கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 1, 2017

சென்னை - பெங்களூர் - திருச்சி - சென்னை

சென்னை - பெங்களூர் - திருச்சி - சென்னை 

சென்ற வாரம் பெங்களுர், திருச்சி என்று கொஞ்சம் அலைச்சல் வாரம். சென்னை-பெங்களூர், பெங்களூர்- திருச்சி இரண்டுமே இந்த முறை பேருந்து பயணம். ஏ.சி. ஸ்லீப்பர் கோச். போகும் பொழுது கொஞ்சம் தூங்கினேன். அதனால் கஷ்டமாக இல்லை. வரும் பொழுது தூக்கம் வரவில்லை, படிக்க புத்தகம் எதுவும் இல்லை. சம்மணமிட்டு அமர்ந்தபடி கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு வந்தேன். சும்மாயிருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது. நீண்ட நாட்களுக்கு முன்பு வாசித்த ரா.முருகனின் ஒரு சிறு கதை நினைவுக்கு வந்தது. பேச்சிலர் மேன்ஷனில் தங்கியிருக்கும் இளைஞன் ஒருவன், விடுமுறை நாள் ஒன்றின் பகல் பொழுதில்
ரூம் மேட் வெளியே சென்று விட தனியாக என்ன செய்வது என்று புரியாமல் தியானம் செய்யலாம் என்று உட்காருவான், அப்பொழுது அடுக்கடுக்காக அவனுள் எழும்பும் எண்ணங்கள்... சற்று நேரம் கழித்து கதவை திறந்து கொண்டு வரும் அறை நண்பன்,"என்னடா சும்மா உட்கார்ந்திருக்கிறாய்? தியானம் செய்வதுதானே..? என்பதோடு கதை முடியும்.

சென்னை பெங்களூர் சாலையைப் போல, பெங்களூர் திருச்சி சாலை அத்தனை நன்றாக இல்லை. நம்மை அவ்வப்பொழுது உருட்டி விடுகிறது, தூக்கி அடிக்கிறது.

திருச்சி செல்லும் போதெல்லாம் மாணிக்க விநாயகரை தரிசிக்காமல் வர மாட்டோம். பெரும்பாலும் ரெங்கநாதரையும், சில சமயங்களில் அகிலாண்டேஸ்வரியையும், சமயபுரம் மாரியம்மனையும் தரிசனம் செய்வது வழக்கம். இந்த முறை நேரம் குறைவாக இருந்த காரணத்தால் முதலில் பெரியம்மாவை பார்த்து விடலாம் என்று முடிவு செய்தோம். நீங்கள் யாரையாவது நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் குறிப்பிடுவது உலகிற்கெல்லாம் படியளக்கும் நம் ரெங்கநாயகித் தாயார்!! பெருமாள் பெரிய பெருமாளாக இருக்கும் பொழுது தாயார் பெரியம்மாதானே?

இப்போதெல்லாம் எப்போதுமே திருவரங்கம் கோவிலில் கும்பல்தான், அதிலும் அன்று வெள்ளிக்கிழமை, ஸ்ரீரங்கம் சுக்கிர க்ஷேத்திரம் அல்லவா? கும்பல் கொஞ்சம் அதிகம்தான். தாயார் சந்நிதியில் தேவை இல்லாமல் நெருக்கினார்களோ என்று தோன்றியது. ஆனாலும் நன்றாக தரிசனம் கிட்டியது.  சேவிக்க முடியுமா என்று யோசித்தோம், அங்கிருந்த வாட்ச்மேன்," மணி இப்போ 4:40தானே? ஐந்து முப்பது வரை தரிசனம் உண்டு" என்றார். ஆனாலும், மிகப் பெரிய வரிசை பயமுறுத்தியது. எனவே ரூ.250/- க்கு டிக்கெட் வாங்கி கொண்டு கொஞ்சம் வேகமாக நகர்ந்த வரிசையில் சென்று, பெருமாளை தரிசித்தோம். எப்போது ரெங்கனைப் பார்த்தது போதும் என்று திருப்தி ஏற்பட்டிருக்கிறது? பார்க்க, 
பார்க்க அலுக்காத ஆராவமுதன் அல்லவா அவன்!! 

வெளியே, இருக்கும் கடைகளில் அல்ப ஷாப்பிங்! எப்பொழுதும் சகோதரிகளில் யாராவது ஒருவர் ஒரு இரும்பு வாணலியோ, தோசை கல்லோ, கல் சட்டியோ வாங்குவோம். இந்த முறை யாரும் எதுவும் வாங்கவில்லை. ரெங்க விலாஸ் புத்தக கடையில் திருவரங்கன் உலா புத்தகத்தை பார்த்து விட்டு, அவர்கள் கார்ட் எடுத்துக் கொள்வதில்லை என்று கூறி விட்டதால் வைத்து விட்டேன். முடிந்தால் கிண்டலில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டியதுதான்.  

கார்ட் என்றதும் நினைவுக்கு வருகிறது. டீ மானிடைசேஷன் விளைவு ஸ்ரீரங்கம் கோவிலில் டிக்கெட் கவுண்டரில் 'All banks credit & debit cards accepted here' என்னும் போர்ட் பார்க்க முடிந்தது. பெங்களூர் இஸ்கான் கோவிலிலும் உண்டியல் அருகே இதே போன்ற அறிவிப்பை பார்த்தோம். பெரும்பாலான கோவில்களில் இப்போதெல்லாம் கார்டு பேமெண்ட் இருக்கிறது போலிருக்கிறது. நல்லதுதான்! 

ஆக, இந்த முறை திருச்சி விசிட் முடிந்தது. அடுத்த விசிட் எப்போது என்று தெரியவில்லை. அடுத்த விசிட்டின் பொழுது இறை அருள் இருந்தால் வை.கோ. அவர்களையும், கீதா சாம்பசிவம் அவர்களையும், ரிஷபன் அவர்களையும்(இவரை சந்திக்க வேண்டும் என்பது நீ...ண் ....ட... வருட கனவு) சந்திக்கலாம்.

Sunday, February 19, 2017

மாறிவரும் மதிப்பீடுகள் - திருமண உறவு

Thanks google for picturesமாறிவரும் மதிப்பீடுகள் - திருமண உறவு 



முகநூலில் பலரும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலவற்றை பகிர்வதால் வரும் ஆபத்துகளை பற்றி அவ்வப்பொழுது எச்சரிக்கைகள் வந்தாலும் எல்லா குடும்ப நிகழ்வுகளையும் பகிர்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கது கல்யாண நிச்சயதார்த்த புகைப்படங்கள். 

சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு நிச்சயதார்த்த புகைப்படங்கள் மிகவும் அதிர்ச்சி அளித்தன. அவை நிச்சயதார்த்த புகைப்படங்களா? அல்லது தேனிலவு புகைப்படங்களா? என்று தோன்றும் அளவிற்கு நெருக்கமான, கட்டி அணைத்தபடியும், முத்தம்கொடுப்பது போலவும்... கடவுளே! என்ன நடக்கிறது இங்கே?

இதை வீட்டில் சொன்ன பொழுது என் மகன், "எந்த காலத்தில் இருக்கிறாய் அம்மா?, இப்போதெல்லாம் என்கேஜ்மென்ட், திருமணம் போன்ற எல்லாவற்றிற்கும் டீசர் போடுகிறார்கள், இது கேண்டிட் போட்டோகிராஃபி காலம்" என்று கூறி விட்டு, அவனுடைய நண்பர், உடன் வேலை பார்ப்பவர் இவர்களின் என்கேஜ்மெண்ட் மற்றும் திருமண டீசர் வீடியோவை காண்பித்தான். இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இப்படி எல்லாம் செய்பவர்கள் கொஞ்ச காலத்தில் விவாகரத்து செய்து விடுகிறார்களே, அதுதான் கவலை அளிக்கிறது. 

மேலை நாடுகளுக்கும் நம் நாட்டிற்கும் இருக்கும் வித்தியாசம் நம் நாட்டில் திருமணம் என்பது வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வு, மணமக்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும் கூட. குறிப்பாக பெண்ணை பெற்றவர்கள். பெண் பிறந்தது முதலே அவளின் திருமணத்தை எதிர் பார்க்க தொடங்கி விடுகிறார்கள். தங்களின் பல சௌகரியங்களை குறைத்துக் கொண்டு குழந்தைகளை படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதில்தான் தங்களின் வாழ்வின் அர்த்தமே அடங்கியுள்ளதாக இன்றைக்கும் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகளோ அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் அல்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்வது அச்சமும் கவலையும் அளிக்கிறது.

ஆடம்பரமாக நடத்தப்படும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமே என்றும், திருமணங்களுக்குச் செல்லும் பொழுது இந்த திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமே என்றும் தோன்றுகிறது. ஏனென்றால் நிச்சயமான திருமணங்கள் நின்று போவதும், நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிவதும் வெகு சகஜமாகிவிட்டது.



முன்பெல்லாம் வீட்டில் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் நடந்து சிறிது நாட்களில்,"என்ன விசேஷம்"? என்று விசாரிப்பார்கள். அதற்கு பொருள் வேறு. இன்று அப்படி கேட்டால், "டைவர்ஸ் ஆகி விட்டது", என்றோ. "டைவர்ஸுக்கு அப்ளை செய்திருக்கிறார்கள்" என்றோ பதில் வருவது ஆச்சர்யமில்லை. உண்மையில் எங்களின் இரண்டு நண்பர்கள் ஒருவருக்கு பெண், மற்றவருக்கு பிள்ளை அப்படித்தான் சொன்னார்கள். இருவருமே விவாகரத்திற்கு சொன்ன காரணம் அவர்களுக்குள் compatibility இல்லை என்பது. திருமணம் ஆன ஒரே வருடத்திற்குள் தங்களுக்குள் கம்பட்டபிலிட்டி இல்லை என்றும் அதற்கு விவகாரத்துதான் தீர்வு என்றும் எப்படி முடிவு எடுக்கிறார்கள்? இத்தனைக்கும் இப்போதெல்லாம் திருமணம் நிச்சயமானதிலிருந்து தினசரி போனில் மணிக்கணக்கில் பேசுகிறார்கள், சேர்ந்து வெளியே போகிறார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு தங்களுக்குள் கம்பட்டபிலிட்டி இல்லை என்று தெரியவில்லையா?

உண்மையில் கம்பட்டபிலிட்டி என்று ஒன்று இருக்கிறதா? இவர்கள் ஏதோ கற்பனையில் வாழ்கிறார்களோ? எது இவர்களை விவாகரத்திற்கு துரத்துகிறது? அப்புசாமி சீதா பாட்டியைப்போல தினசரி சண்டை போட்டுக் கொண்டே பொன்விழா கொண்டாடிய தம்பதியினர் இருந்திருக்கிறார்களே..! இதற்கு முந்தைய தலைமுறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று, நான்கு பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்பது ப்ரம்ம ப்ரயத்தனம்தான். பெற்றோர்களின் சிரமத்தையும், தங்கள் கணவன் வீட்டில் வாழா விட்டால் அது தன் உடன் பிறந்தவர்களையும் பாதிக்கும் என்று அஞ்சியே பெரும்பாலான பெண்கள் தங்கள் துயரங்களை பொறுத்துக் கொண்டார்கள்.  எனக்கு தெரிந்த என் வயதை ஒத்த  ஒரு பெண்மணி திருநெல்வேலி சைவ பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் டில்லியிலும், மும்பையிலும், திருமணம் செய்து கொண்டதோ திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து அங்கேயே வசித்த ஒருவரை. அவர் தன்னுடைய ஆரம்ப கால திருமண வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும் பொழுது, ஒரு 'கல்ச்சுரல் ஷாக்' என்பார். அதற்க்காக விவாக ரத்து செய்துவிடவில்லை. "நான் அந்த முடிவு எடுத்திருந்தால், என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் என்னும் பயமே என்னை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வைத்தது" என்பார்.  இன்றைய பெண்களுக்கு அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் எதுவும் இல்லை, அதோடு பொருளாதார சுதந்திரம்.

திருமண வாழ்க்கைக்கு மற்றொரு வில்லன், செல்போன். இப்போதெல்லாம் ஒரு வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ,அத்தனை செல்போன்கள். திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண் காலையில் எழுந்ததும் அம்மாவுக்கு குட்  மார்னிங்கும், இரவு படுக்கைக்கு போகும் முன் குட் நைட்டும் சொல்வது தவறு கிடையாது. ஆனால் அன்று நடக்கும் அத்தனை விஷயங்களையும் ஒப்பிப்பது சரியா? தகவல் தொடர்பு இத்தனை விரிவடையாத காலத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்ன சின்ன மனஸ்தாபங்களை உடனே அம்மாவுக்கு சொல்ல முடியாது, அதை கடிதமாக எழுதலாம் என்று நினைக்கும் பொழுது அதன் வீரியம் குறைந்திருக்கும். ஆனால் இன்று எல்லாம் உடனக்குடன் அம்மாவுக்கு தெரியப்படுத்தப்படுவதால், பிரச்சனை பெரிதாக்கப் படுமே ஒழிய குறையாது. 

நாற்பது வருடங்களில் பெண்களின் வளர்ச்சி, ஆண்களின் வளர்ச்சியை விட அதிகம். ஆண்களின் பக்கத்தில் என்ன தவறு என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஏனென்றால், இப்போது நகர்புற ஆண்கள் நிறைய மாறி இருக்கிறார்கள். கிராமங்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. 

நாற்பது வருடங்களுக்கு முன் குழந்தைகளை பார்த்துக் கொள்வது முழுக்க முழுக்க பெண்களின் வேலையாகத்தான் இருந்தது. ஒரு திருமணத்தில் தான்  சாப்பிட்டு வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு சென்ற மனைவி திரும்ப வருவதற்குள் குழந்தை கணவரின் மடியில் சிறுநீர் கழித்து விட்டான் என்பதற்காக எல்லோர் முன்னாலும் மனைவியை கண்ணா பின்னாவென்று கத்திய கணவர்மார்களை நான் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஆண்கள் அப்படியெல்லாம் குரூரமாக நடந்து கொள்வதில்லை. பொறுமையாக டயாபர் மாற்றுகிறார்கள். வீட்டு வேலைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  ஆனாலும் டபுள் ஸ்டாண்டர்டும், எல்லா பிரச்சனைகளையும் படுக்கையில் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நினைப்பதையும் இந்தக் கால பெண்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. 

பிறந்த நாளையும், திருமண நாளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாதது ஆண்களின் பிறவிக்கோளாறு. தவிர சினிமா, விளம்பர கணவர்களைப் போல வெளிப்படையாக தன் காதலை வெளிச்சம் போடுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. இந்தக்குறைகளை பெரிது படுத்தாமல் விட்டு விட வேண்டும். 

மேலும் கணவன் மனைவிக்குள் ஒரு இடைவெளி வேண்டும்(space). கணவனோ,மனைவியோ அவரவருக்கென்று தனிப் பட்ட விருப்பங்கள், பொழுது போக்குகள் இருக்கலாம். கல்யாணம் ஆகிவிட்ட ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் உதறி விட வேண்டும் என்று நினைப்பது தவறு. 

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும், நீ காணும் 
பொருள் யாவும் நானாக வேண்டும் ..." என்பதெல்லாம் சினிமாவில் பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கும். ஆனால் நடை முறையில் எப்படி மூச்சு திணறும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

நான் பேச நினைப்பதை என்னை பேச விடு, உனக்கு என்ன பேச வேண்டுமோ அதை பேசிக்கொள் என்று சொல்வதுதான் ஆரோக்கியமான மண வாழ்க்கை. 
காதல் என்பது ஒருவரை ஒருவர் மதிப்பது, விட்டு கொடுப்பது. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்  போவதில்லை. 


Sunday, February 5, 2017

இரண்டாம் தாரம்

இரண்டாம் திருமணம் 

"அக்கா, வர ஞாயிறு அயோத்யா மண்டபத்தில் சுயம்வர ஹோமம் நடக்கப்போறது, கார்த்தாலே எட்டு மணிக்கு ஆரம்பம். கிருஷ்ணாவோட ஜாதகத்தை எடுத்துண்டு நீயும் அத்திம்பேரும் வாங்கோ. அந்த ஹோமத்தில் கலந்துண்டா, நிச்சயம் கல்யாணம் ஆகிடும். எங்க நாத்தனாரோட மச்சினர் பொண்ணுக்கு கல்யாணம் தட்டிப்போயிண்டே இருந்தது. போன வருஷம் இந்த ஹோமத்தில் கலந்துண்டா, உடனே கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து.. கிருஷ்ணாக்கும் சீக்கிரம் கல்யாணம் நிச்சயம் ஆகட்டும்.." சித்ரா பேசிக்கொண்டே போனாள். 

"ம்.. சரி.." என்றதோடு போனை துண்டித்தாள் சந்திரா. 

"யாரு?.. என்னவாம்"? என்ற கணவரின் கேள்விக்கு பதிலாக முதல் பாராவில் இருந்த விஷயங்களை சொல்ல, அவரும் பதில் பேசாமல் டி.வி.யை நிறுத்தி செய்தி தாளை கையில் எடுத்துக் கொண்டார்.  

இப்போதெல்லாம் எல்லா சம்பாஷணைகளும் கிருஷ்ணாவின் திருமண பேச்சில்தான் வந்து முடிகின்றன. 

பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும், கை நிறைய சம்பாதிக்கும், கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாத பையனுக்கு முப்பது மூன்று வயதாகியும் திருமணம் நடக்காததன் காரணம் தெரியவில்லை. 

கிருஷ்ணாவிற்கு இருபத்தைந்து வயதானபொழுது அவன் தங்கைக்கு திருமணம் ஆனது. அப்போது எல்லோரும் "கிருஷ்ணா உனக்கு லைன் க்ளியர்" என்றபோது "இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும்" என்றான். 

அதைப் போலவே இரண்டு வருடங்கள் கழித்து, ஒரு நல்ல நாளில், மேட்ரிமோனியல் சைட் ஒன்றில் பதிவு செய்தார்கள். பெண்ணுக்கு பதிவு செய்து விட்டு வீடு திரும்புவதற்குள், புகைப்படம் அப் லோட் கூட ஆகவில்லை அழைப்புகள் வர தொடங்கி விட்டன. தினமும் ஏழெட்டு அழைப்புகளுக்கு குறையாது. ஆனால் க்ரிஷ்ணாவிற்கு அந்த அளவு ரெஸ்பான்ஸ் இல்லை. ஏன் என்று குழம்பிய பொழுது, ஏற்கனவே பிள்ளைகளுக்கு மேட்ரிமோனியல் சைட்டுகளில் பதிவு செய்து திருமணம் முடித்த உறவினர்களும், நண்பர்களும் "இப்படித்தான் இருக்கும், அது மட்டுமல்ல நாம் அழைத்தாலும் பதில் வராது" என்று தைரியம் அளித்தார்கள்/பயமுறுத்தினார்கள்
அப்பொழுது பார்த்து அவனுக்கு ஆன் சைட்டில் சுவீடன் செல்லும் வாய்ப்பு வந்தது. சுவீடனா? என்றார்கள். ஆறு மாதம்தான் அங்கிருப்பான், திரும்பி வந்து விடுவான் என்றாலும் மீண்டும் அழைக்கவில்லை.

ஒரு வருடம் கழித்து மீண்டும் ஆன்சைட்டில் அமெரிக்கா சென்றான். 
இவர்கள் மேட்ரிமோனியல் சைட்டில் பார்த்து சொல்லும் பெண்களை அவனுக்கு பிடிக்காது, அவனுக்கு பிடிக்கும் பெண்களின் ப்ரொபைலில் ஏதாவது குறை இவர்களுக்கு படும். 

இந்தப் பெண் பரத நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாளாம், அதைத் தொடர விருப்புகிறாளாம், அதெல்லாம் நமக்கு சரி படுமா? அவ டான்ஸ் ஆட போயிட்டா, இவன் நட்டுவாங்கம் பண்ணுவானா? என்றார் கணவர்.

இவர்களுக்கும் பொருத்தம் என்று தோன்றி, அவனுக்கும் பெண்ணை பிடித்திருந்தால், ஜாதகம் சேராது. அல்லது, எங்கள் பெண் இங்கு நல்ல வேலையில் இருக்கிறாள் அதை விட்டு விட்டு வெளிநாடு செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை என்பார்கள். 

எல்லாம் ஒத்து வந்து இவர்கள் வீடு வரை வந்த சிலர் அதற்குப் பிறகு எந்த பதிலும் சொல்லவில்லை. வீடு சிறியது என்று நினைத்தார்களோ என்னவோ. சிலர் நீங்கள் இன்னும் கார் வாங்கவில்லையா? என்று கேட்டார்கள். அவர்கள் வீட்டில் இரண்டு கார்கள் இருக்கிறதாம். 

அதற்காக பெண்ணைப் பெற்ற எல்லோரும் மோசம் என்று கூறி விட முடியாது. எளிமையாக, யதார்த்தமானவர்களும் இருந்தார்கள். வீடு, காரெல்லாம் எங்க ஓடிடப் போறது? வயதிருக்கிறது, படிப்பு இருக்கு, வேலை இருக்கு, எதிர்காலத்தில் வாங்காமலா இருப்பார்கள்? என்று கூறியவர்களும் இருந்தார்கள். ஆனால், அவர்களோடு உறவைத் தொடர முடியாமல் பாழாய்ப் போன ஜாதகம் தடுத்ததே. 

எப்படியோ கிருஷ்ணா முப்பது வயதை கடந்து விட்டான். அதற்குள் அவன் கார் வாங்கி விட்டான், பழைய இரண்டு பெட் ரூம் வீட்டை கொடுத்து விட்டு, நகருக்குள்ளேயே  செகண்ட் ஹாண்ட் மூன்று பெட் ரூம் வீடு வாங்கி அதை புதுப்பித்துக் கொண்டார்கள்.  ஆனால் தலை முடி பின்னோக்கிச் சென்று நெற்றி பெரிதாகி விட்டது சந்திராவுக்கு கவலை தந்தது. 

இதெல்லாம் பெரிய விஷயமில்லை, இன்னிக்கு நிறைய இளைஞர்களுக்கு சீக்கிரம் தலை வழுக்கையாகி விடுகிறது. பொல்யூஷன், கெமிக்கல்ஸ் கலந்த ஷாம்பூதான்  காரணம். என்று  
சமாதானம் கூறப் பட்டாலும் பெண்கள் அதை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டுமே?

பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது கூட இத்தனை கவலைப் படவில்லை. பிள்ளைக்குத்தான் ரொம்ப கவலையாக இருக்கிறது. அந்த கவலை அவளுக்கு சர்க்கரை நோயையும், கண்களுக்கு கீழ் கருவளையங்களையும் உண்டாக்கியது. 

மெல்ல மெல்ல உறவினர்களும் நண்பர்களும் பரிகாரங்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஓ.எம்.ஆரில் இருக்கும் நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சென்று அவன் பெயரில் அர்ச்சனை செய்து அர்ச்சகர் தரும் மாலையை அவன் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்தால்...

"அய்யய்யோ, அவன் இதையெல்லாம் செய்யவே மாட்டான்". 

"அவன் செய்யாவிட்டால் நீங்கள் செய்யுங்களேன்.."

அங்கு போன பொழுதுதான் ஊரில் இத்தனை பேருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? இது நம் வீட்டில் மட்டும் நடக்கும் கதை இல்லை போலிருக்கிறது என்று ஆறுதல் தோன்றியது. 

திருமணம்சேரி என்றார்கள், திருச்சிக்கு அருகில் திருப்பஞ்சீலி என்றார்கள், திருப்பதி பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்யச் சொன்னார்கள் எவ்வளவு ஊர்களுக்கு செல்ல முடியும்?  பிரதோஷத்தன்று சிவன் கோவிலில் புது அகல் விளக்கில் விளக்கேற்ற சொன்னார்கள். இவர்களும் முடிந்ததை செய்தார்கள். ஒரு கட்டத்தில் யாராவது பரிகாரம் சொன்னால், நிறைய செய்து விட்டோம் என்று கூறியதை திமிர் என்றார்கள்.

சமீபத்தில் மேட்ரிமோனியல் விளம்பரத்தை புதுப்பிக்கலாம் என்று சென்ற பொழுது, அங்கிருப்பவர், "முப்பது மூணு வயசா? 

கஷ்டமாச்சே சார்.. பசங்களுக்கு முப்பது வயதிற்குள் திருமணம் முடித்து விட வேண்டும், அதற்குப் பிறகு பெண் கிடைப்பது கஷ்டம்.. " என்றார். எதற்கும் இருக்கட்டும் என்று புதுப்பித்தார்கள். ஆனால் பலன் ஏதுமில்லை.

நீ ஜாதகம் ரொம்ப அலசி பார்க்கிறாயா..? அதனால்தான் டிலே, " என்றார் மாமா. ஜாதகம் பார்க்கத் தொடங்கி விட்டு எப்படி நிறுத்துவது? நட்சத்திர பொருத்தம் மட்டும் போதும் என்று முடிவெடுத்தாள்.  

பிராமினாக இருந்தால் போதாதா? ஏன் ஐயர் பெண்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிற? ஐயங்காரோ, ராயரோ, தெலுங்கு பிராமினோ ஓகே னு சொல்ல வேண்டியதுதானே..

அதையும் முயற்சி செய்து பார்த்தாகி விட்டது. ஒரு ஐயங்கார் பெண்ணும், ஒரு மாத்வ பெண்ணும் பிடித்திருந்தது.அந்தப் பெண்களின் பெற்றோர்களும் முதலில் சரி என்றார்கள். பின்னர் எங்கள் வீட்டில் பெரியவர்கள் வேண்டாம் என்கிறார்கள் என்று கூறி விட்டார்கள். 

ஒரு முறை குடும்ப விசேஷம் ஒன்றிலும் வழக்கம்போல கிருஷ்ணாவின் திருமண பேச்சு வந்த பொழுது, அவன் அப்பா,":வெஜிடேரியனாக இருந்தால் போதாதா? எந்த ஜாதியாக இருந்தால் என்ன? என்றதும் அவர் தம்பி பையன் கார்த்திக் ," பெரிப்பா இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்காதீர்கள். ஊர் பக்கம் ஜாதி சங்கங்களில் அவர்கள் வீட்டு குழந்தைகள், குறிப்பாக பெண்கள் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறார்கள். நீங்க பாட்டுக்கு ஏதாவது புரட்சி செய்து, எங்க அண்ணாவை போட்டுட்டாங்கன்னா..?எனக்கு என் அண்ணா வேணும் என்று கிருஷ்ணாவை கட்டிக் கொண்டான். 

"போடா, நீ சொல்றதை நம்ப முடியாது, ஏதாவது அடிச்சு விடுவ..."
.
ப்ராமிஸ்.. எங்க ஆஃபிஸில் ஒரு மதுரை பையனும், கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு ஊர் பெண்ணும் எட்டு வருஷமா லவ் பன்றாங்க. ரெண்டு பேர் வீட்டுலேயும் ஒத்துக்கலை, ஒரு வழியா பையன் வீட்டில் ஒப்புக் கொண்டார்கள், பெண் வீட்டில் நோ. கடைசீல இப்போ, "நீ அவனைத்தான் கல்யாணம் செஞ்சுப்ப என்றால் எங்களால் கல்யாணத்துக்கு வர முடியாது. நாங்கள் உன்னை ஏற்றுக் கொண்டோம் என்று தெரிந்தால், எங்களை ஜாதியிலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள். நீ வீட்டை விட்டு ஓடிப் போய்ட்டானு சொல்லி விடுகிறோம்.எங்கேயாவது போய் திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு என்று கூறி விட்டார்கள். அடுத்த வாரம் குன்றத்தூரில் கல்யாணம்.."

அவன் சொன்னதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்றாலும் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் என்னும் ஐடியாவை கை விட்டார்கள்.

மாப்பிள்ளை கூட, "அவன் ஆஃபிஸில் எத்தனை பெண்கள் வேலை செய்வார்கள்? ஒருத்தி கூடவா இவன் கண்ணுக்கு படல? அவ்ளோ பழமா உங்க அண்ணா?" என்றாராம். 

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அவ்வப்பொழுது பெண்களை வீட்டிற்கு அழைத்து வருவதுண்டு. சிலரை, கலீக் என்றும் சிலரை பிரெண்ட் என்றும் அறிமுகப் படுத்துவான். அவர்கள் வீடு சென்றதும், "யாருடா இந்தப் பொண்ணு? இவளுக்கு என்ன வயசு இருக்கும்? என்று அம்மா ஆரம்பித்தால், "நீ எங்க வரேன்னு தெரியும், ஷி இஸ் கமிடெட், வாயை மூடிண்டு வேலையைப் பாரு" என்பான்.

நேற்று வெள்ளிக்கிழமை அன்று, அம்மா, இந்த சண்டே  என்னோடு கலீக் ஒருத்தியை சாப்பிட கூப்பிட்டிருக்கேன், உனக்கு ஓகேவா என்றான். 

சாப்பிட வந்த பெண் அமரிக்கையாகவும், லட்சணமாகவும் இருந்தாள். 

"ஷி இஸ் சுஜாதா, அண்ணா நகரில் இருக்கிறாள். கொஞ்ச நாள் ஆஸ்திரேலியாவில்  இருந்தாள், இப்போதுதான் என்னோட ப்ரொஜெக்டில் சேர்ந்திருக்கிறாள் என்று அறிமுகப் படுத்தினான். 

அந்தப் பெண் அரட்டை அடிக்கவில்லை, ஆனால் சகஜமாக பழகினாள். சுஜாதா, ஆஸ்திரேலியா.... இவளை பற்றி முன்பு ஒரு முறை ஏதோ சொல்லியிருக்கிறான். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. 

சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அந்தப் பெண் கிளம்பிச் சென்றது. மாலை தேநீரோடு வந்த பிஸ்கெட்டை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு, " நான் சுஜாதாவை கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்" என்றதும், 

யாரு சுஜாதா..? என்றார் அவன் தந்தை.

இன்னிக்கு மதியம் லஞ்சுக்கு வந்தாளே..

கிருஷ்ணா கூறியதும், சந்திராவின் மனசுக்குள் பொறி தட்டியது. 

"இந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவள் இல்லையோ"?
   
"ஆமாம், அவளோட எக்ஸ் ஹஸ்பாண்ட் ட்ரக் அடிக்ட். வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சரியாக விசாரிக்காமல் கொடுத்து விட்டார்கள். பாவம், ஒரு வருஷம் கஷ்டப்பட்டுவிட்டு, திரும்பி வந்து விட்டாள்".

"டைவர்ஸ் கிடைத்து விட்டதா? அல்லது லீகல் ப்ரோஸெடிங் போயிண்டிருக்கா"?

"போன மாதம்தான் கிடைத்தது". 

"பின்னல் பிரச்சனை எதுவும் வரக்கூடாது".

"அதெல்லாம் வராதுப்பா. டைவர்ஸ் கிடைக்கறதுக்கு முன்னாலேயே அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டான்.. ராஸ்கல்.."

"திடீர்னு ஒரு பெண்ணை கூட்டி வந்து, அவளை கல்யாணம் செய்து கொள்ளப் போறேன் என்கிறாய், அதுவும் ஒரு டிவோர்சியை.., குழந்தைகள் இருக்கா"? 

"இல்லை.." 

"கிவ் அஸ் சம் டைம் டு திங்க் "

"எவ்ளோ நாள்? ஒரு மாதம்"?

"அவ்ளோ வேண்டாம்... டக்குனு முடிவு பண்ற விஷயமா? பை த வே, அவ ஒப்புக்கொண்டு விட்டாளா"?

"இன்னும் அவளிடம் சொல்லவே இல்லை". 

"பிரமாதம்  ! அவளோட அபிப்ராயம் தெரியாது, எங்ககிட்ட ஏன் கேட்கிற"? 

அப்பாவின் கேள்வி கிருஷ்ணாவை கோப மூட்டியது. "உங்ககிட்ட கேட்காம,தெருவில் போகிறவர்களிடமா கேட்க முடியம்? என்ன பேசற"?

"கோப படாதே.. நீ க்ளியரா இருக்கியான்னு தெரியல.."

"நான் க்ளியராதான் இருக்கேன். நம்மளும் மேட்ரிமோனியல் சைட்டிலெல்லாம் ரிஜெஸ்டெர் பண்ணி பார்த்தாச்சு. நோ யூஸ். இந்த பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது, அதனால்தான் கேட்டேன். உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைனா, நான் அவ கூட பேசுவேன்.. அவளுக்கு நடந்தது ஒரு விபத்து.."

ஹாலில் கொஞ்சம் மௌனம் நிலவியது. 

"நீ என்னமா சொல்லற"

"ஏற்கனவே கல்யாணம் ஆன பெண்ணை ஏண்டா நீ கல்யாணம் பண்ணிக்கணும்? உனக்கு என்ன குறைச்சல்"?

கிருஷ்ணா மெல்ல சிரித்தான். "நீ ஒரு அம்மாவாகவே யோசிக்கற.., நேத்து என் பிரெண்ட் ஒருத்தன், இனிமே கொஞ்சம் சிக்கனமா செலவு பண்ணனும்டா, பொண்ணுக்கு அடுத்த வருஷம் மஞ்ச நீராட்டு விழா வந்துடுமோனு பயமா இருக்கு என்கிறான்.  தலை முடி குறையத் தொடங்கி விட்டது மட்டுமல்ல, நரைக்கவும் தொடங்கி விட்டது. தொந்தி விழுந்தாச்சு. கல்யாணம் ஆகலை என்பதால் நான் பையன் கிடையாது, மாமா.. உண்மையா யோசிச்சா எனக்கும் சுஜாதாவுக்கும் எட்டு வயது வித்தியாசம் இருக்கு"

"ஏற்கனவே கல்யாணம் ஆனவள்..." சந்திரா மீண்டும் அதையே சொன்னாள். 

"என்னம்மா தப்பு? முப்பத்தாறு வருஷம் முன்னால நீ செஞ்சதை நான் இப்போ பண்ணப் போறேன்.. அவ்ளோதானே.."?

எதிர் பார்க்காத இந்த தாக்குதலால் அடிபட்டுப் போன சந்திரா பதில் சொல்ல முடியாமல் மகனை வெறித்தாள். 

"சாரிமா , நான் எதுவும் தப்பா சொல்லல, மனைவியை இழந்த அப்பாவுக்கு நீ இரண்டாம் தாரமாகத்தானே வாழ்க்கைப் பட்டாய்? அதே  போன்ற  நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை நான் மணந்து கொள்வதில் என்ன தவறு"? 

"யாரோட யாரை நீ கம்பேர் பண்ற?  உங்கப்பாவுக்கு அப்போ வயது அதிகம் ஆகவில்லை, கல்யாணமான ஒரே வருடத்தில் மனைவி மூளைக் காய்ச்சலால் இறந்து விட்டாள். அந்த சமயத்தில் என் பிறந்த வீட்டில் ரொம்ப கஷ்டமான நிலைமை, பெண்ணுக்கு எப்படியாவது நல்லபடியா கல்யாணம் ஆனால் போறும்னு நினைச்ச உங்க தாத்தா என்கிட்டே கேட்டார், நானும் நிலைமையை புரிஞ்சுண்டு சரின்னேன். எனக்கு அதுல எந்த வருத்தமும் கிடையாது. உங்க அப்பாவும் என்னை நன்னாத்தான் வெச்சுண்டிருக்கார்".

"அதேதான்மா இங்கேயும். அப்பாவோட இடத்தில சுஜாதா இருக்கா. உனக்கு கல்யாணம் பண்றது கஷ்டமாக இருந்தது என்றால் எனக்கு கல்யாணம் ஆகறது கஷ்டமாக இருக்கு. நிலைமையை புரிஞ்சுண்டு நீ ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டாய், நிலைமையை புரிஞ்சுண்டு நான் அவளை ரெண்டாவது முறையா தாரமாக்குகிறேன். தப்பா? எனிவே, நீங்க யோசிச்சு வையுங்க. நான் சுந்தரம் பஜன் போயிட்டு வரேன்". கிருஷ்ணா கிளம்பினான். 

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில்," நான் அம்மன் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன், நீங்களும் வரேளா? 

"வரேனே...",என்றவர் சட்டையை மாட்டிக் கொள்ளும் போது, "இது ஏன் நமக்கு தோணவே  இல்லை? ஆண் மகனைப் பொறுத்த வரை திருமணமோ, மருமணமோ, பெண் கன்னி கழியாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் மாற வேண்டும் " என்றார்.

"இப்போ நிறைய மாறியாச்சு" என்று பதில் சொன்னாலும், அவளால் முழு மனதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. கோவிலுக்கு செல்கிறேன், அங்கு எனக்கு ஏதாவது நல்ல சகுனம் கிடைக்கட்டும், இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

கோவிலில் விசேஷமாக எதுவும் நடக்கவில்லை. கொஞ்சம் நிம்மதியாகவும், ஒரு ஓரத்தில் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. 

வழக்கமாக செருப்பு விடும் பூக் கடையில் செருப்பை மாட்டிக் கொள்ள வந்த பொழுது, அவர், கொஞ்சம் இருங்கம்மா, என்றார். 

"நேத்து திருப்பதி போயிட்டு வந்தேன். திருக்கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப நாளா எண்ணம், இப்போதான் முடிஞ்சுது" இந்தாங்க பிரசாதம்,என்று, ஒரு பையில் லட்டு, திருமாங்கல்ய சரடு, குங்குமம், இவற்றோடு கொஞ்சம் பூவும் சேர்த்து கொடுத்தார். 

அதை கையில் வாங்கி கொண்டு கணவரை பார்க்க, அவள் மனது புரிந்து ஒரு பொருள் பொதிந்த புன்னகை புரிந்தார். 

வீட்டுக்கு வந்ததும் ஹாலில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவிடம் திருப்பதி லட்டுவை கொடுத்து விட்டு, "சுஜாதாவிடம் சீக்கிரம் பேசு. அவர்கள் வீட்டிலும் பேசி சீக்கிரம் முடிவு பண்ணலாம்" என்றாள்.   

Sunday, January 29, 2017

ஸ்வட்ச் பாரத்?

ஸ்வட்ச் பாரத்?







அரசுடைமை ஆக்கப்பட்ட வாங்கி ஒன்றின் ATM இல் கொட்டி கிடைக்கும் குப்பைகள். ஏ.டி.எம். ஐ பயன்படுத்துபவர்கள் எல்லோரும் படித்தவர்கள்தான். குப்பை கூடை வைத்திருந்தும் அதில் குப்பையை போடாமல் சுற்றி எறிந்திருக்கிறார்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பட்டுக்கோட்டையாரின்(பிரபாகர் இல்லை, கல்யாண சுந்தரம் ) பிரபலமான வரிகள். மக்களுக்கே நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்?

இங்கு இன்னொரு விஷயமும் எழுதத் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன் மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை பிரித்து போடச் சொல்லி கார்பரேஷனிலிருந்து பச்சையில் ஒன்று, சிவப்பில் ஒன்று என இரண்டு பிளாஸ்டிக் கன்டைனர்கள் கொடுத்தார்கள். அதை எப்படி செயல் படுத்த வேண்டும்? பிளாஸ்டிக் பையில் குப்பைகளை சேகரிக்கலாமா போன்ற கேள்விகளுக்கு விடை கொடுக்க யாரும் இல்லை.

நான் தனியாக பிரித்து கொடுத்தாலும், என் வீட்டு பணிப்பெண்,"யாரும் பிரிச்சு போடறதில்லைமா, ஒன்னாதான் போடறாங்க, நாம பிரிச்சு கொடுத்தாலும், அவங்க ஒன்னாதான் போடறாங்க.." என்றாள். ஆனால் காலனி வாசலில் என்னவோ மூன்று டஸ்ட் பின்கள் வைக்கப் பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் பெங்களூர் பரவாயில்லை என்று தோன்றுகிறது.  நான் என் மகன் வீட்டிற்கு பெங்களூர் சென்றிருந்தபொழுது என் மகன் என்னிடம், " அம்மா குப்பைகளை பிரித்து போடம்மா, ஏற்கனவே மெயின்டனன்ஸ் பார்க்கிறவர்கள், குப்பைகளை பிரித்து போடாவிட்டால் ரூ.1000/- அபராதம் கட்ட தயாராக இருங்கள் என்று எச்சரித்திருக்கிறார்கள்", என்றான். அதைப் போல அங்கு சிறிய கடை முதல் பெரிய சூப் மார்க்கெட் வரை பிளாஸ்டிக் கவரில் சாமான்கள் தருவதில்லை, பேப்பர் கவர்தான். ஏன் திருவண்ணாமலையில் கூட இதை கண்டிப்பாக கடை பிடித்தார்கள். பிளாஸ்டிக் கவர்கள் தர மாட்டார்கள்.

சென்னையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அதை சீரியசாக கடை பிடிப்பதில்லை. மற்ற ஊர்களை பற்றி எனக்கு தெரியவில்லை.

இப்படி சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கும் அரசாங்கம், சமூக பொறுப்பில்லாத மக்கள் இவர்களை வைத்துக் கொண்டு ஸ்வாட்ச்சாவது? பாரதமாவது?







Wednesday, January 25, 2017

தேசிய கீதம்!

தேசிய கீதம்!



சமீபத்தில் துருவங்கள் பதினாறு படம் பார்க்கச் சென்ற பொழுது, திரைப்படம் துவங்கும் முன், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்கவும் என்ற அறிவிப்பை போட்டுவிட்டு, தேசிய கீதத்தை ஒளி பரப்பினார்கள். திரை அரங்கில் எல்லோரும் எழுந்து நின்றது மட்டுமல்லாமல் தேசிய கீதத்தை பாடவும் செய்தார்கள், நானும் என் தோழியும் உட்பட. திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும்  இருந்தது. 1972 வரை திரைப்படம் முடிந்து தேசிய கீதம் போடப் படும். மூன்று மணி நேரம் உட்கார்ந்திருந்த மக்களால் இன்னும் 52 நொடிகள் செலவழிக்க முடியாததால் அந்த பழக்கம் நிறுத்தப் பட்டது. இப்போது மீதும் துவங்கப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான்!

தேசிய கீதத்தை பள்ளியில் இசைத்ததோடு சரி. இப்போதெல்லாம் பள்ளிகளில் கூட USB PORT ஐ சொருகி விடுகிறார்கள். ஒரு முறை சுகி சிவம் அவர்கள் இதைப் பற்றி," இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் நடக்கும் விழாக்கள் உட்பட எல்லா நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதத்தை சி.டி.யில் போட்டு விடுகிறார்கள். யாரும் பாடுவதில்லை. ஜெயஹே! ஜெயஹே!ஜெயஹே! அதாவது வெற்றி!வெற்றி!வெற்றி! என்பதை மக்கள் சொல்ல வேண்டாமா? பலர் கூடி ஒரு வார்த்தையை சொல்லும் பொழுது அந்த வார்த்தையே பலம் பெற்று மந்திரம் போல ஆகி விடும். ஆகவே மக்கள் இதை பாட வேண்டாமா?" என்றார். 

உண்மைதான், சிறு வயதில் இதன் அர்த்தம் புரியாமல் பாடுவது வேறு, இப்போது அதன் பொருளை உணர்ந்து பாடுவது வேறு.  நண்பர் ஒருவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற பொழுது.அந்த டூர் ஆர்கனைஸர் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்தவர்களை அவரவர் தேசிய கீதத்தை இசைக்கச் சொன்னாராம். "அப்போது நான் நம்முடைய தேசிய கீதத்தை பாடினேன், அந்த தருணத்தில் எனக்கேற்பட்ட உணர்வுகளை வர்ணிப்பது கடினம்.." என்று உணர்ச்சி பொங்க கூறினார்.  நம் நாட்டில் இருக்கும் வரை நாம் தமிழர், தெலுங்கர், மராட்டியர், பெங்காலி என்று பிரிந்து நிற்போம். ஆனால் நம் நாட்டை தாண்டினால் நாம் அனைவரும் இந்தியர் என்னும் உணர்வுதான் மேலோங்கி இருக்கும். உண்மையும் அதுதானே.? நாம் எல்லோரும் முதலில் இந்தியர்கள்,பிறகுதான் மொழி,மதம், இனம், ஜாதி போன்ற அடையாளங்கள். ஆகவே திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்பப்  பொழுது நீங்களும்
உடன் பாடுங்கள். உங்கள் குழந்தைகளையும்  பாடச் சொல்லுங்கள்.

நாளை குடியரசு தினம், எல்லோரும் ஒற்றுமையாக கொண்டாடலாம்! நம் தெருவிலோ, காலனியிலோ கொடியேற்றும் நிகழ்ச்சி இருந்தால் தவறாமல் அதில் கலந்து கொண்டு தேசிய கீதத்தை எல்லோருடனும் சேர்ந்து பாடலாம். ஜெய் ஹிந்த்!   

Monday, January 16, 2017

பதினேழில் பிறந்தவர்கள்

பதினேழில் பிறந்தவர்கள் 




நாளைக்கு ஜனவரி 17, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாள். சாதாரணமாக எட்டாம் எண்ணைப் பற்றி அது ஒரு துரதிர்ஷ்டமான எண் என்று ஒரு தவறான கருத்து உண்டு. அதனால் 8,17,26 தேதிகளில் பிறந்த சிலர் தங்கள் பிறந்த தேதியை குறிப்பிடவே தயங்குவார்கள். எட்டாம் எண் சனியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. அதனால்தான் இந்த பயம். 

சனி என்றாலே நாம் எல்லோரும் பயந்து நடுங்குகிறோம். ஏதோ நமக்கு வருகின்ற தீமைகள் எல்லாம் அவரால்தான் வருகிறது என்று ஒரு எண்ணம். அப்படி கிடையாது. ஒருவரது ஜாதகத்தில் சனி நன்றாக அமைந்து விட்டால் அவர் செய்யும் நன்மைகள் ஏராளம். 

80களில் எண்ணை வள வளைகுடா நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டியவர்கள் பலர் சனி உச்சனாக இருந்த 1953-1955 கால கட்டத்தில் பிறந்தவர்களாக இருந்ததை பார்த்திருக்கிறேன். அதற்கு சனி உச்சமா க இருந்தது மட்டும் காரணமல்ல, அதுவும் ஒரு காரணம். சனி உச்சமாக இல்லாவிட்டாலும் ஜாதகத்தில் பலமாக இருப்பார். அதைப் போலவே 1982 -1984 இல் பிறந்த பலர் இன்று வெளிநாடுகளில் வசிப்பதை பார்க்கலாம். சிறந்த சர்ஜன்கள் பலருக்கும் ஜாதத்தில் சனி பலமாக இருப்பார். சாதாரணமாகவே சனி பகவான் கடுமையாக உழைக்க வைப்பார். மரபுகளை மீறி புரட்சியை செய்ய வைப்பார். மதத்தில் புரட்சி செய்த,விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்த ராமானுஜருக்கு ஜாதத்தில் சனி மிகவும் பலமாக இருப்பார். 

சரி விஷயத்திற்கு வருவோம், சனியின் ஆதிக்கத்தில் வரும் எண் ஆன 8,17,26 இந்த மூன்று எண்களில் மிகவும் சிறப்பானது 17. இந்த தேதியில் பிறந்த பலர் தங்கள் துறையில் மற்றவர்களால் தொட முடியாத உயரத்தை தொட்டிருப்பார்கள். பெரிய புரட்சியாளர்களும் இந்த தேதியில் பிறந்தவர்களே. ஆனால் வெற்றியை கொஞ்சம் போராடி பெற வேண்டும். பின்னே புரட்சி என்பதை ஐஸ் க்ரீம் சாப்பிடுவதைப் போல ஈசியாக செய்துவிட முடியுமா? 

மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், எம்.ஜி.ஆர்., திரைப்பட இயக்குனர் ஷங்கர், கிரிக்கெட் வீரர்களில் அணி கும்ப்ளே,அஸ்வின் ரவிச்சந்திரன் போன்றவர்கள் 17ம் தேதி பிறந்தவர்கள்.  இவர்கள் சாதனைகளை விளக்க வேண்டுமா என்ன?. இதில் ஒவ்வொருவரையும் பற்றி தனித்தனியாக பதிவுகள் எழுதலாம்.

17ம் தேதி பிறந்தவர்கள் எந்த இலட்சியத்தை மனதில் கொண்டு அதை நோக்கி பயணிக்கிறார்களோ அதை அடைவார்கள் என்பார்கள். ஆகவே உங்கள் குழந்தைகள் 17ம் தேதியில் பிறந்திருந்தால் அவர்கள் மனதில் ஒரு இலட்சியத்தை விதையுங்கள். 

Monday, January 9, 2017

சேனை கிழங்கு மசியல்

சேனை கிழங்கு மசியல்

தேவையான பொருட்கள்:
சேனை கிழங்கு ---- 1/2 கிலோ
பச்சை  மிளகாய் ---- 4 அல்லது 5
எலுமிச்சம் பழம் ------ 1/2 மூடி
இஞ்சி ----- ஒரு சிறு துண்டு
தாளிக்க: கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு .... 1 1/2 டீ ஸ்பூன் 
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தழை



சேனை கிழங்கை நன்றாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். கிழங்கு வெந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி இவைகளை சேர்த்து கீரை மசிக்கும் மத்து அல்லது குழியாக இருக்கும் கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.   





மேற்படி மசியல் கொஞ்சம் ஆறியதும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாக கிளறி விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல் இவைகளை தாளித்தால் சேனை கிழங்கு மசியல் ரெடி. 

பிடி கருணை கிழங்கிலும் இந்த மசியலை செய்வதுண்டு. கருணை கிழங்கு மசியலைப் போல சேனை கிழங்கு மசியல் தொண்டையை அரிக்காது. தளர இருந்தால் பிசைந்து சாப்பிடலாம், கெட்டியாக செய்தால் கூட்டு போல சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம். மிகவும் சுவையானது.

Sunday, January 8, 2017

துருவங்கள் பதினாறு (திரை விமர்சனம்)

துருவங்கள் பதினாறு
(திரை விமர்சனம்)



எத்தனை நாட்கள் ஆயிற்று இப்படி ஒரு படம் பார்த்து? ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை கட்டிப் போடும் திரைக்கதை!  'துருவங்கள் பதினாறு' படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு இருபத்தியோரு வயதுதான் ஆகிறதாம். ஸ்ரீதர்,பாண்டியராஜனுக்குப் பிறகு இள வயது இயக்குனர். ஆனால் வியக்க வைக்கும் முதிர்ச்சி. பார்முலா படங்களிலிருந்து விலகி விறுவிறுப்பாக ஒரு த்ரில்லர் படத்தை தந்திருக்கிறார். பாடல் வேண்டாம், காமெடி வேண்டாம் என்று முடிவு செய்தது பெரிய விஷயம் இல்லை, கதாநாயகியே வேண்டாம் என்று தைரியமாக முடிவு செய்திருக்கிறாரே..! பெரிய விஷயம்தான். இந்த தைரியம் பின்னாளில் சூப்பர், சுப்ரீம்,மெகா, தலை, வால், தளபதி, சேனாதிபதிகளை வைத்து படம் எடுக்கும் போதும் குறையாமல் இருக்க வேண்டுகிறேன். 

படத்தில் நமக்கு தெரிந்த ஒரே முகம் ரகுமான். பாத்திரத்தை உணர்ந்து வெகு இயல்பாக, அழகாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல படத்தில் வரும் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். காமிரா, இசை என்று அத்தனையும் அருமை.! 

குறை சொல்லித்தான் தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம். ஒன்று முதல் நாளிரவு பெரும் மழையில் நனைந்த சாலை மறு நாள் காலை துப்புரவாக காய்ந்திருப்பது சற்றே உறுத்துகிறது.   அதே போல கடைசி சண்டைக் கட்சியில் ஒரே இருட்டு, யார் யாரை அடிக்கிறார்கள்? யாரால் யார் சுடப்படுகிறார்? யார் தப்பி ஓடுகிறார்? யார் கார் முன் விழுகிறார் என்பதெல்லாம் ஒரே குழப்பம். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் சற்றே குறைகிறது, ஆனாலும் படம் தொய்யவில்லை.

படம் முடிந்தவுடன் இயல்பாக கை தட்டுகிறார்கள் ரசிகர்கள். இது போதாதா?

Thursday, January 5, 2017

வேண்டுதல்

வேண்டுதல் 



இதயத்தில் பிறக்கின்ற எண்ணங்கள் யாவுமே 
இனிமையாய் இருக்க வேண்டும் 
நிலத்தில் நான் செய்யும் செயல்கள் யாவுமே 
நலத்தையே விதைக்க வேண்டும் 
பொய்மையை சூதினை பொழுதில் மறந்து 
புவனத்தை ஆள வேண்டும்
நல்லதை நண்பனை நன்றியை என்றும்
நான்  நழுவாதிருக்க வேண்டும்
இத்தனை நலன்கள் பெற்று நான் வாழ்ந்திட 
அம்மா உன்னருள் வேண்டும்
மனதை காயத்தை மாண்புரச் செய்ய 
உன் நினைவதில் வேண்டும்  

சாருவும் நானும் - 5

சாருவும் நானும் - 5 


பில்லர் ராக் அருகே வரும் பொழுது கார் ஒன்று பழுதாகி நிற்க, உதவிக்கு யாருமில்லாமல் ஒரு பெண் தனியே நின்று கையைப் பிசைந்து கொண்டிருந்தாள்.

" ஹை! நம்ம(??) ராகினிஸ்ரீ! ட்ரைவர், டிரைவர்  வண்டியை நிறுத்துங்க. பாவம் நம்ம ராகினிஸ்ரீ தனியா நிக்கிறாங்க.." சாறு பேசிக் கொண்டே கார் கதவை திறந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கருகே ஓடினாள். 

"கட்! கட்! கட்!.." யாருமா அது.."? குறுக்க வரது? இப்போ ஹீரோவோட காரு இல்ல வரணும்..?"

காலம் காலமாக சினிமாவில் காதல் பிறக்கும் விதம் படமாக்கப்பட்டுக் கொடிதிருப்பது தெரியாமல் நடுவே புகுந்து விட்டோம். மன்னிப்பு கேட்டுக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். 

சாருவுக்கு கொடைக்கானல் ட்ரிப் பிளாப்  ஆன வருத்தம் ராகிணிஸ்ரீயைப் பார்த்ததில் எங்கேயோ பறந்து போய் விட்டது. "சினிமாவில் பார்க்கறதுக்கும்,நேரில் பார்க்கறதுக்கு வித்தியாசமே இல்லையே.. கலர்தான் கொஞ்சம் மட்டு. யார் ஹீரோன்னு தெரியலயே..சே! இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாம்.." பேசிக் கொண்டே வந்தவள், "வயிற்றை பிரட்டறது.." என்றாள். 

கீழே இறங்குவதால் இருக்கும். இந்த எலுமிச்சம்பழத்தை..." நான் சொல்லி முடிப்பதற்குள் குபுக்கென்று வண்டிக்குள்ளேயே வாந்தி எடுத்தாள். வண்டியை ஓரமாக நிறுத்தி சுத்தம் செய்தேன். அதற்குப் பிறகு வண்டியை இரண்டு,மூன்று இடங்களில் நிறுத்த வேண்டி இருந்தது. 

"கடவுளே,என்னை ஏன் இப்படி சோதனை பண்ற..? அவ்வளவுதான், நான் பிழைக்க மாட்டேன், கடைசியா ஒரு தடவ எங்க அம்மா முகத்தை பார்ப்பேனா..? நான் செத்துப் போயிட்டா என் சாம்பலை கூவத்தில் கரைச்சுடுங்கோ.."

"சார், அம்மாக்கு ரொம்ப முடியல போல, மதுரைல நல்ல நர்சிங் ஹோமுக்கு வண்டிய விடறேன்.." சாருவுக்கு சாதாரண ஜலதோஷம் பிடித்தாலே இந்த டயலாக்குகளைத்தான் பேசுவாள் என்பது பாவம் அந்த டிரைவருக்கு எப்படி தெரியும்?

கார் ஒரு புதிய கட்டிடத்தின் முன் வந்து நின்றது. அது ஒரு நர்ஸிங் ஹோம். தைரியமா இருங்க சார், ஒண்ணும் ஆகாது. என்று எனக்கு அனாவசிய ஆறுதல் கூறிவிட்டு சென்றார் அந்த டிரைவர். 

சாருவை பரிசோதித்த டாக்டர், " நீங்கள்லாம் படிச்சவங்க, நீங்களே இப்படி பண்ணலாமா"? என்றார்.

"என்ன டாக்டர்"?

"என்ன என்ன டாக்டர்? கையில காசு இருந்தா சும்மா இருக்க முடியாம ஊட்டி, கோடைக்கானல்னு எங்கேயாவது போக வேண்டியது, அங்க கண்டதை சாப்பிட்டு, கண்டா தண்ணிய குடிச்சு, ஏதாவது வியாதியை வரவழைச்சுக்க வேண்டியது.. பெட்டெர் டு அட்மிட் ஹர் ஹியர்.. எல்லா டேஸ்டும் எடுத்து பார்த்துடலாம்" என்று கூறி என் வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்தார். 

சாருவுக்கு உடலில் கோளாறு எதுவும் கிடையாது என்று எனக்கு தெரிந்த விஷயத்தை டெஸ்ட் முடிவுகளும் உறுதி செய்தன. சென்னை திரும்ப வேண்டியதுதான்.

ரயிலின் அன் ரிஸர்வ்டை விட பஸ் மேல் என்று நினைத்தது எத்தனை பெரிய மதியீனம்? கல்யாண சீசன் போதாதென்று அரசாங்கமே அறிவித்திருந்த பந்த் நாளை மறுநாள். அந்த பஸ்ஸில் டிரைவர் ஒருவருக்குத்தான் தனியாக ஒரு முழு சீட் கிடைத்தது. இரண்டு பேர் உட்காரக்கூடிய சீட்டில் நான்காவது ஆசாமியாக உட்கார்ந்து வந்த அந்த போஸைத்தான் இப்போது தினமும் யோகாசனமாக செய்து வருகிறேன். ஓட்டுனரோ வேறு எதைப்பற்றியும் கவலைப் படாமல் ஒரு பேரழிவிலிருந்து பிரயாணிகளை காப்பாற்றியாக வேண்டும் என்பது போல ஓட்டிக் கொண்டிருந்தார். எப்படியோ சிங்கராச் சென்னையை அடைந்து விட்டோம்.

"என்ன சாரு, கொடைக்கானல் டிரிப்பெல்லாம் எப்படி"?
பக்கத்து வீட்டு மாமி நாங்கள் உள்ளே நுழைந்த சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக தினத்தந்தி படிக்கும் மாமிக்கு செய்திகளை சுடச்சுட தெரிந்து கொள்ள வேண்டும்.

"கொடைக்கானலில் நான் ராகிணிஸ்ரீயை பார்த்தேன்.." என்ன இருந்தாலும் சாரு கெட்டிக்காரி. எதை, யாரிடம், எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியும்.

"மெட்ராஸில் தண்ணி கஷ்டம்னு சொல்கிறவர்களை ஒரு தடவ கொடைக்கானல் போய் விட்டு வரச் சொல்லணும். அங்க ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சுட்டு நான் பட்ட பாடு..."!

தன் துன்பங்களைக் கூட பெருமைகளாக மாற்றிக் கொள்ளத்தெரிந்த சாருவுக்கு கவலை இல்லை. அடுத்த முறை வெளியூர் போகும்வரை சொல்லிக் கொள்ள விஷயம் இருக்கிறது. நான் இனிமேல்தான் கணக்கு எழுத வேண்டும்.

--முற்றும்

ஒரு பின்னுரை:

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் கொடைக்கானல் சென்று ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட அனுபவத்தை நிறைய சரக்கு சேர்த்து எழுதிய கதை. 1992 நவம்பர் மாத மங்கையர் மலரில் நிரஞ்சனா என்ற புனைப்பெயரில் பிரசுரமானது. நான் எழுதி அனுப்பியதை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டிருந்தார்கள். இப்போது படிக்கும் பொழுது அப்போதைய விலைவாசி வியப்பூட்டுகிறது(ஒரு வாழைக்காய் எட்டணா). 

நான் சந்தித்த பல பெண்களிடம் இருக்கும் வேடிக்கையான குணத்தை மொத்தமாக சாருவிடம் ஏற்றிவிட்டேன்.  மீண்டும் ஒரு முறை கொடைக்கானல் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.   

தொடர்ந்து வந்து வாசித்து, பாராட்டியவர்களுக்கு நன்றி! 

Saturday, December 31, 2016

Happy new year 2017



எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த வருடத்தில் உங்கள் ஆசைகள் பூர்த்தியாகவும், ஆரோக்கியம் சிறப்பாக அமையவும் இறைவனை வேண்டுகிறேன்.😃😃😃😍

Tuesday, December 27, 2016

சாருவும் நானும் - 4

சாருவும் நானும் - 4


"விளையாடுறீங்களா? நான்தான் டெலெக்ராம் கொடுத்தேன்.."

"இருக்கலாம், ஆனா எங்களுக்கு வந்து சேரல.. வேணும்னா பாருங்க, இதுலதான் லெட்டர்ஸ், டெலெக்ரா எல்லாம் பின் பண்ணி வச்சிருக்கோம்.." அவன் ஒரு நோட்டை தூக்கிப் போடா, அதில் நான் கொடுத்திருந்த டெலெக்ராம் இல்லை."

"எங்க ஆபிஸுக்குனு ஒரு ரூம் உங்க ஹோட்டலில் உண்டு இல்லையா"?

"உண்டு சார், ஆனா அதுக்கு நீங்க முன்னாலேயே இன்பார்ம் பண்ணனும். இப்படி திடீர்னு வந்து நின்னா எங்களால எதுவும் செய்ய முடியாது. "

"வேற ரூம் இருந்தா குடுங்க.."

"இப்போ சீசன் சமயம், ஒரு ரூம் கூட காலி இல்ல, வெரி சாரி!"

 வேலையாக எதற்கும் கையோடு வைத்துக் கொள் என்று மேனேஜர் கொடுத்திருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினேன். அதைப் படித்தவன் சற்று யோசித்தான்.

"லேடீஸோடு வந்திருக்கீங்க, ஒன்னு வேணா செய்யுங்க, ஸ்டாப் ரூம்ல இன்னிக்கு நைட் தங்கிக்குங்க, காலைல, வேறு ரூம் பார்த்துக்கங்க..நா ரூமை க்ளீன் பண்ணி வைக்க சொல்றேன், நீங்க போய் கீழ இருக்கற ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க, அப்புறம் சாப்பாடு தீர்ந்துடும். "

ஏற்கனவே தீர்ந்து விட்டது. நாங்கள் போன பொழுது பாத்திரங்களை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தவரேங்களை பார்த்ததும் முகச் சுளிப்போடு தண்ணீர் கொண்டு வைத்தார். "வெஜிடேரியன், சைவம் என்றெல்லாம் சொல்லியும் மீண்டும் மீண்டும் சிக்கன் இருக்கு, மட்டன் இருக்கு என்றான். கடைசியில் எவர்சில்வர் முறத்தில் கொண்டு வந்த சாதத்தை எங்கள் இருவர் இலையிலும் பாதிப் பாதியாக கொட்டி விட்டு, அதன் மீது தயிரை மீண்டும் கொட்டி விட்டு திரும்பியே பார்க்காமல் போய் விட, உப்பு கூட போடாமல் விரைத்துக் கிடந்த அந்த சாதத்தை சாப்பிட்டு விட்டு ரிசப்ஷனுக்கு திரும்பினோம்.

"சூரி, சாருக்கு ஸ்டாப் ரூமைத் திறந்து விடு.."

அந்த சூரி பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்து,நடந்து,நடந்து ஹோட்டலின் ஒரு மூலையில் இருந்த ஸ்டாப் ரூமைத் திறந்து விட்டான். அதை ஸ்டாப் ரூம் என்பதை விட, ஸ்டோர் ரூம் என்பது பொருத்தமாக இருக்கும்.சற்றே பெரிதான அந்த அறை அங்கு போடப் பட்டிருந்த சாமான்களினால் சிறியது போலத் தோன்றியது.

ஒரு பக்க சுவற்றை ஒட்டி போடப்பட்டிருந்த டேபிள் மீதுஒட்டை, உடைசல் நாற்காலிகள் கவிழ்த்து போடப்பட்டிருந்தன. அதன் எதிர் பக்க சுவரை ஒட்டி ஒரு த்ரீ சீட்டர் சோபா, அதை ஒட்டி ஒரு குட்டி மேஜை, அதன் மீது டெலிபோன்(வேலை செய்யுமா?), நடுவில் ஒரு வட்ட டீபாய் அதன் மீது சாம்பல் தட்டப்படாத ஆஷ் டிரே. சூரி டீப்பாயை நகர்த்தி விட்டு ஒரு மடக்கு கட்டிளைப் பிரித்து நடுவே போட்டான்.

"எதுனா வேணுமா சார்"?

"கொஞ்சம் தண்ணீ , தலகாணி, போர்வை"

"தண்ணீ கொண்டாறேன், தலகாணி..,போர்வ.."? என்றபடி வெளியே போனவன், சற்று நேரத்தில் ஒரு ஜக்கில் தண்ணீரும், ஒரு தலகாணியும், ஒரு படுக்கை விரிப்பை போர்வை என்றும் கொண்டு வந்தான்.

ஒரு பொறுப்புள்ள லட்சிய கணவனாக இருந்த ஒரு போர்வை தலைகாணியையும் சாருவுக்கு கொடுத்து விட்டு நான் சோபாவில் படுத்துக்க கொண்டேன். ஜன்னல் வழியாக ஹலோ சொன்ன குளிர் காற்று என்னை தூங்க விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. எழுந்து ஜன்னல் கதவை சார்த்த முயன்ற போதுதான் ஜன்னல் கதவிற்கு கொக்கி இல்லாதது தெரிந்தது. சாருவோ ஒரு ஞானியைப் போல புது இடம், வசதிக்கு குறைவான படுக்கை, வாடை காற்று இவை எதனாலும் பாதிக்கப் படாமல் நிம்மதியாக தூங்கினாள்.

காலையில் ரூமை(??)காலி செய்து விட்டு டிஸப்ஷனுக்கு வந்த பொழுது, டிசப்ஷனிஸ்ட்,"நீங்க ரூமுக்கு வாடகை ஒன்னும் குடுக்க வேணாம், நேற்று ராத்திரி சாப்பிட்டதுக்கு மட்டும் பணம் குடுங்க" என்று பிள்ளை நீட்டினான். அதைப் பார்த்து விட்டு கிறுகிறுத்து வந்ததற்கு ஒரு சோடா குடிக்கலாம் போல் இருந்தது. அப்புறம் அதற்கும் அல்லவே மூன்று மடங்கு விலை கொடுக்க வேண்டும்!

கொடைக்கானலில் சில்வர் காஸ்கேட் பின்னணியிலிசாருவை அணைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள ரூம் காலி  இல்லை. ஏரியின் விஸ்தீரணத்தை பெடல் போட்டால் அளக்க ரூம் காலி இல்லை, குதிரைச் சவாரி செய்ய ரூம் காலி இல்லை, கோக்கர்ஸ் வாக்கில் கிடைக்கும் சுடுசுடு இட்லி வடையை சுவைக்க ரூம் காலி இல்லை. எனக்கு தற்கொலை முனையிலிருந்து குதித்து விடலாம் போல எரிச்சல் வந்தது. 

"என்ன சார் நேத்துதான் வந்தீங்க, அதுக்குள்ள கிளம்பிடீங்க.."? நேற்று வந்த டாக்ஸி டிரைவர்.

"இல்லைப்பா ரூமே கிடைக்கல, என்ன பண்ரதுன்னு தெரியல"
"நாதான் அப்பவே சொன்னேனே.? இப்போ சீசன் சமயம், ரூம் கிடைக்காதுனு.. ஒண்ணு  பண்ணுங்க சார், இந்த கொடைகானல ஒரு வாரமும் பாக்கலாம், ஒரு நாளிலும் பாக்கலாம், ஒன் அவர்லேயும் பாக்கலாம், எல்லாம் ஒண்ணுதான், பேசாம ஒரு டாக்ஸி அரேஞ்ஜ் பண்ணிகிட்டு, சுத்தி பார்த்துட்டு கீள எறங்கிடுங்க, அதன் பெஸ்ட். நம்ம பிரென்ட் ஒருத்தர் இருக்காரு."

அவன் அறிமுகப்படுத்திய ட்ரைவர் அப்படி சொல்ல முடியாமல் சோப்பு விளம்பரத்தில் வருவது போல வெள்ளை வெளேர் வேட்டி, சட்டை அணிந்து, மரியாதைக்குரிய தோற்றத்தில் நடு வயதினராக இருந்தார்.

"டிபன் சாப்டீங்களா சார்.."?

இன்னும் இல்லை, முதல்ல ஒரு நல்ல ஹோட்டலுக்கு போங்க, பயங்கர பசி." அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் கும்பல் நெரிந்தது. அன்றைய ஸ்பெஷல் ரவா பொங்கலாம். அதை நாங்கள் சாப்பிட துவங்கிய பொழுது "ஊ ஊ,ஊ " என்று ஒரு பெரிய சைரன் ஒலி  கேட்டு ஹோட்டலே திடுக்கிட்டது. ஒலித்தது எங்கள் டேபிளுக்கு எதிர் டேபிளில் இருந்த ஒரு ஐந்து வயது சிறுவன். அந்த நிமிடமே எங்கள் தட்டு அவன் டேபிளுக்கு வந்தாக வேண்டும் என்று அவன் அலறிய அலறலுக்கு பணி(ய)ந்து  ரவாப் பொங்கலை அவனிடம் சமர்ப்பித்து விட்டு லெமெனே இல்லாத ஒரு லெமன் ரைஸை சாப்பிட்டு விட்டு   மஞ்சளாக இருந்த தண்ணீரை கடவுள் பெயரைச் சொல்லி முழுங்கி விட்டு 'கொடை' வலத்தை துவங்கினோம்.
-தொடரும்  



Friday, December 23, 2016

சீக்ரெட் சாண்டாவும், பிராமின்ஸ் டாமினேஷனும்

சீக்ரெட் சாண்டாவும், 
பிராமின்ஸ் டாமினேஷனும் 




என் மகனும் மருமகளும் அன்று ஷாப்பிங் கிளம்பினார்கள். 'சீக்ரெட் சாண்டா' விற்காக பரிசுகள் வாங்க வேண்டும் என்றான். அதென்ன சீக்ரெட் சாண்டா? கார்ப்பரேட் கல்ச்சரில் இதுவும் ஒன்று. க்ரிஸ்மாஸுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக ஒரு நாளைக்கு ஒரு பரிசு என்று அலுவலகத்தில் நம்மோடு பணிபுரியும் ஒருவருக்கு அவருக்குத் தெரியாமல் தினம் ஒரு பரிசு அவர் மேஜையில் வைத்து விட வேண்டுமாம். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை கம்பெனியின் ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மெயில் அனுப்பி விடுவார்களாம். கடைசி நாளன்றுதான் யார் அந்த சாண்டாக்ளாஸ் என்று தெரிவிப்பார்களாம். தினசரி பரிசு ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் வாங்க வேண்டுமாம், கடைசி நாள் பரிசு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கலாமாம். உங்களில் யாருக்காவது இப்படி சீக்ரெட் சாண்டா சுவாரஸ்யமாக ஏதாவது பரிசு கொடுத்திருக்கிறாரா?   

இரண்டு நாட்களுக்கு முன் நானும் என் எதிர் வீட்டில் வசிக்கும் பெண்மணியும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு டீ மானிடைசேஷன், மோடி, என்று சுற்றி கலைஞரின் உடல் நிலையில் வந்து நின்றது. கலைஞரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு அத்தனை உடன்பாடு இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மரியாதையும், மதிப்பும் உண்டு. எங்கள் உரையாடலை அப்படியே தருகிறேன்..
எ.வீ.: அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. 

நான்: ஆமாம். அவருடைய நிர்வாக திறமையை விட என்னைக் கவர்ந்தது அவருடைய உழைப்பு. இந்த வயதில் எத்தனை உழைப்பு? வேறு யாராவது இப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான். பிறகு அவருடைய இலக்கிய திறன்

எ.வீ.: அதில் என்ன விசேஷம் என்றால் அவர் முறையாக பள்ளி,கல்லூரி சென்று பயிலவில்லை. தானாகவே எல்லாவற்றையும் கற்றிருக்கிறார்..

நான்: அதற்கு அவர் பிறந்த குலம் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இசை, நாட்டியம் மட்டுமல்ல,இலக்கியத்திலும் அவர்களுக்கு புலமை அதிகம் இருக்கும். நான் தேவரடியார்களைப்பற்றி ஒரு கட்டுரை வாசித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பெண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் இருந்தது தேவரடியார்கள் குலத்தில் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்த அந்த கட்டுரை ஆசிரியர் தேவதாசி முறையை தடை செய்ததன் மூலம் பல நல்ல கலைகளை நாம் இழந்து விட்டோம் என்று எழுதியிருந்தார்.

எ.வீ.: அதற்கு காரணம், தே வேர் எக்ஸ்பிளாய்டெட். சின்ன வயதில் வேண்டுமானால் அவர்களுக்கு டிமாண்ட் இருந்திருக்கும், அதற்குப் பிறகு வறுமையிலும், வியாதியிலும் 
எத்தனை பேர் இறந்திருப்பார்கள்?

நான்: உண்மைதான். நான் சொல்ல வந்தது. அவர்களுடைய கலைத்  திறமையை பற்றி மட்டும்தான். தேவதாசிகளின் நடனத்தில் வேகம் அதிகம் இருக்குமாம். அவர்கள் ஆறு காலம் பயிற்சி செய்வார்கள். இப்போதெல்லாம் மூன்று காலம்தானே பயிற்சி செய்கிறார்கள்? ஏன் கருணாநிதியே தன்னுடைய பேத்தியின் நடன அரங்கேற்றத்தை பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் வேகம் வேண்டும் என்று சொன்னாராம்

எ.வீ.: ஓ! அப்படியா? அது சரி, நடனமும் பாட்டும் எப்படி பிராமணர்களின் ஆதிக்கத்தில் வந்தது?

நான்: பிராமணர்களின் ஆதிக்கமா? அப்படி எல்லாம் கிடையாதே? எல்லாரும்தானே பாட்டும், நடனமும் கற்றுக் கொள்கிறார்கள்?

ஏ.வீ.: இல்லை இல்லை நீங்கள் கண்டிப்பாக பாட்டு க்ளாசில் சேர்த்து விடுவதைப்போல நாங்கள் செய்வதில்லை(அவர் சைவப் பிள்ளை).இசை உலகில் பிராமின்ஸ் டாமினேஷன் எப்படி வந்தது? 

அவருடைய கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Tuesday, December 20, 2016

சாருவும் நானும் - 3

சாருவும் நானும் - 3

"இனிமே நாளைக்கு காலைல ஏழு மணிக்குத்தான் மொத பஸ்" என்ற டீ கடைக்காரரிடம், "அப்போ இனிமே பஸ் கிடையாதா"? என்று டி. வி. யில் பேட்டி எடுப்பவர் போல கேட்க, அவர் முறைத்தார். 

"என்ன சார் கொடைக்கானலா"?... கேட்பது யார் ? ஒரு  ட்ரைவரா?

"என்ன சார்?" மறுபடியும் என் மனதிற்குள் சொல்லி பார்த்துக் கொண்டேன், சிலிர்த்தது. "இன்னா?" "எவ்ளோ தர"? "குந்து.." என்று அஃறிணையில் விளிக்கப்பட்டே பழக்கமாகி விட்டதால் இவருடைய 'சாரு'க்காகவே அவர் வண்டியில் போவதென்று தீர்மானித்தேன்.

"அம்பாசிடர் கார் இருக்கு, பெட்ரோல் போட்டுக்கணும், டீசல் பூட்டின வண்டி இருக்கு எது சார் வேணும்.."?  

"அம்பாசிடர்" என்றேன் மிதப்பாக.

"அறுநூறு ரூபா ஆகும் சார், வேனுக்கு நானூறு ரூபா ஆகும்.."

என் சந்தோஷம் அத்தனையும் நொடியில் மறைந்து போனது. "என்னப்பா இது? கொஞ்சம் பாத்து சொல்லுப்பா.."

நீங்க எவ்ளோ சார் தருவீங்க"?

சாரு ஏதோ சொல்ல வாயைத் திறப்பது தெரிந்தது. அவளை இப்போது பேச விடுவது ஆபத்து. சாருவுக்கு பேரம் பேச ரொம்ப ஆசையுண்டு. காலையில் நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்து வீட்டிலிருந்து இரையும் ரேடியோ இரைச்சலையும் மீறி வாசலில் கறிகாய்காரனோடு சண்டை போடுவாள். அவன் ஒன்று எட்டணா சொல்லும் வாழைக்காய்களை,"தோ பாருப்பா, அதெல்லாம் முடியாது, நான் மூணு எடுத்துக்கறேன், ஒண்ணே முக்கால் ரூபா குடுத்திடறேன்.." என்று வெற்றிகரமாக வியாபாரத்தை முடிப்பாள்.
எனவே அவளை முந்திக்கொண்டு ஏதோ ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "முன்னூறு ரூபா தரேன்.." என்றேன்.

கையிலிருந்த பெட்டியை தொப்பென்று கீழே போட்டான். "ஏய்! சாருக்கு முன்னூறு ரூபாய்க்கு மேலே கொண்டு விடணுமாம் என்று சற்று தள்ளி நின்றிருந்த தன நண்பர்களை பார்த்து கேலியாக கூறினான். 

அங்கிருந்த ஒருவன், " பாவம் ஏன் சார் கஷ்டப்படுரீங்க"? இப்படியே துண்டை விரிச்சுப் படுங்க, கார்த்தாலே மொத பஸ்சுல போய்டலாம்" என்றான். 

கொடை ரோடில் வந்து டாக்ஸி டிரைவர் ஒருவன் கேலியை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தலை எழுத்து..!

டீக்கடை ரேடியோவில் 'ஜெயமாலா' முடிந்து 'தேன் கிண்ணம்' துவங்கி விட்டது.சுற்றிலும் கவிந்து கொண்ட இருளில் நாங்கள் தனித்து விடப் பட்டோம். இங்கு தங்குவதற்கு நல்ல லாட்ஜ் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் இருப்பதையே லட்சியம் செய்யாமல் ட்ரைவர் குழு அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. கடைசியில் வேறு வழி இல்லாமல், எங்களிடம் வந்து பேசிய டிரைவரிடம் மன்றாடித் தோற்று, அவன் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டு வேனில் ஏறினோம். 

"என்ன சார் ஹோட்டலில் ரூம் புக் பண்ணிடீங்களா..? இப்போ கோடை விழா நடக்குது, ரூமே கிடைக்காது.." சொன்ன அவன் நாக்கு கரி நாக்காக இருக்க வேண்டும்.

ஹோட்டல் ஸ்வயம் ப்ரகாஷில் ரிஸப்ஷனிஸ்ட் விவரம் கேட்டு விட்டு, தடிமனான புத்தகத்தை திறந்து எதையோ தேடினான். "என்னிக்கு டெலிக்ராம் கொடுத்தீங்க.."? என்று கேட்டு, சற்று சிறிய நோட் ஒன்றில் மீண்டும் தேடி விட்டு, " சாரி சார், உங்க பேர்ல ரூம் புக் பண்ண சொல்லி எந்த இன்பார்மேஷனும் எங்களுக்கு வரலை.." என்றான். 

-தொடரும்