியா? ரொம்ப சந்தோஷம். மனம் விட்டு பாராட்டியதற்கு நன்றி!

      Delete
  9. ///ஒண்ணுமே புரியல உலகத்திலே..//

    நேக்கும்தேன்ன்ன்:))

    ReplyDelete
    Replies
    1. பூஸாருக்கு நிஜமாவே புரியலையா? என்ன வெச்சு காமெடி,கீமெடி பண்ணலையே..?

      Delete
  10. கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி காசேதான்
    கடவுளடா எப்படியும் கூறலாம்

    ReplyDelete
    Replies
    1. மக்களின் பக்தியை கேலி செய்தவர்கள், பதவியையும், சுகத்தையும் காப்பாற்றிக் கொள்ள அதையே செய்ததால், மக்களின் நம்பிக்கை அதிகமாகி விட்டதோ என்னவோ?

      Delete
  11. நாடகம் போட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள். அவ்வப்போது வேடம் கலைப்பார்கள்.
    சொல்வதெல்லாம் செய்வதில்லை. சொல்லாததைச் செய்வார்கள்.
    வசனம் பேசியே வாழ்க்கையை நடத்துபவர்கள்.
    பரிகாரம் என் இளவயதிலியே விளக்கு பூஜையுடன் ஆரம்பித்தது.
    பெண் திருமணத்துக்காகத் திருவெண்காட்டுக்குப் போய் விளக்கேற்றினோம்.

    இப்போது எல்லாமே அதீதம்.
    நல்லதொரு பதிவு பானு மா. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. //நாடகம் போட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள். அவ்வப்போது வேடம் கலைப்பார்கள்.// அவர்கள் வேடம் கலையும் பொழுது,மக்கள் பழைமைக்கே திரும்புகிரார்கள். நன்றி வல்லி அக்கா.

      Delete
  12. எந்த தாத்பரியத்தினது ஆணி வேர் சல்லி வேர் வரை நாம் அறியாததெல்லாம் மூட நம்பிக்கை தான்.

    ReplyDelete
    Replies
    1. மூட நம்பிக்கைளை ஒழிக்கிறேன் என்று கிளம்பியவர்களே அதில் மாட்டிக்கொள்வதுதான் பரிதாபம்.

      Delete
  13. நிஜம்மா பூஸாருக்கும் அரசியலுக்கும் க்ரேன் போட்டாலும் எட்டாதுக்கா :)
    அதுவும் நம்மூர் எந்த ட்ரெண்டிங் விஷயமும் அவங்களுக்கு தெரியாது :)
    நம்மூர் அரசியல் நமக்கே புரியலை பூனைக்கெங்கே விளங்கப்போகுது

    ReplyDelete
    Replies
    1. அப்படி போடுங்க ஏஞ்சல்!!! இதுதான் பூஸாருக்கு சரியான செக்!!!!!

      கீதா

      Delete
  14. முதல் செய்தி எதோ நடந்திருக்கு என்பதுவரை தெரியும் விளக்கமா செய்தி பார்க்கலை .
    fb ல இருந்திருந்தா உடனே சுட சுட நியூஸ் பார்த்திருப்பேன் :) அதையிட்டு நடக்கும் அவலத்தையும்தான் .
    ஸோ எனக்கும் முழுசா புரியலை ..நாலாம் புரியலைன்னா அப்டியே விட்ருவேன் :) இங்கேயும் atheist இருக்காங்க .ஆனானப்பட்ட atheist மார்க்கே கிறிஸ்துமஸ் கொண்டாடினார் ..
    டிவி நிகழ்ச்சி பற்றிலாம் நோ ஐடியா .எல்லாத்திலும் நல்லதை மட்டும் எடுத்துக்கிட்டு தீயதை விட்டுட்டா பிரச்னையில்லை .ஆனா ஒன்னு முழு நேர இறைநம்பிக்கையாளர்களைவிட இந்த non பிலீவர்ஸ்தான் பைபிள் கீதை குரான் ஆராய்ச்சிலாம் செய்றாங்கன்னு தோணுது .மனுஷங்க எல்லாரையும் எல்லாவற்றையும் மதிக்கும் குணத்தை வளர்த்துக்கிட்டா பிரச்னைகள் வராது

    ReplyDelete
  15. ராமாயணத்தை கேலி செய்வதற்காக படிக்க ஆரம்பித்த முத்தையாதான் கண்ணதாசனாக மாறினார். அவரைப் போல திறந்த மனதோடு படித்தால், எல்லோருக்கும் விடை கிடைக்கும். ஆனால், அரசியல்வாதிகளுக்கு நிஜமாக ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை விட, ஓட்டும், பதவியும்தான் பெரிது.

    ReplyDelete