கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, September 15, 2021

மசாலா சாட்

 மசாலா சாட் 

சென்ற வருடம் எங்கள் குடியிருப்பில் விநாயக சதுர்த்தி கொண்டாடவில்லை. கோவிட் பயம். இந்த வருடம் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினோம்.  இதிலிருந்து மற்ற கொண்டாட்டங்களும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன். 



விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஓவிய போட்டிக்கு வந்திருந்த ஓவியங்களில் மாஸ்க் அணிந்த விநாயகரும், தடுப்பூசி போட்டுக் கொள்வதை வலியுறுத்தும் ஓவியமும் என்னைக் கவர்ந்தன.  




எங்கள் வீட்டு கணேசர். 


எங்கள் பிறந்த வீட்டில் கணபதி அக்கிரஹாரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் வீட்டில் பிள்ளையார் வாங்கி பூஜிக்கும் பழக்கம் கிடையாது. அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் பிள்ளையார் வாங்குகிறார்கள்,நம் வீட்டில் மட்டும் வாங்குவதில்லையே? என்று இருக்கும். திருமணத்திற்குப் பிறகு பிள்ளையார் வாங்கி பூஜை செய்வதில் சந்தோஷம். என் கணவர், மற்றும்  குழந்தைகளுக்கு பெரிய பிள்ளையாராக வாங்க வேண்டும். எத்தனை பெரியதாக வாங்குகிறோமோ அத்தனை நிறைய பிரசாதம் செய்ய வேண்டும் என்பதால் ரொம்ப பெரியதாக வாங்கட் கூடாது என்பது என் கட்சி. ஆகவே ரொம்ப பெரிசும் இல்லாமல்,ரொம்ப சிறியதும் இல்லாமல் மீடியம் சைஸில் வாங்குவோம். 

சென்னை சென்ற பொழுது ஒரு ஹோட்டலில் டிஃபன் சாப்பிட்டோம். அங்கு காபிக்கு பாய்லர் வைத்திருந்தார்கள். இதே போன்ற பெரிய சைஸ் பாய்லர் முன்பெல்லாம் வீட்டில் வென்னீர் போட வைத்திருப்பார்கள். யாருக்காவது நினைவு இருக்கிறதா?



சுஜாதாவின் கற்றதும்,பெற்றதும் படிக்க கிடைத்தது. 2003 வெளியீடு. அதில் ஒரு கட்டுரையில் மண வாழ்க்கைக்கு பத்து விதிகள் என்னும் கட்டுரையில் அவர் சொல்லியிருப்பது கீழே:

எனக்கு கல்யாணமாகி முப்பத்தேழு வருஷம் ஆகிறது என்று சென்ற இதழில் சொன்னேன். செய்யாறிலிருந்து ஒரு வாசகர் "எனக்கு ஒரு வருஷமே அலுத்து விட்டதே, உங்கள் திருமண வெற்றியின் ரகசியம் என்ன?" என்று கேட்டு, சுய விலாசமிட்ட கவர் அனுப்பியிருந்தார். யோசித்தால் அப்படி எதுவும் ரகசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்பா அம்மா சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதால் இருக்கலாம். அது இந்த காலத்துக்கு சரிப்பட்டு வராது. சண்டை போட விஷயங்கள் தீர்ந்து போயிருக்கலாம். இதையும் வெற்றியின் ரகசியமாக சொல்ல முடியாது. 

ஜேம்ஸ் தர்பர் எனக்குப் பிடித்த அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர். 'மகிழ்ச்சியான மண வாழ்வுக்கு எனக்கே எனக்கான பத்து விதிகள் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த பத்து விதிகளை மட்டுமே தருகிறேன். இந்த விதிகள் உங்கள் மண வாழ்வுக்கு பொருந்துமா.. யோசித்து பாருங்கள்.

1. கணவனோ, மனைவியோ பரஸ்பரம் மற்றவரின் நண்பர்களையோ, உறவினர்களையோ  கிண்டல் செய்யாமலிருப்பது.

2. கணவன், மனைவியின் உறவினர்கள் பெயர்களை கூடிய மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வது.

3. கணவன் மனைவியை மற்றவர்கள் முன்னால் கிண்டல் செய்யாமல் இருப்பது.

4. எப்பவும் ஆண்களே இப்படித்தான் என்று மனைவியும், பெண்களே இப்படித்தான் என்று கணவனும் பொதுபடுத்தாமல் இருப்பது.

5. கணவன் எதையாவது முக்கியமானதை படித்துக் காட்டும் பொழுது மனைவி பராக்கு பார்ப்பதோ, அடிக்கடி மணி பார்ப்பதோ, நடுநடுவே கொசு அடிப்பதையோ தவிர்ப்பது.

6. வீட்டில் நெருப்புப்  பெட்டி, காபிப் பொடி, பனியன் போன்ற சில அத்தியாவசிய பொருள்கள் எங்கெங்கே இருகின்றன என்று கணவன் தெரிந்து கொள்வது, மனைவி வரும் வரை காத்திருக்காமலிருப்பது.

7. மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது கணவன் கவனமின்றி தலையாட்டிவிட்டு பிற்பாடு மாட்டிக்கொள்ளாமல் இருப்பது.

8. கணவன் மனைவியை கண்ணே, கன்னுக்குட்டி, குட்டி நாயி, செல்லப்பாப்பு என்றும் 'டா' போட்டும் கூப்பிடுவதை முதல் வருஷத்துடன் நிறுத்தி விட்டால் அவன் சுய நிலைக்கு வந்து விட்டான் என்று மனைவி புரிந்து கொள்வது.   
 
9. கணவன் இளவயசுக்காரர்களுடன் கிரிக்கெட்,ஓட்டப்பந்தயம்,டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை மனைவி முன்னிலையில் ஆடாமல் இருப்பது.

10. கணவன் மனைவியின் ட்ரெஸ்ஸிங் டேபிள் என்னும் புனித பிரதேசத்தின் பக்கமே போகாமல் இருப்பது. 

இந்தப் பத்து விதிகளைக் கடைப்பிடித்தால் மண வாழ்வு பாலும் தேனும் பெருகும் என்கிறார் தர்பர் என்று சுஜாதா கூறுகிறார்.  












21 comments:

  1. அந்தப் பத்து விதிகளில் நிறைய மீறி இருக்கிறேன் என்றாலும் பிரச்னை வந்ததில்லை எங்களுக்குள்!  நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்த்ததும் கற்றதும் பெற்றதும் மறுபடி எடுத்து ஒரு ரீடிங் விடவேண்டும் என்று ஆசை வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. //அந்தப் பத்து விதிகளில் நிறைய மீறி இருக்கிறேன் என்றாலும் பிரச்னை வந்ததில்லை எங்களுக்குள்!// God bless! இவையெல்லாம் ஒரு கைட் தான்.

      Delete
  2. விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துக்கு மூன்று மாற்று கம்மியாய் கொண்டாடப்பட்டது தமிழகத்தில்.  எங்கள் வீட்டில் வழக்கம்போல.  விநாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டைதான் உடனடி நினைவுக்கு வரும்!

    ReplyDelete
    Replies
    1. //விநாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டைதான் உடனடி நினைவுக்கு வரும்!// உங்களுக்கு மட்டுமா?

      Delete
  3. வெந்நீர் பாய்லர் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டில் இருந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டில் இருந்தது.

      Delete
  4. என்னோட பாய்லரை இப்போத் தான் இங்கே வரும் முன்னர் விலைக்குப் போட்டேன். கீசர் வந்தப்புறமா பாய்லருக்கு வேலை இல்லாமலே இருந்தது 20 வருடங்களுக்கும் மேலாக. இப்போல்லாம் தேநீர்க்கடைகளில் தான் பாய்லரைப் பார்க்க முடியும். எங்க வீட்டில் பிள்ளையார் வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் பூர்விகப் பிள்ளையார் எங்களிடம் வந்தப்புறமா நம்மவர் களிமண்ணில் செய்த பிள்ளையார் வாங்குவதில்லை. எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான். ஒவ்வொரு வருஷமும் புலம்பிக்கொள்வேன் எனக்குள்ளாக.

    ReplyDelete
    Replies
    1. //கீசர் வந்தப்புறமா பாய்லருக்கு வேலை இல்லாமலே இருந்தது// தவிர தற்போதய சிறிய குளியலறைகளில் பாய்லர் வைத்துக் கொள்வதும் கடினம்.

      Delete
    2. //பூர்விகப் பிள்ளையார் எங்களிடம் வந்தப்புறமா நம்மவர் களிமண்ணில் செய்த பிள்ளையார் வாங்குவதில்லை.// ஒரு வகையில் நல்லதுதான், களிமண் பிள்ளையாரை எப்படி விசர்ஜனம் செய்வது என்று மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் குடியிருப்பில் இரண்டு வாட்டர் டாங்க் வைத்து, அதில் பிள்ளையார்களை கரைத்தோம்.

      Delete
    3. //களிமண் பிள்ளையாரை எப்படி விசர்ஜனம் செய்வது என்று //

      வாளியில் தண்ணீர் வைத்து கரைத்துவிட்டோம் இந்த முறை.  சிலஸ் சமயம் கோவிலில் கொண்டு வைத்து விடுவோம்.  ஊர்வலத்துடன் எடுத்துச் சென்று விடுவார்கள்.  ஒருமுறை அடையாறில் கரைத்திருக்கிறேன்!  

      Delete
  5. அங்கு காபிக்கு பாய்லர் வைத்திருந்தார்கள். இதே போன்ற பெரிய சைஸ் பாய்லர் முன்பெல்லாம் வீட்டில் வென்னீர் போட வைத்திருப்பார்கள். யாருக்காவது நினைவு இருக்கிறதா?//

    ஓ நினைவிருக்கிறதே மிகவும் நன்றாக...எங்கள் பிறங்க வீட்டில் உண்டு, நாங்களும் வைத்திருந்தோம் பானுக்கா. 10 வருடங்கள் முன்பு வரை கூட இருந்தது. பல ஊர்கள், வீடுகள் மாறியதில் எப்படி மிஸ் ஆனது என்று தெரியாமல் போய்விட்டது.

    விதிகள் 10...7 வரை மிக மிக ஆப்ட். சூப்பர். 8,9,10 சிரிக்க வைத்துவிட்டன.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. 8,9,10 சிரிக்க வைத்துவிட்டன.// சுஜாதா டச்!

      Delete
  6. அன்பு ஒன்றே இருப்பதால் கொடுத்துள்ள பத்தும் மீறுவதுண்டு...!

    ReplyDelete
  7. விதிகள் என்பவையே மீறுவதற்குத் தான் என்று கூறுபவர்கள் அதிகம். இந்தப் பத்தில் ஒன்றையாவது மீறாதவர்கள் அரிது. ஆனாலும் இந்திய கலாசாரம் பந்தம் அறுபடாமல் காக்கிறது. 

    எங்கள் பாயிலர் பரணில் கிடக்கிறது. பாயிலரில் ஸ்ட்ரிப் ஹீட்டர் பொருத்தி கீசர் போன்று உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன்.

     Jayakumar

    ReplyDelete
  8. வாங்க சார். //ஆனாலும் இந்திய கலாசாரம் பந்தம் அறுபடாமல் காக்கிறது.// தற்பொழுது கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது, எத்தனை நாட்கள் ஓடுமோ? நன்றி

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி

    மசாலா சாட் பதிவு அருமை. குடியிருப்பில் விநாயக சதுர்த்தி கொண்டாடியதற்கு வாழ்த்துகள். உங்கள் வீட்டு பிள்ளையார் அழகாக இருக்கிறார்.நாங்களும் முன்பெல்லாம் பெங்களூர் வருவதற்கு முன்பு வரை வெறும் களிமண் பிள்ளையார் வாங்கி கொண்டிருந்தோம். இங்கு வந்த பின் வாங்குவதில்லை. கலர் அடித்து ஏகப்பட்ட விலை விகிதத்தில் விற்கிறார்கள். இப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் கல் பிள்ளையாருக்கே பூஜை செய்து விடுகிறோம்.

    பாய்லர் சில உறவுகளின் வீடுகளில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் இல்லை.

    திருமண வாழ்க்கை சிறக்க பத்து விதிகள் நன்றாக உள்ளது. ஆனால். யாரால் இந்த பத்தையும் ஒழுங்காக நிர்வகிக்க முடியும்.?கஸ்டந்தான்.ஆனால் படத்தையும் பழக ஆரம்பித்து விட்டால், சலிப்பில்லாத ஒரு யந்திர வாழ்க்கை தானாகவே உருவாகி விடும். பகிர்வத்தனைக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல விரிவான அலசலுக்கு நன்றி கமலா.

      Delete
  10. சுஜாதாவின் கட்டுரைகள் எப்போதும் புதுமை நகைச்சுவை கருத்துச்செறிவு நிறைந்தவை

    விஸ்வநாதன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  11. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டட்ம் நன்று.

    பாய்லர் - எங்கள் வீட்டில் இருக்கவில்லை. பார்த்திருக்கிறேன்.

    விதிகள் - பொதுவானவை என்றாலும் பயனுள்ளவையே! :)

    நல்லதொரு மசாலா சாட்.

    ReplyDelete