கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 26, 2021

ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர்

 ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர் 


கோவிலின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. தான் நினைத்தபடியே சிறப்பாக கோவில் அமைந்து விட்டதில் மகிழ்ந்த மன்னன் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து விட்டு மகிழ்ச்சியோடு  உறங்கச் சென்றான் பல்லா அரசனான ராஜ சிம்மபல்லவன்.  அவன் கனவில் வந்த சிவ பெருமானோ அவன் கும்பாபிஷேகத்திற்கு குறித்திருக்கும் நாளில் பூசலார் என்னும்  தன்னுடைய பக்தன் திருநின்றவூரில் கட்டியிருக்கும் கோவிலில்  தான் எழுந்தருளப் போவதால் இங்கே காஞ்சிபுரத்தில் அவன் கட்டியிருக்கும் கோவிலில் அன்று எழுந்தருள இயலாது என்று கூறி விடுகிறார். 

மன்னனுக்கு அதிர்ச்சி. அரசனான தான் கட்டிய கோயிலை விட சிறப்பாக வேறு ஒரு கோவிலா? அப்படி என்ன சிறப்பு அந்தக் கோவிலில்? என்று அதைக் காண விரும்பி திருநின்றவூருக்கு வருகிறார். எதிர்பாராமல் மன்னனைக் கண்ட ஊர் மக்கள் திகைக்கிறார்கள். பூசலார் கட்டிய கோவில் எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டதும் மேலும் திகைக்கிறார்கள். பூசலார் கோவில் கட்டியிருக்கிறாரா? இது என்ன புது கதை? கோவில் காட்டும் அளவிற்கு எந்த வசதியும் இல்லாதவராயிற்றே?    ஊருக்கு வெளியே இருக்கும் இலுப்பை மரக்காட்டில் காட்டில் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அவர் எங்கே எப்படி  கோவில் கட்டுவார்? என்று ஊர் மக்கள் பயத்தோடும், தயக்கத்தோடும், கூற மன்னன் அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று அவரைத் தேடிச் செல்கிறான். அங்கு ஊர் மக்கள் சொன்னபடி கண்களை மூடி  அமர்ந்திருக்கிறார் பூசலார். மன்னர் வந்திருப்பதைக் கூறி அவரை உலுக்கி எழுப்புகின்றனர் மக்கள். 

பூசலாரைப் பார்த்ததுமே அவர் சாதாரண மனிதர் இல்லை என்பது புரிந்து விட, அவரைப் பணிந்து," ஐயா, தாங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கே? நீங்கள் நாளை அதற்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களாமே? நான் கட்டிய கோவிலை புறக்கணித்து, உங்களுடைய கோவிலில் எழுந்தருளுவதில்தான் சிவ பெருமானுக்கு விருப்பம், நான் அந்தக் கோவிலை கான் முடியுமா?" என்று வினவ, பூசலார் விக்கித்துப் போய் விடுகிறார். கண்கள் நீரைப் பெருக்க, "நான் கோவில் கட்டியது என் மனதில் அல்லவா? அதை என் சிவன் ஏற்றுக் கொண்டு விட்டாரா?" என்று புளகாங்கிதத்துடன் தான் மனதில் கோவில் கட்டிய விவரத்தைக் கூற, மானசீகமாக கட்டிய கோவிலை இறைவன் அங்கீகரிக்கிறார் என்றால் அவர் எத்தனை விசுவாசத்தோடு அதை செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மன்னன் அவர் விரும்பிய வண்ணம் ஒரு கோவிலை நிர்மாணித்து தருகிறான். பூசலார் தன்  இதயத்தில் கோவில் கட்டியதால், இக்கோவில் ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் என்று அறியப் படுகிறது. 



சென்னையிலிருந்து முப்பத்திமூன்று கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. சிறிய கோவில்தான். கிழக்கே பார்த்த ஸ்வாமி சன்னதியும், கருவறைக்குள்ளேயே பூசலாரின் சிலையும் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. மரகதாம்பாள் என்ற திரு நாமத்தோடு தனி சன்னிதியில்  தெற்கு நோக்கி குடிகொண்டிருக்கும் அம்பிகை.  மூலவர் ஹ்ருதயாலீஸ்வரர் என்பதால் இங்கு வந்து வழிபட இதயக் கோளாறுகள் சரியாகும் என்பது நம்பிக்கை. 

தொண்டை மண்டல கோவில்களுக்கே உரிய கஜபிருஷ்ட விமானம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி,  மஹா விஷ்ணு, மற்றும் பிரும்மா.  பிரதான வாயிலின் இரு புறங்களிலும் சூரிய சந்திரர். நவகிரக சந்நிதியை ஒட்டி பல்லவ ராஜாவான ராஜசிம்மனுக்கும் சிலை இருக்கிறது. வெளி பிரகாரத்தில் மேற்கு வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் விநாயகர் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார். 




ஒரு முறை சென்று வணங்கிவிட்டு வாருங்களேன். 



Friday, March 19, 2021

மறந்தே போச்சு..

 மறந்தே போச்சு..

ஒரு காலத்தில் கொழுப்பு என்பதே உடல் நலத்திற்கு கேடானது என்ற எண்ணம் இருந்தது,ஆனால் இப்போதோ கொழுப்பு என்பதும் உடலுக்கு தேவையான ஒன்றுதான் என்பதோடு கொழுப்பில் இரண்டு வகை உண்டு,ஒன்று நல்ல கொழுப்பு, இன்னொன்று கெட்ட கொழுப்பு என்கிறார்கள். அதைப் போலவேத்தான் மறதியிலும் நல்ல மறதி,கெட்ட மறதி என்று இரண்டு உண்டு.

நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மறந்து விட்டால் அவைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியுமா? துரோகங்களை  மன்னிக்கலாம், மறக்கக்கூடாது. 

இயக்குனர் சேரன்,   "என் உதவியாளர்களிடம் செய்த தவற்றையே மறுபடியும் செய்யாதீர்கள், புதிதாக செய்யுங்கள்" என்று கூறுவேன் என்றார். தவறுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதை மறந்தால் எப்படி இயலும்?

ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் பொழுது மீண்டும் மீண்டும் அதை செய்யச் சொல்வதற்கு(பயிற்சி) காரணம் கற்றுக் கொண்டதை மறக்க கூடாது என்பதற்காகத்தானே?

நம் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களில் நம் கையை மீறி நடப்பவை, நம்மால் மாற்றவே முடியாது என்ற விஷயங்களை மறப்பதுதான் நலம். 

குடும்பத்திலும், நட்பிலும் சில விஷயங்களை மறக்கும் பொழுதுதான் சந்தோஷமாக வாழ  முடியும். சிலர் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை மறக்காமல் ஆயுள் முழுவதும் வருந்திக் கொண்டே இருப்பார்கள். 

எக்ஸாஸ்ட் ஃபேனை நிறுத்த மறந்ததால் தீ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.

மனைவியின் பிறந்த நாளையும், தங்கள் திருமணநாளையும் மறப்பதால் குடும்பத்தில் சலசலப்பு நிச்சயம். 

மறதியால் கிடைத்த ஒரு நன்மை, ஞாபகமறதிக்காரர்களைப் பற்றிய ஜோக்குகள். 

திருச்சி.கே.கல்யாணராமன் தன் உபன்யாசங்களில்,"உங்களுடைய மறதிதான் எங்கள் பலம். நீங்கள் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் மறப்பதால்தான் நாங்கள் கதை சொல்லி பிழைக்க முடிகிறது" என்பார். 

நமக்கு ஈடுபாடு இருக்கும் விஷயங்களை நாம் மறப்பதில்லை. நெட் பாங்கிங் கடவுச்சொற்களையும், பின் நம்பர்களையும் மறக்கும் நான் லைப்ரரி மெம்பர்ஷிப் எண்ணை மறக்க மாட்டேன். எப்போதோ படித்த கதை, கவிதை வரிகள் நினைவில் இருக்கும். உறவிலும், நட்பிலும் எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்த்துவேன். பிரபலங்கள் உட்பட பலரின் ஜாதகங்கள் கூட எனக்கும் என்னுடைய இன்னொரு சகோதரிக்கும் மனப்பாடம், காரணம் ஈடுபாடு. 

மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் நண்பர்களோடு திருச்சி உறையூரில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிக்கச் செல்வாராம். எல்லோரும் பல் தேய்த்து விட்டு ஆற்றில் துளைத்து நீராடி விட்டு திரும்பி வந்தால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அப்போதும் பல் தேய்த்துக் கொண்டே இருப்பாராம். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், "இன்னுமா பல் தேய்த்து முடிக்கவில்லை?" என்று கேட்டால், "சங்கப் பாடலின் ஒரு வரியை யோசித்துக் கொண்டேயிருந்ததில் மறந்து விட்டது" என்பாராம்.

சர்.சி.வி. ராமன் வாக்கிங் சென்று வருகிறேன் என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தால் நடந்து கொண்டே இருப்பாராம், வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே மறந்து விடுமாம் உடன் செல்பவர்கள் யாராவது நினைவூட்ட வேண்டுமாம். ஆனால் இவையெல்லாம் மறதி என்பதில் வராது, ஓவர் தி்ங்கிங் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஞாபகமறதியுள்ள மற்றொரு பிரபலம், பாடகர் உன்னி கிருஷ்ணன். அவருடைய ஞாபக மறதியைப் பற்றி அவருடைய தாயாரும், மனைவியும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்கள்.  பொள்ளாச்சிக்கு கச்சேரிக்கு சென்ற பொழுது, ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கலெக்டரிடம் சென்னை−பொள்ளாச்சி டிக்கெட்டை கோடுப்பதற்கு பதிலாக, பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய ரிடர்ன் டிக்கெட்டை கொடுத்து விட்டாராம். ரூமுக்குச் சென்று ரிடர்ன் டிக்கெட் இல்லாததை பார்த்த அவருடைய அம்மா, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் சொல்லி, அந்த டிக்கெட்டை மீட்டெடுத்தாராம். 

ஹனிமூன் சென்ற பொழுது மனைவியின் பெட்டியை லிஃப்டிலிருந்து எடுக்கவே மறந்து விட்டாராம், மனைவி உடை மாற்றிக்கொள்ள பெட்டியை தேடிய பொழுதுதான் பெட்டியை லிஃப்டிலேயே விட்டு விட்டது நினைவுக்கு வந்து சென்று பார்த்ததில், நல்ல வேளை பெட்டி லிஃப்டிலேயே இருந்திருக்கிறது.

கச்சேரிகளில் பாடல் வரிகள் மறந்து விடுவாராம். வயலின் வாசிப்பவர் எடுத்துக் கொடுத்தால் உண்டு என்று அவரே சிரித்தபடி கூறினார்.

எழுபது வயதாகும் ஒரு முதியவர் தன் மனைவியை "ஹனி","டார்லிங்" என்றெல்லாம் அழைப்பதை பார்த்த ஒரு இளைஞர், "உங்களுக்கு திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை, ஹனி,டார்லிங் என்றே அழைக்கிறீர்களே, அவ்வளவு காதலா?" என்று கேட்டானாம்.அதற்கு அந்த முதியவர்,"என் மனைவியின் பெயர் என்ன என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பே மறந்து விட்டது,அதை அவளிடம் கேட்க பயம், அதனால்தான் இப்படி கூப்பிட்டு சமாளிக்கிறேன்" என்றாராம். எப்பூ..டி?

Saturday, March 13, 2021

மசாலா சாட் - 23

 மசாலா சாட் - 23


பெங்களூரிலிருந்து டில்லிக்கு விஸ்தாராவில் பயணப்பட்டோம். விமான நிலையம் பழையபடி ஆகி விட்டது. மாஸ்க் அணிந்திருப்பது மட்டுமே மாறுதல். விமானம் முழு கொள்ளளவில் இருந்தது. நடு இருக்கையில் அமர்ந்திருப்பவர் முழு  பாதுகாப்பு கவசம் அணிந்திருக்க வேண்டும் என்னும் விதியை என்னருகில் அமர்ந்திருருந்த பெண்மணி கடை பிடிக்கவில்லை. டில்லியில் இருக்கும் அவருடைய தாத்தாவின் 100வது பிறந்த நாளை கொண்டாட குடும்பத்தோடு (ஏறக்குறைய பதினைந்து பேர்கள்) சென்று கொண்டிருந்தார்கள். பிளேன் டேக் ஆஃப் ஆனதிலிருந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். எனக்கும்  உபசாரம்! 

இந்த குழு இப்படி என்றால் இன்னொரு குழு டில்லியை சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள் போலிருக்கிறது.  முதல் விமானப் பயணம் என்று  தோன்றியது.  விமானத்திற்குள் நுழைவதிலிருந்து, கேபின் பேகேஜ் வைப்பது, இறங்கியதும், வாக்கலேட்டரில் நடப்பது என்று அத்தனையையும் வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்கள். நிச்சயம் இன்ஸ்டாக்ராமில் பகிர்வார்கள் என்றுதான் தோன்றியது. 

டில்லியிலிருந்து சென்னை திரும்பியவுடன் கொரோனா தடுப்பூசி விஜயா ஹெல்த் சென்டரில் போட்டுக் கொண்டேன். எல்லோருக்கும் கோவிஷீல்டுதான் போடுகிறார்கள். பெங்களூரில் வசிக்கும் நான் சென்னையில் போட்டுக் கொள்ள முடியுமா? என்னும் தயக்கம் இருந்தது. டில்லியில் வசிக்கும் வெங்கையா நாயுடு சென்னையில் போட்டுக் கொண்டது ஒரு நம்பிக்கையை தந்தது. முதல் ஊசியை எங்கு போட்டுக் கொள்கிறோமோ அதே இடத்தில் இரண்டாம் ஊசியையும்  போட்டுக் கொண்டால்தான் சான்றிதழ் தருவார்களாம். எங்கள் வீட்டிலும், நட்பு வட்டாரத்திலும் ஊசி போட்டுக் கொள்ள சிலருக்கு ஏதோ தயக்கம் இருப்பது தெரிகிறது.  எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறேன். 

சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. மார்ச் 10,11 வேலை இருந்தது. 9ஆம் தேதி காலை காரில் பயணப்பட்டோம். அந்த டிரைவர் மாஸ்க் அணிந்து கொள்ளவில்லை. கேட்டதற்கு கொரோனாவெல்லாம் முடிந்து விட்டது மேடம் என்கிறார்.  முதலில் நாங்கள் இன்னும் இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கி அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று, திருச்சி பதிவர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால் இனொரு அக்காவின் மகன் சென்னை சி.ஐ.டி. காலனியில் 'பவுல்டு'(BOWLD) என்னும் உணவகத்தின் கிளையை துவங்கியதால் வியாழனன்றே திரும்ப வேண்டிய நிர்பந்தம். கிடைத்த கொஞ்ச நேரத்தில் திரு.ரிஷபன் அவர்களையும், திருமதி. ஆதி வெங்கட்டையும் மட்டும் சந்தித்தேன்.

திரு ரிஷபன் அவர்களின் எழுத்தைப் போலவே அவரும் எளிமையாக இருக்கிறார். மனைவி அருமையான டீ கொடுத்தார். அவர் தந்தையும் எங்கள் உரையாடலில் அவ்வப்பொழுது கலந்து கொண்டார். ஆதி வெங்கட் வீட்டை கண்ணாடி போல் பளிச்சென்று வைத்திருக்கிறார். அவரோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. இந்த முறை கீதா அக்காவையும் பார்க்க முடியவில்லை. 

கூரத்தாழ்வார் சன்னதி

கமலவல்லி சமேத அழகிய மணவாளன் சன்னதி நுழை வாயில்

எப்போதும் செல்லும் மலைக்கோட்டை விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம் தலங்களை தரிசனம் செய்து விட்டு, உறையூரில் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில், நாச்சியார் கோவில்களுக்கும் சென்றோம். எந்த கோவிலிலும் நமஸ்கரிக்க அனுமதியில்லை. பெருமாள் கோவில்களில் தீர்த்தம், சடாரி சாதிப்பது போன்றவை இல்லை. அதற்காக நாச்சியார் கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் இரண்டு பேரும் வெகு அலட்சியமாக கால்களை நீட்டியபடி அமர்ந்து கொண்டிருந்ததும், எங்கள் கேள்விகளுக்கு அசிரத்தையாக பதில் சொன்னதும் வருத்தமாக இருந்தது. சாதாரணமாக வைணவ கோவில்களில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு உறையும் பெருமாளின் சிறப்பை எடுத்துக் கூறுவார்கள். இங்கோ பெருமாள் கையில் இருக்கும் சக்கரம் பிரயோக சக்கரம் என்பதை நான் கவனித்து, கேட்டேன் அப்போதும் அலட்சியமான பதில்தான்.. பெருமாளின் சக்கரம் பிரயோக சக்கரமாக இருக்கும் தலங்கள் மிகவும் சிறப்பானவை. 


ஏற்கனவே டி.நகரிலும், மடிப்பாக்கத்திலும் கிளைகள் உள்ள பவுல்டு என்னும் உணவகத்தின் கிளையை சென்னை சி.ஐ.டி. காலனியில் துவக்கியுள்ளார் என்னுடைய சகோதரியின் மகன். ஹோட்டல் என்றாலே நான்,பரோட்டா, மட்டர் பனீர், குருமா, பிரியாணி என்ற எண்ணத்தை மாற்றி  வீட்டில் கிடைக்கும் ஆனால் இப்போது பெரும்பாலானோர் செய்யாத மோர்க்கூழ், உப்புமா கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை போன்ற ஐட்டங்களை கொடுப்பது நோக்கம். தற்சமயம் டேக் அவே ஆர்டர்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஸ்விகி மூலம் ஆர்டர் கொடுக்கலாம். 

ரைஸ் பவுலில் பருப்பு சாதம், ரசம் சாதம், மோர் குழம்பு சாதம், வற்றல் குழம்பு சாதம், மிளகு குழம்பு சாதம், புளியோதரை, தயிர் சாதம் போன்றவைகள் இருக்கின்றன.  ஹோட்டல் சாப்பாடு பிடிக்காத, வீட்டில் சமைக்கவும் முடியாத பெரியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். 


Saturday, March 6, 2021

சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப்

 சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப் 


டில்லியில் இருந்த சொற்ப நாளில் பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களின் டில்லி உலாவை படித்து விட்டு, சுந்தர் நர்சரிக்கு செல்ல முடிவெடுத்தோம்.







 நகரின் மையத்தில் இத்தனை பெரிய பூங்கா அமைந்திருப்பது ஆச்சர்யம்தான். அது நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது. 





நாங்கள் உள்ளே சென்ற பொழுது அழகாக அலங்கரித்துக் கொண்ட ஒரு யுவனும்,யுவதியும் புகைப்பட கலைஞர் தொடர உள்ளே வந்தனர். போட்டோ ஷூட் ஆக இருக்கும் என்று தோன்றியது. இன்னொரு பக்கத்தில் ஒரு மரத்தின் ஒரு பக்கத்தில் நீல நிற பலூன்கள், மற்றொரு பக்கத்தில் பிங்க் நிற பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருக்க கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது ஒரு சீக்கிய குடும்பம். வெட்டிங் போட்டோ ஷூட் போல, இந்த ப்ரெக்னென்சி போட்டோ ஷூட்டும் இப்போது பிரபலமாகிக் கொண்டு வரும் ஒரு விஷயமாச்சே!



நடந்து கொண்டிருந்த பொழுது கண்களை மூடி அமர்ந்திருந்த ஒரு சீக்கியர் கண்ணில் பட்டார். அவரை ஓவியமாக இரண்டு பேர் வரைந்து கொண்டிருந்தார்கள். 




வெளியேறும் வழியில் ஒரு மரத்தடியில் முதியவர்கள் கூட்டம்... ரீ யூனியனாக இருக்கும் என்று நினைத்தேன். 


இறந்து போன தங்கள் உறவினர்கள் நினைவாக பார்க்குகளில் பெஞ்சுகள் அமைக்கும் பழக்கம் லண்டனில் உண்டு என்று ஏஞ்சல் ஒரு முறை தன் வலை தளத்தில் எழுதியிருந்தார். அதைப் போல சுந்தர் நர்சரியிலும் சில பெஞ்சுகளை பார்க்க முடிந்தது. 


அங்கு வந்த பெரும்பாலானோர் ஒரு பெரிய பை, பாய் இவைகளோடு வந்தனர். பாயை விரித்து  கொண்டு சாப்பாட்டு கடையை விரிகின்றனர். நமக்கு சோறு முக்கியம்.  மஸ்கெட்டில் ஒரு முறை டீப் சீ டைவிங் சென்றிருந்தோம். நடுக்கடலில் நாங்கள் சென்ற படகை நிறுத்தி, "லைஃப் ஜாக்கெட் இருக்கிறது, அதை அணிந்து கொண்டு நீங்கள் கடலில் குளிக்கலாம் என்றதும்,  அந்தப் படகில் இருந்த ஒரு ஐரோப்பிய குடும்பம் மட்டுமே கடலில் இறங்கியது. இந்தியர்கள் எல்லோரும் குறிப்பாக வட இந்தியர்கள் சாப்பாட்டு கடையை விரித்து விட்டார்கள்.   

அழகழகான பூக்கள். ரோஜாக்களின் சைஸ் மிரட்டியது. ஹை ப்ரடாக இருக்குமோ? 




சுந்தர் நர்சரியை முடித்து விட்டு ஹுமாயூன் டோம்ப் சென்றோம். இதை முன் மாதிரியாக வைத்துதான் தாஜ் மஹால் கட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. மொகலாய மன்னர்கள் கட்டிய கட்டிடங்களின் சிறப்பு என்னவென்றால் பிரதான வாயிலிருந்து குறிப்பிட்ட கட்டிடத்தை அடைவதற்கே நீண்ட தூரம் நடக்க வேண்டும். தாஜ் மஹாலும் சரி, ஹுமாயுன் டோம்பும் சரி, அதன் தோற்றத்தை  கெடுக்கும் வண்ணம் இடையில் வேறு எதுவும் வர முடியாது. நம்முடைய கோவில்களை நாம் அப்படியா வைத்திருக்கிறோம்? சுற்றி கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய கோபுரத்திற்கு அடுத்த பெரிய கோபுரம் திருவண்ணாமலை கோபுரம். ஆனால், அதன் முழு தோற்றமும் நம்மால் பார்க்க முடியாது. முன்னால் இருக்கும் கடைகளின் கூரைகள் அந்த தோற்றத்தை மறைத்து விடும்.     







ஹுமாயூன் கல்லறை 



கல்லறையின் மேல் விதானம் 

ஹுமாயூன் டோம்பிலிருந்து கன்னாட் பிளேஸ் சென்று ஒரு பஞ்சாபி உணவகத்தில் உணவருந்தி விட்டு, ஜன்பத் மார்க்கெட்டில் குட்டியாக ஒரு ஷாப்பிங் செய்து விட்டு, இந்தியா கேட் சென்றோம். 


இந்தியா கேட் அருகே  அனுமதிக்கவில்லை. அதற்கு எதிரே இருந்த பெரிய திடலில் ஏதோ திருவிழா போல் கும்பல். பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. அங்கு இருந்த ஒரு நீர்நிலை சரியாக பராமரிக்கப் படாமல் ஒரே குப்பையும், கூளமுமாக இருந்தது. ஸ்வட்ச் பாரத் என்று பிரதமர் சொல்லிக் கொண்டிருக்க, தலைநகரின் பிரதான இடம் இப்படி இருப்பது  யார் கண்ணிலும் படாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 


தாயின் மிகப்பெரிய மணிக்கொடி பாரீர்


  


 


Monday, March 1, 2021

பெயர் சூட்டும் வைபவம்

பெயர் சூட்டும் வைபவம் 


என் மருமகளுக்கு பேறு காலம் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து, மார்ச் முதல் வாரத்திற்குள் என்றுதான் முதலில் கூறினார்கள். ஆனால் ஜனவரியில்,  பிப்ரவரி 16லிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம் என்று சொல்லி விட்டதால், நானும் என் மகனும் பிப்ரவரி 14 பெங்களூரிலிருந்து, டில்லிக்கு பயணப்பட்டோம். அதன்படியே பிப்ரவரி 17 காலை அவளுக்கு பனிக்குடம் உடைந்துவிட, மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவளை அப்சர்வேஷனில் வைத்து, ட்ரிப் ஏற்றி, இயற்கையான முறையில் பிரசவம் நிகழுவதற்காக வலி வரவழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத் தொடங்கினார்கள். 

ஆஸ்பத்திரிக்கு கிளம்பும் பொழுது நான் குளித்து விட்டுதான் கிளம்பினேன். ஆனால் என் மருமகளின் தாயார் குளிக்காமல் வந்து விட்டார். அவரிடம்,"குழந்தை பிறப்பதற்கு எப்படியும் இன்று இரவு, அல்லது நாளைக்  காலை ஆகி விடும்,ஆகவே நீங்கள் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு வாருங்கள்" என்றேன். அவர் குளித்து, சமையல் செய்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். மாடியில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் நானும், கீழே வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானாவில் என் மகனும் காத்திருந்தோம். நான் கீழே சென்று என் மருமகளை பார்த்து விட்டு மேலே வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், என் மகன் கைபேசியில் அழைத்தான்.  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதுதான் நல்லது. வெய்ட் பண்ணி பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க், உங்கள் மனைவியோடு டிஸ்கஸ் செய்து விட்டு கூறுங்கள் என்றார்களாம். டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கிறது? சிசேரியன் செய்து விடுங்கள் என்றார் கூறி விட்டேன்" என்றான். நான் உடனே கீழே இறங்கி வந்தேன். சற்று நேரத்தில் எங்களை உள்ளே அழைத்தார்கள். "பெண் குழந்தை, பாருங்கள்"என்று ஹிந்தியில் கூறி துணியை விலக்கி காண்பித்து, "உங்களுக்கு வேண்டுமென்றால் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்" என்றார்கள். என் மகன் தன் மகளை செல் போனில் படமெடுத்து செல்(ல) மகளாக்கினான். 

என் மருமகளுக்கு பிள்ளைதான் பிறக்கும் என்று எல்லோரும் கூறியதால் அவர்கள் ஆண்  குழந்தைக்கான பெயர்களை மட்டும் யோசித்து வைத்திருக்கின்றனர். இப்போது பெண் என்றதும் என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.  என் ஒரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருக்கிறாள், சியாமளா நவராத்திரி சரஸ்வதி தேவிக்கானது எனவே  சரஸ்வதியின் பெயர் ஏதாவது வையுங்கள்" என்றார். இன்னொரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருப்பதால் பெயரில் ஸ்ரீ வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார். 

என்னை பொறுத்தவரை "எங்கள் ஊர் பெண் தெய்வம் ஹேமாம்பிகா, அதை அப்படியே வைத்தாலும் சரி, ஹேமா என்று சுருக்கமாக வைத்தாலும் சரி, என்று கூறி விட்டேன். அவர்கள் ஹேமாம்பிகா என்பதை தேர்ந்தெடுத்தார்கள். "உன்னுடைய கோட்டா முடிந்து விட்டது, ஒதுங்கிக்கொள்" என்றாள் மகள். 

சரஸ்வதி அஷ்டோத்திரத்தை டவுன்லோட் செய்து பார்த்தோம். அதில் 'ரிதன்யா' என்னும் பெயர் எனக்குப் பிடித்தது. இப்போ இருக்கும் ட்ரெண்ட் ,"பெயரை ஒரு முறை கேட்டால் புரியக் கூடாது, அந்த வகையில் ரிதன்யா ஓகே" என்று மகன் கிண்டலடித்தான். இருந்தாலும் ஷார்ட் லிஸ்ட் செய்தார்கள். 

அம்பாளின் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்த பெயர் 'த்ரயீ' விசேஷமான பொருள் கொண்டது. ஆனால் மருமகளின் பெரியப்பா பேத்திக்கு த்ரயீ என்றுதான் பெயர். எனவே மறுதலிக்கப்பட்டது. 'வாகீஸ்வரி' என்று நான் கூறியதும், என் மகன்,"நான் வைத்து விடுவேன், கொஞ்ச நாள் கழித்து,  தந்தையே ஏன் எனக்கு இப்படி ஒரு பெயரை வைத்தீர்கள்? என்றால் என்ன செய்வது?" என்றான். மருமகளோ, "இப்படியெல்லாம் பெயர் வைத்தால் அவள் மாற்றிக் கொண்டு விடுவாள்" என்றாள். "நித்யஸ்ரீ?" நல்ல பெயர்தான். ஆனால்  பழசு" நித்யஸ்ரீயே பழசு என்பவர்கள் மருமகளின் பாட்டி கூறிய ஸ்ரீவித்யாவை ஏற்பார்களா? 

மிதாலி என்று என் மருமகள் கூறிய பெயர் ரொம்பவும் வட இந்திய வாடை வீசியதால் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு சில பெயர்கள் ஆந்திர பெயர்கள் போலவும், சில பெயர்கள் மலையாள பெயர்கள் போலவும் தோன்றின. என் சம்பந்தி 'அக்ஷரா' என்னும் பெயரை பரிந்துரைத்தார். என் மகன்,"பெயர் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் கமலஹாசன் மகள் பெயரை வைக்க வேண்டுமா?" என்றான். இது அம்பாள் பெயர் என்று அவனை கன்வின்ஸ் செய்தோம். அதுவும் ஷார்ட் லிஸ்டில் சேர்ந்தது. 

நிரஞ்சனா என்று ஒரு பெயர் சஜஸ்ட் செய்யப்பட்டது. "நான் இந்த புனை பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதி கொண்டிருந்தேன். இந்த பெயர் வைத்தால் ஒரு வகையில் பாட்டி பெயரை வைத்தது போல்" என்றேன். அதனாலோ என்னவோ அதை ஏற்கவில்லை. நிஹாரிகா என்று என் மகன் கூறியதும் நாங்கள் யாரும் பதில் பேசவில்லை. 

ஒரு பெயருக்கு இவ்வளவு யோசனையா? முன்பெல்லாம் வீடுகளில் பெரியவர்கள் இருப்பார்கள், அவர்கள் என்ன பெயர் சொல்கிறார்களோ அந்த பெயரை மறு வார்த்தை பேசாமல் ஏற்றுக் கொள்வார்கள். அது பெரும்பாலும் குல தெய்வத்தின் பெயராக, அல்லது அவர்கள் ஊர் கோவிலில் குடி கொண்டிருக்கும் சாமியின் பெயராக, அல்லது குடும்பத்தில் இருந்த யாராவது பெரியவர்களின் பெயராக, இருக்கும். இப்படி மண்டையை உடைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 

எப்படியோ பல பெயர்களை அலசி, ஆராய்ந்து சாமியின் பெயரான ஹேமாம்பிகா, சியாமளா நவராத்திரியை முன்னிட்டு அக்ஷரா, தாயும், தந்தையும் சேர்ந்து தேர்ந்தெடுத்த நவ்யா என்னும் பெயரோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்னும் பெயர்களை சூட்டினோம். இதில் நவ்யாஸ்ரீ என்னும் பெயர்தான் பிறப்பு சான்றிதழுக்கு கொடுக்கப் போகிறார்கள். நவ்யா என்றால் இளமையானவள், போற்றத்தகுந்தவள் என்று பொருளாம். 

இந்த பெயர் சூட்டும் வைபவத்திற்கு என் அழைப்பை ஏற்று நம் வெங்கட் அவர்கள் வந்து கௌரவித்தார். 

 

Thursday, February 25, 2021

மந்திரச்சொல்

 மந்திரச்சொல்

வேலை செய்யும் பொழுது யூ ட்யூபில் இசை,அல்லது சொற்பொழிவுகள் கேட்பது என் வழக்கம். அப்படி சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை கேட்ட பொழுது, ஒரு சொற்பொழிவில் அவர் சிலர் வாழ்க்கையில் சில சமயங்களில் யாரோ ஒருவர் கூறிய சில வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையையே  மாற்றி விடும் என்று கூறி விட்டு, அதற்கு உதாரணமாக திருநீலகண்ட  நாயனார்  வாழ்க்கை, அருணகிரி நாதர் வாழ்க்கை முதலியவற்றை குறிப்பிட்டார். அதைக் கேட்ட பொழுது என் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

என் கடைசி அக்காவுக்கு முதல் குழந்தை பிறந்திருந்த நேரம். அப்போதெல்லாம் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் வரவில்லை. எனவே ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கு நாம்தான்  உணவு கொண்டு போக வேண்டும். என் அக்காவுக்கு நான் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்று என் அம்மாவை வீட்டிற்கு அனுப்பினேன். 

நான் அங்கிருந்த நேரத்தில் யாரோ ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்து, லேபர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரசவ வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் எழுப்பிய  சத்தம் என் அக்காவின் அறை வரை கேட்டது. அதை கேட்டு விட்டு நான் என் அக்காவிடம், " பொறுத்துக் கொள்ள முடியாமல்  இப்படி கத்தும் அளவிற்கு வலிக்குமா?"  என்றதும் என் அக்கா, "அப்படி எல்லாம் இல்லடி, பொறுத்துக்கணும்னா பொறுத்துக்கலாம், கத்தறதுனா கத்தலாம்" என்றாள்.  எனக்கு அது ஒரு மந்திரச் சொல்லாகப் பட்டது. எந்த விஷயமாக இருந்தாலும் பொறுத்துக் கொள்வது என்றால் பொறுத்துக்  கொள்ளலாம், கத்தறது என்றால் கத்தலாம் என்று தோன்றும். நாம் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம் ஒரு சின்ன விஷயத்திற்கு கூட என்ன ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்! வெகு சிலரே பொறுமையாக சகித்துக் கொள்வார்கள். எனக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன். பொறுத்துக்கொள்வது என்றால் பொறுத்துக்கொள்ளலாம், கத்துவது என்றால் கத்தலாம். 

இதைப்போன்ற இன்னொரு மந்திரச்சொல் உண்டு.

 மந்திரச்சொல் -2  

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், வாசல் போர்டிகோவில் அமர்ந்து பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த என்னிடம், பக்கத்து வீட்டு மாமி  "நீ இப்போது உன் மனதில் எதைப் பற்றி நினைத்துக்  கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். நான், "நாளைக்கு எக்ஸாம், என்ன மாதிரி கேள்விகள் வரும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். உடனே அவர், "ராமகிருஷ்ணா பரமஹம்சர், யாராவது நம்மிடம் வந்து நீ எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால், நானா? ஒரு பூவைப் பற்றி நினைத்துக்  கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்லக் கூடிய  விதத்தில் நம் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார், அதை உன்னிடம் சோதிக்கலாம் என்று கேட்டேன்" என்றார்.  எவ்வளவு அருமையான அறிவுரை! மனது கொஞ்சம் தாறுமாறாக போகும் பொழுதெல்லாம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன். 

அந்தப் பக்கத்து வீட்டு மாமி யார் தெரியுமா? இந்த வருடம் கலைமாமணி விருது வாங்கியிருக்கிறாரே திருச்சி  கே.கல்யாணராமன், அவருடைய தாயார். 

Sunday, February 14, 2021

மசாலா சாட்!

மசாலா சாட்!

பகுள பஞ்சமி அன்று யூ ட்யூபில் வெளியிட சத்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றி பேசி அனுப்ப கேட்டிருந்தார்கள். அதற்காக திரட்டிய தகவல்களில் இதுவரை கேள்விப்படாத சில சங்கதிகள்:

ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரிகள் தன் மகன் சுப்பராய சாஸ்திரிகளை தியாகராஜரிடம் இசை பயில அனுப்பினாராம். அப்போது இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். சியாமா சாஸ்திரிகள் அம்பாள் மீது ஆனந்த பைரவி ராகத்தில் பல பாடல்களை பாடியிருப்பதை கேட்ட பிறகு,அதன் பரிபூரண அழகின் சிறப்பை உணர்ந்து, தியாகராஜர்  அதற்குப் பிறகு ஆனந்த பைரவி ராகத்தில் பாடப் போவதில்லை என்று முடிவெடுத்தாராம். 

தியாகராஜர் சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிடம் இவற்|றிலும் வல்லவராக இருந்தாராம். 

ப்ரஹ்வாத பக்த விஜயம், நவுகா சரித்திரம், போன்ற புகழ் பெற்ற இசை நாடகங்களும் எழுதியிருகிறார்.  

பஜனை சம்பிராதய வழியில் திவ்ய நாம கீர்த்தனங்கள், உற்சவ சம்ப்ரதாய கீர்த்தனைகள் போன்றவைகளையும் இயற்றியிருக்கிறார். 

***********************************************************************************

மனதார சொல்கிறேன், என்று கூறும் பொழுது நம் கையை இதயம் இருக்கும் இடத்திற்கருகே வைத்துக் கொள்வது நம் பழக்கமாக இருந்தாலும்,  மனம் என்பது எது? அப்படி நிஜமாகவே ஒன்று உண்டா? மனமும், மூளையும் ஒன்றுதானா? என்று பல சந்தேகங்கள் உண்டு. மனம் என்று தனியாக ஒன்று கிடையாது, அது எண்ணங்களின் தொகுப்பு என்றும் சொல்வார்கள். ஆனால் மனம் ஒரு குரங்கு என்னும் கூற்றில் சந்தேகம் இருக்க முடியாது. அதை அடக்குவதும் ஆள்வதும் பிரும்ம பிரயத்தனம்தான். இல்லாத ஒன்று என்ன பாடு படுத்துகிறது? அன்று சௌந்தர்யலஹரி வகுப்பில் திரிஷா என்று ஒரு வார்த்தை,  காது கேட்பதை, வாய் சொல்லிக் கொண்டிருக்க,  இந்த பொல்லாத மனம், அழகான அஜித்தைப் பார்த்து, மிக அழகான திரிஷா, "இப்படி ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போனால்மா நாங்களெல்லாம் என்ன செய்வது?" என்று கேட்கும் காட்சிக்கு தாவி விட்டது. அதை கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு வர வேண்டியதாகப் போனது. 

தடந் தோளினாய்! மனம் அலையும் தன்மையது, அதை கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும் அப்பியாசத்தாலும், வைராக்கியதாலும் அதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் கீதாச்சார்யன். வைராக்கியம்.. அதுதானே குறைவாக இருக்கிறது.  

***********************************************************************************

என் மகன் காதி சோப்தான் உபயோகப்படுத்துவான். இப்போது காதி சந்தன சோப் பயன்படுத்திகிறான். குளித்துவிட்டு வந்தால் வீடே மணக்கிறது. இன்று அவன் குளித்து விட்டு வந்ததும், ஒரே கம கம மணம். அது எனக்கு ஒரு பழைய விளம்பரத்தை நினைவூட்டியது.

கம,கமா, நிதம் நிதம் கம கமா

இதென்ன சரிகமா? ஏதாவது சுரமா?

நறுமண சுரம் 

புதுவிதமா?

எக்ஸோடிகா டால்கம் கம,கமா 

சரி சரி சரி 

யாருக்காவது இந்த விளம்பர பாடல் நினைவிருக்கிறதா?

*************************************************

இரண்டு வார்த்தைகளால் எந்த கதவையும் திறக்க முடியும் 

அப்படியா?

ஆமாம், தள்ளு, இழு... 

இந்த ஜோக் கூகுள் சொன்னது. அவ்வப்பொழுது செல் போன் திரையில் ஒரு மைக் தோன்றி, இதை சொல்லிப் பாருங்கள் என்று ஒரு தமிழ் வார்த்தை தோன்றும். இன்று, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று கேட்டு, கீழே ஒரு கட்டத்துக்குள்  ஒரு ஜோக் சொல்லு, என்ற ஆணையும் இருந்தது. சரி என்று அழுத்தினேன், அப்போது வந்த ஜோக் இது. 

ஒரு திரைப்புதிரோடு முடித்துக் கொள்கிறேன். 

தமிழ் திரையுலகில் சகோதர,சகாதரிகள் நடித்திருக்கிறிர்கள், நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி சிலரை நினைவு கூற முடிகிறதா? 

  

Sunday, February 7, 2021

சித்திரமும்...

சித்திரமும்...

எனக்கும் நுண் கலைகளுக்கும் வெகு தூரம். அதுவும் ட்ராயிங்..?சுத்தம்!  பள்ளி நாட்களில் ட்ராயிங் வகுப்புகளில் பென்சில் சீவியே நேரத்தை ஓட்டுவேன். வரைய வேண்டியவைகளை எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ராதா என்னும் அக்கா வரைந்து கொடுப்பார். அவர் ஊர் மாறி மதுரைக்குச் சென்றதும் என் அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து கொள்வேன். சயின்ஸ் பரீட்சையில் படம் வரைந்து பாகங்களைக்குறி என்னும்  கேள்விகளை தவிர்க்கப் பார்ப்பேன். என் நினைவில் நானே வரைந்த முதல்படம் முதுகெலும்பின் படம். 

எனக்கு குழந்தைகள் பிறந்ததும்,"இவர்கள் பள்ளியில் ப்ராஜக்ட் பண்ண சொன்னால் என்ன செய்வது?" என்று கவலை வந்தது. ஆனால் என் குழந்தைகள் இரண்டு பேருமே நன்றாக வரைந்து என் கவலையைத் தீர்த்தார்கள். 

இந்த லட்சணத்தில் நான் போடும் கோலம் எப்படி இருக்கும்? ஒரு முறை நான் மஸ்கட் போய் விட்டு திரும்பியவுடன் என் வீட்டில் வேலை செய்த பெண்மணி,"பொண்ணு நல்லா கோலம் போடுதம்மா.." என்றாள். அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், "நீ நல்லாவே போட மாட்ட.." என்று உண்மையைக்கூறி என்னை நோகடித்தாள்.கொஞ்சம் கொஞ்சமாக கோலம் போடுவதிலும் என் திறமையை வளர்த்துக் கொண்டேன். 

இவை நான் போட்ட ரங்கோலி, நீர் மேல் கோலம்,மற்றும் மாக்கோலம் 

இந்த வருடம் கொலு பொம்மையில் வைத்திருந்த வெங்கடாஜலபதி,பத்மாவதி தாயாரின் பொம்மைகள் கலர் மங்கியிருப்பதாக தோன்றியதால், அதை பெயிண்ட் பண்ணி வைத்தேன். பார்த்தவர்கள் அழகாக இருப்பதாக கூறினார்கள். 

சில நாட்களுக்கு முன்பு என் மகன் ஒரு மண் பானையில் தயிர் வாங்கி வந்தான். தயிர் தீர்ந்ததும் அதிலேயே மீண்டும் தயிர் தோய்க்க முயற்சி செய்தோம். இந்த பெங்களூர் குளிரில் அதில் தயிர் சரியாக தோயவில்லை. அழகாக இருந்த அந்த குட்டிப் பானையை தூக்கிப் போட மனமில்லை. அதில் பெயிண்ட் பண்ணி பூ ஜாடியாக பயன் படுத்தலாம் என்று தோன்றியது. எனக்கு தெரிந்த வகையில்  அதை கொஞ்சம் சிம்பிளாக பெயிண்ட் பண்ணினேன். எப்படி இருக்கிறது சொல்லுங்கள். 
 

Friday, January 29, 2021

திரை விமர்சனங்கள்

திரை விமர்சனங்கள் 

சில்லு கருப்பட்டி: 


தொலைகாட்சியில்தான் பார்த்தேன் சில்லு கருப்பட்டி என்னும் ஆந்தாலஜி படத்தை. ஹலிதா ஷமீம் என்னும் இளம் பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் படம். நான்கு விதமான காதல்களை பேசுகிறது. முதல் கதையில்(Pink bag) குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கு தினமும் பிங்க் நிற பையில் குப்பைகளை போடும் ஒரு பெண் மீது ஏற்படும் லயிப்பு. சாரா அர்ஜுனும்(சைவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெண்) ராகுலும் நடித்திருக்கும் படம். இதில் வசனங்கள் மிகவும் குறைவு. பின்னணி இசை அற்புதம்!  அடுத்த கதை காக்கா கடியில் மீம்ஸ் கிரியேட்டரான, கான்சரில் பாதிக்கப்பட்ட  ஒரு ஐ.டி. இளைஞனுக்கும், அவனோடு காரில் பயணிக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை  சொல்கிறது  மணிகண்டனும், நிவேதிதா சதீஷும் நடித்திருக்கிறார்கள். டர்டில் என்னும் இந்தப் படம் முதியவர்களின் காதல் என்னும் கத்தியில் நடப்பது போன்ற விஷயத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஒரு முதிய பெண்மணிக்கும்(லீலா சாம்சன்), மனைவியை இழந்து, மகனோடு வாழ்ந்தாலும் தனிமையாக உணரும் ஒரு முதியவருக்கும்(க்ரவ் மேக ஸ்ரீராம்) இடையே அரும்பும் காதலை காட்டுகிறது. மிகவும் டெலிகேட்டான ஒரு  விஷயத்தை கண்ணியமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.  கடைசி கதை ஹே அம்மு. சமுத்திர கனியும், சுனைனாவும் நடித்திருக்கும் இந்தக் கதை திருமணமாகி, மூன்று குழந்தைகள் பெற்ற, குடும்ப வாழ்க்கையின் ரொடீனில் காதலித்த தொலைத்த அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த ஒரு கணவன், மனைவி இழந்த தங்கள் காதலை மீட்டெடுக்கும் கதை. மிக மிக இயல்பான இந்த படத்தை பார்க்கும் நடுத்தர வயதினர் பலர் தங்களை இதில் அடையாளம் காண முடியும்.  எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் சமுத்திர கனியும், சுனைனாவும் பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள். மிகச் சிறப்பான வெளிப்பாடு. சுனைனா இவ்வளவு நன்றாக நடிப்பாரா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சமுத்திரக்கனியின்  
இதற்கு முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய சில எக்ஸ்பிரஷன்ஸ் அபாரம்!காட்சி அமைப்புகளும், வசனங்களும் வெகு இயல்பு.  எல்லா படங்களுமே மிகவும் கண்ணியமாக, ரசிக்கும்படி எடுக்கப் பட்டிருக்கின்றன. நான்கு படங்களுக்கும் நான்கு ஒளிப்பதிவாளர்கள். இந்தப் படத்தின் மூலம் இரு விருதுகளை வென்றுள்ள ஹலிதா ஷமீம் நம்பிக்கையூட்டுகிறார். பெரிய நட்சத்திரங்கள் இவரை மசாலா உலகிற்கு இழுத்து வராமல் இருக்க வேண்டும்.  

மாறா:  

திரையரங்குகளுக்குச் செல்லாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ள படம். மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மௌலி,ஷிவ்தா முதிலியவர்கள் நடித்திருக்கும் படம். நமக்கெல்லாம் தெரிந்த ஸ்டாண்ட் அப்  காமெடியன்  அலெக்ஸ்  திருடனாக வந்து சிரிப்பூட்டுகிறார். மலையாளத்தில் வந்து விருதுகளை குவித்த சார்லி என்னும் படம்தான் ரீ மேக் ஆகியிருக்கிறது. அதனாலோ என்னவோ மலையாளம் படம் பார்க்கும் உணர்வு. அவர்களால்தான் ஒரு காதல் கதையை மிஸ்ட்ரி போல எடுக்க முடியும்.  இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா! மலை நாட்டின் அழகை சிறைப்பிடித்து நம் பார்வைக்கு விரித் திருக்கிறது. மலையாள படம் என்று சொல்லி விட்டதால் எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. மௌலியின் குறிப்பிடத்தக்க படங்களுள் இது ஒன்று. இசை ஜிப்ரான். புதுமுக இயக்குனர் திலிப் குமாருக்கு ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கலாம். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தை ரசிப்பதற்கு நமக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். 

Monday, January 18, 2021

கலை, கைவினை கண்காட்சி - 2

 கலை, கைவினை கண்காட்சி - 2 







இந்த மாடர்ன் ஓவியம் என்ன உணர்த்துகிறது என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள். 




இந்த 3டி ஓவியம் மிகவும் பிடித்தது. பெண்ணின் தோளில் இருக்கும் பென்சில், அதில் கட்டியிருக்கும் நூல் எல்லாமே மிகவும் தத்ரூபமாக இருந்தன. ஏன் மரச்சட்டம் போல் தெரிகிறதே அது கூட ஓவியம்தான்.



எனக்கு இந்த ஓவியம் மிகவும் பிடித்தது. 


பொம்மலாட்டத்திற்கான ராமன், ராவணன், சீதை ஓவியங்கள்.






 

Wednesday, January 13, 2021

கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!

 கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!


உலகமே ஸ்தம்பித்திருக்கிறது. தொழில்கள் முடங்கி யிருக்கின்றன, லட்சக்கணக்கில் மரணம், காட்டுத் தீயாய்  பரவிய நோய் இப்போதுதான்  கட்டுக்குள் வந்திருக்கிறது. அதற்குள் இரண்டாவது அலை என்கிறார்கள். சில நாடுகள் மீண்டும் பொது முடக்கம் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில்  மாஸ்டர் என்று ஏதோ ஒரு சினிமாவாம் அது திரையரங்கில்தான் வெளியிடப்பட வேண்டுமாம், மக்களை பற்றியும், அவர்கள் நலனைப் பற்றியும், இதனால் சமூகமும், அரசாங்கமும் எதிர் கொள்ள வேண்டிய ஆபத்தை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் 100% ஆகுபன்சி வேண்டும் என்று அந்த நடிகர் முதலமைச்சரை பார்த்து பேசுகிறார். அவருடை ரசிகர்கள் ஏதோ அந்த படத்தை பார்க்காவிட்டால் தங்கள் ஜென்மம் கடைத்தேறாது என்பது போல மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி என்ற பிரக்ஞை இல்லாமல் முன்பதிவுக்கு முட்டி மோதுகிறார்கள். என்ன கொடுமை இது? 

விஜய்க்கு சமூக பொறுப்பு என்பது கொஞ்சமாவது இருந்தால் தன்னுடைய  படத்தை OTTஇல் வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது தன் ரசிகர்களுக்கு ஆன் லைனில் மட்டுமே பதிவு செய்து படத்தை பாருங்கள் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும். அவர் எப்படி செய்வார்? தன் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை தடுக்காதவர்கள்தானே இவர்கள்.  இவர்கள் ஒரு புறம் கோக கோலா  விளம்பரத்தில் நடிப்பார்கள், இன்னொரு புறம் கார்ப்பரேட் கம்பெனிகள் நம் நீராதாரத்தை சுரண்டுகின்றன என்று குரல் கொடுப்பார்கள்.  'ஒரு விரல் புரட்சியே..' என்று இவர்கள் பாடினால் போதுமா? மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை வேண்டாமா?

அரசாங்கத்தின் செயல்பாடும் மிகவும் வருத்தம் அளிக்கிறது.  திரை
யரங்குகளுக்கு ஆன் லைனில் மட்டுமே டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்க  வேண்டும். சுற்றுலா தளங்களிலும், விமான நிலையங்களிலும், ரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும் கடுமையான சட்ட திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்கம் சினிமா அரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? 



Tuesday, January 12, 2021

கலை,கைவினை கண்காட்சி

கலை, கைவினை கண்காட்சி!

ஞாயிறன்று கர்நாடகா சித்திரகலா பரிக்ஷித்தின் ஆதரவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் எக்சிபிஷனுக்கு சென்றிருந்தோம். அங்கு என் செல்போனில் சிறை பட்டவை :

பழைய பித்தளை பாத்திரங்கள் 


                    





வெண்கல சிலைகள் பகுதியிலிருக்கும் விநாயகரை தனியாக ஃபோகஸ் செய்ய முடியவில்லை.  தலைப் பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் தனியாக இருந்தது.   

ஒடிசா ஓவியங்கள் அற்புதம்! அங்கு துணியில் செய்யப்பட்டிருந்த தாய  கட்டத்தை விளையாடிவிட்டு மடித்து வைத்து விடலாம், பிரயாணங்களில் பயன்படும். 1500 ரூபாய் மட்டுமே. சீ! சீ! என்ன இருந்ததும் நாம் கையால் வரைவது போலாகுமா?